சிங்கையில் தமிழும் தமிழரும்(எனது பார்வையில்)

நான்காயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய பெருமையை தக்கவைத்துக் கொண்டிருக்கும் செம்மொழியான தமிழ்மொழியை கொண்டாடுவோம், அதனை ஆவணப்படுத்துவோம் அதே வேளையில் எல்லோரும் ஒன்றிணைந்த ‘ஒரு நாடு, ஒரு மக்கள்’ என்ற பெருமையைக் கட்டிக்காப்போம் என்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் திரு விவியன் பாலகிருஷ்ணன் கூறினார்.
திரு ஏ பி ராமன் ஐயா அவர்கள் திருமதி சவுந்திர நாயகி வைரவன் அவர்களுடன் இணைந்து எழுதிய ‘சிங்கையில் தமிழும் தமிழரும்(எனது பார்வையில்)’ என்ற தமிழ் நூலும், திருமதி சவுந்திர நாயகி வைரவன் அவர்கள் திரு ஏ பி ராமன் ஐயா அவர்களுடன் இணைந்து எழுதிய “The Tamil Community and the Making of Modern Singapore”(சிங்கப்பூரை நவீனமாக்கிய தமிழ்சமூகத்தினர்) என்ற ஆங்கில நூலும் 13-மே-2018 அன்று காலை சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தில் வெளியிடப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இம்மாதிரியான நூல்கள் தம் முன்னோர்கள் செய்த தியாகத்தையும், நம் பாராம்பரியத்தையும் எடுத்துச் சொல்லும் என்றும் தன்னுடைய முன்னோர்கள் நான்கு தலைமுறையினருக்கு முன்னர் இந்தியாவில் இருந்து சிங்கைக்கு குடிபெயர்ந்த வரலாற்றையும் நினைவுகூர்ந்தார்.

சிங்கப்பூருக்கான இந்திய தூதுர், சிங்கப்பூருக்கான இலங்கையின் துணைத்தூதர், இந்து அறநிலையத்துறை தலைவர் என பல முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

காலையில் விமானம் நிலையம் செல்ல நேரிட்டதால் சற்றே தாமதமாக, திரு நா ஆண்டியப்பன் ஐயா பேசும் பொழுதே நிகழ்ச்சிக்கு சென்றேன். அதற்கு முன்னர் பேசிய சுப திண்ணப்பன் ஐயாவின் பேச்சை கேட்கும் வாய்ப்பை இழந்தேன். சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் தலைவரான திரு நா ஆண்டியப்பன் தன்னுடைய உரையில், “நான் எழுத்தாளராவது எப்படி என யோசித்துக் கொண்டிருக்கிறேன், நான் இன்னும் எழுத்தாளர் ஆகவில்லை போலும், ஏனென்றால் இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர் பட்டியலில் என் பெயர் இல்லை” என்று சுட்டிக்காட்டினார். சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் கௌரவத் தலைவர் திரு கே கேசவபாணி, கவிமாலைக் காப்பாளர் திரு மா அன்பழகன், இந்நூலின் பிழை திருத்தத்துக்கு உதவி புரிந்த திரு சந்திரசேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இரு நூல்கள் குறித்தும் தி மீடியா, தயாரிப்பாளர் திரு முகம்மது அலி, இந்து அறநிலையத்துறையின் தலைமை நிர்வாக அதிகாரி திரு த ராஜசேகர், இருவரும் கலந்துரையாடினர்.

திரு ராஜசேகர் புத்தகம் குறித்து கூறும்போது, இருநூற்றாண்டுகால வரலாற்றை சுருக்கமாக ஒரு புத்தகத்தின் பொருளடக்கம் போன்று திரு ஏ பி ராமன் ஐயா கொடுத்திருக்கிறார் என்றும் ஒவ்வொரு அத்தியாத்தையும் மேலும் விரிவுபடுத்தி தனியாக புத்தகம் போடலாம் என்றும் கூறினார்.

இப்புத்தகம் ஒரு தகவல் திரட்டு, திரு ராமன் ஐயா, தன்னுடைய காலகட்டத்தில் நடந்ததை அவதானித்து ஒரு காலக் கணிதன் போன்று பத்திரப்படுத்தி கொடுத்திருப்பதாக கருத்துரைத்தார் திரு முகம்மது அலி.

இப்படி ஒரு நூல் எழுத வேண்டும் என்ற தன்னை அணுகி இந்நூல் எழுதியதற்கு முக்கியமான காரணமாக திருமதி சவுந்திர நாயகி வைரவன் இருந்தார் என்றும் இந்நூல் ஆய்வு நூலல்ல 1950ல் சிங்கை வந்து இன்று வரை பத்திரிக்கையாளனாக இருக்கும் என்னுடைய அனுபவநூல் என்று தனது ஏற்புரையில் திரு ஏ பி ராமன் ஐயா கூறினார்.

பின்னர் நன்றியுரையாற்றிய திருமதி சவுந்திர நாயகி வைரவன் இந்நூல் ஆய்வு நூலல்ல என்றும் ஆனால் பல தகவல்கள் அடங்கியுள்ளதாகவும் கூறினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களையும் நூல் உருவாக உதவி புரிந்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றி கூறினார்.

திரு ஜி டி மணி நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார். மதிய உணவுடன் இனிதே விழா நிறைவுற்றது.

நிறைய பேருக்கு ஆங்கில நூல் குறித்து குழப்பம் உள்ளது. அதற்கு காரணம் அது குறித்த சரியாக நிகழ்வில் விளக்கப்படவில்லை.

எனது பார்வையில் இரு நூலும் ஒரே அட்டைப்படத்தை கொண்டிருந்தாலும் ஆங்கில நூலில் 25 அத்தியாயங்களும், தமிழ் நூலில் 19 அத்தியாயங்களும் உள்ளன. படங்களும், செய்திகளும் சற்றே மாறுபட்டிருக்கின்றன.

சிங்கையில் நடக்கும் எந்த ஒரு தமிழ் நிகழ்வையும் உடனுக்குடன் முகநூலில் எழுதி வருகிறார் திரு ஏ பி ராமன் ஐயா. உடலுக்கு வயதானலும் என்றும் கற்றுக்கொள்ளும் மனநிலையுடன் முகநூலில் பதிவிட கற்றுக்கொண்டு தமிழ்மொழியை பலருக்கும் கடத்தி மகிழ்கிறார். ஒரு விபத்தின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிகழ்ச்சிக்கு செல்லாவிட்டாலும் தன்னைத் தொடரும் பலருக்கும் செய்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நண்பர்கள் மூலம் செய்தி சேகரித்து பதிவு செய்கிறார். அதோடு வீட்டில் ஓய்வில் இருக்கும் காலத்தில் ஓய்வெடுக்க விரும்பாமல் நூல் எழுதியது அவரின் உழைப்புக்கு ஒரு சான்று. நல்ல உடல்நலத்துடன் அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

இந்த நூல்கள் குறித்த என்னோட பார்வையை விரிவாக பிறகு பகிர்கிறேன்.

தி சிட்டிஸ் ஆஃப் மெலாக்கா

ஏழு நாட்கள், ஏழு நூல்கள், ஏழு நண்பர்களை இணைத்தல் என்ற தொடரில் Rengaprasath Gopalakrishnan, Malarvizhi Elangovan ஆகியோர்கள் என்னை கோர்த்துவிட்டார்கள். இதில் விளக்கமோ, விமர்சனமோ வேண்டோம் ஆனால் அட்டைப்படம் மட்டும் முகநூலில் போட்டால் போதுமானது என கடைசியில ஒரு கடலைமிட்டாய் வேற கொடுத்தார்கள். ஆனால் எனக்கு தெரிந்து நிறைய பேர் சொந்தக்கதை, முன்னுரை, பின்னுரை என பல விளக்கங்களோடுதான் பதிவு போட்டார்கள். அந்த வரிசையில் நாமும்…. புத்தகத்திலுள்ள விஷயங்களை ’அடிஷனல் பேப்பருடன்’……….ஆனால் தொடர்ந்து ஏழு நாட்கள் முடியாது. எனக்கு புத்தகப் பதிவு போட நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக போடுவேன்…

இன்றைய புத்தகம் ‘தி சிட்டிஸ் ஆஃப் மெலாக்கா’. இந்தப் புத்தகத்தை 3 மாதங்களுக்கு முன்னர் என் மகளுக்காக வாங்கினேன். அவர்கள் பள்ளியில் செட்டி மலாக்கா பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று கூறியதால், தகவல்கள் பெற நண்பரிடம் சொல்லி வாங்கினேன். ஆனால் புத்தகம் வருவதற்குள் கட்டுரைக்கான தேதி முடிந்துவிட்டது:(
சரி, புத்தகத்துக்குள்ள போவோமா…

இந்தப் புத்தகத்தை மலேசிய அருங்காட்சியகத் துறை கடந்த ஜனவரி மாதம் மலேசியாவில் வெளியிட்டிருக்கிறது. சிங்கப்பூரில் நாளை மாலை இந்திய மரபுடைமை நிலையத்தில் இதன் ஆசிரியர்கள் கேரன் லோ & ஜெகதீசன் வேலுபிள்ளை புத்தகத்தில் கையெழுத்து போடும் நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

“‘சிட்டி மெலாக்கா’ அல்லது ‘செட்டி மலாக்கா’ என்றும் அழைக்கப்படும் இந்த இனக்குழு மலேசியாவின் முதல் பெரனாக்கன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களை ‘கிளிங்’ என தொடக்கத்தில் அழைத்துள்ளார்கள். தென்னிந்தியாவில் இருந்து வணிகத்துக்காக மலாக்கா சுல்தான் ஆளுகைக்குட்பட்ட காலத்துல வந்த இவர்கள் அங்கேயே திருமணம் செய்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். இந்தக் கலப்புத் திருமணத்தால் இவர்கள் மொழி, உணவு, உடை,வழிபாடு, பண்பாடு எல்லாமே இருசாராருடைய பாதிப்பும் கலந்து தனித்து விளங்குகிறது. இவர்கள் மலாக்காவில் நன்கு அறிமுகமானவர்கள் என்றாலும் மலேசியாவின் மற்ற பகுதிகளில் அவ்வளவாக அறியப்படவில்லை” என் இப்புத்தகம் சொல்கிறது.

மலேசியாவின் அப்போதைய சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் இந்த புத்தகம் மலாக்காவின் சுற்றுலா வளர்ச்சிக்கும் ‘சிட்டி மலாக்கா’ பற்றி அறிந்து கொள்ள மிகவும் உதவும் என பாராட்டி அனுப்பிய செய்தி இதில் உள்ளது. அது உண்மை என தோன்றும் அளவிற்கு 240+ பக்கம் உள்ள இந்தப் புத்தகத்தில் பல அரிய படங்களுடன் இச்சமூகத்தின் தற்கால வாழ்வியல், பண்டிகைகள்,விழாக்கள், திருமணங்கள், குழந்தை பிறப்பு, நீத்தார் நினைவு என அவர்களின் சமகால பழக்கவழகங்களை சிறப்பாக பதிவு செய்துள்ளது. ‘கம்போங் ச்சிட்டி’ என 25 வீடுகளை கொண்ட 100 பேர் கொண்ட சிறிய கிராமம் இன்றும் உள்ளது. இங்கு சில கோயில்களும், ‘சிட்டி அருங்காட்சியகமும்’ உள்ளது.

இச்சமூகத்தினரின் மூதாதையர் பெரும்பாலும் தமிழகத்திலிருந்து வந்தவர்கள் என்றாலும் பதினைந்தாம் நூற்றாண்டிலுருந்து மெதுவாக வழக்கொழிந்து ‘மலாய்’ மொழியே வழக்கு மொழியானது. பின்னர் தற்போது மலாய், தமிழ், ஆங்கிலம் கலந்தே குடும்பங்களில் பேசுகிறார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் 84 மொழிகள் பேசிய 190,000 பேர் அந்தப் பகுதியில் இருந்தாலும் இந்தியாவிலிருந்து வந்த தமிழர்களே தங்கள் அடையாளங்களை தக்கவைத்துள்ளார்கள் என புத்தகம் சொல்கிறது.

இவர்கள் ‘இந்து’ மதத்தை பின்பற்றி இங்குள்ள கோயில்களில் பூசை வழிபாடு செய்கின்றனர், விழாக்கள் கொண்டாடுகிறார்கள். வயதுக்கு வந்த பெண்களுக்கு சடங்கு நடத்துவது குறைந்து வரும் காலக்கட்டத்தில் இவர்கள் சடங்கு விழா நடத்துவது மாறுபட்டிருக்கிறது. தாலி கட்டி திருமணம், நலுங்கு, பாலும் பழம் என பல சடங்குகள் தமிழ்த் இந்துத் திருமணங்களை ஒத்திருக்கிறது. இவர்களுடைய உணவு முறை மலாய் உணவு முறையை ஒத்திருக்கிறது.

ஒரு இனத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும்போது அதற்கு தேவையான சான்றுகளும், சரியான தரவுகளும் மிக முக்கியம். அப்படி இல்லாமல் கதை சொல்லும் போக்கில் தனக்கு வேண்டியவர்களை கதாபாத்திரங்களாக்கி அவர்களை வரலாற்று நாயகர்களாக சித்திரிப்பது அபாயகரமானது. அது ஒரு புனைவு என்ற முறையில் ஏற்றுக் கொள்ளப்படலாம். ஆனால் இந்த புத்தகத்தில் அந்த மாதிரியான எந்த இடைச்செருகலும் இல்லாமல் வரலாற்றாசிரியர் திரு சாமுவேல் துரைசிங்கம் உட்பட பல வரலாற்று ஆவணங்களை புரட்டிப்பார்த்து நிகழ்கால வாழ்வியலை அவர்களிடையே வாழ்ந்து பதிவு செய்திருக்கிறார்.

இந்தப் புத்தகம் நூலகத்தில் கிடைக்கலாம் ஆனால் வேறு எங்கு கிடைக்கும் என தெரியவில்லை, நாளை கேட்டுச் சொல்கிறேன்:)

         

 

காந்தள்சூடி

ஒரு புத்தக வெளியீட்டில் பேசுகின்ற சிறப்பு விருந்தினர் எப்படி பேச வேண்டும் என்பதை பேசிக்காட்டினார் கவிஞர் சுகிர்தராணி. கண்ணன்னின் கவிதை புத்தகத்தை வாங்க வேண்டும் என்பதை தாண்டி படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் வகையில் அதிலுள்ள சிறப்பான கவிதைகளை அவர் எடுத்துச்சொன்ன விதம் அதை மற்ற கவிதைகளோட ஒப்பிட்ட விதம் அதையெல்லாம் விட அந்தக் கவிதைகளை நினைவில் வைத்து பேசியது என எந்த ஒரு ஆர்ப்பாட்டாமோ அலட்டலோயில்லாமல் சிறப்பாக பேசினார்.

கண்ணின் ‘காந்தள்சூடி’யில் என்னை கவர்ந்த பல சிறப்பான கவிதைகள்/வரிகள் இருந்தாலும் இந்தக் கவிதை கண்ணனின் அடையாளமாக மாறும் வாய்ப்பு உள்ளது என நினைக்கிறேன்.

தன்னம்பிக்கை
———————
உதிர்ந்தால்
ஒன்றுமற்றுப் போகும்
சிறகுகளால் தான்
தேசங்களைக் கடக்கிறது
பறவை

     

என்னது தினமும் கவிதையா?

எல்லோரும் ‘ரூம்’ போட்டு யோசித்துதான கவிதை எழுதுவாங்க இல்லை ஏதோ ஒரு மலைப்பகுதியில், கடலோரத்தில்்இயற்கைக் காட்சிகளை இரசித்துக்கொண்டே எழுதுவார்கள் இல்லை அமைதியான சூழ்நிலையில் கவிதை எழுதுவார்கள். அட ஒன்றுமே இல்லைனா ஒரு அழகான காதலியை நினைச்சு எழுதவாங்க. இது ஏதுமே இல்லாமல் எப்படிப்பபா தினமும் கவிதை எழுதறது?
அதுவும் ஒரு தலைப்போ கருப்பொருளோ கொடுத்து எழுதணுமாம், எப்படி கடிவாளம் கட்டின குதிரை மாதிரி ஒரே கருப்பொருள்ல யோசிக்கிறது? இப்படி பல கேள்விகள் பலருக்கும் எழுந்திருக்கலாம்.
ஆனால் அத்தனை கேள்வியையும் உடைத்து நாள்தோறும் கவிதை எழுதும் சவாலில் கடந்த 30 நாளில் வெற்றிகரமாக கிட்டத்தட்ட 1000 கவிதைகளை தொட்டிருக்கும் ‘சிங்பொரிமா’ முகநூல் பக்கம். இப்படி ஒரு வெற்றி இந்த தளத்திற்கு எப்படி சாத்தியமானது என்ற கேள்வி நான் உட்பட பலருக்கும் எழுகிறது.

என்னை எடுத்துக்கொண்டால், கடந்த சில ஆண்டுகளாக கவிதை எழுதி பல பரிசுகளையும், தங்க முத்திரை விருதும் பெற்றிருந்தாலும் இந்த தளம் ஒரு மாறுபட்ட அனுபவத்தை கொடுத்தது என்றே சொல்லவேண்டும். எப்ப தலைப்பு வரும் என்று காத்துக்கொண்டிருந்த நாள்கள் உண்டு. அதற்காக இரவு 12 மணிக்கு பிறகு, தூக்கம் கண்ணை சொக்கியும் தேர்வுக்கு படிக்கும் மாணவர் போல தூங்காமல் முழித்திருந்திருக்கின்றேன். பொதுவாக தமிழ் விழா மாதத்தில் நான் போடும் நீண்ட பதிவுகள் குறைந்துவிட்டது. கவிதை பற்றிய சிந்தனை, மற்றவர்கள் எழுதிய கவிதையை படிப்பது, அவர்களுக்கு ‘லைக்’, ‘கமன்ட்’ போடுவது என நாள் ஓடிவிட்டது.

சரி இது என்ன புதிய விஷயமா? என கேட்டால், இல்லை என்றே சொல்வேன். எங்கள் நண்பர் ஆசான் Karuna Karasu கொடுத்த யோசனையின் பேரில் எங்கள் ‘குயில் தோப்பு’(!) நண்பர்கள் அனைவரும் SG50யை முன்னிட்டு 2015இல் ஆகஸ்ட்டு 1 முதல் 10 வரை சிங்கப்பூரை மையமாக வைத்து தினமும் ஒரு மரபு கவிதை எழுதினோம். அதில் பலரும் அப்போதுதான் மரபு கற்றுக்கொண்டோம். குறிப்பாக அன்றிரவு ஒரு பா வகை கற்றுக்கொண்டு அடுத்த நாள் அந்தப் பா வகையில் ஒரு கவிதை எழுதுவதுண்டு. கிட்டத்தட்ட 10 பேருக்குமேல் எழுதி நூறை தொட்டுவிட முயற்சித்தோம். ஆனால் அதை அவரவர் முகநூல் பக்கத்தில் SG50 ‘ஹாஷ்டேக்கோடு’ எழுதினோம்.

இன்னொரு முயற்சியாக திரு முத்துப்பேட்டை மாறன் நிலாமுற்றம் என்று கவிதைகளுக்கான முகநூல் பக்கத்தை மூன்றாண்டுகளுக்கு முன்னர் தொடங்கினார். இன்று உலகெங்கிலும் இருந்து 45,000த்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டதாக உருவாகியிருக்கிறது இப்பக்கம். இதில் தினமும் கவிதை என்பதை தாண்டி கவியரங்கம் கூட நடத்தியிருக்கிறார்கள். அதோடு ஆண்டு விழாக்களையும் நடத்தி பல பரிசுகள் கொடுக்கிறார்கள். அதில் குறிப்பிடதக்கத்கது நல்ல கவிதைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு படத்தோடு முகநூல் பக்கத்திலேயே சான்றிதழ் தருவார்கள். அதில் உள்ள சில நல்ல மரபு கவிதைகள் எழுதும் கவிஞர்களை நான் சென்னை சென்றபோது நேரில் சந்தித்திருக்கிறேன். அதில் சிலர் மிகச் சாதரனமாக துவங்கி இன்று நல்ல இலக்கணத்தோடு மரபுக் கவிதைகள் எழுதுகிறார்கள்.

ஆனால், அப்படி என்னதான் இந்த தளத்தின் சிறப்பு? ஏன் இதில் நாம் எல்லோரும் எழுதுகிறோம்? மாதம் ஒரு கவிதை எழுத நேரமில்லை என்ற காரணம் சொல்லும் என்னை போன்றோர் நாளும் ஒரு கவிதை எப்படி எழுதினோம்? என்ற கேள்வி எழுந்தது. இளையர்களை எழுத வைக்க வேண்டும் என்பதே எங்களை போன்றோர்(நண்பர்கள்) எழுதுவதற்கு முக்கியமான காரணம். சிங்கையில் தமிழில் பேசும் வாய்ப்பு குறைவாக உள்ளவர்கள் இந்த தளத்தில் எந்த தயக்கமும் இல்லாமல் எழுத வேண்டும். அந்த அடிப்படையில் புதியவர்கள், இளையவர்கள் பலர் இதில் எழுதினார்கள். அதற்கு காரணம், தொடக்கத்தில் யார் வேண்டுமானாலும் எழுதலாம், கவிதையா இல்லையா என்று யோசிக்க வேண்டாம் என்று ஊக்கப்படுத்தும் விதமாக அமைப்பாளர் கூறியது. அதோடு, எல்லோரும் எழுதும் போது ஒரு குழு மனப்பான்மையுடன் பலர் ஊக்கத்துடனும் ஆர்வத்துடனும் எழுதினார்கள்.

இந்த இடத்தில் ஒரு வரலாற்று உண்மையை பதிவு செய்ய வேண்டும். இந்தக் குழுவில் முதல் கவிதையை எழுதியது நான்தான்:) தலைப்புக் கொடுத்து 6 மணி நேரமாக யாருமே எழுதவில்லலையே என்று விளையாட்டாக தொடங்கியது என் 30நாள் பயணம். மரபு, புதுக்கவிதை, நவீனம் என பல வடிவில் பல முயற்சிகள் செய்திருப்பேன். சில நிமிடத்தில் எழுதிய கவிதைகளும் உண்டு, சில மணி நேரம் யோசித்து எழுதிய கவிதைகளும் உண்டு. வாரநாட்களை விட வாரயிறுதி கடினமாக இருந்தது. காலியிலிருந்து இரவு வரை நாள் முழுதும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் இருப்பதால், 11:50க்கு எழுதிய நாள்களும் உண்டு.

இந்தக்குழுவில் தற்போது 750 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பலர் சிங்கையில் இல்லை. எல்லோரும் கவிஞர்களா? கவிதை எழுதபவர்களா? என்றால், இல்லை. அவர்கள் ஏன் இதில் இருக்கிறார்கள்? என்ற கேள்வி எழுந்தது. எல்லோரும் எழுதினால் யார் படிப்பது? படித்து பாராட்ட, கருத்துச் சொல்ல சிலர் வேண்டுமே. இத்தனை பேர் இருந்தும் மொத்தமாக ஓரிரு கவிதை தவிர வேறு எதற்கும் 50 ‘லைக்’கு மேல் வரவில்லலை என்பதே யதார்த்தம். எத்தனை பேர் கவிதை எழுதினார்கள் என்று பார்த்தால் மொத்தமாக நூறுக்கும் குறைவானவர்களே இருந்திருப்பார்கள். அதிலும் தொடந்து எழுதியவர்கள் இருபதுக்குள்தான் இருக்கும். அதற்கு மாணவர்களுக்கு தேர்வு, மற்றவர்களுக்கு பணிச்சுமை என பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் புதிதாய் எழுதியவர்கள் பலர். அதுதான் இந்த தளத்தின் தோக்கம்.

தொடக்கத்தில் சிங்கை சார்ந்த கவிதைகள் எழுத வேண்டும் என்ற விருப்பம் முன் வைக்கப்பட்டது. அதுவும் ஓரளவு நிறைவேறியது.

இந்த போட்டிக்காக தலைப்பு கொடுத்தவர்களை பாராட்டியே ஆக வேண்டும். ஒவ்வொருவரும் அதற்காக எடுத்த முயற்சி, உழைப்பு அதிலும் தனித்துவமாக தலைப்பு கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் இப்படி பல காரணங்களுக்காக அவர்கள் பாராட்டபட வேண்டியவர்கள். அவர்கள் கொடுத்த தலைப்பில் பெரும்பாலான தலைப்பு எழுத தூண்டியது என்பதே உண்மை. எனக்கு ஓரிரு தலைப்பு தவிர மற்றவை சிந்திக்கத் தூண்டியது. இதில் தலைப்பு கொடுத்தவர்கள் யார் என்பதை விட என்ன தலைப்பு என்பதே ஆவலைத் தூண்டியது. தலைப்பிற்காக எழுதியவர்கள் பலர், கொடுத்தவர்களுக்காக எழுதியவர்கள் சிலர். கவிதைக்காக பாராட்டியவர்கள் பலர், எழுதியவர்களுக்காக பாராட்டியவர்கள் சிலர். சில அரட்டைகள், சில கருத்துகள், சில எதிர் வினைகள், சில நகைகச்சுவைகள் இப்படி பல இனிமையான அனுபவங்கள். இதில் பாராட்டபட வேண்டியது தளத்தின் நிர்வாகிகளே. எந்த இடத்திலும் தலையிடாமல் அதன் போக்கில் விட்டு விட்டார்கள்.

சரி இது போட்டியா? யாருக்கு பரிசு கொடுக்கலாம் என்ற கேள்வி எழுந்தது. இந்தக் குழுவை பொறுத்தவரை இங்கு நடப்பதை நான் போட்டியாக பார்க்கவில்லை. போட்டி என்றால் சம பலம் உடையவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு தளமாக இருக்க வேண்டும். முதல் முறையாக கவிதை எழுதுபவர்களும் முயற்சி செய்யலாம், பல்லாண்டுகளாக கவிதை எழுதி பல நூல்கள் வெளியிட்டவர்களும் எழுதலாம் அவர்களில் சிறந்த கவிதை பரிசுக்கு தேர்வாகும் என்பது சரியல்ல. சம தளத்தில் நடக்கும் போட்டியே சரி. ஆகவே இந்த தளத்தை பொறுத்தவரை புதியவர்களுக்கும், இளையவர்களுக்கும் பரிசு கொடுப்பதே சிறப்பு. இது என் தனிப்பட்ட கருத்து. நான் இதில் தொடர்ந்து எழுதியற்கு இரண்டே காரணங்கள். ஒன்று இந்த புதிய முயற்சியை ஊக்கப்படுத்துவது. இதில் புதியவர்களை, இளையர்களை எழுத ஊக்குவிப்பது. இரண்டு எனக்கு கிடைக்கும் ஊக்கம் காரணமாக தொடர்ந்து இந்த சவாலில் பயணிப்பது. அதற்கு ஆசான் கருணாகரசும் ஒரு காரணம். பிக்பாஸ் வீட்டுக்குள்ளே வந்துட்டோம் அவங்களா வெளியாக்குறவரை இங்கே தொடர்வோம் என்பார்:) தினமும் காலை முதல் கவிதை அவரோடதாகதான் இருக்கும். இதில் பரிசைவிட பெரிய ஊக்கம் நாம் போடும் ‘லைக்’தான். இங்கு நம் மூளையை கசக்கி இது நல்ல கவிதையா இல்லையா என ஆராய்ச்சி செய்யாமல், முயற்சியை பாராட்டி ஒரு லைக்கை தட்டிவிட்டு போவோம். இந்த தளம் என் திறமையை காண்பிக்க அல்ல மற்றவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதாக இருந்தால் அதுவே என் கவிதைக்கு கிடைத்த அங்கீகாரம் என முதலில் இருந்தே நான் தெளிவாக இருந்தேன். பரிசுக்குரியவர்கள் சரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதே என் பார்வை. இதை ஏற்கனவே நான் நண்பர் நிஜாமின் பதிவில் தெளிவு படுத்தியிருந்தேன். பரிசு பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். விவரம் கீழே :
முதல் பரிசு: Nizam
இரண்டாம் பரிசு : Geetha Presenna
வளரும் கவிஞர் பரிசு: Abirami Suresh
வளரும் இளம் கவிஞர் பரிசு : Arun Vasudev Krishnan

இனி பரிசு பெறவிருப்பவர்களுக்கும் என் வாழ்த்துகள்.

பரிசு பெறாவிட்டாலும் தங்கள் பணிகளுக்கு இடையில் நேரம் ஒதுக்கி எழுதிய ஒவ்வொருவரும் வெற்றியாளர்களே.

இந்த தளத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம் பலரும் ஆர்வத்தோடு பங்கெடுத்ததே. எந்தவித வேறுபாடுமின்றி நாள்தோறும் கவிதையை பகிர்ந்தார்கள். பல புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். அன்பு சூழ் உலகு.

இளையராக இருந்தாலும் இப்படி ஒரு சிந்தனை உதித்து, நல்ல கருத்தாக்கத்துடன் இந்த தளத்தை உருவாக்கி அதில் வெற்றியும் பெற்ற Harini Vee என் மனமார்ந்த வாழ்த்துகள். அதற்கு உறுதுணையாக இருந்து தொழில்நுட்ப உதவி முதல் விளம்பர உதவிவரை பல உதவிகள் செய்து பக்கபலமாக விளங்கிய Vijay Sangarramuக்கு நம் பாராட்டுகள். இதில் பின்புலமாக இருந்து ஆதரவு கொடுத்த பலருக்கும் நன்றி.

#தமிழ்மொழி_விழா_2018
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்
#TLF2018
#சிங்பொரிமொ2018tlf
#தமிழ்மொழிமாதம்_2018

இளமைத்தமிழ்.காம்

மாணவர்களுக்காகவே இயங்கும் “இளமைத்தமிழ்.காம்” கடந்தாண்டு தமிழ்மொழி விழாவில் மாணவர்களுக்கு தமிழ் விக்கிபீடியா கட்டுரைகள் போட்டியை வெற்றிகரமாக நடத்தி 250 கட்டுரைகளுக்கு மேல் மாணவர்களை எழுத வைத்தது.
இந்தாண்டும் மாணவர்களுக்காக ஒரு போட்டியை நடத்துகிறது. வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் தெடர்பு, தகவல் அமைச்சின்கீழ் செயல்படும் தேசிய மொழிபெயர்ப்புக் குழு வெளியிட்ட சொல்வளக் கையேட்டை மையமாக வைத்து “சொல், சொல்லாத சொல்” என்ற மாணவர்களின் சொல்வளத்தை மேம்படுத்தும் புதிர்ப் போட்டியை நடத்துகிறது.

இப்போட்டியின் இறுதிச் சுற்று வரும் ஏப்ரல் 14ஆம் தேதி, சனிக்கிழமை, காலை மணி 9க்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கத்தில் நடைபெறும். பிரபல, தொலைக்காட்சிப் படைப்பாளர் திரு. ஜிடி மணி இறுதிச் சுற்றை வழிநடத்தவிருக்கிறார்.

இப்போட்டி உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. இதில் மொத்தம் 16 உயர்நிலைப்பள்ளிகள் பங்கெடுத்தன. அதில் முதல் சுற்றில் 8 பள்ளிகள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறின. அதிலிருந்து NUS High School of Maths and Science, Bukit Timah Methodist Girls School, Temasek Junior College, Woodlands Secondary School ஆகிய 4 பள்ளிகள் வெற்றிபெற்று இப்போது இறுதிச்சுற்றில் மோதவிருக்கின்றன. இதில் முதலிடத்தில் வெற்றிபெறும் பள்ளிக்கு 500 வெள்ளியும், இரண்டாம் இடத்தில் வெற்றிபெறும் பள்ளிக்கு 400 வெள்ளியும், மூன்றாம் நான்காம் இடத்திலோ வரும் பள்ளிகளுக்கு முறையே 300, 200 வெள்ளி பரிசுத்தொகை அளிக்கப்படவிருக்கின்றன. வெற்றிபெற்ற குழுக்கு கோப்பையும் உண்டு. இது தவிர பங்கேற்ற அனைத்து பள்ளிகளுக்கும் நினைவுப் பரிசும்,
மாணவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழும் வழங்குகிறார்கள்.

இறுதிப்போட்டியில் ஆங்கிலச்சொல்லுக்கு சரியான தமிழ்ப்பதம் சொல்வது, தமிழுக்கு இணையான ஆங்கிலச் சொல்லை கண்டுபடிப்பது, படத்தை பார்த்து பதத்தை சொல்வது என ஆறு மாறுபட்ட சுற்றுகள் உள்ளன. இதில் ‘ராபிட் ஃபையர்’ எனப்படும் பரப்பரப்பான விரைவிச்சுற்றும் உண்டு. ‘பஸ்ஸர்’ எனப்படும் ஒலிப்பானின் துணைக்கொண்டு தொழில்நுட்ப உதவியுடன் நடத்தப்படும் இப்போட்டி மாணவர்களை ஆர்வத்துடன் விளையாட தூண்டும். அதே நேரம் பல புதிய ஆங்கிலச்சொல்லிக்கு சரியான தமிழாக்கத்தை தெரிந்துகொள்ள உதவும்.

பார்வையாளர்களுக்கும் போட்டி உண்டு, பரிசுகள் உண்டு. அதனால் நிறைய தமிழ்ச்சொற்கள் தெரிந்துகொண்டு வரவும்:)

முதல் சுற்றில் ஒன்றில் இப்புதிர்ப் போட்டியை ஏற்று நடத்தியபோது மாணவர்களின் திறமையை பார்த்து வியந்து போனேன். கேள்வியை சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அவர்கள் பதிலை சொல்லிவிடுவார்கள். தப்பே விடாமல் முழு மதிப்பெண்களையும் பெற்றவர்களும் உண்டு. சிலர் புதிய சொற்களை சொல்லி நம்மை அசத்துவார்கள். இப்படிப்பட்ட நல்ல ஒரு நிகழ்ச்சியை காண, உங்கள் பிள்ளைகளுடன் கண்டிப்பாக வந்து கலந்துகொள்ளுங்கள். மாணவர்களுக்கு உற்காசமூட்டுங்கள். அனுமதி இலவசம்.

#தமிழ்மொழி_விழா_2018
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்
#TLF2018