வாங்க பழகலாம் தமிழ்

பாலர் பள்ளி குழந்தைகளுக்கு சிண்டா(SINDA), லின் (LYNN – Literacy and Numeracy) என்ற வகுப்பு நடத்தி வருகிறது. குழந்தைகளுக்கு ஆங்கிலத்தையும், எண்களையும் ஒரு இனிய கற்றல் அனுபமாக சொல்லிக் கொடுத்து அவர்களை தொடக்கநிலை பள்ளிக்கு தயார்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

இந்த திட்டத்தை வசதி குறைந்த குடும்பங்களுக்கு அறிமுகப்படுத்தம் நோக்கத்துடன் இந்த திட்டத்தை எங்கள் பகுதியில் நடத்த
சட்டம், நிதி ஆகியவற்றுக்கான மூத்த துணையமைச்சரும், தஞ்சோங் பகார் குழுத்தொகுதியின் அடித்தள ஆலோசகருமான குமாரி இந்திராணி ராஜா கூறினார். அதனுடன் குழந்தைகளுக்கு தமிழும் சொல்லி கொடுக்க வேண்டும் என என்னிடம் அதற்கான திட்டத்தை தயார் செய்ய சொன்னார். கடந்த ஆண்டு மத்தியில் இத்திட்டத்திற்காக முயற்சிகளை தொடங்கினோம். சிண்டாவின் ‘லின்’ வகுப்புகள் மார்ச் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் முடியும் என்பதால் கடந்தாண்டு தொடங்க முடியாமல் போனது ஒரு காரணம். இந்தாண்டு கண்டிப்பாக தொடங்கி விடுவேன் என்று சொல்லியிருந்தேன்.

அதன்படியே, இன்றிலிருந்து பாலர் பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக தமிழ் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இதை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். காரணம், இதில் சில குழந்தைகள் பாலர் பள்ளிக்கு செல்லவில்லை. சிலர் வேறு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள். சிலர் வீட்டில் ,ஒருவர் மட்டுமே தமிழ் தெரிந்தவராகவோ இல்லை வீட்டில் சுத்தமாக தமிழ் பேசாதவர்களாகவுள்ள குடும்பங்களிலருந்து வரும் குழந்தைகள். பாலர்பள்ளியில் தமிழ் படிக்காதவர்களும் உண்டு. இவர்களுக்கு இலவசமாக தமிழ் சொல்லித்தரும் வகுப்பு நடத்துவதில் பேரானந்தம். தமிழ் படிக்காத, தெரியாத குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே தமிழ்மொழி மீது ஆர்வத்தை வளர்க்க வேண்டும். அதற்கான ஒரு நீண்டகாலத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதை தீவு முழுவதும் விரிவுப்படுத்தவேண்டும் என்பதே நோக்கம். அதன் மாதிரி வடிவம்தான் இந்த திட்டம்.

சரி, இது எப்படி சாத்தியமானது. நல்லவர்கள் நம்மை சுற்றி இருப்பின் நல்ல செயல்கள் செய்வது சுலபம். முதலில், “இருமொழியின் கற்றல் அவசியம், சிறு வயதிலேயே கற்றுக்கொடுத்தால்தான் மொழியை சுலபமாக கற்றுக்கொள்ள முடியும்” என தமிழ்சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்ய சொன்ன எங்கள் அடித்தள ஆலோசகர் குமாரி இந்திராணி ராஜாவுக்கு நன்றி. அதற்கான முழு சுதந்திரம் கொடுத்து ஆதரித்த எங்கள் இந்திய நற்பணி செயற்குழுவின் தலைவர் திரு கோபால், துணைத்தலைவர் திரு GanGanesan Kulandaiன் சமூகபணியில் வழிகாட்டியாக இருந்து இந்த திட்டத்திற்கு என் கூடவே பயணித்து ஆதரித்த RadRadhakrishnan Menon Sreelatha Menon்கிளுக்கு நன்றி. நான் இந்த திட்டம் தொடர்பாக என்ன உதவி கேட்டாலும் உடனிருந்து செய்த அனைத்து அடித்தள தலைவர்களுக்கும் நன்றி.

சரி, இப்படி ஒரு வகுப்பு நடத்த வேண்டுமே, எங்கே நடத்துவது என்று இடத்தை தேடியபோது குடியிருப்பாளர்களுக்கு மிக அருகில் உள்ள இடத்தை தேடினோம். ஜங்ட தொடக்கப்பள்ளியின் துணைத் தலைமை ஆசிரியரை சந்தித்து பேசினோம். உடனே ஒத்துக்கொண்டார்கள். அதில் சில நிபந்தனைகளும் உண்டு. பள்ளிக்கூட பைகள், தண்ணீர் பாட்டில்கள் கொண்டு வர வேண்டும். காலணிகள் அணிந்து வர வேண்டும் என்பது சில. அவற்றை எப்படி வாங்குவது என யோசித்த போது, எங்கள் ஆலோசகர் அதற்கும் ஏற்பாடு செய்தார்.

யாரை வைத்து பாடம் எடுப்பது என தெரியவில்லை. எனக்கு தெரிந்த நண்பர்கள், ‘பாடம் எடுக்கிறேன்’ என ஒப்புதல் அளித்த நண்பர்கள்கூட நாள், நேரம், இடம் இவற்றில் ஏதாவது ஒன்று அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் போக, மறுத்துவிட்டனர். உடனே ஒரு யோசனை தோன்றியது, நீ ஆன் பல்துறை தொழில்நுட்ப கல்லூரியில் பாலர் பள்ளி குழந்தைகளுக்கு தமிழ் கற்பிப்பதில் பட்டப்படிப்பு கடந்தாண்டு தொடங்கப்பட்டது. அதில் உள்ள மாணவர்களை வைத்து பாடம் எடுத்தால் என்ன? அவர்களுக்கும் இது ஒரு பயிற்சி களமாக இருக்கும் என அதில் முதலாண்டு முடித்திருக்கும் Naseemaவிடம் கேட்டேன். அவருக்கு இயலாத சூழ்நிலையை விளக்கிய அவர் உம்ராவிற்காக ஊருக்கு சென்ற இடத்திலும் அங்கிருந்தபடியே உடனடியாக தன்னுடன் பயிலும் நண்பர்களை அணுகி நான்கு பேரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர்கள் நால்வரும் உடனே தமிழ் சொல்லித்தர (தொண்டூழியராக) சம்மதித்தார்கள்.

சரி, இப்போ இடம் தயார், ஆசிரியர்கள் தயார். அடுத்து பாடத்திட்டம், பயிற்சிதிட்டம் இதை எப்படி தயார் செய்ய என நினைத்த போது, நமக்கு உதவியவர் திருமதி பத்மாவதி இராஜேந்திரன். சரஸ்வதி பாலர்பள்ளியில் 25 ஆண்டுகளாக பணியாற்றிய இவர் மூத்த தலைமையாசிரியராக இருந்தவர். அவரை சந்தித்து திட்டத்தை பற்றி கூறியவுடன் உடனே பாடத்திட்டம், குழந்தை பாடல்கள் என எல்லாம் தயார் செய்து எனக்கு அனுப்பி வைத்தார்.
கூடுதலாக ஒரு உதவி வேண்டும், வகுப்பு நடத்தவிருக்கும் மாணவ/ஆசிரியர்களுக்கு ஒரு பயிற்சி பட்டறை நடத்தவேண்டும் என கூறினேன். அதற்கும் ஒத்துக்கொண்டு, நான்கு ஆசிரிய-மாணவர்களுக்கும் எப்படி பாடம் எடுக்க வேண்டும், குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்ளலாம், அவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என தன் அனுபவத்தை விடுமுறை நாளாக இருந்தும் நேற்று காலை, மிக அழகாக பட்டறையில் விளக்கினார். அதை கேட்ட எனக்கே குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கலாம் என ஆசை வந்தது(இதை வீட்டில் வந்து என் மனைவியிடம் சொல்லி வாங்கிகட்டிக்கொண்டது என் பசங்களுக்கு தெரியவேண்டாம்:). அதோடு மட்டுமில்லாமல், இந்த தமிழ் வகுப்பு திட்டத்துக்கு திருமதி பத்மாவதி வழிக்காட்டியாகயிருந்து நடத்தித்தர சம்மதித்தார்.

அடுத்து புத்தகம். தன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என ஊருக்கு போன ஆசிரியர் GanGanga Baskaranம், குழந்தைகளுக்கு புத்தகம் வேண்டும் என சொன்னவுடன், அங்கிருந்த குறுகிய காலத்திலும், அந்த சூழ்நிலையிலும் எங்களுக்காக குழந்தைகளுக்கு பல புத்தகங்களை வாங்கி வந்தார். அவருக்கு நன்றி.

இந்த தமிழ் நிகழ்ச்சியை குறித்து அறிவிக்க துண்டறிக்கை தேவை என சிலரிடம் சொன்னேன். அவர்களுக்கு முடியாத சூழலில், நண்பர் Sethuraman Srinivasanன்னேன். உடனடியாக அவரே அழகாக வடிவமைத்து கொடுத்தார். சேதுவிற்கு நன்றி.

சரி, இப்போ எல்லாம் தயார். படிக்க பசங்க வேணுமே. வழக்கம் போல் வீடு, சந்தை, கடைகள் என எல்லா இடங்களிலும் சென்று மாணவர்கள் சேர்க்கைக்கு உதவிய அடித்தள தலைவர்கள் Achi Kumar MnVenkatesan Karthikeyini Sivakolunthu VenkatesanrJeremy AruldossnKannappan Mohan அனைவருக்கும் நன்றி. மூன்று மணி நேரம் தொடர்ச்சியா குழந்தைகள் பள்ளியில் இருக்க வேண்டுமே அவர்களுக்கு சாப்பிட, குடிக்க ஏதாவது கொடுக்க வேண்டுமே என்றபோது, அடித்தள தலைவர்கள் அனைவரும் நாமே இந்தாண்டு முழுவதும் அதை கொடுக்கலாம் என செலவை பகிர்ந்துகொண்டனர்.

மாணவர்களோடு, நானும் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என ஒரு வயதான அடித்தளத் தலைவர் சொல்ல, சரி கற்றுக்கொள்ளலாம் ஆனால் அப்படியே குழந்தைகளை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும், சரியாக அவர்கள் பெற்றோர்களிடத்தில் ஒப்படைக்க வேண்டும், அதற்கு உதவ முடியுமா என கேட்டவுடன் அவரும் ஒத்துக்கொண்டார்.

சரி, இதையெல்லாம் தாண்டி முக்கியமா நன்றி சொல்ல வேண்டியது சிண்டாவிற்கும்(SINDA), அதன் தலைமை நிர்வாக அதிகாரி திரு பரதன், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு, அதன் குடும்ப நலத்துறை அதிகாரி திருமதி ஜெயந்தி மற்றும் அவரது குழுவிற்கும்தான்.
இந்த திட்டம் குறித்து திரு அன்பரசுவை சந்தித்து பேசியபோது எனக்கு ஆதரவு கொடுத்து ஊக்குவித்தார். சிண்டாவும் இந்த மாதிரியான திட்டத்தை தயார் செய்து வருகிறது இருந்தாலும் முதலில் நீங்கள் தொடங்குங்கள் அதற்கு ஆதரவு அளிக்கிறோம் என்றார். திரு பரதனிடம் பேசியபோது தமிழ் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு, சிண்டா சம்பளம் வழங்க தயார் என தெரிவித்தார். இப்படி மாணவ-ஆசிரியர்களுக்கு ஊதியம், பட்டறை நடத்த மதிப்பூதியம், திட்டத்துக்கு ஆதரவு என திரு Anbarasu Rajendran தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்தி, உதவிகள் புரிந்து இந்த தமிழ்வகுப்பு நடத்துவதற்கு முக்கியப் பங்காற்றியிருக்கிறார் (தமிழில் சிண்டாவின் துண்டறிக்கை கொடுத்ததற்கும் நன்றி).

தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகள் தொடங்கிய இந்நாளில் தமிழ்மொழி கற்பிக்க அதுவும் தமிழ் தெரியாத சில குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தர நீண்டநாள் திட்டத்தை தொடங்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி. இதை சாத்தியப்படுத்தியவர்களை திரும்பி பார்க்கையில் இதில் எத்தனை பேர் பங்கெடுத்திருக்கிறார்கள் என ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது.

என் மீது நம்பிக்கை வைத்து அன்போடு ஆதரவளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி🙏🙏

   

       

          

 

அவனும் இவனும்

கடந்த வாரம், 8,9ம் தேதிகளில் மூன்று காட்சிகள் ‘அவனும் இவனும்’ என்ற நாடகம் அவாண்ட் நாடகக் குழுவினரால், மலாய் மரபுடைமை நிலையத்தில் அரங்கேற்றப்பட்டது. 9ஆம் தேதி , சனிக்கிழமை மாலை 7:30 மணி காட்சிக்குச் நான் சென்றேன்.

முதலில் நான் வியந்தது, நாடகத்திற்கு வந்திருந்த பார்வையாளர்களை பார்த்துதான். சிங்கப்பூரில் இவ்வளவு தமிழ் இளையர்கள், அதாவது தமிழ் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் தமிழ் இளையர்கள் இருக்கிறார்களா என்று ஒரு வியப்பு ஏற்பட்டது. இவர்களை நான் பல்கலைக்கழக தமிழ் நிகழ்ச்சிகள் தவிர வேறு எந்த தமிழ் நிகழ்ச்சியிலும் மொத்தமாக பார்த்ததில்லை. சொல்லப்போனா அங்கிருந்தவர்களில் நான், ஶ்ரீஜி இன்னும் ஓரிவரைத் தவிர எல்லோரும் முப்பது வயதிற்குள்தான் இருப்பார்கள் என நினைக்கிறேன். அதுவும் இலவசம் இல்லை. ஒரு நுழைவுச்சீட்டின் விலை $25 வெள்ளி(மாணவர்களுக்கு தள்ளுபடி இருந்ததா தெரியாது). ஒரு தமிழ் நாடகத்திற்கு வரும் இவர்கள் ஏன் இலவசமாக நடத்தப்படும் மற்ற தமிழ் நிகழ்ச்சிகளுக்கு வர மாட்டேங்கிறார்கள். சிங்கையில் தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தும் அமைப்புகள் இது குறித்து கொஞ்சம் சிந்திக்க வேண்டும். இதிலே அதற்கான விடையும் உள்ளது.

மற்றொரு செய்தி, இந்நாடகத்தில் நடித்தவர்கள், பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுனர்கள் அனைவரும் 20-30 வயதுகுட்பட்டவர்கள்தான் என நினைக்கிறேன்(படத்தை பார்த்தால் தெரியலாம்).

நுழைவுச்சீட்டு வாங்கும்போது கூடவே ஒரு சின்ன சீட்டும், பென்சிலும் கொடுத்தாங்க, எதுக்குனு பிறகு சொல்றேன்.

சரி, இப்ப அரங்கத்திற்குள் செல்வோம்.

இந்த முறை, படங்கள், ஒலி, ஒளிப்பதிவு எடுப்பதற்கு அனுமதி இல்லை என்பதை முதலிலேயே தெரிவித்துவிட்டார்கள். கடந்த முறை சொல்லாததை பதிவு செய்திருந்தேன்.

நாடகத்தின் தொடக்கத்தில் சமீபத்தில் மறைந்த, நாடகத்திற்கு பெரும் பங்காற்றிய திரு அறிவழகன் திருஞானம் குறித்த ஒரு காணொளி அஞ்சலியாக சமர்பிக்கப்பட்டது. அதில் அவர் நடித்த, இயக்கிய நாடகங்களின் சில காட்சிகள் பதியபட்டிருந்தது சிறப்பு. சின்ன வயதில் அவர் மறைந்தது, சிங்கை நாடகத்துறைக்கு ஒரு பெரும் இழப்பு. அவருடைய குடும்பத்தாருக்கும், அவாண்ட் நாடக குழுவிற்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

சரி, இப்ப நாடகத்திற்குள் போவோம். இதன் கதைச் சுருக்கம் படத்தில் உள்ளது, முடிந்தால் படித்துக் கொள்ளுங்கள்(ஏன் என பின் குறிப்பு 1 படிக்கவும்).

கதையை பத்தி பேசும் முன், நடிகர்கள் குறித்து பார்ப்போம்.

இதில் நடித்த அனைத்து நடிகர்களின் உழைப்பும் ஆர்வமும் அவர்களின் நடிப்பில் தெரிந்தது. இதுதான் செல்வாவின் நாடகத்தின் சிறப்பு. அப்படி ஒரு பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது.

இயல்பான நடிப்பின் மூலம் என்னை கவர்ந்தவர்கள் ராம், தயா மற்றும் பிரியா. ராம் நகைச்சுவையில் கலக்கினார். பிக்பாஸ் ‘ஸ்நேகனை’ விட ஒரு படி மேலபோய் தாவி சென்று கட்டிப்பிடித்தார். அதையும் கீழே விழாமல் சரியாக …. இடுப்பில் ஏறிக் கொண்டார். நல்ல நேர்த்தியான நடிப்பு.
அடுத்து, ஜெய் வேடத்தில் வந்த ஜெய்டன் சரவணன் நாடகம் முடிந்த பிறகும் கூட அதே கோபத்தில் இருந்தது அவர் எந்த அளவுக்கு அந்த கதாபாத்திரத்திற்குள் ஐக்கியமாகிவிட்டார் என்பது தெரிந்தது. அவர் ‘பிகே’வை எத்தி உதைக்கும் போது சரி, சும்மா நின்று கொண்டு மற்றவர்கள் வசனம் பேசும்போதும் சரி, அவர் முகத்தில் அந்த கோபம் நாடகம் முழுக்க இருந்தது. அவருக்கு முதல் மேடை நாடகம் என்று யாராலும் சொல்ல முடியாது.
பிரியாதான் அன்று எல்லோருடைய “ஃபேவரைட்” என நினைக்கிறேன். அப்படி ஒரு இயல்பான நடிப்பு. அதில் மிக முக்கியமான கவனிக்க வேண்டிய ஒன்று, மற்றவர்கள் வசனம் பேசி நடிக்கும் போதும், அவர் முகபாவனைகள், மெய்ப்பாடு என நாடகம் முழுதும் நடித்துக் கொண்டிருந்தார். அந்த உயரமான ‘ஹீல்ஸ்’ செருப்பை போட்டுக் கொண்டு அவர் ஓடும்போது நமக்குதான் ‘ஹார்ட் பீட்’ வேகமாக அடித்தது, ஆனால் அவர் விழாமல் ஓடினார்:) இதுக்கே பல ஒத்திகை பார்த்திருக்க வேண்டும். இவருக்கும் முதல் மேடை நாடகமாம். போங்க பாஸூ, ஏமாத்தாதீங்க, நாங்க நம்ப மாட்டோம்.
‘பிகே’வாக நடித்த பொன்குமரன் செல்வம் தொடக்கம் முதல் முடிவு வரை பயங்கர உணர்ச்சி பிழம்பாக கை, கால், முகம் என நரம்பு புடைக்க நடித்தார். உண்மையிலேயே தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் ஒரே மாதிரி உணர்ச்சிவசப்பட்டு நடிப்பதற்கு நிறைய ‘எனர்ஜி’ வேண்டும். மிக அருமையாக அதை செய்தார்.
ஒரே ஒரு காட்சியில் வந்து சென்றாலும் ஷரன் நன்றாக ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை செய்தார். அந்த ‘கேக்’ மாவு பாத்திரத்தை பிடித்திருந்தது, அடுத்தவர்கள் மேல் இடித்தது, மாவை சிந்தியது, அங்க அசைவுகள் என நன்றாகவே செய்தார்.
மனோவாக நடித்த மனோ விக்னேஷ்வரன், ஒரு காவல்துறை அதிகாரியா அந்த சீருடை போடமாலேயே நம் மனதில் அந்த பாத்திரத்தை பதிய வைத்தார். என்ன, நம்ம தமிழ்படத்தில வர ‘காமடி போலீஸ்’ மாதிரி கொஞ்சம் தொப்பையோட இருந்தாலும் மிக ‘சீரியஸான’ நடிப்பை வெளிப்படுத்தினார். ஒரு காட்சியில், “ஆம்பளைங்கனா தொப்பை இருக்கத்தான செய்யும்?” என முதல் வரிசைல உட்கார்ந்திட்டிருந்த என்னை பார்த்து கேட்டார். எனக்கு ஒரு ‘டவுட்டு’ அதை ஏன் அவர் என்னை பார்த்து கேட்டார்? பக்கத்தில் உட்கார்ந்துட்டிருந்த. Srigய பார்த்து கேட்டிருக்கலாமே:(.. சில இடங்களில் கொஞ்சம் ‘stiff’ஆக இருந்தாலும் பல இடங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தினார்.
அடுத்து பணிப்பெண்ணாக நடித்தவர் மலையாளத்தில் பேசி நடித்தாலும் பெரும்பாலும் புரியும்படியாகவே இருந்தது. ஒரு வித பயம் கலந்த நடிப்பு, சில இடங்களில் அழுகை என அந்த கதாபாத்திரத்துக்கு உரிய நடிப்பை வழங்கினார். இன்னும் சற்று மேம்படுத்தலாம். ஆனால் கண்டிப்பாக முதல் நாடக மேடை மாதிரி தெரியவில்லை. கடைசியாக, ஆனால் நாடகத்தின் மிக முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது ‘அனிதா’தான். என்னங்க எல்லோரும் அவ்வளவு கஷ்டப்பட்டு கைய கால ஆட்டி நடிச்சாங்க, அதுவும் அவர் கணவரா நடித்த பிகே அப்படி உணர்ச்சிவசப்பட்டு நடிச்சாரு, ஆனா இந்தம்மா கைய கால கொஞ்சம் கூட அசைக்கல, மூச்சு கூட உடாம நடிச்சாங்க. எப்படினு கேக்கறீங்களா? ஒன்னுமில்லைங்க, அவங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் அந்த மாதிரி. அதாங்க கொலை செய்யப்பட்ட மனைவியா நடிச்சாங்க. கைய கால ஆட்டிகிட்டே, வசனம் பேசி கூட நடிச்சிடலாம். ஆனா உயிரற்ற உடலாக நடிப்பது அதுவும் ஒன்றரை மணி நேரம் நடிப்பது கொஞ்சம் கடினமானதுதான். அதை சிறப்பாக செய்தார் ‘அனிதா’ என்ற லத்திகா.

சரி, கதைக்குள் போவோம். வீட்டினுள் கொலையுண்ட கிடக்கிறாள் ஒரு பெண்மணி. இரவு மது அருந்தியதால் அதே மயக்கத்தில் எழுந்து வந்த கணவன், மனைவி பேச்சுமூச்சு இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். அவள் இறந்துவிட்டதை காவல்துறைக்கு தெரியப்படுத்தினால் தன் மேல் பழி வரும் என பயந்து, தன் நண்பனை வரவழைக்கிறான். காவலதிகாரியான அந்த நண்பன் தன் பெண்தோழியுடன் வருகிறான். அங்கு வந்து பிறகுதான் விஷயம் அறிந்து காவலர்களுக்கு தெரியப்படுத்தச் சொல்கிறான். ஆனால் பிகே முடியாது என சொல்ல, அவர்களுக்குள் விவாதம் நடக்கிறது. இடையில் அனிதாவின் தம்பி, பிட்சா கொண்டு வருபவர்(காலையில பிட்சா ஆர்டர் பண்ணலாம் என்பது இதுவரை எனக்கு தெரியாது), அண்டை வீட்டுக்காரர், வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் என பலர் வந்து போகிறார்கள். இவர்களில் யார் கொலையாளி என கண்டுபிடிப்பதே கதை.

இடைவேளையில் அந்தக் கொலையாளி யார் என்பதை பார்வையாளர்கள் சீட்டில் எழுதிக்கொடுப்பதற்கே அந்த சீட்டும், பென்சிலும். எல்லோரும் எழுதி கொடுத்தோம். நாடகம் முடிந்த பிறகு கதாபாத்திரங்களின் பெயரும், அவர்களை கொலையாளிகள் என எத்தனை பேர் யூகித்தார்கள் எனவும் சொல்லப்பட்டது. நாடகத்தை கூர்ந்து கவனிக்க இது ஒரு நல்ல யுக்தியாக இருந்தது.

கடைசியில், “நான் தான் கொன்றேன்” என ஒருவர் வாக்குமூலம் கொடுத்து முடிக்க, பின்னாடி, நாடகத் தலைப்பை சொன்னவுடன், “நாடகம் முடிந்துவிட்டது போல” என நான் சொல்ல, பக்கத்திலிருந்த ஶ்ரீஜி “இல்லை, இப்படி முடிக்க மாட்டார்கள்” என சொல்ல, அதே போல், அடுத்த கதாபாத்திரம் உள்ளே வந்து “நான்தான் கொன்றேன்’ என சொல்லி, எப்படி, எதற்காக கொன்றார் என்று விளக்குகிறார்.

நான் யூகித்த ‘கொலையாளி’ தவறாய் போனது:(

ஒரு நல்ல கதை அமைத்து அதை நல்ல நடிகர்கள் கொண்டு அரங்கேற்றிய நாடகம். ஆனால், நாடகம் விறுவிறுப்பாக இருந்ததா என்றால் இல்லை. இடைவேளை வரை ஒரே அலைவரிசையில் ஓடிய மாதிரி இருந்தது. கொஞ்சம் கதாபாத்திரங்கள் மீது சந்தேகம் வரும்படி காட்சிகள் அமைத்திருக்கலாம்.

எனக்கு, ‘திரில்லர்’ கதைனா, வீணை எஸ் பாலசந்தரின் ‘நடு இரவில்’ படம்தான் நினைவில் வரும். காலத்தால் அழியாத ஒரு அருமையான ‘கிரைம் திரில்லர்’. அதில், நடித்த எல்லோர் மேலும் சந்தேகம் வரும். கடைசியில் நாம் சந்தேகப்படாத ஒருத்தர் கொலை செய்திருப்பார்.

சரி, நாடகத்திற்கு வருவோம். வில்லனாக இருப்பவர்கள் அரவிந்த்சாமி போல இருந்து அமைதியாக நடிப்பதை ஏற்றுக்கொண்ட இரசிகர்கள் உள்ள இக்காலக்கட்டத்தில், நம்பியார், அசோகன் மாதிரியான பழைய நடிப்பு பாணியை(சில இடங்களில்) தவிர்த்திருக்கலாம் என தோன்றியது.

இளையர்கள் நாடகம் என்பதால் அவர்களுக்குள் பே(ஏ)சிக்கொள்ளும் ‘வழக்குச் சொற்கள்’ பல இருந்தன. அது யதார்த்தமாகவும் இருந்தது.

நிறைய நுணுக்கங்களில் கவனம் செலுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. நாடக அரங்கின் கதவையே, வீட்டின் வாசற்கதவாய் வைத்தது, பிகே அரங்கத்திற்கு பின்னால் சென்றவுடன், வாய்க்கொப்பளிப்பது போன்ற சத்தம் மட்டும் வருவது போன்றவை ஒரு உண்மையான வீட்டிலிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. பிட்சா கொண்டு வருபவர், ‘பிட்சா ஹட்’ டீ சர்ட் போட்டு வந்தது, ‘காலிங் பெல்’ அடித்தது இப்படி பல விஷயங்கள் நம்மை ஒரு நல்ல நாடகம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தியது.

ஆனால், நுழைவுச்சீட்டு $25 வெள்ளி என்பதை குறைத்தால் இன்னும் நிறைய பேர் பார்க்க விரும்புவார்கள்.

செல்வாவின் நாடகம் என்றால் நடிப்பு இருக்கும், உழைப்பு இருக்கும், கதை இருக்கும், மொத்ததில் நல்ல நாடகம் பார்த்த மன நிறைவு இருக்கும்.

பி.கு 1 : இந்த நாடகத்தை பற்றியும், அவாண்ட் நாடக குழு பற்றியும் கையேட்டில் பண்ணிரெண்டு பக்கங்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும், இரண்டு பக்கங்கள் தமிழில் இருந்தது பாராட்டுக்குரியது. ஆனால் அந்த இரண்டு பக்கத்தையும் கருஞ்சிவப்பில் போட்டு அதில் தமிழ் எழுத்துகளை கருப்பில் அச்சிட்டதுக்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று தெரியவில்லை:) ஃபோனில் படம் பிடிச்சு அதை ‘ஜும்’ பண்ணிதான் பார்த்தேன்.

பி. கு. 2: முன் வரிசையில் உட்கார்ந்திருந்ததால் , மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக ‘ஃபோனை’ தொடவில்லை. அதனால் குறிப்பும் எடுக்கவில்லை. எதாவது தவறாக இருந்தால் குறிப்பிடவும்.