07-ஏப்ரல்-2017, வெள்ளிக்கிழமை. தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு நாள்தோறும் “சொல்லிச் செல்லும் சொல்லடைகள்” #வாழும்_மொழி_வாழும்_மரபு #நன்றி_தமிழ்முரசு #தமிழ்மொழி_விழா_2017 #தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்

பார்வை 2017 – ஓர் பார்வை

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றத்தின் “பார்வை 2017” கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 2ம் தேதி காலை உட்லான்ட்ஸ் வட்டார நூலக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. ஐந்தாவது முறையாக “பார்வை” நிகழ்ச்சியை அரங்கேற்றும் இவர்கள் தமிழ் மொழி விழாவுக்கு புதிய வரவானலும் அருமையான வரவு. தொடக்கம் ——————- நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திரு இராஜாராம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் திரு அருண் வாசுதேவ், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவை தலைவர் திரு முத்தையா அருணாச்சலம், சிங்கப்பூர் நிர்வாக பல்கலைக்கழகத்தின் ‘தமிழா’ அமைப்பின் தலைவர் திரு விக்னேஷ் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். ‘யுத்தம்’ நிகழ்ச்சி தொடக்கம் போலேயே இங்கேயும் மற்ற பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை தலைவர்களை அழைத்து தொடங்கி வைத்தது மாணவர்களுக்குள் உள்ள நல்ல புரிந்துணர்வை காட்டியது. பாரதியாரின் “வாழ்க தமிழ்மொழி” பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக பாடினார்கள் மாணவி கபிலாவும், பிரியன்னாவும். ஆனால் அதில் ‘சுடர்க தமிழ்நாடே’ என்பதற்கு பதிலாக ‘சுடர்க சிங்கை நாடே’ என்று மாற்றியிருந்தனர், சிறப்பு. சிறப்பு விருந்தினருக்கு மாலை, பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தனர். வரவேற்புரை ——————— வரவேற்புரை வழங்கிய மாணவர் தலைவர் அருண் வாசுதேவ், தமிழ்மொழி விழாவில் தங்களை இணைத்து கொண்டது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவத்தார். அனைவரையும் வரவேற்ற அவர், நிகழ்ச்சியின் மையக் கருத்தான பாஞ்சாலியின் சபதம் குறித்தும் பேசினார். சிறப்பு விருந்தினருக்கு மாலை பொன்னாடை அணிவித்தது குறித்து “சிலர் கேள்வி கேக்கலாம்..” என கூறி ஒரு விளக்கத்தையும் அளித்தார். அந்நிகழ்வு அரசியல் நிகழ்வு இல்லை என்றும் தங்களது மனபூர்வமான அன்பையும் மரியாதையையும் தெரிவிக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டது என்றும் கூறினார். பொன்னாடைகள் – ஓர் விளக்கம் —————————————————— இங்கே ஒரு செய்தியை நான் பதிவ செய்ய விரும்புகிறேன். விழாக்களில் நடக்கும் மாலை, பொன்னாடை வைபங்களை குறித்து மாற்றுக் கருத்துக் கொண்டவன், அதை தொடர்ந்து சொல்லியும் வருகிறேன். அவர் விளக்கம் கொடுத்ததற்கு அதுவும் ஒரு காரணம். ஆனால் நான் ஒட்டு மொத்தமாக அதை எதிர்க்கவில்லை. பொன்னாடை அளிப்பதையோ, பெறுவதையோ கொச்சைப் படுத்துவதோ, குற்றம் சொல்வதோ என்னுடைய நோக்கம் அல்ல. ஆனால் அதே வேளையில் ஒரு மாற்றுக் கருத்தை முன் வைக்கிறேன். சிறப்பு விருந்தினர்கள், விருதாளர், வேற்று இனத்தை சேர்ந்தவர்கள் இப்படி குறிப்பட்ட சிலருக்கு அணிவிப்பதில் நான் உடன்படுகிறேன். நம் பண்பாட்டை, பழக்கத்தை கடைபிடிப்பதில் தவறில்லை. ஆனால் இரண்டு விஷயத்துக்காக நான் அதை ஆதரிப்பதில்லை. 1. புரவலர்களுக்கு அணிவிப்பதை. அவர்களிடமே காசு வாங்கி அவர்களுக்கே திருப்பி கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அவர்களை கூட்டத்தினருக்கு அறிமுகப்படுத்த, அவர்கள் படத்தை கணொளியில் காண்பிக்கலாம். அவர்களை மேடைக்கு அழைத்து வேறு ஏதாவது கொடுக்கலாம். 2.குறிப்பிட்ட சிலருக்கு ஒவ்வொரு அமைப்பும், ஒவ்வொரு நிகழ்விலும், ஒவ்வொரு ஆண்டும் பொன்னாடை கொடுத்தால் ஒரு கட்டத்தில் அவரிடம் எத்தனை பொன்னாடைகள் இருக்கும்? அவர்கள் பாவம் இல்லையா? எங்க வீட்ல என்னோட பான்ட், சட்டையை வைக்கவே ஒரே ஒரு அலமாரியில ஒரு ஓரத்தில அதுவும் 33% சதவிகிதம் தான் இட ஒதுக்கீடு பண்ணியிருக்காங்க:) இந்த பொன்னாடைகளை இவர்களில் சிலர் விரும்பவதில்லை என்பது தான் உண்மை. யாரும் ஏன் போடவில்லை என்று கேட்கப்போவதில்லை. வேறு வழியில்லாமல் வாங்கி கொள்கிறார்கள். இது என்னோட தனிப்பட்ட கருத்து. இது தான் சரி என்று நான் சொல்லவில்லை. இது ஒரு சின்ன விஷயம் தான், ஆனால் இதில் நேரத்தை மிச்சப்படுத்தலாம், முடிந்தவரை தவிர்க்கலாம், அவ்வளவு தான். இதுக்காக என்கிட்ட சண்டைக்கு வராதீங்க:) சரி, நிகழ்ச்சிக்குள்ள போவோம். வாழ்த்துரை —————— அடுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வளர்தமிழ் இயக்கத் தலைவர் திரு இராஜாராம் பேசுகையில் தமிழ்மொழி விழாவின் முக்கிய நோக்கம் மாணவர்களை சென்றடைவது என்றும் அந்த வகையில் முதன் முறையாக ‘பார்வை’ நிகழ்ச்சியை தமிழ்மொழி விழாவில் இணைத்துக் கொள்வதில் தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார். மேலும், நன்யாங் மாணவர்கள் அடுத்த ஆண்டு புதிய நிகழ்ச்சியுடன் வந்தாலும் உடனே ஏத்துக்கொள்வோம் அதற்கு காரணம் அவர்கள் நல்ல நிகழ்ச்சியே படைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது, மாணவர்களுக்கு என்ன தேவை என்பது அவர்களுக்கு தெரியும் என்றும் கூறினார். இதன் மூலம் நாளை தமிழை முன்னெடுத்துச் செல்ல, நிகழ்ச்சி படைக்க, அமைப்புகளுக்கு ஏற்ற நல்ல தலைவர்களை உருவாக்க முடியும் என்றும் சொன்னார். பாஞ்சாலி சபதம் ஏற்பது —————————————- அடுத்து மேடையில் ‘பாஞ்சாலி’ தோன்றினார். துகிலுரியும் காட்சி அரங்கேற்றப்பட்டது. உணர்ச்சி பொங்க பாஞ்சாலி சபதம் ஏற்றார். பாஞ்சாலியாக நடித்த ஐஸ்வர்யாலஷ்மி நல்லதொரு நடிப்பை வெளிப்படுத்தினார். காணொளிப் போட்டி ———————————– அடுத்தாக, காணொளிப் போட்டி நடைப்பெற்றது. எழுத்தாளர் கழகத் தலைவர் ஆண்டியப்பன்,சிங்கப்பூர் விகே ஆர்ட்ஸின் விக்னேஷ் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர். மூன்று மாணவர் குழுக்கள், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு நா ஆண்டியப்பன் ஐயா எழுதிய நாடக ஆக்கமான ‘பாரதியின் பாஞ்சாலி சபதம்’ புத்தகத்தை அடிப்படையாக கொண்டு அந்த காணொளியை தயாரித்திருந்தனர். அந்த காணொளிகள் திரையிடப்பட்டது. ஒவ்வொருவரும் தங்களது படைப்பை வித்தியாசாமாக படைத்திருந்தனர். முதல் பரிசை ‘பத்தினி தீ பாஞ்சாலி’ காணொளியை படைத்த தெம்பனீஸ் தொடக்கக் கல்லூரியும், இரண்டாம் பரிசை ‘தர்மத் தலைவன்’ என்ற காணொளியை தயாரித்த தெமாசக் தொடக்கக் கல்லூரியும், மூன்றாம் பரிசை ‘சகுனியின சூழ்ச்சி’ என்ற காணொளி படைத்த நீ ஆன் பலதுறை தொழில்நுட்பக் கல்லூரியும் வென்றது. பார்வையாளர்கள் அங்கம் ——————————————– அடுத்து வந்த அங்கம், ஓர் விறுவிறுப்பான அங்கம். ஆம், பார்வையாளர்கள் பங்குப்பெற்ற விளையாட்டு அங்கம். அதை ‘Kahoot’ என்ற இணைய/செயலி மூலம் விளையாட வேண்டும். இதில் மகாபாரதம் தொடர்பான 12 கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் கொடுக்கப்பட்ட நான்கு பதிலில் சரியான ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். விரைவாக சரியாக விடையளித்தவர்களுக்கு அதுவே புள்ளிகள் கொடுத்துவிடும். இதில் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர். முதலில் இருந்தே முன்னிலையில் இருந்து கடைசியில் முதலிடத்தை பிடித்தவர் நம்ம எழுத்தாளர் கழக இராம வைரவன்:) சிறப்பாக கேள்விகளை தொகுத்து அதை அழகாக விளையாட வைத்து பார்வையாளர்களை பரவசபடுத்தினார்கள். இதில் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய செய்தியும் இருந்தது சிறப்பு. சகுனியின் சூழ்ச்சி, தர்மரின் வீழ்ச்சி ———————————————————— அடுத்து சகுனி அரங்கத்தினுள் நுழைய ஒரே ஆரவாரம். சகுனி சூழ்ச்சி செய்த காரணத்தை விளக்கும் வகையில் காட்சி அமைக்கப்பட்டது. பின்னர் தர்மர் வந்தார். மீண்டும் ஆரவாரம். அவர் சூதாட்டத்தில் தோற்றதை நினைத்து வருந்தும் நிலையை காட்சி படுத்தியிருந்தார்கள். சகுனியாக நடித்த ரூபணேஷ்வரன் வசன உச்சரிப்பிலும், நடை, உடை, பாவனை என அனைத்திலும் வெளுத்து வாங்கினார். அருண் ராமசாமி தர்மராக சிறப்பாக நடித்தார். ஒப்பனைகளும் அருமையாக இருந்தது. அவ்வளவு தானா என்று கேட்குறீர்களா, இல்லை. இனிமே தான் முக்கிய அங்கம் வருகிறது. அது தான் ‘துரித’ பட்டிமன்றம். ஆமாம் ஒரு மணி நேரம் தான் இந்த பட்டிமன்றத்துக்கு. பட்டிமன்றம் ——————— பட்டிமன்ற தலைப்பு, “வாழ்க்கையில் வெற்றி பெற சிறந்த வழி, தர்மமே!, சூழ்ச்சியே!”. ‘தர்மமே’ என்ற அணியில் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழக மாணவர்கள் அருள் ஓஸ்வின், ஹஃபிஸா மற்றும் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மாணவி ஐஸ்வர்யா தேவி பேசினார்கள். ‘சூழ்ச்சியே’ என்ற அணியில் முனைவர் ஜி இராஜகோபாலன், கவிஞர் மு சேவகன், திருமதி கிருத்திகா பேசினார்கள். பட்டிமன்றத்தின் நடுவர் திரு ரெ சோமசுந்தரம் ஐயா. முதலில் பேசவந்த ஹஃபிஸா, ‘தர்மம் தலை காக்கும்’ என்ற எம்ஜிஆர் படத்தை குறிப்பிட்டு அதனால் வாழ்க்கையில் வெற்றி பெற சிறந்த வழி தர்மமே என்று தன் வாத்தத்தை முன் வைத்தார். அடுத்த வந்த மன்னையார், முள்ளை முள்ளால் எடுப்பது போல இளையர்கள் சூட்சமமான சூழ்நிலைகளை புரிந்து கொண்டு நடந்ததால் தான் வெற்றி பெறலாம் என்ற தன் வாதத்தை முன் வைத்தார். அடுத்த தர்மமே என்று பேச வந்த ஐஸ்வர்யா இந்த நிலையற்ற மனித வாழ்க்கையில் நாமும் தர்மம் செய்து நம்மை சுற்றியுள்ளவர்களும் தர்மம் செய்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்றார். சூழ்ச்சியே என்று பேச வந்த கிருத்திகா மகாபாரதத்தில் தர்மம் வெல்லவே சூழ்ச்சி தான் காரணமாக அமைந்தது என்று வாதிட்டார். சூழ்ச்சி செய்து நாட்டை பிடித்த ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்றுத்தந்தது காந்தியின் தர்மமே என்று வாதிட்டார் அருள் ஓஸ்வின். ஆனால் அந்த காந்தியையே கடைசியில் சூழ்ச்சியால் சுட்டுக்கொன்றனர் என்று சொல்லி வாழ்க்கையில் வெற்றிபெற சிறந்த வழி சூழ்ச்சியே என்று முடித்தார் திரு சேவகன். இறுதியில் நடுவர், சூழ்ச்சியில் நிலையான வெற்றி பெற்ற முடியாது என்றும் வாழ்கையில் வெற்றிபெற தர்மமே சிறந்த வழி என்றும் தீர்ப்பளித்தார். இந்த பட்டிமன்றம் குறைந்த நேரமே நடந்ததால் நிறைய கருத்துகள் வைக்கப்படவில்லை. நடுவரும் பேச்சாளர்களும் நேரம் குறைவாக இருந்ததை சுட்டிக்காட்டினர். ஆனால் இதே நேரத்தில் நானும் மன்னையாரும் சேர்ந்து பொங்கோலில் நண்பர் நிஜாம் ஏற்பாடு செய்த பட்டிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் பேசினோம். ஆனால் இந்நிகழ்ச்சியில் நிறைய அங்கங்கள் இருந்ததால் பட்டிமன்றம் தனித்து தெரியவில்லை. ஆனால் அனைவரும் கொடுக்கப்பட்ட நேரத்தில் சிறப்பாக பேசினர். மாணவர்கள் எதிரணியில் இருந்த பெரியவர்களுக்கு இணையாக தங்கு தடையின்றி பொரிந்து தள்ளினர். பாஞ்சாலி சபதம் முடிப்பது ——————————————— நிகழ்ந்சியின் முடிவில் பாஞ்சாலி மீண்டும் அரங்கத்தினுள் வந்த தன் சபதத்தை முடித்து செங்குழுலை முடித்து செல்வதாக காட்சி அமைக்கப்பட்டது. இந்த அங்கத்தில், முதலில் பாஞ்சாலி சபதம் ஏற்பது எதற்காக, பின் சகுனியின் சூழ்ச்சி என்ன, தர்மர் தோற்றது எப்படி, எதை இழந்தார், பின் பாஞ்சாலி சபத்ததை முடித்தது என ஒரு சின்ன தனி நடிப்பு அங்கத்தின் மூலம் பாஞ்சாலி சபதத்தை சுருக்கமாக அழகாக சொல்லியது அனைவரையும் கவர்ந்தது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கருத்தாக்கம். நன்றியுரை ——————- போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளும், நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவியவர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது. அரங்கம் நிறைந்த கூட்டத்தில் பெரும்பாலும் மாணவர்களே இருந்தனர். ‘பார்வை 2017’ன் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் வனிதா மணியரசு நிகழ்ச்சியின் வெற்றிக்கு துணைபுரிந்த அனைவருக்கும் நன்றி கூறினார். முற்றிலும் மாணவர்களே திட்டம் போட்டு திறம்பட நடத்திய நிகழ்ச்சி இது. சிறப்பாக நிகழ்ச்சியை ஏற்று நடத்திய தலைவருக்கும் அவருடைய குழுவிற்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். ‘பார்வை’ பிறந்தநாள் கொண்டாட்டம் ————————————————————– ‘பார்வை’க்கு இது ஐந்தாவது ஆண்டு என்பதால், ஐந்தாவது பிறந்தநாளை ஐந்து பதிப்பாசிரியர்களும்/நிர்வாகிகளும் மேடைக்கு வந்து கொண்டாடினார்கள். ‘கேக்’ வெட்டி அல்ல, கேசரி வெட்டி:). அதுவும் ‘மெழுகுவர்த்தி’ ஊதி அனைத்து அல்ல, மெழுகுவர்த்தியை வைத்து அகல் விளக்கை ஏற்றி கொண்டாடினார்கள். ஏன் தெரியுமா? நம் பண்பாட்டு படி கொண்டாட்டங்களின் போது எதுக்கு அமங்கலமா விளக்க ஊதி அணைக்கனும் என்று விளக்கை ஏற்றி வைத்தனர் என்று தெரிவித்தனர். நிகழ்ச்சியை மாணவர்கள் ஜெரமாய, கலைவாணி இருவரும் சிறப்பாக தொகுத்து வழங்கினர். மிகவும் இயல்பாக, தங்களுக்குள் ஒரு உரையாடலுடன், நகைச்சுவையோடு அருமையாக செய்தனர். அவர்களுக்கு என் வாழ்த்துகள். மொத்ததில் நன்யாங் மாணவர்கள் ‘செங்குழல் சீவிய பத்தினி தீ’ என்னும் கவித்துவமான தலைப்பில் அழகிய கதம்பக் காவியம் படைத்தனர். #தமிழ்மொழி_விழா_2017 #தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_பின்னோட்டம் #தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம் https://www.facebook.com/ShanmugamTam/posts/1505692626109575

யுத்தம் 2017 ————- தமிழ்மொழி விழாவின் முதல் நிகழ்ச்சி “யுத்தம் 2017” இன்று காலை சிறப்பாக நடந்து முடிந்தது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திரு வெ பாண்டியன்(தமிழர் பேரவைத் தலைவர்), சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழ் பேரவை தலைவர் முத்தையா அருணாச்சலம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் திரு அருண் வாசுதேவ், சிங்கப்பூர் நிர்வாக பல்கலைக்கழகத்தன் ‘தமிழா’ அமைப்பின் தலைவர் திரு விக்னேஷ் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். மற்ற பல்கலைக்கழக மாணவத் தலைவர்களை அழைத்து தொடங்கி வைத்தது மாணவர்களுக்குள் உள்ள நல்ல புரிந்துணர்வை காட்டுகிறது. பாரதியாரின் “வாழ்க தமிழ்மொழி” பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஒலித்தது. வரவேற்புரை வழங்கிய மாணவர்த் தலைவர் அருண், வாழ்த்துரை வழங்கிய திரு வெ பாண்டியன் சுருக்கமாக ஐந்து நிமிடங்களில் முடிந்துவிட்டனர். பொன்னாடை, மாலைகள் இல்லை. அடுத்து, உயர்நிலைப் பள்ளிகளுக்கான ‘யுத்தம்’ அரையிறுதிச் சுற்று ஆரம்பமானது. இரண்டு போட்டி அங்கங்கள் நடந்தது. ஒன்று படத்தைப் பார்த்து, சொற்கள்/சொற்றொடரை கண்டுபிடிப்பது. இன்னொன்று தொடர்புடைய சொல்லை வைத்து சரியான சொல்லை கண்டுபிடிப்பது. இறுதிச்சுற்றில் கூடுதலாக, படத்தை சரியாக வரிசைபடுத்தும் போட்டி அங்கமும் சேர்க்கப்பட்டிருந்தது. பிறகு மேல்நிலைப்பள்ளிகளுக்கான அரையிறுதிச் சுற்று மற்றும் இறுதிச்சுற்று நடைபெற்றது. தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தி மாணவர்களிடையே பேச்சுத்ததமிழை, சொல்வளத்தை மேம்படுத்த ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி ஒரு சிறப்பான முயற்சி. மாணவர்கள் சில கடினமான சொற்களையும் சுலபமாக கண்டுபிடித்து நன்றாக விளையாடினர். குறிப்பாக என்னைக் கவர்ந்தது ‘அதிகாரம்’ என்ற சொல்லைக் கண்டுபிடிக்க ‘திருக்குறள்’ என்ற சொல்லை தொடர்புடைய சொல்லாக பயன்படுத்தியது. அதை வைத்து சரியான சொல்லை அந்த மாணவர் கண்டுபிடித்தது அருமை. அது தவிர நிறைய அரசாங்க அமைப்புகளின் தமிழ் பெயர்களை எளிதாக சொல்லி மலைக்க வைத்தனர். ஆனால், போட்டியில் ஒரு சில வடமொழி சொற்கள் தலை காட்டின அவை தவிர்க்கப்படலாம். வார்த்தை என்று சொல் நிறைய வந்தது. அதையும் தவிர்க்கலாம். போட்டியில் வெற்றிபெற்ற பள்ளிகளின் விவரம்: உயர்நிலைப் பள்ளி போட்டிகளுக்கான வெற்றியாளர்கள் ————————————— முதல் பரிசு- யுவான்சிங் உயர்நிலைப் பள்ளி இரண்டாம் பரிசு – பெண்டமீர் உயர்நிலைப் பள்ளி மூன்றாம் பரிசு – ஆங்கிலோ சீன தன்னாட்சி பள்ளி(குழு 2) ஊக்கப் பரிசு – ஆங்கிலோ சீன தன்னாட்சி பள்ளி(குழு 1) மேல்நிலைப் பள்ளி போட்டிகளுக்கான வெற்றியாளர்கள் —————————————— முதல் பரிசு – ராஃபில்ஸ் கல்வி நிலையம் (குழு 2) இரண்டாவது பரிசு – விக்டோரியா தொடக்கக்கல்லூரி மூன்றாவது பரிசு – மெரிடியன் தொடக்க கல்லூரி ஊக்கப்பரிசு – ராஃபில்ஸ் கல்வி நிலையம் (குழு 1) இடையே பார்வையாளர்களுக்கான போட்டி அங்கமும் நடத்தினார்கள். இதில் போன ஆண்டு ‘யுத்தம்’ வெற்றியாளரான அஸ்வினி செல்வராஜ், அழகுநிலாவுடன் இணைந்து விளையாடி இருவரும் முதல் பரிசை தட்டிச் சென்றனர். அவ்வப்போது ஒலிபெருக்கி தகராறு செய்தது மாணவர்களிடையே விறுவிறுப்பை குறைத்தது. உமறுப்பலவர் அரங்கம் இந்த மாதிரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கவில்லை. அடுத்த முறை அதற்கு சில சிறப்பு ஏற்பாடு செய்யலாம். தொழில்நுட்பம் கோளாறு செய்தாலும் விரைவில் சரி செய்யப்பட்டு தொடர்ந்து நடத்தபட்டது பாராட்டுக்குரியது. மாணவர்கள் நிறைய வந்திருந்தாலும் அரங்கம் நிறையவில்லை. எழுத்தாளர் கழகத் தலைவர் ஆண்டியப்பன், திரு வைரவன், நற்பனி தலைவர் திரு இராமமூர்த்தி, திரு இராஜாராம், திரு அன்பரசு, திரு திண்ணப்பன், திரு அருண் மகிழ்நன் ஆகியோர் வந்திருந்தனர். அமைப்புகளின் விழாக்களுக்கு வருகை தரும் மற்ற ‘பொது மக்கள்’ காணவில்லை. மேலும் பல மாணவர்கள் பயனுறும் வகையில் பார்வையாளர்களாக மற்ற சில பள்ளி மாணவர்களையும் வரவழைக்கலாம். போட்டியை நடத்திய சரவணன் சண்முகம் இடையிடையே ஏற்பட்ட தடங்கல்களையும் சமாளித்து நல்ல எடுத்துச்சென்றார். சரியான நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டாலும் சிறிது தாமதமாக முடிந்தது. மாணவர்களுக்காக மாணவர்களே நடத்திய நல்ல பயனுள்ள நிகழ்ச்சி. தேர்வு நெருங்கும் வேளையில் இவ்வளவு முயற்சி எடுத்து நிகழ்ச்சியை நடத்தியது பெரும் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்குமுரியது. வருங்காலத்தில் ஆர்வத்துடனும் திறமையுடனும் தமிழ் நிகழ்ச்சிகளை ஏற்று நடத்த நல்ல இளைய தலைவர்கள் தயாராக உள்ளனர். #தமிழ்மொழி_விழா_2017 #தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_பின்னூட்டம் #தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம் https://www.facebook.com/ShanmugamTam/posts/1503563989655772