அவனும் இவனும்

கடந்த வாரம், 8,9ம் தேதிகளில் மூன்று காட்சிகள் ‘அவனும் இவனும்’ என்ற நாடகம் அவாண்ட் நாடகக் குழுவினரால், மலாய் மரபுடைமை நிலையத்தில் அரங்கேற்றப்பட்டது. 9ஆம் தேதி , சனிக்கிழமை மாலை 7:30 மணி காட்சிக்குச் நான் சென்றேன்.

முதலில் நான் வியந்தது, நாடகத்திற்கு வந்திருந்த பார்வையாளர்களை பார்த்துதான். சிங்கப்பூரில் இவ்வளவு தமிழ் இளையர்கள், அதாவது தமிழ் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் தமிழ் இளையர்கள் இருக்கிறார்களா என்று ஒரு வியப்பு ஏற்பட்டது. இவர்களை நான் பல்கலைக்கழக தமிழ் நிகழ்ச்சிகள் தவிர வேறு எந்த தமிழ் நிகழ்ச்சியிலும் மொத்தமாக பார்த்ததில்லை. சொல்லப்போனா அங்கிருந்தவர்களில் நான், ஶ்ரீஜி இன்னும் ஓரிவரைத் தவிர எல்லோரும் முப்பது வயதிற்குள்தான் இருப்பார்கள் என நினைக்கிறேன். அதுவும் இலவசம் இல்லை. ஒரு நுழைவுச்சீட்டின் விலை $25 வெள்ளி(மாணவர்களுக்கு தள்ளுபடி இருந்ததா தெரியாது). ஒரு தமிழ் நாடகத்திற்கு வரும் இவர்கள் ஏன் இலவசமாக நடத்தப்படும் மற்ற தமிழ் நிகழ்ச்சிகளுக்கு வர மாட்டேங்கிறார்கள். சிங்கையில் தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தும் அமைப்புகள் இது குறித்து கொஞ்சம் சிந்திக்க வேண்டும். இதிலே அதற்கான விடையும் உள்ளது.

மற்றொரு செய்தி, இந்நாடகத்தில் நடித்தவர்கள், பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுனர்கள் அனைவரும் 20-30 வயதுகுட்பட்டவர்கள்தான் என நினைக்கிறேன்(படத்தை பார்த்தால் தெரியலாம்).

நுழைவுச்சீட்டு வாங்கும்போது கூடவே ஒரு சின்ன சீட்டும், பென்சிலும் கொடுத்தாங்க, எதுக்குனு பிறகு சொல்றேன்.

சரி, இப்ப அரங்கத்திற்குள் செல்வோம்.

இந்த முறை, படங்கள், ஒலி, ஒளிப்பதிவு எடுப்பதற்கு அனுமதி இல்லை என்பதை முதலிலேயே தெரிவித்துவிட்டார்கள். கடந்த முறை சொல்லாததை பதிவு செய்திருந்தேன்.

நாடகத்தின் தொடக்கத்தில் சமீபத்தில் மறைந்த, நாடகத்திற்கு பெரும் பங்காற்றிய திரு அறிவழகன் திருஞானம் குறித்த ஒரு காணொளி அஞ்சலியாக சமர்பிக்கப்பட்டது. அதில் அவர் நடித்த, இயக்கிய நாடகங்களின் சில காட்சிகள் பதியபட்டிருந்தது சிறப்பு. சின்ன வயதில் அவர் மறைந்தது, சிங்கை நாடகத்துறைக்கு ஒரு பெரும் இழப்பு. அவருடைய குடும்பத்தாருக்கும், அவாண்ட் நாடக குழுவிற்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

சரி, இப்ப நாடகத்திற்குள் போவோம். இதன் கதைச் சுருக்கம் படத்தில் உள்ளது, முடிந்தால் படித்துக் கொள்ளுங்கள்(ஏன் என பின் குறிப்பு 1 படிக்கவும்).

கதையை பத்தி பேசும் முன், நடிகர்கள் குறித்து பார்ப்போம்.

இதில் நடித்த அனைத்து நடிகர்களின் உழைப்பும் ஆர்வமும் அவர்களின் நடிப்பில் தெரிந்தது. இதுதான் செல்வாவின் நாடகத்தின் சிறப்பு. அப்படி ஒரு பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது.

இயல்பான நடிப்பின் மூலம் என்னை கவர்ந்தவர்கள் ராம், தயா மற்றும் பிரியா. ராம் நகைச்சுவையில் கலக்கினார். பிக்பாஸ் ‘ஸ்நேகனை’ விட ஒரு படி மேலபோய் தாவி சென்று கட்டிப்பிடித்தார். அதையும் கீழே விழாமல் சரியாக …. இடுப்பில் ஏறிக் கொண்டார். நல்ல நேர்த்தியான நடிப்பு.
அடுத்து, ஜெய் வேடத்தில் வந்த ஜெய்டன் சரவணன் நாடகம் முடிந்த பிறகும் கூட அதே கோபத்தில் இருந்தது அவர் எந்த அளவுக்கு அந்த கதாபாத்திரத்திற்குள் ஐக்கியமாகிவிட்டார் என்பது தெரிந்தது. அவர் ‘பிகே’வை எத்தி உதைக்கும் போது சரி, சும்மா நின்று கொண்டு மற்றவர்கள் வசனம் பேசும்போதும் சரி, அவர் முகத்தில் அந்த கோபம் நாடகம் முழுக்க இருந்தது. அவருக்கு முதல் மேடை நாடகம் என்று யாராலும் சொல்ல முடியாது.
பிரியாதான் அன்று எல்லோருடைய “ஃபேவரைட்” என நினைக்கிறேன். அப்படி ஒரு இயல்பான நடிப்பு. அதில் மிக முக்கியமான கவனிக்க வேண்டிய ஒன்று, மற்றவர்கள் வசனம் பேசி நடிக்கும் போதும், அவர் முகபாவனைகள், மெய்ப்பாடு என நாடகம் முழுதும் நடித்துக் கொண்டிருந்தார். அந்த உயரமான ‘ஹீல்ஸ்’ செருப்பை போட்டுக் கொண்டு அவர் ஓடும்போது நமக்குதான் ‘ஹார்ட் பீட்’ வேகமாக அடித்தது, ஆனால் அவர் விழாமல் ஓடினார்:) இதுக்கே பல ஒத்திகை பார்த்திருக்க வேண்டும். இவருக்கும் முதல் மேடை நாடகமாம். போங்க பாஸூ, ஏமாத்தாதீங்க, நாங்க நம்ப மாட்டோம்.
‘பிகே’வாக நடித்த பொன்குமரன் செல்வம் தொடக்கம் முதல் முடிவு வரை பயங்கர உணர்ச்சி பிழம்பாக கை, கால், முகம் என நரம்பு புடைக்க நடித்தார். உண்மையிலேயே தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் ஒரே மாதிரி உணர்ச்சிவசப்பட்டு நடிப்பதற்கு நிறைய ‘எனர்ஜி’ வேண்டும். மிக அருமையாக அதை செய்தார்.
ஒரே ஒரு காட்சியில் வந்து சென்றாலும் ஷரன் நன்றாக ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை செய்தார். அந்த ‘கேக்’ மாவு பாத்திரத்தை பிடித்திருந்தது, அடுத்தவர்கள் மேல் இடித்தது, மாவை சிந்தியது, அங்க அசைவுகள் என நன்றாகவே செய்தார்.
மனோவாக நடித்த மனோ விக்னேஷ்வரன், ஒரு காவல்துறை அதிகாரியா அந்த சீருடை போடமாலேயே நம் மனதில் அந்த பாத்திரத்தை பதிய வைத்தார். என்ன, நம்ம தமிழ்படத்தில வர ‘காமடி போலீஸ்’ மாதிரி கொஞ்சம் தொப்பையோட இருந்தாலும் மிக ‘சீரியஸான’ நடிப்பை வெளிப்படுத்தினார். ஒரு காட்சியில், “ஆம்பளைங்கனா தொப்பை இருக்கத்தான செய்யும்?” என முதல் வரிசைல உட்கார்ந்திட்டிருந்த என்னை பார்த்து கேட்டார். எனக்கு ஒரு ‘டவுட்டு’ அதை ஏன் அவர் என்னை பார்த்து கேட்டார்? பக்கத்தில் உட்கார்ந்துட்டிருந்த. Srigய பார்த்து கேட்டிருக்கலாமே:(.. சில இடங்களில் கொஞ்சம் ‘stiff’ஆக இருந்தாலும் பல இடங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தினார்.
அடுத்து பணிப்பெண்ணாக நடித்தவர் மலையாளத்தில் பேசி நடித்தாலும் பெரும்பாலும் புரியும்படியாகவே இருந்தது. ஒரு வித பயம் கலந்த நடிப்பு, சில இடங்களில் அழுகை என அந்த கதாபாத்திரத்துக்கு உரிய நடிப்பை வழங்கினார். இன்னும் சற்று மேம்படுத்தலாம். ஆனால் கண்டிப்பாக முதல் நாடக மேடை மாதிரி தெரியவில்லை. கடைசியாக, ஆனால் நாடகத்தின் மிக முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது ‘அனிதா’தான். என்னங்க எல்லோரும் அவ்வளவு கஷ்டப்பட்டு கைய கால ஆட்டி நடிச்சாங்க, அதுவும் அவர் கணவரா நடித்த பிகே அப்படி உணர்ச்சிவசப்பட்டு நடிச்சாரு, ஆனா இந்தம்மா கைய கால கொஞ்சம் கூட அசைக்கல, மூச்சு கூட உடாம நடிச்சாங்க. எப்படினு கேக்கறீங்களா? ஒன்னுமில்லைங்க, அவங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் அந்த மாதிரி. அதாங்க கொலை செய்யப்பட்ட மனைவியா நடிச்சாங்க. கைய கால ஆட்டிகிட்டே, வசனம் பேசி கூட நடிச்சிடலாம். ஆனா உயிரற்ற உடலாக நடிப்பது அதுவும் ஒன்றரை மணி நேரம் நடிப்பது கொஞ்சம் கடினமானதுதான். அதை சிறப்பாக செய்தார் ‘அனிதா’ என்ற லத்திகா.

சரி, கதைக்குள் போவோம். வீட்டினுள் கொலையுண்ட கிடக்கிறாள் ஒரு பெண்மணி. இரவு மது அருந்தியதால் அதே மயக்கத்தில் எழுந்து வந்த கணவன், மனைவி பேச்சுமூச்சு இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். அவள் இறந்துவிட்டதை காவல்துறைக்கு தெரியப்படுத்தினால் தன் மேல் பழி வரும் என பயந்து, தன் நண்பனை வரவழைக்கிறான். காவலதிகாரியான அந்த நண்பன் தன் பெண்தோழியுடன் வருகிறான். அங்கு வந்து பிறகுதான் விஷயம் அறிந்து காவலர்களுக்கு தெரியப்படுத்தச் சொல்கிறான். ஆனால் பிகே முடியாது என சொல்ல, அவர்களுக்குள் விவாதம் நடக்கிறது. இடையில் அனிதாவின் தம்பி, பிட்சா கொண்டு வருபவர்(காலையில பிட்சா ஆர்டர் பண்ணலாம் என்பது இதுவரை எனக்கு தெரியாது), அண்டை வீட்டுக்காரர், வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் என பலர் வந்து போகிறார்கள். இவர்களில் யார் கொலையாளி என கண்டுபிடிப்பதே கதை.

இடைவேளையில் அந்தக் கொலையாளி யார் என்பதை பார்வையாளர்கள் சீட்டில் எழுதிக்கொடுப்பதற்கே அந்த சீட்டும், பென்சிலும். எல்லோரும் எழுதி கொடுத்தோம். நாடகம் முடிந்த பிறகு கதாபாத்திரங்களின் பெயரும், அவர்களை கொலையாளிகள் என எத்தனை பேர் யூகித்தார்கள் எனவும் சொல்லப்பட்டது. நாடகத்தை கூர்ந்து கவனிக்க இது ஒரு நல்ல யுக்தியாக இருந்தது.

கடைசியில், “நான் தான் கொன்றேன்” என ஒருவர் வாக்குமூலம் கொடுத்து முடிக்க, பின்னாடி, நாடகத் தலைப்பை சொன்னவுடன், “நாடகம் முடிந்துவிட்டது போல” என நான் சொல்ல, பக்கத்திலிருந்த ஶ்ரீஜி “இல்லை, இப்படி முடிக்க மாட்டார்கள்” என சொல்ல, அதே போல், அடுத்த கதாபாத்திரம் உள்ளே வந்து “நான்தான் கொன்றேன்’ என சொல்லி, எப்படி, எதற்காக கொன்றார் என்று விளக்குகிறார்.

நான் யூகித்த ‘கொலையாளி’ தவறாய் போனது:(

ஒரு நல்ல கதை அமைத்து அதை நல்ல நடிகர்கள் கொண்டு அரங்கேற்றிய நாடகம். ஆனால், நாடகம் விறுவிறுப்பாக இருந்ததா என்றால் இல்லை. இடைவேளை வரை ஒரே அலைவரிசையில் ஓடிய மாதிரி இருந்தது. கொஞ்சம் கதாபாத்திரங்கள் மீது சந்தேகம் வரும்படி காட்சிகள் அமைத்திருக்கலாம்.

எனக்கு, ‘திரில்லர்’ கதைனா, வீணை எஸ் பாலசந்தரின் ‘நடு இரவில்’ படம்தான் நினைவில் வரும். காலத்தால் அழியாத ஒரு அருமையான ‘கிரைம் திரில்லர்’. அதில், நடித்த எல்லோர் மேலும் சந்தேகம் வரும். கடைசியில் நாம் சந்தேகப்படாத ஒருத்தர் கொலை செய்திருப்பார்.

சரி, நாடகத்திற்கு வருவோம். வில்லனாக இருப்பவர்கள் அரவிந்த்சாமி போல இருந்து அமைதியாக நடிப்பதை ஏற்றுக்கொண்ட இரசிகர்கள் உள்ள இக்காலக்கட்டத்தில், நம்பியார், அசோகன் மாதிரியான பழைய நடிப்பு பாணியை(சில இடங்களில்) தவிர்த்திருக்கலாம் என தோன்றியது.

இளையர்கள் நாடகம் என்பதால் அவர்களுக்குள் பே(ஏ)சிக்கொள்ளும் ‘வழக்குச் சொற்கள்’ பல இருந்தன. அது யதார்த்தமாகவும் இருந்தது.

நிறைய நுணுக்கங்களில் கவனம் செலுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. நாடக அரங்கின் கதவையே, வீட்டின் வாசற்கதவாய் வைத்தது, பிகே அரங்கத்திற்கு பின்னால் சென்றவுடன், வாய்க்கொப்பளிப்பது போன்ற சத்தம் மட்டும் வருவது போன்றவை ஒரு உண்மையான வீட்டிலிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. பிட்சா கொண்டு வருபவர், ‘பிட்சா ஹட்’ டீ சர்ட் போட்டு வந்தது, ‘காலிங் பெல்’ அடித்தது இப்படி பல விஷயங்கள் நம்மை ஒரு நல்ல நாடகம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தியது.

ஆனால், நுழைவுச்சீட்டு $25 வெள்ளி என்பதை குறைத்தால் இன்னும் நிறைய பேர் பார்க்க விரும்புவார்கள்.

செல்வாவின் நாடகம் என்றால் நடிப்பு இருக்கும், உழைப்பு இருக்கும், கதை இருக்கும், மொத்ததில் நல்ல நாடகம் பார்த்த மன நிறைவு இருக்கும்.

பி.கு 1 : இந்த நாடகத்தை பற்றியும், அவாண்ட் நாடக குழு பற்றியும் கையேட்டில் பண்ணிரெண்டு பக்கங்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும், இரண்டு பக்கங்கள் தமிழில் இருந்தது பாராட்டுக்குரியது. ஆனால் அந்த இரண்டு பக்கத்தையும் கருஞ்சிவப்பில் போட்டு அதில் தமிழ் எழுத்துகளை கருப்பில் அச்சிட்டதுக்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று தெரியவில்லை:) ஃபோனில் படம் பிடிச்சு அதை ‘ஜும்’ பண்ணிதான் பார்த்தேன்.

பி. கு. 2: முன் வரிசையில் உட்கார்ந்திருந்ததால் , மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக ‘ஃபோனை’ தொடவில்லை. அதனால் குறிப்பும் எடுக்கவில்லை. எதாவது தவறாக இருந்தால் குறிப்பிடவும்.

Tumhari Sulu

Tumari Sulu ————- Here are my views about this 🎥 1.The one and only name shown, first in the title card is Vidya Balan – She is the Hero and Heroine of this movie. 2.Wondering what is meant by Sulu – Sulu is short name of Sulochana. She is a ambitious house wife takes part in all competitions whether it happens in her son’s school or in FM channels in Radio or anywhere else:) 3.Dialogues are short, sweet and apt – Like listening to people next door or sometimes within our door as well 4.Song sequences are limited and shown as short clips mostly – Situational songs and no usual Switzerland trip Bollywood duets 5.House they live still has fans with big regulator on the switch board, transistor etc. – Good visualization of a middle class Mumbai family 6.Best Scene – Sulu’s chat with the elderly caller in the midnight – Well scripted and captured 7.Emotional Scene – Tears will roll out when Sulu hug her son and cry(didn’t specify the details just to avoid telling the story) 8.Comedy Moments – Sulu’s conversation with her husband on many occasions are so natural and entertaining. No separate comedian in this movie 9.Best of Direction – Managed to portray the Night RJ role of Sulu pretty decent. Even a small slip on that part would changed otherwise 10.The only thing which is cinematic is Sulu getting a RJ job. Didn’t know becoming RJ is that easy. In general, Mrs will love to watch such a close to heart subject – Not-to-Miss movie. Tumari Sulu….Hamari Sulu👍👍👍👍

தமிழ்ச்சுடர் – சமூக விருது

மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி & நடப்பு விவகாரப் பிரிவு முதன்முறையாக ஏற்பாடு செய்திருக்கும் “தமிழ்ச்சுடர் – சமூக விருது” வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலை Grand Copthorne Waterfrontஇல் நடைபெற்றது.

செம்பாவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவருமான திரு விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சிங்கப்பூர் நுண்கலைக் கழகம்(SIFAS) இசைக்குழுவினரின் இசையோடு 8:05 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. புல்லாங்குழல் இசையும், குழுவினரின் இசையும் சிறப்பான தொடக்த்தை அளித்தது.

திரு ந குணாளன், தலைவர், தமிழ்ச் செய்தி & நடப்பு விவகாரப் பிரிவு, மீடியாகார்ப், வரேற்புரையாற்றினார். இந்நிகழ்வு விருது வழங்குவதோடு முடியாமல் தமிழ்மொழி வாழும் மொழியாக இருப்பதற்கு விருதாளர்களுக்கு திட்டங்கள் செய்ய ஊக்கத்தொகை கொடுப்பதாகவும் குறிப்பிட்டார். ஈராண்டுக்கு ஒரு முறை தமிழ்ச் சுடர் விருது வழங்க இருப்பதாகவும் சொன்னார்.

அவரே சிறப்பு விருந்தினரை உரையாற்ற அழைத்தார். திரு விக்ரம் நாயர் தமிழ்
மொழி வளர்ச்சிக் குழுவின் திட்டங்கள் குறித்து பேசினார்.

அடுத்து திரு சபா முத்து நடராசன் எழுதிய தமிழ்ச் சுடர் சிறப்பு பாடலை திரு முகமது ரஃபி இசை அமைத்து பாடினார். பாடல் வரிகளும் இசையும் நன்று.

பின்னர் அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது.

விருந்து நடைபெறும்போதே விருதுகளும் அறிவிக்கப்பட்டு பின்னர் மேடையில் சிறப்பு விருந்தினரால் வழங்கப்பட்டது. விருதாளர்கள் ஒவ்வொருவரும் தமிழுக்கு ஆற்றிய பணிகள் குறித்த காணொளி காட்டப்பட்டது. விருது விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உஷாராணி மணியம் நடன பள்ளியின் நடனம் மிக அருமை. ஆடை அணிகலன்களும் அருமை. மாறுப்பட்ட படைப்பு.

தேசிய பல்கலைக்கழகத்திலிருந்து சரவணன் சண்முகம், இந்து இளங்கோவன் இருவரும் சேர்ந்து நடித்த நகைச்சுவை நாடகம் அனைவரையும் சிரிக்க வைத்தது. தமிழ்மொழி புழக்கத்தை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற செய்தியோடு நகைச்சுவை கலந்த அங்கத்தை படைத்த அவர்களுக்கு பாராட்டுகள்.

Kahoot.it இணையதளத்தில் அனைவருக்கும் புதிர்ப் போட்டி நடத்தப்பட்டது. நல்ல பல கேள்விகள் கேட்கப்பட்டன.

திரு சபா முத்து நடராசன் அவர்கள் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

ஆதரவாளர்களுக்கு சிறப்பு விருந்தினர் நினைவு பரிசு வழங்கினார்.

திரு முகமது ரஃபியின் “தங்கமே தமிழுக்கு…”, பாடல், ‘தமிழுக்கு அமுதென்று..’ என்ற பாடல்களுடன் நிகழ்ச்சி இரவு 10:47க்கு இனிதே நிறைவுற்றது. (பதிவு நேரம் 10:47😔😉)

திருமதி இலக்கியா சொல்வராஜி, திருமதி மீனா ஆறுமுகம் இருவரும் நிகழ்ச்சியை அருமையாக தொகுத்து வழங்கினர். மேடையில் மட்டுமில்லாமல் விருந்தினர்களிடைய நடமாடி தொகுத்து வழங்கியது மிகவும் அருமை.

கலைப்பிரிவில் இலக்கியமும் உண்டு என்று கூறப்பட்டாலும் கலைக்கு மட்டுமே வழங்கப்பட்டது. தயவு செய்து அடுத்த முறை இலக்கியத்திற்கு ஒரு தனி பிரிவு ஏற்படுத்துமாறு ஏற்பாட்டாளர்களை கேட்டுக்கொள்கிறேன். யாரும் இக்கலைப்பிரிவில் இலக்கியத்திற்காக விண்ணப்பிக்க வேண்டாம். அது கலைக்காக விட்டுவிடலாம். கலைச்சுடர் விருது பெற்ற இருவரும் அவ்விருதுக்கு மிகவும் தகுதியானவர்கள். அவர்கள் மட்டுமல்ல இன்றைய விருதாளர்கள் அனைவருமே விருதுக்கு தகுதியுடையவர்களே. விருதாளர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

இவ்வளவு செலவுசெய்து ஏற்பாடு செய்யப்பட்ட விருது நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட விருது மிக சிறிதாக, எளிமையாக கண்ணாடியில் செய்யப்பட்டிருந்தது. கொஞ்சம் பெரிதாக கண்ணைக் கவரும் வண்ணம் சிறப்பாக இருந்திருக்கலாம்.

அடுத்த முறை பிரிவுகளை மறுபரிசீலனை செய்யலாம். மொத்தத்தில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மிகுந்த ஈடுபாட்டுடன் இந்நிகழ்ச்சிக்காக உழைத்து சிறப்பாக நடத்திய ஏற்பாட்டுக்குழுவினர் அனைவருக்கும் என் பாராட்டுகள், நன்றி🙏

விருது பிரிவுகள்/ எண்ணிக்கை
——————————-
நூற்றுக்கும் மேலான விண்ணப்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10 அமைப்புகள் / நபர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
கீழ் கண்ட பிரிவுகளில் மொத்தம் பத்து விருதுகள் வழங்கப்பட்டன.

1.கல்வி – 3 விருதுகள்- தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பங்களித்த 3 பள்ளிகளுக்கு இளஞ்சுடர் விருது வழங்கப்பட்டது. அந்த பள்ளிகள் தமிழை மாணவர்களிடத்தில் கொண்டுசெல்ல எடுத்துக்கொண்ட முயற்சிகள் குறித்த காணொளி காண்பிக்கப்பட்டது.

1.கான்கார்டு தொடக்கப்பள்ளி
2.பார்ட்லி உயர்நிலைப்பள்ளி
3.உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்

2.கலை – 2 விருதுகள் – 1 தனி நபருக்கு, 1 குழுவிற்கு.

தனி நபர் பிரிவில் திரு சலீம் ஹாடிக்கு (நிகழ்ச்சிக்கு வர இயலவில்லை) கலைச்சுடர் விருது வழங்கப்பட்டது.

குழு பிரிவில் அவான்ட் நாடகக் குழுவிற்கு கலைச்சுடர் விருது வழங்கப்பட்டது.

3.மின்னிலக்கத் தொழில்நுட்பம் – 2 விருதுகள் – 1 தனி நபருக்கு, 1 குழுவிற்கு.

தனி நபர் பிரிவில் நவசுடர் விருது திரு மோகன் சுப்பையாவிற்கு வழங்கப்பட்டது. இவர் பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியின் தமிழாசிரியர்.

குழு பிரிவில் இவ்விருது கிரசண்ட் பெண்கள் பள்ளிக்கு வழங்கப்பட்டது.

4.இளம் சாதனையாளர் – 2 விருது

இளம் சாதனையாளருக்கான வளர் சுடர் விருது செல்வி ஜெயசுதா சமுத்திரன் அவர்களுக்கும் திரு செம்பியன் சோமசுந்தரம் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

5.வாழ்நாள் சாதனையாளர் – 1 விருது

வாழ்நாள் சாதனைக்கான செஞ்சுடர் விருது “சிங்கை செந்தமிழ்ச்செம்மல்” முனைவர் சுப திண்ணப்பன் ஐயா அவர்களுக்கு வழங்கப்பட்டது.

பார்வை 2017

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றம் நடத்தும் “பார்வை
2017” இந்தாண்டு தமிழ்மொழி விழாவின் மூன்றாவது நிகழ்ச்சி. வரும்
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 2ம் தேதி காலை மணி 11 முதல் மதியம் மணி 1:30 வரை
உட்லான்ட்ஸ் நூலக அரங்கில் நடைபெறுகிறது. ஐந்தாவது முறையாக "பார்வை"
நிகழ்ச்சியை அரங்கேற்றும் இவர்கள் தமிழ் மொழி விழாவுக்கு புதிய வரவு.

கடந்தாண்டு சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட 'பார்வை' நிகழ்ச்சி.
இந்தாண்டு "செங்குழல் சீவிய பத்தினித் தீ"(தலைப்பே கவித்துவமா இருக்கு,
ஆர்வத்தை தூண்டுகிறது) எனும் தலைப்பில், பாஞ்சாலி சபதத்தை மையப்படுத்தி
நடைப்பெற இருக்கிறது. இதுவும் முற்றிலும் மாணவர்களுக்காக மாணவர்களால்
நடத்தப்படும் நிகழ்ச்சி. இலக்கியத்தை தொழில்நுட்ப உதவியுடன் புதிய
கண்ணோட்டத்தில் மாணவர்களிடம் கொண்டு சொல்லும் நோக்கத்துடன் ஏற்பாடு
செய்யப்பட்டிருக்கிறது

மூன்று முக்கிய அங்கங்களுடன் அரங்கேற இருக்கும் இந்நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக
காணொளி போட்டி நடைபெறுகிறது. நீ ஆன் பலதுறை தொழில்நுட்பக் கல்லூரி,
தெமசக் தொடக்கக் கல்லூரி, தேம்பனீஸ் தொடக்கக் கல்லூரி என மூன்று குழுக்கள்
'பத்தினித் தீ பாஞ்சாலி', தர்மத் தலைவன்', 'சகுனியின சூழ்ச்சி' என்கின்ற தலைப்பில் 3
நிமிடம் காணொளியை திரையிடுகிறார்கள். சிறந்த படைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டு
பரிசுகள் கொடுக்கிறார்கள். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு நா
ஆண்டியப்பன் ஐயாவின் நாடக ஆக்கமான 'பாரதியின் பாஞ்சாலி சபதம்' புத்தகத்தை
அடிப்படையாக கொண்டு அந்த காணொளி தயாரிக்கப்பட்டிருக்கிறதாம்.

அடுத்து ஒரு பட்டிமன்றம். "வாழ்க்கையில் வெற்றி பெற சிறந்த வழி, தர்மமே!,
சூழ்ச்சியே!" என்ற தலைப்பில் நடைபெறுகிறது. 'தர்மமே' என்ற அணியில் சிங்கப்பூர்த்
தேசிய பல்கலைக்கழக மாணவர் அருள் ஓஸ்வின் மற்றும் நன்யாங் தொழில்நுட்ப
பல்கலைக்கழகத்தின் மாணவிகள் ஹஃபிஸா, ஐஸ்வர்யா தேவி பேசுகிறார்கள்.
'சூழ்ச்சியே' என்ற அணியில் திரு மன்னனை அய்யா(இது ஏதோ சூழ்ச்சி தான்:)) , திரு
சேவகன், திருமதி கிருத்திகா பேசுகிறார்கள். 45 நிமிடம் நடைபெறும் இந்த
பட்டிமன்றத்தின் நடுவர் திரு ரெ சோமசுந்தரம் ஐயா.

முக்கிய அங்கமாக பார்வையாளர் பங்கு பெறும் போட்டியும் உள்ளது. பாஞ்சாலி
சபதத்திலிருந்து 12 கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக திரையில் ஓடும். அதற்கான
விடையை நாம் நம் கைப்பேசியின் மூலமாக இணையத்தில் இணைந்து சமர்பிக்க
வேண்டும். 20 நிமிடம் நடைபெறும் இந்நிகழ்ச்சி தொழில்நுட்பத்தின் உதவியால்
விறுவிறுப்பாக நடைபெறும் என்று எதிர் பார்ககலாம். பார்வையாளர்கள் நல்ல தயார்
செய்துவிட்டு வர வேண்டும்.

இன்னொரு சிறப்பு அங்கம் ஒன்று உண்டு. அது என்னவென்று அங்கே வந்து
பார்க்கவும்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு
இராஜராம் பங்கேற்கிறார்.

நிகழ்ச்சி முடிந்தவுடன் எளிய சிற்றுண்டி வழங்கப்படும். அதனால் நிகழ்ச்சியில் கலந்து
கொள்ள விரும்புவோர் வெள்ளிக்கிழமைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள 'கூகிள்
ஃபார்ம்ஸ்' சுட்டியை சொடுக்கி முன் பதிவு செய்யவும். முடியாதவர்கள் சீக்கிரமாக
அரங்கத்திற்கு வந்து பதிவு செய்யவும். அப்பத்தான் அவர்கள் உணவு ஏற்பாடு செய்ய
வசதியாக இருக்கும்.

#தமிழ்மொழி_விழா_2017
#தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_முன்னோட்டம்
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்

https://goo.gl/forms/tRx2oAzKaL2mo97q2

பாண்டவர் தம் தேவியவள் பாதியுயிர் கொண்டுவர நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி, முன்னிழுத்து சென்றான்! 5 more days to PAARVAI 2017!! Our teams are all set to bring you a literary celebration like none other!Do register at the link with your family and friends to grab your seats NOW!#Paarvai2017 #TLF2017 Videography & Editing: @theoriginalrishihttps://docs.google.com/forms/d/1-mYk5Vz5nGcdqC2gF0IZDwVJz7g4acYlOgDnWNW7FDY/edit?usp=drive_web

Posted by NTU Tamil Literary Society on Monday, March 27, 2017

இலக்கிய நிகழ்ச்சி

இன்று "புறநானூறு குறித்து பேசுவதற்காக, புதிய சிந்தனைகளை உங்களுடைய இதய
நிலத்தில் விதைப்பதற்காக" திரு தமிழருவி மணியன் கலந்துகொள்ளும் இலக்கிய நிகழ்ச்சி.

செந்தமிழ்ச் செல்வர் வை திருநாவுக்கரசு புகழ் போற்றும் நிகழ்ச்சி.

கடந்த 30 தினங்களாக வெளியான "முத்திரை வரிகள்" படைத்த கற்பனைக்கு
சொந்தக்காரர்கள் இணையும் நிகழ்ச்சி.

கவிஞர்களை சிறப்பிக்கும் சிறப்பு நிகழ்ச்சி.

கவிதைக்கான களத்தினை கனிவாய் கொடுக்கும் கவிமாலையின் நிகழ்ச்சி.

"தமிழ்மொழி விழா 2017"யின் நிறைவு நிகழ்ச்சி.

இன்று(30-ஏப்ரல்- 2017), ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 6:00க்கு உமறுப்புலவர் அரங்கில்
தமிழில் ஓர் இனிய நிகழ்ச்சி.

அனைவரும் வருக! ஆதரவு தருக!

#தமிழ்மொழி_விழா_2017
#தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_முன்னோட்டம்
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்