சோ

துக்(க)ளக்..”கம்:(

நான் பல ஆண்டுகளாய் விரும்பி இரசித்து படித்த ஒரே பத்திரிக்கை துக்ளக். சென்னையில் இருந்த போது பொங்கலன்று அவர் கூட்டதிற்கு சில முறை சென்றதுண்டு. இனிமேல் அங்கு பேச ‘சோ’ அவர்கள் இல்லை. அவரை சில முறை மயிலை கபாலீசுவரர் கோயிலில் சந்தித்து வணக்கம் சொன்னதுண்டு. அதே பச்சை ஆடை, வளர்ந்த உருவம், மெல்லிய புன்னகையோடு விசாரிப்பு. சென்னைத் தமிழில் இயல்பாய் வெளுத்து வாங்கிய நல்ல நகைச்சுவை நடிகர். நான் கண்டு வியந்த மாற்றுச் சிந்தனை கொண்ட சிலரில் முதன்மையானவர். அவரின் நையாண்டிக்கு இணை வேறதெவும் இல்லை. இன்றைய மீம்ஸின் பிதாமகன் என்றும் சொல்லலாம். அவருடைய பல அரசியல் கருத்துகளில் எனக்கு உடன்பாடுண்டு. இவரின் ‘முகமது பின் துகளக்’ நாடகத்தை பல முறை கேட்டிருக்கிறேன். காலத்தை கடந்த சிறந்த அரசியல் நையாண்டி நாடகம் அது. அவரும் காலத்தை கடந்து என்றும் நிலைத்திருப்பார்.

முதல்வருக்கு அஞ்சலி

#My_heartfelt_condolences மறைந்த தமிழகத்தின் முதல்வருக்கு அஞ்சலி! நடிகையானது முதல் முதல்வராய் இருந்த வரை துணிவாய் தடைகள் பல தாண்டி வந்தவர். சொந்த பந்தங்கள் துணை எதுவுமே இல்லையென்றாலும் பல உறவுகளை உருவாக்கித் துணயாக கொண்டவர். தானெடுத்த முடிவுகளில் தீர்க்கமான நம்பிக்கை உடையவர். பலத்த மன உறுதி உடையவர். ஒரு பெரிய இயக்கத்தை தனது கட்டுக்குள் வைத்திருந்தவர். தலைவர்கள் பலரின் நன்மதிப்பையும் பெற்றவர். இவரது வாழ்க்கை தனி மனிதருக்கும், அரசியல் தலைவர்களுக்கும் பல படிப்பினைகளை விட்டுச் சென்றிருக்கிறது. ஒரு அரசியல் தலைவராக இவர் சாதித்து பல. இன்னும் வாழ்ந்திருக்க வேண்டியவர். இறப்பிலும் இன்னல்களை எதிர் கொண்டவர். இவரின் மறைவு துயரமானது. என்னுடைய ஆழ்ந்த இரங்கல்.

 

உணவும் உதவியும்

“டே, சாப்பிட்டா என்னைப் போல இலைய சுத்தமா துடைச்ச மாதிரி, ஒரு பருக்கை மிச்சம் வைக்காம சாப்பிடனும். இப்படி சோத்தையும் காய்கறியையும் மிச்சம் வைக்கலாமா?”னு கல்யாண மண்டபத்தில பக்கத்தில சாப்பிட்டிட்டுருந்த என் நண்பனை கேட்டேன்.

‘அட, சாப்பிடறதுக்கு பிறந்தவனே, இப்படி சுத்தமா வழிச்சு சாப்பிட்டு, கழுவுன மாதிரி இருக்கிற இலையை கொண்டு போய் குப்பத்தொட்டியில போட்டா, அங்க வர்ற நாய்யி, நமக்கு முன்னாடி ஒன்னு வந்து நல்ல நக்கிட்டு போயிடுச்சேனு, திட்டிட்டே போகுமாம்”னு சொன்னான் நண்பன்.

இது நடந்து சுமார் 20 ஆண்டுகள் ஆச்சு. அதுக்காக எல்லாம் நான் ரோஷப்பட்டு சின்ன வயதிலிருந்தே கடைப்பிடிக்கும் கொள்கைய மாத்திக்கிறதில்லை. இன்றைக்கும் தட்டிலோ, இலையிலோ பரிமாறினத காலி பண்ணாம எழுந்திருக்க மாட்டேன். அத பல பேர் சில காரணங்களுக்காக திட்டியதும், கேலி செய்ததும் உண்டு.

உணவு எங்கெல்லாம் எப்படியெல்லாம் வீணாகுதுனு பார்ரப்போமா?
தேசிய சுற்றுச்சூழல் அமைப்பின் வழிகாட்டுதல் படி சமைக்கப்பட்ட உணவை சாதாரன தட்பவெட்பநிலையில் நான்கு மணி நேரத்துக்கு மேலாக வைக்கக்கூடாது. நான்கு மணி நேரமென்பது சமைக்கப்பட்ட நேரத்திலிருந்து உட்கொள்ளும் நேரத்தை குறிக்கும். அதனால் தான் சிங்கையில் விழாக்களில், நிகழ்வுகளில் எத்தனை மணிக்குள் சாப்பிட உகந்தது என்ற குறிப்பை சாப்பாட்டுக்கு பக்கத்தில வச்சிருப்பாங்க. அதற்கு மேல் போனால் யாரும் சாப்பிட முடியாது. குப்பைக்கு தான் போகும். அதனால விழா/நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நம்ம வருகையை முன்னரே தெளிவாக சொல்லிவிட்டால் இதை ஓரளவு தவிர்க்கலாம்.

இன்னொரு மிகப்பெரிய பிரச்சனை வீட்டில் உணவை வீணாக்குவது. 77 விழுக்காடு சிங்கப்பூரர்கள் வீட்டில் உணவை வீணாக்குகிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்லுது. பொரும்பாலோனோர் வீட்ல உணவை அப்புறம் சாப்பிடலாம்னு குளிர்ப்பதன பெட்டியில வச்சிருவாங்க. அடுத்து புதுசா சமைச்சு அதுல மீதியானத பழசுக்கு முன்னாடி வைப்பாங்க. அப்படியே தினமும் முன்னால பழைய சாப்பாட்ட வச்சு முதல் நாள் வச்சது, திருடன் மாதிரி உள்ள ஒழிஞ்சுகிட்டு இருக்கும். தலைவர்கள் பிறந்தநாள் அன்றைக்கு சில கைதிகள விடுவிக்கிற மாதிரி என்றைக்காவது நம்ம விடுதலைக் கொடுத்தா அந்த உணவு பயன்படுத்த முடியாத நிலையிலிருக்கும். நம்ம பண்ண அகழ்வாராய்ச்சி வீணாப்போச்சேனு யாருக்கும் தெரியாம அந்த இடத்தைவிட்டு காலி பண்ண வேண்டியது தான். நான் எங்க வீட்டை பத்தி சொல்லல்ல….அட உங்க வீட்டை பத்தியும் சொல்லல்ல, பொதுவாச் சொன்னேன். ஆனா உண்மை என்னன்னா 92 விழுக்காடு குளிர்பதன பெட்டியில வைக்கிற உணவு வீணாவதாக 2015ல் எலக்ட்ரோலக்ஸ் நிறுவனம் எடுத்த ஒரு புள்ளிவிவரம் சொல்லுது.

கடந்த பத்து ஆண்டில் 50 விழுக்காடு அதிகரித்து சிங்கையில 2015ல் உணவு கழிவின் அளவு 785,500 டன்னாக உயர்ந்தது. அதாவது நாம் ஒவ்வொருவரும் இரண்டு குவளைச் சோற்றை குப்பையில் கொட்டுவதற்கு சமமானது. சிங்கப்பூரில் விளைநிலம் இல்லாததால் தேவையான உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. 2014ல் ஏறக்குறைய 15 பில்லியன் வெள்ளிக்கு உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன அதில் கிட்டத்தட்ட 1.5 பில்லியன் மதிப்புடையவை வீணாக்கப்பட்டதாக புள்ளிவிவரம் சொல்லுது. அதை அப்புறப்படுத்துவது, அழிப்பது, மறுசுழற்சி செய்வது இப்படி இந்த உணவு கழிவு மேலான்மை பத்தி தனியா ஒரு புத்தகமே போடலாம்.

சரி இந்த உணவு வீணாகமாக எப்படி பயனுள்ளதாக மாத்துறாங்கனு பார்ப்போம். சிங்கையில் எல்லாரும் அதிகமாக சாப்பிடும் ரொட்டி(பிரட்), தயாரிக்கப்பட்ட நாளிலிருந்து சுமார் 7 நாள் வரை சாப்பிட உகந்ததாக இருக்கும். அதற்கு பிறகு காய்ந்து பூஞ்சை படிய ஆரம்பிக்கும். அதனால அதற்குள்ளாகவே அதை விற்க வேண்டும். அப்படி விற்காத ரொட்டிகளை குப்பையில் தான் போட வேண்டும். இந்த மாதிரி ஒவ்வொரு மாதமும் வீணாகும் ரொட்டிகளின் அளவு 336 டன்னாகும்.

இன்னொரு பக்கம் இந்த உணவு தேவைப்படுபவர்களுக்கு சென்றடைந்தால் பயனுள்ளதாக அமையும்.

அந்த நோக்கில் இவர்கள் இருவருக்கும் பாலமாக “புட் ஃபிரம் த ஆர்ட்(Food from the Heart)” என்ற லாபநோக்கமற்ற அற நிறுவனம் 2003ம் ஆண்டு சிங்கையில் ஆரம்பிக்கப்பட்டது. விரைவில் காலாவதியாகும் உணவு பொருள்களை இவர்கள் அடுமனைகளிடமிருந்தும், கடைகளிலிருந்தும், உணவகத்திலிருந்தும் நன்கொடையாக பெற்று அதை நலக் காப்பகத்துக்கும், முதியோர் இல்லங்களுக்கும், சுய சேகரிப்பு மையங்களுக்கும், வசதி குறைந்தவர்களுக்கும் விநியோகிக்கிறார்கள்.

120 தொண்டூளியர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் இன்று 1,700 தொண்டூளியர்களுடன் செயல்படுக்கின்றது.

இந்நிறுவனம் தற்சமயம் ஒவ்வொரு மாதமும் 28,000 கிலோ ரொட்டிகளைக் ஏறக்குறைய 15,000 பயனாளிக்கு விநியோகிக்கிறது.

அதே போல மற்ற உணவு பொருள்களையும் சேர்த்து 25,000 பயனாளிகளுக்கு உதவுகிறது. நடைமுறைச் சிக்கல் உள்ளதாலும், வசதியின்மை காரணமாகவும் சமைக்கப்பட்ட உணவை இவர்கள் விநியோகிப்பது இல்லை.

இவர்களுக்காக தான் நான் சில வாரங்களுக்கு முன் உணவு நிறுவனங்களை அழைத்து இந்த அற நிறுவனத்துக்கு உணவு பொருள்களை தந்து உதவும்படி தொலைபேசி வழி கேட்டுக் கொண்டேன்.அந்த பதிவை #உணவும்_உதவியும் என்ற ஹாஷ்டாகில் பார்க்கலாம்.
(https://www.facebook.com/ShanmugamTam/posts/1298966733448833)

நீங்களும் இவர்களுக்கு பல வழிகளில் உதவலாம். வாகன வசதி இருந்தால் உணவுப் பொருள் விநியோகிக்க உதவலாம். அதை ஒழுங்குப்படுத்த உதவலாம். பணமாகவோ பொருளாகவோ கொடுத்துதவலாம். இந்நிறுவன இணையதள முகவரி மற்றும் அழைப்பு எண் கீழேயுள்ளது.

உணவை வீணடிப்பது என்பது வெறும் காசை வீணடிப்பது மட்டுமல்ல, பயிரிட்டவர் முதல் பரிமாறியவர் வரை பலரது உழைப்பை, வியர்வையை, ஆற்றலை, திறமையை வீணடிப்பதாக நான் கருதுகிறேன். ஆசையாய், பாசத்தோடு நமக்கு சமைத்து பரிமாறப்பட்ட உணவை குப்பைத்தொட்டிக்கு பகிர்ந்தளிப்பது என்பது சமைத்தவர்களின்/பரிமாறியவர்களின் மகிழ்ச்சியை, அன்பை குப்பைத்தொட்டியில் கொட்டி அவர்களை அவமதிப்பதற்கு சமம்னு என்பது என் கருத்து.
இதை படித்த பிறகு உணவை தட்டுல விட்டு போகும் நாலு பேராவது வீணாக்காமல் சாப்பிட்டால் அதுவே மகிழ்ச்சி.

இனிமே சாப்பிடற படங்கள முகநூல்ல போடுறவங்க, சாப்பிட்டு முடிச்ச பிறகும் அந்த தட்ட படம் பிடிச்சு, ‘நான் உணவ வீணாக்கல’னு சொல்ற மாதிரி முகநூல்ல போடலாம்:)

Contact details of Food from the Heart:

தொலைப்பேசி எண் : 62804483

https://www.facebook.com/foodheart/

www:foodheart.org

PC: https://goo.gl/images/cFO4bP

பட்டுக்கோட்டையாரின் நினைவு தினம்

“……..காயும் ஒரு நாள் கனியாகும்
நம் கனவும் ஒருநாள் நனவாகும்
காயும் கனியும் விலையாகும்
நம் கனவும் நினைவும் நிலையாகும்
உடல் வாடினாலும் பசி மீறினாலும்
வழி மாறிடாமலே வாழ்ந்திடுவோம்

செய்யும் தொழிலே தெய்வம்
அந்தத் திறமைதான் நமது செல்வம்
கையும் காலுந்தான் உதவி
கொண்ட கடமைதான் நமக்குப் பதவி
….”

என்று சொன்ன பட்டுக்கோட்டையாரின் நினைவு தினம் இன்று சிங்கையில் கொண்டாடப்பட்டது.

ஓரிரு வாரங்கள் மனைவி மக்களை பிரிந்திருந்தாலே சிரமப்படும் பலருக்கிடையே தங்களின் மனைவி மக்கள் ஊரில் இருக்க தனியொருவனாய் தினமும் பல மணி நேர உழைப்பிற்கு பிறகு கிடைக்கும் ஒரு நாள் வார இறுதி ஓய்வைக்கூட தமிழுக்காக ஒதுக்குகிறார்கள் நம் வெளிநாட்டு தொழிலாள நண்பர்கள்.

ஒரு சில காரணங்களுக்காக, பொதுவாகச் சிங்கப்பூரர்களுக்கும், நிரந்திரவாசிகளுக்கும் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் நடக்கும் தமிழ் இலக்கிய போட்டிகளுக்கிடையே நம் வெளிநாட்டு நண்பர்களுக்குத் தனித்துவமாகத் தமிழில் கட்டுரை போட்டி நடத்திய மக்கள் கவிஞர் மன்றத்துக்கும் இணைந்து நடத்திய தமிழ் முரசு நாளிதழுக்கும் எனது பாராட்டுகள். இந்தப் போட்டியில் பங்கு பெற்ற 238 பேரில் வெற்றி பெற்ற 50 பேருக்கு மடிக்கணினி பரிசாகக் கொடுக்கப்பட்டது. அதை கொடுக்க உதவிய புரவலர்களுக்கு நன்றி.

தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி அதன் தொடர்பிலேயே இந்த போட்டிக்கான தலைப்பு ‘சிங்கையில் வேலையிடப் பாதுகாப்பு இன்னும் மேம்பட எனக்குத் தோன்றும் வழிகள்’ என்று கொடுக்கப்பட்டிருந்தது சிறப்பு. அந்தப் போட்டியில் நம் நண்பர்கள் Karuna Karasuசும் யாழிசை மணிவண்ணன்னும் சிறப்பாக கட்டுரை எழுதி வெற்றி பெற்றதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

நண்பர்களுக்கு வாழ்த்துகள் 💐💐

கவிதைனாலே காதலிருக்கும்.

கவிதைனாலே காதலிருக்கும். கண்ணன் என்றாலும் காதலிருக்கும். அப்ப கண்ணனும் கவிதையும் சேர்ந்தா டபுள் காதல்தான். அதாங்க நம்ம காதல் கவிஞன் கண்ணன்னோட இரண்டாவது புத்தகம் ‘அடம்செய விரும்பு’ முழுக்க முழுக்க காதல் கவிதைகளை மட்டுமே சுமந்து வருது. இதோட கரு ,காதலில் வரும் ஊடல். இதோட சேர்ந்து இன்னும் இரண்டு தலைப்புகளையும் கொடுத்து எது நல்லாயிருக்குனு எங்க நட்பு வட்டத்தில அவர் கேட்டப்ப ,நாங்களெல்லாம் இந்த தலைப்பு நல்லாயிருக்குனு சொன்னோம். ஏன் இந்த தலைப்புனு அவர் நாளை நடக்கவிருக்கும் நூல் அறிமுக விழாவுல சொல்வார். அது குறித்த செய்தி கடைசியில இருக்கு அதனால கடைசி வரை படிங்க இல்ல கடைசி வரியையாவது படிங்க. இரண்டு நாள் முன்னாடிதான கிருஷ்ண ஜெயந்தி முடிஞ்சுச்சு. நாளைக்கு காதல் ஜெயந்தி வருது. இரண்டுமே கண்ணனுக்கு சொந்தமானது. ஆமாம் இந்த நூல்ல காதல் ஜெயந்தினு ஒரு கவிதை எழுதியிருக்காரு. இன்றென்ன காதல் ஜெயந்தியா என் வீடெங்கும் உன் கால் தடங்கள் இப்படி இந்த புத்தகம் முழுதும் சின்ன சின்னதாக அழகான கவிதைகள் நம்மை கவர்ந்திழுக்கும். “எப்போதும் போல் இயல்பாகப் பேசிச்சிரிக்கும் தோழிகள் தோழிகளாகவே இருக்கின்றனர் அதைக்கண்டு சிறு கோபம் கொள்ளும் நீ காதலியாகிக் கொண்டிருக்கிறாய்” என்று ஒரு கவிதை. நமக்கேன் இதை எழுத தோனலை அப்படினு யோசிக்க வைத்த கவிதை இது. ஏன்னு கேட்கப்புடாது. கண்ணனுடைய கவிதைகள் எல்லாம் பெரும்பாலும் குறைவான வரிகளுடனும் எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாகவும் இருக்கும். கவிதைங்கிற பேர்ல சிலர் கட்டுரைகளையும், இன்னும் சிலர் நவீனங்கற பேர்ல புரியாத புதிர்களையும், சிலர் படத்தோட வெறும் வார்த்தைகளை வைத்து சித்து காட்டும் வேலைகளையும், இன்னும் சிலர் முகநூலில் தினமும் எதையாவது போடனும்னு வெறியா கவிதைங்கிற பேர்ல 10 பதிவுகளை போட்டு நம்மள கொல்ல அத சிலர் அருமை அருமை என்று பாராட்ட, ஏன்டா முகநூலுக்கு வந்தோம்னு நினைக்கிற சமயத்தில இவரோட காதல் கவிதைகள் நம் மனதை குளிர்விக்கும். கண்ணன் காதல் கவிதைகள் மட்டுந்தான் எழுதுவார்னு பலர் நினைச்சிகிட்டு இருக்காங்க. ஆனா அதையும் தாண்டி அவர் முதல் புத்தகமான ‘கண் கொத்திப் பறவை’யில் வரதட்சணை,பசி, பெண்ணியம் இப்படி சில கவிதைகள் எழுதியிருக்கிறார். புதுக்கவிதைகள் மட்டுமல்ல மரபுலேயும் வெளுத்து வாங்குவார். கடந்தாண்டு சிங்கை பொன்விழா கொண்டாடங்கள் போது,எங்கள் ஆசான் கருணாகரசின் முயற்சியின் பேரில் நாங்க ஒரு பத்து பேர் பல கவிதைகள் எழுதினோம். அதில் கண்ணன் சிங்கையின் வரலாற்றை ரொம்ப அழகா ஒரு கவிதையில சொல்லியிருப்பார். நாளை மாலை அவரோட “அடம்செய விரும்பு” நூல் அறிமுக விழாவுக்கு கண்டிப்பாக அனைவரும் வாங்க. நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்டு 28, 2016, இடம்: ஆனந்தபவன் உணவகம், தளம் இரண்டு(முஸ்தபா சென்டர் எதிரில்) நேரம் : மாலை 7 மணி