சமநிலைச் சிந்து!

#SG50_தமிழ்மரபு #மரபுப்பாடல்
(இது சிறுவர்களுக்கும் புரியும்படி எளிய சொற்களைக் கொண்டு மரபு கவிதையில் ஒரு சின்ன முயற்சி)

சிங்கை பவன்!

உண்ண உணவு சிங்கையிலே – எல்லாம்
உடனே கிடைக்கும் அருகினிலே
என்ன வகைகள் என்றாலும் – அதில்
எத்தனை சுவைகள் கேட்டாலும்
சின்ன கடைகள் ஆனாலும் – பெரிய
சீமான் விடுதி போனாலும்
அன்ன பூரணி அவள்தானே – நம்
அனைவரின் பசியும் போக்குவதால்

வித்தை எதுவும் செய்யவில்லை – எந்த
விளைச்சல் இல்லா நிலமெனினும்
அத்தனை நாட்டு உணவுமிங்கே – என்றும்
அனைத்து இடத்தும் கிடைக்குமிங்கே
சுத்தமாய் சோதனை செய்தபின்னே – நற்
சுகாதா ரசான்றும் கொடுத்தபின்னே
மொத்த பொருளும் தீவினிலே – நல்
முத்திரை யுடன்விற் கப்படுதே

பத்திய சாப்பா டானாலும் – மிக
பலமாய் உண்ண கேட்டாலும்
சத்தான உணவு உண்ணுவதால் – இங்கே
சராசரி வயது எம்பதாச்சு
புத்தம் புதுநோய் வராவண்ணம் – என்றும்
போதுமாய் சட்டம் கொண்டுவந்து
அத்தனை பாதிப் புற்றபுலால் – வரவு
அனைத்தும் தடைகள் செய்திடுமே

ஹாக்கர் செண்டர் கடைகளிலே – நல்ல
ஹலால் உணவுடன் சைவமுண்டு
பாக்குற எல்லா பண்டமுமே – மிக
பரிசுத் தமாய் சமைப்பதுண்டு
விக்குற அத்தனை உணவுகளும் – நமக்கு
விலையும் மலிவாய் கிடைப்துண்டு
கேக்குற அளவு கொடுப்பதினால் – நம்
கொள்ளும் வயிறு நிறைவதுண்டு

பிரபல கோழிச் சோறுமுண்டு – நமக்கு
பிடித்த லக்சா மீகோரிங்
நிறைந்த மீன்கறி தலையுடனே – ரொம்ப
நல்ல சார்கோவ் தியோவுமுண்டு
கார நண்டும் ருசித்திடலாம் – கடையில்
காயா டோஸ்ட்டும் சுவைத்திடலாம்
தரமுடன் விருந்தும் தித்திக்கும் – சீன
திம்சம் பரிமா றும்போது

பல்வகை பிரியா ணிதேக்காவில் – மற்றும்
பலவகை உண்டு பரோட்டாவில்
சில்லென செண்டோல் பானமுமே – இனிக்கும்
சீனி மைலோ டைனோசரும்
பல்லில் பட்டால் கூசிடுமே – இருந்தும்
பதமாய் சுகமும் அளித்திடுமே
உள்ளம் கொள்ளை போய்விடுமே – நம்ம
உயர்ந்த சிங்கை உணவிடமே

#SG50_தமிழ்மரபு #மரபுப்பாடல் அறுசீர் விருத்தம்! வீடமைப்பு பேட்டை! அடுக்குமாடி வீட மைத்து அத்தனையும் அருகில் வைத்து இடுக்கணின்றி சொகுசாய் வாழ இல்லமுண்டு அனைவ ருக்கும் கெடுதலில்லா சுற்றுச் சூழல் கேடில்லா பேட்டை உண்டு தொடுத்தநல்ல பூப்போல் மக்கள் தோழமையாய் வாழ்வர் இங்கு (1)

அறுசீர் விருத்தம்

அறுசீர் விருத்தம்!

வீடமைப்பு பேட்டை! (நேற்றைய தொடர்ச்சி)

அறைகளிங்கு வசதி சேர்க்க
அழகழகாய்க் குடிய மர்ந்தோம்
குறைகளின்றி நிதமும் வாழ
குறைவில்லா நீரும் கொண்டோம்
தரைமுதலாய் தளம்வ ரையில்
தடையிலாமின் சாரம் கண்டோம்
இறைவனைப்போல் கண்ணில் காணா
இழையிலிணை யம்;இ ணைந்தோம். (2)

பலவண்ண ஆடை கட்டி
பளிச்சென்று காட்சி தந்தாள்
சலவைசெய்த துணிகள் அங்கே
சன்னலிலே காயும் போது
மலைபோல உயர்ந்த வீடும்
மனங்கவரும் பசுஞ்சோ லையும்
பளபளக்கும் வண்ணத் தோடு
பாங்காக மிளிரும் பேட்டை (3)

நேரிசை ஆசிரியப்பா

#SG50_தமிழ்மரபு #மரபுப்பாடல்

நேரிசை ஆசிரியப்பா!

நாடு உயர நைந்தே நம்மவர்
பாடு பட்டு பாங்காய் உழைத்தனர்
ஆட்சி கட்டிலில் அமர்ந்தது தமிழும்
மாட்சி பொருந்திய மகனார் முடிவால்
உற்ற மொழியை ஓதிட தயங்கோம்
மற்ற மொழிகளை மதித்து நடப்போம்
நல்வழி காட்டும் நம்மொழி தானே
சொல்லி கொடுக்கும் சுவையுடன் நெறியை
மொழியுடன் உறவு முறியா வண்ணம்
தொழிலுடன் அதனை தொடர்ந்து பயில்வோம்
செம்மொழி காக்கும் சிங்கை
நம்மவர் வாழ்வில் நாளும் உயர்வே!

சாலைக் காவல்

#SG50_தமிழ்மரபு #மரபுப்பாடல்

எண்சீர் விருத்தம்!

சாலைக் காவல்!

விரிந்திருக்கும் சாலைகளின் அகலம் கண்டால்
விமானங்கள் கூட;இங்கு தரையி றங்கும்
வரிசையாகச் செல்லுகின்ற வாக னங்கள்
வடிவத்தில் தண்டவாள ரயிலை ஒக்கும்
வரிபிடிக்கும் வசூல்காரன் சாலை மேலே
வழித்தடத்தில் தவறிழைத்தால் அறிக்கை ஈயும்
சரியாக விதிமுறைகள் கடைப்பி டிக்க
சாலைகளில் படக்கருவி காவல் செய்யும்