கடந்த 30-ஏப்ரல்-2017, ஞாயிறன்று மாலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் கவிமாலையின் செந்தமிழ்ச் செல்வர் வை திருநாவுக்கரசர் புகழ் போற்றும் விழாவும், தமிழ் மொழி மாத நிறைவு விழாவும் ஒருங்கே நடந்தது.
தலைமை உரையாற்றிய கவிமாலையின் தலைவர் திரு இறை மதியழகன், ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சான்றோர் ஒருவரை போற்றும் விழாவாக தமிழ் மொழி மாதத்தில் விழா எடுத்து வருவதாகவும், உள்ளூரில் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களின் பெருமையை போற்றும் வண்ணம் கடந்த ஆண்டு மூவருக்கு புகழாரம் சூட்டிய கவிமாலை இவ்வாண்டு உள்ளூர் படைப்பாளிகள் பலருக்கு தளம் அமைத்து கொடுத்த திரு வை. திருநாவுக்கரசு அவர்களுக்கு விழா எடுப்பதில் பெருமை கொள்கிறது என்றார்.
மாணவர்கள் கவிதை வாசித்தல்
—————————————————–
பொங்கோல் உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் மிக அழகாக முத்திரை கவிதைகளை பெரும்பாலும் பார்க்காமல் படித்தனர். நம்முடைய கவிதையே நாமே மறந்து போகும் நிலையில் மாணவர்கள் மற்றவர்களின் கவிதைகளை சிறப்பாக நினைவில் வைத்து ரசித்து படித்தனர். மூளையை துளைத்த கவிதை, சிறந்த கற்பனை
கவிதை, மனதுக்கு பிடித்த கவிதை என கடைசி நாள்களில் வெளியிடப்பட்ட ஒரு சிலரது கவிதைகள் தவிர, மற்ற அனைத்து ‘முத்திரை வரிகளும்’ மேடையில் பல சுற்றுகளாக படிக்கப்பட்டன. இதில் சிறந்தது, சிறப்பில்லாதது என்று மாணவர்கள் பிரித்து பார்க்கவில்லை. நல்ல பயிற்சி. சிறந்த முயற்சி. அந்த மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட நினைவு பரிசு பார்வைக்கு நன்றாக இருந்தது. என்ன பரிசு என்று அறிவித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக கவிதைப் பயிலரங்கு ஒன்று நடத்தப்பட்டது. அந்த பயிலரங்கில் கலந்துகொண்டு கவிதை எழுதும் போட்டியில் பென்டமியர் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த துரை குமரனும், குழலி சரவணனும் முதல் பரிசைப் பெற்றனர். இவ்வாண்டு முதல்முறையாக மாணவர்களுக்கு கவிதை மனனப் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கவிதை மனனப் போட்டியில் ராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த கோபிகா நரசா லட்சுமியும் போத்தோங் பாசிர் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முத்து சுவேதாவும் முதல் பரிசை வென்றனர்.
கவிதைப் பயிலரங்கு நடத்திய மன்னை ஐயாவுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
ஏப்ரல் மாதத்திற்கான ‘எதிர்மறை’ எனும் தலைப்பில் கவிதைப் போட்டிக்கான கவிதை எழுதி வென்றவர்களுக்கும் நிகழ்ச்சியில் பரிசு வழங்கப்பட்டது.