சொல்லிச் செல்லும் சொல்லடைகள்

 
“டே, என்னடா இந்த Ikea Tableல கூட fix பண்ண தெரியல உனக்கு”னு கேட்டா,
“அப்பா, வாட் இஸ் இன் சட்டி வில் ஒன்லி கம் இன் அகப்பை”னு சொல்லிட்டு போனான் என் பையன்.
அவன் சொன்னதுல பல பொருள் உண்டு. அதுல ஒன்னு ‘நான் உன் பையன் தானே’, என்பது:(

சரி, இங்கதான் அப்படினு பார்த்தா பக்கத்துல மனைவியும் மகளும்….

“அம்மா, ஆசிரியர், என்னை ஒரு கட்டுரை எழுதிட்டு வரச்சொன்னாங்க. நீங்க எனக்கு உதவி செய்றீங்களா”
“சரி, ஆனா ‘மொட்டை தாத்தா குட்டை விழுந்தார்’னு மாதிரி இல்லாம விவரமா என்ன கட்டுரை, என்றைக்கு கொடுக்கனும், கொஞ்சம் தெளிவா சொல்லு”

இப்படி எங்க வீட்ல அடிக்கடி இந்த மாதரி சொலவடைகள் புழக்கத்துல இருக்கும். பொதுவா எனக்கு தெரிஞ்சு இந்த மாதரி அதிகமான சொலவடைகள், வழக்குச் சொற்கள் பயன்படுத்தப்படுவது தமிழகத்திலுள்ள நெல்லை வட்டாரத்தில் தான்னு நினைக்குறேன். அதனால எங்க வீட்லேயும் நிறைய அந்த மாதிரி உரையாடல கேக்கலாம். அந்த வட்டாரத்தில் வளர்ந்தவர்கள் பேசவதை புரிந்து கொள்ள ஒரு தனி அகராதியே போடலாம். மற்ற வட்டாரத்திலும் சொல்லடைகள் அதிகமாக புழங்கவதுண்டு. ஆனால் வட்டாரதிற்கேற்ப சொலவடைகளின் சொற்கள் சற்றே மாறுபடும், பொருளும் வேறுபடும்.

பேச்சுமொழியின் அடிக் கூறுகளே இந்த பழமொழி, முதுமொழி, ஒலிக்குறிப்புச் சொற்கள் என பலவாறு அழைக்கப்படும் சொலவடைகள் தான். அது ஒரு சமூகத்தின் வாழ்க்கை பட்டறிவின் சான்றுகள். அது ஒரு பண்பாட்டின், நாகரீகத்தின் கலைக்களஞ்சியம். அவை பார்க்க எளிதாக இருந்தாலும் வெளிப்படுத்தும் கருத்துகள் ஆழமானவை.

மேலும் படிக்க…

தமிழை நேசிப்போம்; தமிழில் பேசுவோம்

சிங்கப்பூர், ஏப்ரல் 6: அடுத்த தலைமுறைக்கும் தமிழ்மொழியின் மாண்பைக் கொண்டு செல்லவேண்டும் என எண்ணத்தோடு ‘தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு சிங்கப்பூரில் தமிழ்மொழி விழா இந்த ஆண்டும் வெற்றிகரமாகத் தொடங்கிவிட்டது.

அடுத்த தலைமுறையினர் இனிய தமிழில் பேச வேண்டும் என்ற நோக்கத்தோடு, ‘தமிழ் மொழி விழா’ சிங்கையில் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றது. அதைப்போல் இவ்வாண்டிற்கான ‘தமிழ் மொழி விழா’ மீடியாகார்ப் வளாகத்தின் எம்ஈஎஸ் அரங்கில் கோலாகலமாகத் தொடங்கப்பட்டது.

இம்மாதம் முழுவதும் தமிழ் சார்ந்த 50-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து தமிழ் மொழி விழாவைச் சிறப்பிக்குமாறு, தமிழ்மொழி ஆணையத்தின் தலைவர் ஆர்.இராஜாராம் மக்களைக் கேட்டுக் கொண்டார்.

வளர் தமிழ் இயக்கம், தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக்குழு மற்றும் வசந்தம் ஒளிவழி, ஒலி 96.8 வானொலி ஆகியவை இணைந்து நடத்தும் இவ்விழாவில், சிங்கையைச் சேர்ந்த சுமார் 45 அமைப்புகளும், 4 உயர்கல்வி நிலையங்களும் இணைந்திருக்கின்றன.

“தமிழோடு இணைவோம்” என்ற தொடக்க விழா ஆடல், பாடலுடன் கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுத் தலைவரும் செம்பாவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர், இவ்விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இயல், இசை, நாடகம் என முத்தமிழ் நிகழ்ச்சிகள் ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரையில், இவ்விழாவில் அரங்கேறவுள்ளன.

தமிழ் இலக்கிய மன்றத்தின் “பார்வை 2017”

(எச்சரிக்கை : இது சற்றே பெரிய பதிவு. சுலபமாக படிக்க தலைப்பு கொடுத்திருக்கிறேன்:))

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றத்தின் “பார்வை 2017” கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 2ம் தேதி காலை உட்லான்ட்ஸ் வட்டார நூலக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. ஐந்தாவது முறையாக “பார்வை” நிகழ்ச்சியை அரங்கேற்றும் இவர்கள் தமிழ் மொழி விழாவுக்கு புதிய வரவானலும் அருமையான வரவு.

தொடக்கம்
——————-
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திரு இராஜாராம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் திரு அருண் வாசுதேவ், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவை தலைவர் திரு முத்தையா அருணாச்சலம், சிங்கப்பூர் நிர்வாக பல்கலைக்கழகத்தின் ‘தமிழா’ அமைப்பின் தலைவர் திரு விக்னேஷ் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். ‘யுத்தம்’ நிகழ்ச்சி தொடக்கம் போலேயே இங்கேயும் மற்ற பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை தலைவர்களை அழைத்து தொடங்கி வைத்தது மாணவர்களுக்குள் உள்ள நல்ல புரிந்துணர்வை காட்டியது.
பாரதியாரின் “வாழ்க தமிழ்மொழி” பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக பாடினார்கள் மாணவி கபிலாவும், பிரியன்னாவும். ஆனால் அதில் ‘சுடர்க தமிழ்நாடே’ என்பதற்கு பதிலாக ‘சுடர்க சிங்கை நாடே’ என்று மாற்றியிருந்தனர், சிறப்பு.

சிறப்பு விருந்தினருக்கு மாலை, பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.

மேலும் படிக்க…

யுத்தம்

 தமிழ்மொழி விழாவின் முதல் நிகழ்ச்சி “யுத்தம் 2017” இன்று காலை சிறப்பாக நடந்து முடிந்தது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திரு வெ பாண்டியன்(தமிழர் பேரவைத் தலைவர்), சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழ் பேரவை தலைவர் முத்தையா அருணாச்சலம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் திரு அருண் வாசுதேவ், சிங்கப்பூர் நிர்வாக பல்கலைக்கழகத்தன் ‘தமிழா’ அமைப்பின் தலைவர் திரு விக்னேஷ் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். மற்ற பல்கலைக்கழக மாணவத் தலைவர்களை அழைத்து தொடங்கி வைத்தது மாணவர்களுக்குள் உள்ள நல்ல புரிந்துணர்வை காட்டுகிறது.
பாரதியாரின் “வாழ்க தமிழ்மொழி” பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஒலித்தது. வரவேற்புரை வழங்கிய மாணவர்த் தலைவர் அருண், வாழ்த்துரை வழங்கிய திரு வெ பாண்டியன் சுருக்கமாக ஐந்து நிமிடங்களில் முடிந்துவிட்டனர். பொன்னாடை, மாலைகள் இல்லை.

மேலும் படிக்க…

பேச்சுப் போட்டி

பல்கலைக்கழக மாணவர்களுக்கான அனைத்துலக தமிழ் பேச்சுப் போட்டியில் சிங்கை பல்கலைகழக மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு கிடைத்தது. வணக்கம் மலேசியா-ஆஸ்ட்ரோ வானவில் இணைந்து சென்னையில் டிசம்பர் 17ஆம் தேதி பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையிலான ‘பேசு தமிழா பேசு’ என்ற பேச்சுப்போட்டி ஒன்றை SRM பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தியது. மேடைத்தமிழை வளர்ப்பதும், உலகத்தமிழர்களிடையே உறவுகளை வளர்ப்பதுமே மூலநோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி பல்கலைகழக மாணவர்களுக்காக நடத்துவது இதுவே முதல் முறை. நவம்பர் முதல் வாரத்தில் நடக்கவிருந்த இப்போட்டியில் பங்கு பெற விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பம் தேர்வு காலத்தையொட்டி இருந்ததால் பல்கலைக்கழகம் நிராகரித்துவிட்டது. ஆனால் வேறு சில காரணங்களால் போட்டி டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட இந்த முறை மாணவர்கள் பங்குபெற பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்தது. தேர்வு முடித்த கையோடு போட்டியில் கலந்து கொள்ள விமானம் நிலையம் சென்ற மாணவர்கள் ‘வர்தா’ புயல் காரணமாக விமானமின்றி திரும்பி விட்டனர். மீண்டும் அடுத்தநாள் சென்னை சென்று, பிறகு போட்டியில் கலந்து கொண்டு ஊக்கப்பரிசு பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. பரிசு பெற்ற திரு அருண் வாசுதேவ் கிருஷ்ணன், திரு செம்பியன் சோமசுந்தரம், திரு ஜெரமி ஜோயல் பீட்டர் ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். “மலேசியா, இந்தியா, இலங்கை, மியன்மார் என்று பல நாடுகளிலிருந்தும் மாணவர்கள் கலந்து கொள்ள பதிவு செய்திருக்கின்றனர், ஆனால் சிங்கப்பூரிலிருந்து மாணவர்கள் யாரும் இதுவரை பதிவு செய்யவில்லை. சிங்கப்பூரின் பிரதிநிதித்துவம் இல்லாதிருப்பது எனக்கு உறுத்தலாக இருக்கின்றது” என்று கடந்த அக்டோபர் மாதத்தில் பேராசிரியர் திரு குறிஞ்சி வேந்தன் என்னைத் தொடர்புக் கொண்டார். அதற்கான முயற்சியில் எனக்கு உதவிய மாணவர்கள் அருள் ஓஸ்வின், அருண் வாசுதேவ் அவர்களுக்கு என் நன்றி. தொடர்ந்து தகவல்கள் கொடுத்து ஊக்கப்படுத்தி சிங்கையிலிருந்து மாணவர்கள் பங்கு பெற விரும்பிய பேராசிரியர் திரு குறிஞ்சி வேந்தன் அவர்களுக்கும் என் நன்றி. இப்போட்டியில் கலந்து கொள்ள மாணவர்களுக்கான விமான பயணச்சீட்டுச் செலவை எந்தவித மறுப்பும் இல்லாமல் உடனே ஏற்றுக் கொண்ட தமிழர் பேரவை அதன் தலைவர் திரு பாண்டியன், வணக்கம் மலேசியா திரு தியாகா, ஒருங்கினைப்பாளர் பேராசிரியர் திரு குறிஞ்சி வேந்தன், புரவலர் திரு ஜோதி மாணிக்கம், சமூக தலைவர் திரு நிஜாம் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி🙏🙏 தொடர்ந்து அனைத்துலக அரங்கில் சிங்கை மாணவர்கள் தடம் பதிக்க வாழ்த்துகள்💐💐 பி.கு: வணக்கம் மலேசியா-ஆஸ்ட்ரோ வானவில் இணைந்து தொடக்கக்கல்வி மாணவர்களுக்காக கடந்த ஆறு ஆண்டுகளாக ‘மாணவர் முழக்கம்’ என்ற பெயரில் பேச்சுப் போட்டியை நடத்தி வருகிறார்கள். கடந்த மாதம் துபாயில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் சிங்கை தொடக்கக்கல்வி மாணவி ஹர்ஷிகா மூன்றாம் பரிசு பெற்றார்.