என்னது தினமும் கவிதையா?

எல்லோரும் ‘ரூம்’ போட்டு யோசித்துதான கவிதை எழுதுவாங்க இல்லை ஏதோ ஒரு மலைப்பகுதியில், கடலோரத்தில்்இயற்கைக் காட்சிகளை இரசித்துக்கொண்டே எழுதுவார்கள் இல்லை அமைதியான சூழ்நிலையில் கவிதை எழுதுவார்கள். அட ஒன்றுமே இல்லைனா ஒரு அழகான காதலியை நினைச்சு எழுதவாங்க. இது ஏதுமே இல்லாமல் எப்படிப்பபா தினமும் கவிதை எழுதறது?
அதுவும் ஒரு தலைப்போ கருப்பொருளோ கொடுத்து எழுதணுமாம், எப்படி கடிவாளம் கட்டின குதிரை மாதிரி ஒரே கருப்பொருள்ல யோசிக்கிறது? இப்படி பல கேள்விகள் பலருக்கும் எழுந்திருக்கலாம்.
ஆனால் அத்தனை கேள்வியையும் உடைத்து நாள்தோறும் கவிதை எழுதும் சவாலில் கடந்த 30 நாளில் வெற்றிகரமாக கிட்டத்தட்ட 1000 கவிதைகளை தொட்டிருக்கும் ‘சிங்பொரிமா’ முகநூல் பக்கம். இப்படி ஒரு வெற்றி இந்த தளத்திற்கு எப்படி சாத்தியமானது என்ற கேள்வி நான் உட்பட பலருக்கும் எழுகிறது.

என்னை எடுத்துக்கொண்டால், கடந்த சில ஆண்டுகளாக கவிதை எழுதி பல பரிசுகளையும், தங்க முத்திரை விருதும் பெற்றிருந்தாலும் இந்த தளம் ஒரு மாறுபட்ட அனுபவத்தை கொடுத்தது என்றே சொல்லவேண்டும். எப்ப தலைப்பு வரும் என்று காத்துக்கொண்டிருந்த நாள்கள் உண்டு. அதற்காக இரவு 12 மணிக்கு பிறகு, தூக்கம் கண்ணை சொக்கியும் தேர்வுக்கு படிக்கும் மாணவர் போல தூங்காமல் முழித்திருந்திருக்கின்றேன். பொதுவாக தமிழ் விழா மாதத்தில் நான் போடும் நீண்ட பதிவுகள் குறைந்துவிட்டது. கவிதை பற்றிய சிந்தனை, மற்றவர்கள் எழுதிய கவிதையை படிப்பது, அவர்களுக்கு ‘லைக்’, ‘கமன்ட்’ போடுவது என நாள் ஓடிவிட்டது.

சரி இது என்ன புதிய விஷயமா? என கேட்டால், இல்லை என்றே சொல்வேன். எங்கள் நண்பர் ஆசான் Karuna Karasu கொடுத்த யோசனையின் பேரில் எங்கள் ‘குயில் தோப்பு’(!) நண்பர்கள் அனைவரும் SG50யை முன்னிட்டு 2015இல் ஆகஸ்ட்டு 1 முதல் 10 வரை சிங்கப்பூரை மையமாக வைத்து தினமும் ஒரு மரபு கவிதை எழுதினோம். அதில் பலரும் அப்போதுதான் மரபு கற்றுக்கொண்டோம். குறிப்பாக அன்றிரவு ஒரு பா வகை கற்றுக்கொண்டு அடுத்த நாள் அந்தப் பா வகையில் ஒரு கவிதை எழுதுவதுண்டு. கிட்டத்தட்ட 10 பேருக்குமேல் எழுதி நூறை தொட்டுவிட முயற்சித்தோம். ஆனால் அதை அவரவர் முகநூல் பக்கத்தில் SG50 ‘ஹாஷ்டேக்கோடு’ எழுதினோம்.

இன்னொரு முயற்சியாக திரு முத்துப்பேட்டை மாறன் நிலாமுற்றம் என்று கவிதைகளுக்கான முகநூல் பக்கத்தை மூன்றாண்டுகளுக்கு முன்னர் தொடங்கினார். இன்று உலகெங்கிலும் இருந்து 45,000த்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டதாக உருவாகியிருக்கிறது இப்பக்கம். இதில் தினமும் கவிதை என்பதை தாண்டி கவியரங்கம் கூட நடத்தியிருக்கிறார்கள். அதோடு ஆண்டு விழாக்களையும் நடத்தி பல பரிசுகள் கொடுக்கிறார்கள். அதில் குறிப்பிடதக்கத்கது நல்ல கவிதைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு படத்தோடு முகநூல் பக்கத்திலேயே சான்றிதழ் தருவார்கள். அதில் உள்ள சில நல்ல மரபு கவிதைகள் எழுதும் கவிஞர்களை நான் சென்னை சென்றபோது நேரில் சந்தித்திருக்கிறேன். அதில் சிலர் மிகச் சாதரனமாக துவங்கி இன்று நல்ல இலக்கணத்தோடு மரபுக் கவிதைகள் எழுதுகிறார்கள்.

ஆனால், அப்படி என்னதான் இந்த தளத்தின் சிறப்பு? ஏன் இதில் நாம் எல்லோரும் எழுதுகிறோம்? மாதம் ஒரு கவிதை எழுத நேரமில்லை என்ற காரணம் சொல்லும் என்னை போன்றோர் நாளும் ஒரு கவிதை எப்படி எழுதினோம்? என்ற கேள்வி எழுந்தது. இளையர்களை எழுத வைக்க வேண்டும் என்பதே எங்களை போன்றோர்(நண்பர்கள்) எழுதுவதற்கு முக்கியமான காரணம். சிங்கையில் தமிழில் பேசும் வாய்ப்பு குறைவாக உள்ளவர்கள் இந்த தளத்தில் எந்த தயக்கமும் இல்லாமல் எழுத வேண்டும். அந்த அடிப்படையில் புதியவர்கள், இளையவர்கள் பலர் இதில் எழுதினார்கள். அதற்கு காரணம், தொடக்கத்தில் யார் வேண்டுமானாலும் எழுதலாம், கவிதையா இல்லையா என்று யோசிக்க வேண்டாம் என்று ஊக்கப்படுத்தும் விதமாக அமைப்பாளர் கூறியது. அதோடு, எல்லோரும் எழுதும் போது ஒரு குழு மனப்பான்மையுடன் பலர் ஊக்கத்துடனும் ஆர்வத்துடனும் எழுதினார்கள்.

இந்த இடத்தில் ஒரு வரலாற்று உண்மையை பதிவு செய்ய வேண்டும். இந்தக் குழுவில் முதல் கவிதையை எழுதியது நான்தான்:) தலைப்புக் கொடுத்து 6 மணி நேரமாக யாருமே எழுதவில்லலையே என்று விளையாட்டாக தொடங்கியது என் 30நாள் பயணம். மரபு, புதுக்கவிதை, நவீனம் என பல வடிவில் பல முயற்சிகள் செய்திருப்பேன். சில நிமிடத்தில் எழுதிய கவிதைகளும் உண்டு, சில மணி நேரம் யோசித்து எழுதிய கவிதைகளும் உண்டு. வாரநாட்களை விட வாரயிறுதி கடினமாக இருந்தது. காலியிலிருந்து இரவு வரை நாள் முழுதும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் இருப்பதால், 11:50க்கு எழுதிய நாள்களும் உண்டு.

இந்தக்குழுவில் தற்போது 750 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பலர் சிங்கையில் இல்லை. எல்லோரும் கவிஞர்களா? கவிதை எழுதபவர்களா? என்றால், இல்லை. அவர்கள் ஏன் இதில் இருக்கிறார்கள்? என்ற கேள்வி எழுந்தது. எல்லோரும் எழுதினால் யார் படிப்பது? படித்து பாராட்ட, கருத்துச் சொல்ல சிலர் வேண்டுமே. இத்தனை பேர் இருந்தும் மொத்தமாக ஓரிரு கவிதை தவிர வேறு எதற்கும் 50 ‘லைக்’கு மேல் வரவில்லலை என்பதே யதார்த்தம். எத்தனை பேர் கவிதை எழுதினார்கள் என்று பார்த்தால் மொத்தமாக நூறுக்கும் குறைவானவர்களே இருந்திருப்பார்கள். அதிலும் தொடந்து எழுதியவர்கள் இருபதுக்குள்தான் இருக்கும். அதற்கு மாணவர்களுக்கு தேர்வு, மற்றவர்களுக்கு பணிச்சுமை என பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் புதிதாய் எழுதியவர்கள் பலர். அதுதான் இந்த தளத்தின் தோக்கம்.

தொடக்கத்தில் சிங்கை சார்ந்த கவிதைகள் எழுத வேண்டும் என்ற விருப்பம் முன் வைக்கப்பட்டது. அதுவும் ஓரளவு நிறைவேறியது.

இந்த போட்டிக்காக தலைப்பு கொடுத்தவர்களை பாராட்டியே ஆக வேண்டும். ஒவ்வொருவரும் அதற்காக எடுத்த முயற்சி, உழைப்பு அதிலும் தனித்துவமாக தலைப்பு கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் இப்படி பல காரணங்களுக்காக அவர்கள் பாராட்டபட வேண்டியவர்கள். அவர்கள் கொடுத்த தலைப்பில் பெரும்பாலான தலைப்பு எழுத தூண்டியது என்பதே உண்மை. எனக்கு ஓரிரு தலைப்பு தவிர மற்றவை சிந்திக்கத் தூண்டியது. இதில் தலைப்பு கொடுத்தவர்கள் யார் என்பதை விட என்ன தலைப்பு என்பதே ஆவலைத் தூண்டியது. தலைப்பிற்காக எழுதியவர்கள் பலர், கொடுத்தவர்களுக்காக எழுதியவர்கள் சிலர். கவிதைக்காக பாராட்டியவர்கள் பலர், எழுதியவர்களுக்காக பாராட்டியவர்கள் சிலர். சில அரட்டைகள், சில கருத்துகள், சில எதிர் வினைகள், சில நகைகச்சுவைகள் இப்படி பல இனிமையான அனுபவங்கள். இதில் பாராட்டபட வேண்டியது தளத்தின் நிர்வாகிகளே. எந்த இடத்திலும் தலையிடாமல் அதன் போக்கில் விட்டு விட்டார்கள்.

சரி இது போட்டியா? யாருக்கு பரிசு கொடுக்கலாம் என்ற கேள்வி எழுந்தது. இந்தக் குழுவை பொறுத்தவரை இங்கு நடப்பதை நான் போட்டியாக பார்க்கவில்லை. போட்டி என்றால் சம பலம் உடையவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு தளமாக இருக்க வேண்டும். முதல் முறையாக கவிதை எழுதுபவர்களும் முயற்சி செய்யலாம், பல்லாண்டுகளாக கவிதை எழுதி பல நூல்கள் வெளியிட்டவர்களும் எழுதலாம் அவர்களில் சிறந்த கவிதை பரிசுக்கு தேர்வாகும் என்பது சரியல்ல. சம தளத்தில் நடக்கும் போட்டியே சரி. ஆகவே இந்த தளத்தை பொறுத்தவரை புதியவர்களுக்கும், இளையவர்களுக்கும் பரிசு கொடுப்பதே சிறப்பு. இது என் தனிப்பட்ட கருத்து. நான் இதில் தொடர்ந்து எழுதியற்கு இரண்டே காரணங்கள். ஒன்று இந்த புதிய முயற்சியை ஊக்கப்படுத்துவது. இதில் புதியவர்களை, இளையர்களை எழுத ஊக்குவிப்பது. இரண்டு எனக்கு கிடைக்கும் ஊக்கம் காரணமாக தொடர்ந்து இந்த சவாலில் பயணிப்பது. அதற்கு ஆசான் கருணாகரசும் ஒரு காரணம். பிக்பாஸ் வீட்டுக்குள்ளே வந்துட்டோம் அவங்களா வெளியாக்குறவரை இங்கே தொடர்வோம் என்பார்:) தினமும் காலை முதல் கவிதை அவரோடதாகதான் இருக்கும். இதில் பரிசைவிட பெரிய ஊக்கம் நாம் போடும் ‘லைக்’தான். இங்கு நம் மூளையை கசக்கி இது நல்ல கவிதையா இல்லையா என ஆராய்ச்சி செய்யாமல், முயற்சியை பாராட்டி ஒரு லைக்கை தட்டிவிட்டு போவோம். இந்த தளம் என் திறமையை காண்பிக்க அல்ல மற்றவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதாக இருந்தால் அதுவே என் கவிதைக்கு கிடைத்த அங்கீகாரம் என முதலில் இருந்தே நான் தெளிவாக இருந்தேன். பரிசுக்குரியவர்கள் சரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதே என் பார்வை. இதை ஏற்கனவே நான் நண்பர் நிஜாமின் பதிவில் தெளிவு படுத்தியிருந்தேன். பரிசு பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். விவரம் கீழே :
முதல் பரிசு: Nizam
இரண்டாம் பரிசு : Geetha Presenna
வளரும் கவிஞர் பரிசு: Abirami Suresh
வளரும் இளம் கவிஞர் பரிசு : Arun Vasudev Krishnan

இனி பரிசு பெறவிருப்பவர்களுக்கும் என் வாழ்த்துகள்.

பரிசு பெறாவிட்டாலும் தங்கள் பணிகளுக்கு இடையில் நேரம் ஒதுக்கி எழுதிய ஒவ்வொருவரும் வெற்றியாளர்களே.

இந்த தளத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம் பலரும் ஆர்வத்தோடு பங்கெடுத்ததே. எந்தவித வேறுபாடுமின்றி நாள்தோறும் கவிதையை பகிர்ந்தார்கள். பல புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். அன்பு சூழ் உலகு.

இளையராக இருந்தாலும் இப்படி ஒரு சிந்தனை உதித்து, நல்ல கருத்தாக்கத்துடன் இந்த தளத்தை உருவாக்கி அதில் வெற்றியும் பெற்ற Harini Vee என் மனமார்ந்த வாழ்த்துகள். அதற்கு உறுதுணையாக இருந்து தொழில்நுட்ப உதவி முதல் விளம்பர உதவிவரை பல உதவிகள் செய்து பக்கபலமாக விளங்கிய Vijay Sangarramuக்கு நம் பாராட்டுகள். இதில் பின்புலமாக இருந்து ஆதரவு கொடுத்த பலருக்கும் நன்றி.

#தமிழ்மொழி_விழா_2018
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்
#TLF2018
#சிங்பொரிமொ2018tlf
#தமிழ்மொழிமாதம்_2018

இளமைத்தமிழ்.காம்

மாணவர்களுக்காகவே இயங்கும் “இளமைத்தமிழ்.காம்” கடந்தாண்டு தமிழ்மொழி விழாவில் மாணவர்களுக்கு தமிழ் விக்கிபீடியா கட்டுரைகள் போட்டியை வெற்றிகரமாக நடத்தி 250 கட்டுரைகளுக்கு மேல் மாணவர்களை எழுத வைத்தது.
இந்தாண்டும் மாணவர்களுக்காக ஒரு போட்டியை நடத்துகிறது. வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் தெடர்பு, தகவல் அமைச்சின்கீழ் செயல்படும் தேசிய மொழிபெயர்ப்புக் குழு வெளியிட்ட சொல்வளக் கையேட்டை மையமாக வைத்து “சொல், சொல்லாத சொல்” என்ற மாணவர்களின் சொல்வளத்தை மேம்படுத்தும் புதிர்ப் போட்டியை நடத்துகிறது.

இப்போட்டியின் இறுதிச் சுற்று வரும் ஏப்ரல் 14ஆம் தேதி, சனிக்கிழமை, காலை மணி 9க்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கத்தில் நடைபெறும். பிரபல, தொலைக்காட்சிப் படைப்பாளர் திரு. ஜிடி மணி இறுதிச் சுற்றை வழிநடத்தவிருக்கிறார்.

இப்போட்டி உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. இதில் மொத்தம் 16 உயர்நிலைப்பள்ளிகள் பங்கெடுத்தன. அதில் முதல் சுற்றில் 8 பள்ளிகள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறின. அதிலிருந்து NUS High School of Maths and Science, Bukit Timah Methodist Girls School, Temasek Junior College, Woodlands Secondary School ஆகிய 4 பள்ளிகள் வெற்றிபெற்று இப்போது இறுதிச்சுற்றில் மோதவிருக்கின்றன. இதில் முதலிடத்தில் வெற்றிபெறும் பள்ளிக்கு 500 வெள்ளியும், இரண்டாம் இடத்தில் வெற்றிபெறும் பள்ளிக்கு 400 வெள்ளியும், மூன்றாம் நான்காம் இடத்திலோ வரும் பள்ளிகளுக்கு முறையே 300, 200 வெள்ளி பரிசுத்தொகை அளிக்கப்படவிருக்கின்றன. வெற்றிபெற்ற குழுக்கு கோப்பையும் உண்டு. இது தவிர பங்கேற்ற அனைத்து பள்ளிகளுக்கும் நினைவுப் பரிசும்,
மாணவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழும் வழங்குகிறார்கள்.

இறுதிப்போட்டியில் ஆங்கிலச்சொல்லுக்கு சரியான தமிழ்ப்பதம் சொல்வது, தமிழுக்கு இணையான ஆங்கிலச் சொல்லை கண்டுபடிப்பது, படத்தை பார்த்து பதத்தை சொல்வது என ஆறு மாறுபட்ட சுற்றுகள் உள்ளன. இதில் ‘ராபிட் ஃபையர்’ எனப்படும் பரப்பரப்பான விரைவிச்சுற்றும் உண்டு. ‘பஸ்ஸர்’ எனப்படும் ஒலிப்பானின் துணைக்கொண்டு தொழில்நுட்ப உதவியுடன் நடத்தப்படும் இப்போட்டி மாணவர்களை ஆர்வத்துடன் விளையாட தூண்டும். அதே நேரம் பல புதிய ஆங்கிலச்சொல்லிக்கு சரியான தமிழாக்கத்தை தெரிந்துகொள்ள உதவும்.

பார்வையாளர்களுக்கும் போட்டி உண்டு, பரிசுகள் உண்டு. அதனால் நிறைய தமிழ்ச்சொற்கள் தெரிந்துகொண்டு வரவும்:)

முதல் சுற்றில் ஒன்றில் இப்புதிர்ப் போட்டியை ஏற்று நடத்தியபோது மாணவர்களின் திறமையை பார்த்து வியந்து போனேன். கேள்வியை சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அவர்கள் பதிலை சொல்லிவிடுவார்கள். தப்பே விடாமல் முழு மதிப்பெண்களையும் பெற்றவர்களும் உண்டு. சிலர் புதிய சொற்களை சொல்லி நம்மை அசத்துவார்கள். இப்படிப்பட்ட நல்ல ஒரு நிகழ்ச்சியை காண, உங்கள் பிள்ளைகளுடன் கண்டிப்பாக வந்து கலந்துகொள்ளுங்கள். மாணவர்களுக்கு உற்காசமூட்டுங்கள். அனுமதி இலவசம்.

#தமிழ்மொழி_விழா_2018
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்
#TLF2018

பழங்களே மருந்து

லிஷா பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் ‘பழங்களே மருந்து’ என்ற ஒரு மறுபட்ட நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை, 8-ஏப்ரல் அன்று தேசிய நூலக வாரியத்தின் பதினாறாவது தளத்திலுள்ள ‘தி போட்’ மண்டபத்தில் நடத்தினார்கள்.

தமிழர் உணவின் பெருமையை பறைசாற்றும் வண்ணம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம்(சிங்கப்பூர்) கடந்தாண்டு நடத்திய விழாவில் “தமிழ் உணவுக்கும் அமுதென்று பேர்” என சிறப்புரையாற்றினார், மருத்துவர் கு சிவராமன்.
ஆனால் லிஷா பெண்கள் பிரிவிவன் நிகழ்வில், பழங்களை அதுவும் குறிப்பிட்ட தமிழ் பாரம்பரிய பழங்களை எடுத்துக்கொண்டு, அது நம் உடல்நலத்திற்கு எப்படி உதவும் என சொல்லப்போகிறார்கள் அதுவும் சரவணன் அய்யாவு என்ன சொல்ல போகிறார், அவருக்கு பழங்கள் குறித்த பரீட்சையம் இருக்குமா என யோசித்தேன். சரி நிகழ்வில் சென்று பார்க்கலாம் என முதன் முறையாக இவர்கள் நடத்தும் தமிழ்மொழி விழா நிகழ்ச்சிக்கு சென்றேன்.

வரவேற்புரையாற்றிய லிஷா பெண்கள் பிரிவின் தலைவி திருமதி Joyce Kingsly இந்நிகழ்ச்சியை தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது வடிவமைத்து, வளர்தமிழ் இயக்கத்துக்கு விண்ணப்பித்தாக குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியை நடத்த ஊரிலிருந்து கலைஞர்களை கூப்பிடலாமா என்ற யோசித்து, பிறகு உள்ளூர் கலைஞர்களை வைத்தே நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும் அதற்காக ஒரு பாட்டியை வரவழைத்திருப்பதாகவும் கூறினார்.

அந்தப் பாட்டி அரங்கத்தினுள் ‘என்ட்ரி’யானதே சிறப்பாக இருந்தது. அவர் உட்கார மேடையின் மேல் ஒரு குட்டி மேடையமைத்து அதில் சொம்பு, வெத்தலை பெட்டி, வெத்தலை பாக்கு இடிக்கும் உரல் என எல்லாம் வைத்து தூணில்லாத ஒரு சின்ன கிராமத்துத் தின்னையை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
லண்டனிலிருந்துவிட்டு சிங்கை வந்த பேரனும் பாட்டியுடன் இணைந்து கொண்டார்.

இருவரும் உட்கார்ந்து கொண்டு தங்கள் சொந்த கதைகளை பேசுவதுபோல பழங்களின் பெருமையை எடுத்துச் சொன்னது சிறப்பு. பேரனாக நடித்த சரவணன் அய்யாவு உட்கார்ந்து கொண்டே மிக இயல்பாக, சரளமாக பேசி, நகைச்சுவையுடன் படைத்தார். நிகழ்ச்சி நெறியாளரும் அவரே.

இந்த நிகழ்ச்சியின் கதாநாயகன், கதாநாயகி எல்லாம் அந்த பாட்டியாக நடித்த திருமதி வஜிதா ஹமீதுதான். மிக சிறப்பாக கிராமத்துப் பாட்டிக்கே உரிய மெய்ப்பாடுடன் அந்த கதாபாத்திரத்துக்குள்ளேயே சென்று வெளுத்து வாங்கினார்.

பழங்களையும் அதன் பயன்களையும் அழகாக தங்கள் ‘ஸ்கிரிப்ட்’டில் இணைந்து அதற்கேற்ப உரையாடல்களை அமைத்து மிக நேர்த்தியாக கொண்டு சென்றனர்.
அதுவும் பேசும்போதே அந்த வெத்தலையை எடுத்து மடித்து இடிப்பது போன்று செய்தது யதார்த்தமாக, கதைக்கு பலம் சேர்ப்பதாக அமைந்தது.

ஒவ்வொரு பழத்தை பற்றியும் கூறுகையில் சிங்கை பாடகர்கள் Nirmala Nimmi , Parasu கல்யாணும் அந்த பழங்கள் குறித்து ஒரு பாடல் பாடினார்கள். அந்த பாடலுக்கான வரிகளை நண்பர்கள் யாழிசை மணிவண்ணனும், கணேஷ் நாராயணனும் (நதிநேசன்) எழுதியுள்ளனர். ஆனால் ஏற்கனவே உள்ள பிரபல திரையிசைப் பாடல்களை ஒட்டி அதன் வரிகளை மாற்றி அதே மெட்டில் உட்காரும் வகையில் எழுதியிருந்தனர்.
இந்த பாடல்கள் அணைத்தையும் நல்ல பின்னணி இசைக் கலைஞர்களுடன் நேரடி இசையில் பாடியது சிறப்பு.

ஆனால், எனக்கு பெரிய வருத்தம் பாடகர்கள், பாடலாசிரியர்கள், ஏற்பாட்டாளர்கள் அவ்வளவு பேரின் உழைப்பும் அந்த அளவுக்கு அதிகமான இசை வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போய்விட்டதே என்பதுதான்.
கடைசி வரிசையில் இருந்த எனக்கு பாடல் வரிகளும் புரியவில்லை, அதனால் பழங்களின் பயன்களும் பிடிபடவில்லை, பாடகர்களின் இனிய குரல்களும் எடுபடவில்லை.
அடுத்த முறை இம்மாதிரியான நிகழ்ச்சியில் இசையை குறைத்து வரிகளை உயர்த்தி விஷயத்தை பார்வையாளர்களுக்கு கடத்துவதில் கவனம் செலுத்தினால் சிறப்பு. அடுத்து சினிமா பாட்டு மெட்டுகளில் பாடல்கள் இருந்ததால் அசல் வரிகளே மனதில் ரீங்காரமிட்டன.

நிகழ்வின் தொடக்கத்தில், நண்பர் Mathialaganனின் மகள் செல்வி இலக்கியா மதியழகன் மிக நேர்த்தியாக கிடார் இசைத்துக் கொண்டே கவிஞர் நெப்போலியனின் அழகான வரிகளை கொஞ்சம் உஷா உதுப், கொஞ்சம் அனுராதா ஶ்ரீராம் என கலந்து பாடியது சிறப்பு.

பழங்களை கொண்டு கண்ணுக்கு விருந்தாக அழகிய சிறிய மாதிரி பழக்காட்சி செய்யப்பட்டிருந்தது சிறப்பு.
பழங்களே நிகழ்ச்சியின் கருப்பொருளானதால், அன்றைய உணவும் பழங்கள் மட்டுமே. நாவல்பழம், அத்திபழம், சப்போட்டா பழம், இலந்தம்பழம் (கொட்டையுடன் இடித்து பக்குவப்படுத்தி சின்ன பாக்கெட்டில் கொடுத்தார்கள்), நெல்லிக்கனி, முள் சீத்தாபழம், மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் என முக்கனிகளுடன் மேலும் ஆறை சேர்த்து நவரச பழங்களை விருந்தினர்களுக்கு பரிமாறினார்கள். அதனுடன் குடிப்பதற்கு நார்த்தை சாறும் கொடுத்தார்கள். அனைத்தும் அருமை, இலந்தம்பழம் மிக அருமை.

அதில் முக்கியமான ஒன்று நல்ல பழங்களாக தேர்ந்தெடுத்து அதை அழகாக வெட்டி சாப்பிடுவதற்கு ஏதுவாக பரிமாறப்பட்டது பெண்கள் பிரிவு என்பதை எடுத்துக்காட்டியது:)

தமிழ் இலக்கியத்திற்கும் இந்தப் பழங்களுக்கும் உள்ள தொடர்பை சரியாக எடுத்துச்சொல்லவில்லை என நினைக்கிறேன் அல்லது சொன்னதை நான் கவனிக்கவில்லையா எனத் தெரியவில்லை. ஆனால் பழங்களுக்கான நிகழ்ச்சியில் பழங்காலத்தில் தமிழ்சமுதாயத்தில் இரண்டு மனைவிகள் உண்டு, திருக்குறளில் கூடா ஒழுக்கம், பிறன்மனை….குறித்து கூறப்பட்டுள்ளது, குறுந்தொகையில் கள்ளக்காதல் பற்றி கூறப்பட்டுள்ளது போன்ற நிகழ்ச்சிக்கு தொடர்பில்லா செய்திகளை தவிர்த்திருக்கலாம்.

சிறப்பு விருந்தினராக, செம்பாவாங் நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர் கலந்துகொண்டார். திரு விக்ரம் நாயருக்கும், வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு ராஜாராம் அவர்களுக்கும் பொன்னாடை, மாலை எதுவும் போடாமல் பழக்கூடைகள் கொடுத்து கௌரவித்தது மிகச் சிறப்பு. மற்ற அமைப்புகளும் மாலை, பொன்னாடைகள் தவிர்த்துவிட்டு பழக்கூடைகள் கொடுத்தால், சிறப்பு விருந்தினர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மொத்தத்தில் இந்நிகழ்ச்சி ஒரு மாறுப்பட்ட சிந்தனையில் உதித்த நல்ல முயற்சி.

#தமிழ்மொழி_விழா_2018
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்
#TLF2018

சிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும்

கவிமாலையின் ‘சிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும்’ வரிசையில் இரண்டாவது காணொளி கவிஞர் வி.இக்குவனம் ஐயாவை பெருமையை சொல்கிறது.

மறைந்த கவிஞர் வி. இக்குவனம் ஐயாவின் 27 நூல்களில் நான் தேர்ந்தெடுத்தது ‘காரம் இனித்திடுமே காண்’ என்ற நூல். இதில் 108 வெண்பாக்கள் புணைந்துள்ளார். 108 வெண்பாவின் ஈற்றடியும் ‘கார(ம்) இனித்திடுமே காண்’ என்றே முடியும்.

இதில் எனக்கு பிடித்த வெண்பா:

கைகட்டி நின்று கணக்கற்ற சேவைகள்
மெய்கூட்டிச் செய்ய விழைந்தாலும் – பொய்யெனவே
மாறி யுணர்ந்துவரும் வல்லாளர் சொல்லலங்
கார(ம்) இனித்திடுமே காண்.

ஆவணப்படம் : https://www.youtube.com/watch?v=exlmE-Q8yWs

படைப்புகளைப் படிக்க : http://kavimaalai.com/2018/03/kavignar-v-ikkuvanam/

கவிமாலை YouTube Channel : https://www.youtube.com/channel/UCfVz64TOzmi5-imdVy7jZLA

தமிழ்மொழி விழா கொண்டாட்டம் 2018

தமிழ்மொழி விழா கொண்டாட்டம் இந்த வார இறுதியில் தொடங்கவிருக்கிறது. முதலில் இதை ஒருங்கிணைக்கும் வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவுக்கும் மற்றும் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்,இந்திய மரபுடைமை மையம், ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், கலைக் கூடங்கள், அமைச்சு, தேசிய நூலகம், மீடியாகார்ப், ஒலி 96.8, தமிழ் முரசு மற்றும் சமூக ஊடகங்கள் என ஒரு மாதம் நிகழ்வை நடத்தவிருக்கும் அனைவருக்கும் நம் வாழ்த்துகள், பாராட்டுகள், நன்றிகள்🙏🙏🙏

தமிழ்மொழி விழா தொடக்க நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 1ஆம் தேதி மீடியாகார்ப் வளாகத்திலுள்ள எம் ஈ எஸ் அரங்கில் மாலை நடைபெறுகிறது.

இந்த ஆண்டு மொத்தம் 58 நிகழ்ச்சிகள். கடந்தாண்டை காட்டிலும் 7 நிகழ்ச்சிகள் அதிகம். இந்தாண்டு இசை,நாடக,நாட்டிய நிகழ்ச்சிகள் கூடுதலாக உள்ளன. இவை இளையர்களை, மாணவர்களை மட்டுமில்லாமல் கலை ஆர்வமுள்ள பலரையும் ஈர்க்கும்.

புதிதாக பலதுறை தொழிற் கல்லூரி நடத்தும் 2 நிகழ்ச்சி, 2 முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்தும் நிகழ்ச்சி, இசைப் பள்ளிகள் நடத்தும் நிகழ்ச்சி என பத்துக்கும் மேற்பட்ட புதிய நிகழ்ச்சிகள் இந்தாண்டு அட்டவணையில் இடம்பிடித்துள்ளன. தொடர்பு, தகவல் அமைச்சு & கல்வி அமைச்சு நடத்தும் மொழிபெயர்ப்பு முகாம் ஒன்றும் உள்ளது. இவை பயனுள்ளதாக அமையும் என நினைக்கிறேன். TED Talk என்ற பல்வேறு துறைகளிலிருந்து பல தலைப்புகளில் பேசப்பட்டு அது காணொளி மூலம் உலகமெங்கும் சென்றடைய நடத்தப்படும் நிகழ்வு போன்று தமிழில் இந்தாண்டு இரண்டு நிகழ்ச்சிகள் உள்ளன. தமிழர் பேரவையின் ‘உரைக்களம்’ , என்டியு முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்தும் ‘இளவேனில்’. நிகழ்வை காணொளியாக்கி வெளியிடுவார்கள் என நினைக்கிறேன். இதே போல் ‘டோஸ்மாஸ்ட்ர்ஸ் இண்டர்நேஷனல்’லின் தமிழ் பேச்சாளர் மன்ற போட்டிகள் என தமிழ் மேடை பேச்சை மேம்படுத்தும் நிகழ்வுகளும் உள்ளன. இது தவிர மாணவர்களுக்காக மட்டுமே நடத்தப்படும் நிகழ்ச்சிகள் ஒன்றிரண்டு கூடியுள்ளன. இலக்கிய விழாக்களில் பெரிய மாற்றங்கள் இல்லை. வழக்கமாக தமிழ்மொழி விழா முடிந்த அடுத்த நாளான மே 1ஆம் தேதி நடைபெறும் பட்டுக்கோட்டையார் நிகழ்ச்சி இம்முறை தமிழ்மொழி விழாவுக்கு புதிய வரவு, மே 1ஆம் தேதியும் நடைபெறுமா என்று தெரியவில்லை. இணையத்தில் மட்டுமே நடக்கும் நிகழ்வாக ஏப்ரல் 1ம் தேதி முதல் 30ஆம் வரை தமிழ் கவிதைகள் எழுதும் நிகழ்வும் இளையரால் நடத்தப்படுகிறது.

நிகழ்ச்சி அட்டவனையில் இந்த முறை நான் வழக்கமாக செல்லும் பல நிகழ்வுகளுக்கு செல்ல முடியாத ஒரு சூழ்நிலை.
திருக்குறள் விழாவும், என்டியு மாணவர்களின் ‘பார்வை 2018’ நிகழ்வும் ஒரே நாள், ஒரே நேரம்.
ஏப்ரல் 7ஆம் தேதி காலை 4 நிகழ்வு, அதில் என்யுஎஸ் மாணவர்களின் நிகழ்வும் ஒன்று. அன்று வேறு ஒரு முக்கிய நிகழ்வு இருப்பதால் எதற்கும் செல்ல முடியாது.
அன்றைய தினம் மாலை சொற்களம், முத்தமிழ் விழா இரண்டும் உள்ளன. எதை தேர்வு செய்ய எனத்தெரியவில்லை.
ஏப்ரல் 8ஆம் தேதி மாலை தமிழர் திருநாள், திரு எம் இராமசந்திரனின் பட்டிமன்றம். நண்பருக்காக நம் தேர்வு பட்டிமன்றம்தான்.
ஏப்ரல் 14ஆம் தேதி காலை ஒரே வளாகத்தில் இரண்டு நிகழ்ச்சி, அதனால தப்பிச்சோம். இரண்டையும் மாத்தி மாத்தி பார்க்கலாம் 🙂
ஏப்ரல் 15ஆம் தேதிக்கு பிறகு நிகழ்ச்சியில் அதிக நேர மோதல்கள் இல்லை என்பதால் எனக்கு தேர்ந்தெடுப்பது சுலபமே.

ஒரே மாதத்தில் அதுவும் வார இறுதியில் மட்டும் 58 நிகழ்ச்சிகளுக்கு நேரம் ஒதுக்குவது என்பது மிக கடினமே. என்னுடைய ஒரே வருத்தம் இந்த முறை என்டியு, என்யுஎஸ் நிகழ்வுகளுக்கு செல்ல முடியாமல் போனதே.

வழக்கம் போல் இந்த ஆண்டும் தமிழ்மொழி விழா சூறாவளி சிங்கையின் மத்திய பகுதியில் குறிப்பாக உமறுப்புலவர் நிலையத்தில் மய்யம்(!) கொண்டுள்ளது. தமிழ்மொழி மாதத்தில் 21 முறை அங்கு பலத்த காற்றுடன் கூடிய தமிழ் மழை பெய்யும். அதை சுற்றி 3 மைல்களுக்குள்ள பகுதிகளான இந்திய மரபுடைமை நிலையத்தில் 8 முறையும், தேசிய நூலகத்தில் 6 முறையும், குட்டி இந்தியா வட்டாரத்தில் 4 முறையும் இடியுடன் கூடிய தமிழ் மழை பெய்யும். இரு முறை வடக்கு நோக்கி நகர்ந்து அங்கு கருணை மழை பொழிந்துவிட்டு பின்னர் கிழக்கிலும் ஒரு முறை பொழியும். ஆங்காங்கே தீவின் மற்ற பகுதியில் ஒரு சில முறை பெய்யும் தமிழ் மழை மற்ற ‘மேடான’ பகுதியில் வாழும் தமிழர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என இருந்திடவிடாமல், மழை பெய்யும் மற்ற இடங்களுக்கு சென்று தமிழ் மழையில் நனையுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறீர்கள். மாதக் கடைசியில் முடிந்துவிடும் இச்சூறாவளி நமக்கு அடுத்த ஓராண்டிற்கான தமிழ் தாகத்தை தீர்த்து வைக்குமா என்று பார்க்கலாம்:)

தமிழ்மொழி மாதத்தில் வளர்தமிழ் இயக்கத்தின் இந்த ‘தமிழ்மொழி விழா 2018’ நிகழ்வுகள் தவிர்த்து வேறு தமிழ் நிகழ்வுகளை ‘தமிழ் மொழி விழா’ என்று தலைப்பிட்டு நடத்தி அங்கு செல்ல இருப்பவர்களை குழப்பாமல் இருந்தால் நன்றாக இருக்கும். மற்ற தமிழ் நிகழ்வுகளை குறைத்து நாம் எல்லோரும் ‘தமிழ்மொழி விழா 2018’ நிகழ்வுகளுக்கு சென்று ஆதரவு தெரிவிப்போம்.

வகைப்படுத்தப்பட்ட நிகழ்வு விவரம்
————————————————-
பல்கலைகழக மாணவர்கள்/ பலதுறை தொழிற் கல்லூரி நடத்தும் நிகழ்ச்சி
1. பார்வை 2018(3)
2. களம் (11)
3. என்ன செய்யலாம் (30)
4. ஜிங்கிள் ஜிகிள் (33)

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் பள்ளி நிகழ்ச்சிகள்
1. கிழக்குக் குழுமம் 5 நடத்தும் தமிழ்மொழி விழா 2018
2. இராஃபிள்ஸ் தமிழ் இலக்கியப் போட்டிகள்
3. 30ஆம் புகுமுக வகுப்புகளுக்கான தமிழ்மொழி இலக்கியக் கருத்தரங்கு
4. தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் – கற்றதும் பெற்றதும்

மாணவர்களுக்காக மட்டுமே நடத்தும் நிகழ்ச்சி/போட்டிகள்
1. பரமபதம் (1)
2. மாகோ – தேசிய தமிழ் கதைசொல்லும் போட்டி(6)
3. இயற்கையோடு பயணம்(7)
4. சித்திரம் பேசுதடி (9)
5. பாடல், ஆடல், விளையாடுதல் மூலம் தமிழ்மொழி வளர்ச்சியை மேம்படுத்தும் பட்டறை (10)
6. சொற்களம் 2018(12)
7. சொல், சொல்லாத சொல் (20)
8. வாங்க தமிழில் பேசலாம்(21)
9. வண்ணத்தமிழ் 2018(32)
10. உரைக்களம் (34)

தொழில்நுட்ப, தொழில்/நிதி, மொழி சார்ந்த கற்றல் நிகழ்ச்சிகள்
1. மின்னியல் தமிழ் – புத்தாக்க அணுகுமுறை (22)
2. தமிழ் மொழிபெயர்ப்பு முகாம் 2018 (43)
3. தொழில் தொடங்குவதும் நிதிப் பற்றிய ஆலோசனைகளும்(44)
4. தமிழ் மின்னிலக்க கற்றல் பயிலரங்கு (மரபுடைமை நிகழ்ச்சிகள் 2)

இலக்கிய விழாக்கள்
1. திருக்குறள் விழா (4)
2. முத்தமிழ் விழா (13)
3. உலகம் உன்னுடையது (23)
4. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டுப் போட்டி 2018(26)
5. இன்பத் தமிழும் இளைய தலைமுறையும்(27)
6. இளம் பிறை (28)
7. பாவேந்தர் 128 – சுழலும் சொற்போர்(31)
8. உமறுப் புலவர் அரங்கம் (35)
9. தமிழர் அறிவியல் (36)
10. தமிழவேள் விழா(38)
11. பர்வீன் சுல்தானா வழங்கும் ‘வெற்றி கொடிக் கட்டு’(40)
12. கவிமணம் (41)
13. கவிதைத் திருவிழா (48)

தமிழ் நாடகங்கள்
1. ஆர்ட்டதோன் (நாடக போட்டி) (2)- $5
2. ஔவையார் (5) – $25 /$15(early bird)
3. சிங்கப்பூர் மாப்பிள்ளை (29)- $15
4. ஜிங் ஜக் நாடகம் (39)
5. பீடம்-(42) (இலவசம்)
6. தமிழும் கலையும் – இயல், இசை & நாடகம் 2018(46)

இசை/நாட்டியம்
1. மழலையும் பாரதியும் (8)
2. குறுந்தொகை -இசை நிகழ்ச்சி(18)
3. இசை வழி கல்வி (19)
4. தமிழும் இசையும் (24)
5. கண்ணதாசன் ஒரு சகாப்தம் (37)
6. மன்னும் மகளும் – கண்ணகி வாழ்வில் ஐந்தினை – நாட்டிய நாடகம் (45)
7. கவியும் நாட்டியமும் (49)

பொழுதுபோக்கு/மற்ற நிகழ்ச்சிகள்
1. பழங்களே மருந்து(14)
2. தமிழர் திருநாள் விழா (15)
3. பட்டிமன்றம் (16) – $10
4. தமிழும் சுவையும் (17)
5. இளவேனில் (25)
6. தமிழ் பேச்சாளர் மன்றப் போட்டிகள் (47)
7. பொறுப்பாளர் சுற்றுலா: சின்னங்களும் வரி வடிவங்களும் – கைவினையின் மொழி (மரபுடைமை நிகழ்ச்சிகள் 1)
8. நகைச்சுவை பயிலரங்கு (மரபுடைமை நிகழ்ச்சிகள் 3)
9. குறும்படம் திரையிடல் (மரபுடைமை நிகழ்ச்சிகள் 4)

முகநூலில் கவிதை எழுதும் நிகழ்வு
1. சிங்பொரிமோ – தமிழ்(50)

பங்கு பெறும் வெளியூர் பிரபலங்கள் (எனக்கு தெரிந்த வரை)
1. முனைவர் பர்வீன் சுல்தானா (இரு முறை)
2. திரு இறையன்பு ஐஏஎஸ்
3. இயக்குனர் விசு
4. திரு ஜி விஸ்வநாதன்
5. கவிஞர் சிற்பி
6. திரு பாரதி கிருஷ்ணகுமார்
7. திரு பாண்டித்துரை (இரு முறை)
8. பேராசிரியர் எம் இராமச்சந்திரன்
9. திரு கே சிவகுமார்
10. திரு மோகனசுந்தரம்
11. பாடகர் வீரமணி ராஜூ
12. திரு ஆளுர் ஷா நவாஸ்

பி.கு: தகவல்கள் சில முழுமை பெறாமல் இருக்கலாம்.

#TLF2018

www.tamil.org.sg