பழங்களே மருந்து

லிஷா பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் ‘பழங்களே மருந்து’ என்ற ஒரு மறுபட்ட நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை, 8-ஏப்ரல் அன்று தேசிய நூலக வாரியத்தின் பதினாறாவது தளத்திலுள்ள ‘தி போட்’ மண்டபத்தில் நடத்தினார்கள்.

தமிழர் உணவின் பெருமையை பறைசாற்றும் வண்ணம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம்(சிங்கப்பூர்) கடந்தாண்டு நடத்திய விழாவில் “தமிழ் உணவுக்கும் அமுதென்று பேர்” என சிறப்புரையாற்றினார், மருத்துவர் கு சிவராமன்.
ஆனால் லிஷா பெண்கள் பிரிவிவன் நிகழ்வில், பழங்களை அதுவும் குறிப்பிட்ட தமிழ் பாரம்பரிய பழங்களை எடுத்துக்கொண்டு, அது நம் உடல்நலத்திற்கு எப்படி உதவும் என சொல்லப்போகிறார்கள் அதுவும் சரவணன் அய்யாவு என்ன சொல்ல போகிறார், அவருக்கு பழங்கள் குறித்த பரீட்சையம் இருக்குமா என யோசித்தேன். சரி நிகழ்வில் சென்று பார்க்கலாம் என முதன் முறையாக இவர்கள் நடத்தும் தமிழ்மொழி விழா நிகழ்ச்சிக்கு சென்றேன்.

வரவேற்புரையாற்றிய லிஷா பெண்கள் பிரிவின் தலைவி திருமதி Joyce Kingsly இந்நிகழ்ச்சியை தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது வடிவமைத்து, வளர்தமிழ் இயக்கத்துக்கு விண்ணப்பித்தாக குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியை நடத்த ஊரிலிருந்து கலைஞர்களை கூப்பிடலாமா என்ற யோசித்து, பிறகு உள்ளூர் கலைஞர்களை வைத்தே நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும் அதற்காக ஒரு பாட்டியை வரவழைத்திருப்பதாகவும் கூறினார்.

அந்தப் பாட்டி அரங்கத்தினுள் ‘என்ட்ரி’யானதே சிறப்பாக இருந்தது. அவர் உட்கார மேடையின் மேல் ஒரு குட்டி மேடையமைத்து அதில் சொம்பு, வெத்தலை பெட்டி, வெத்தலை பாக்கு இடிக்கும் உரல் என எல்லாம் வைத்து தூணில்லாத ஒரு சின்ன கிராமத்துத் தின்னையை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
லண்டனிலிருந்துவிட்டு சிங்கை வந்த பேரனும் பாட்டியுடன் இணைந்து கொண்டார்.

இருவரும் உட்கார்ந்து கொண்டு தங்கள் சொந்த கதைகளை பேசுவதுபோல பழங்களின் பெருமையை எடுத்துச் சொன்னது சிறப்பு. பேரனாக நடித்த சரவணன் அய்யாவு உட்கார்ந்து கொண்டே மிக இயல்பாக, சரளமாக பேசி, நகைச்சுவையுடன் படைத்தார். நிகழ்ச்சி நெறியாளரும் அவரே.

இந்த நிகழ்ச்சியின் கதாநாயகன், கதாநாயகி எல்லாம் அந்த பாட்டியாக நடித்த திருமதி வஜிதா ஹமீதுதான். மிக சிறப்பாக கிராமத்துப் பாட்டிக்கே உரிய மெய்ப்பாடுடன் அந்த கதாபாத்திரத்துக்குள்ளேயே சென்று வெளுத்து வாங்கினார்.

பழங்களையும் அதன் பயன்களையும் அழகாக தங்கள் ‘ஸ்கிரிப்ட்’டில் இணைந்து அதற்கேற்ப உரையாடல்களை அமைத்து மிக நேர்த்தியாக கொண்டு சென்றனர்.
அதுவும் பேசும்போதே அந்த வெத்தலையை எடுத்து மடித்து இடிப்பது போன்று செய்தது யதார்த்தமாக, கதைக்கு பலம் சேர்ப்பதாக அமைந்தது.

ஒவ்வொரு பழத்தை பற்றியும் கூறுகையில் சிங்கை பாடகர்கள் Nirmala Nimmi , Parasu கல்யாணும் அந்த பழங்கள் குறித்து ஒரு பாடல் பாடினார்கள். அந்த பாடலுக்கான வரிகளை நண்பர்கள் யாழிசை மணிவண்ணனும், கணேஷ் நாராயணனும் (நதிநேசன்) எழுதியுள்ளனர். ஆனால் ஏற்கனவே உள்ள பிரபல திரையிசைப் பாடல்களை ஒட்டி அதன் வரிகளை மாற்றி அதே மெட்டில் உட்காரும் வகையில் எழுதியிருந்தனர்.
இந்த பாடல்கள் அணைத்தையும் நல்ல பின்னணி இசைக் கலைஞர்களுடன் நேரடி இசையில் பாடியது சிறப்பு.

ஆனால், எனக்கு பெரிய வருத்தம் பாடகர்கள், பாடலாசிரியர்கள், ஏற்பாட்டாளர்கள் அவ்வளவு பேரின் உழைப்பும் அந்த அளவுக்கு அதிகமான இசை வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போய்விட்டதே என்பதுதான்.
கடைசி வரிசையில் இருந்த எனக்கு பாடல் வரிகளும் புரியவில்லை, அதனால் பழங்களின் பயன்களும் பிடிபடவில்லை, பாடகர்களின் இனிய குரல்களும் எடுபடவில்லை.
அடுத்த முறை இம்மாதிரியான நிகழ்ச்சியில் இசையை குறைத்து வரிகளை உயர்த்தி விஷயத்தை பார்வையாளர்களுக்கு கடத்துவதில் கவனம் செலுத்தினால் சிறப்பு. அடுத்து சினிமா பாட்டு மெட்டுகளில் பாடல்கள் இருந்ததால் அசல் வரிகளே மனதில் ரீங்காரமிட்டன.

நிகழ்வின் தொடக்கத்தில், நண்பர் Mathialaganனின் மகள் செல்வி இலக்கியா மதியழகன் மிக நேர்த்தியாக கிடார் இசைத்துக் கொண்டே கவிஞர் நெப்போலியனின் அழகான வரிகளை கொஞ்சம் உஷா உதுப், கொஞ்சம் அனுராதா ஶ்ரீராம் என கலந்து பாடியது சிறப்பு.

பழங்களை கொண்டு கண்ணுக்கு விருந்தாக அழகிய சிறிய மாதிரி பழக்காட்சி செய்யப்பட்டிருந்தது சிறப்பு.
பழங்களே நிகழ்ச்சியின் கருப்பொருளானதால், அன்றைய உணவும் பழங்கள் மட்டுமே. நாவல்பழம், அத்திபழம், சப்போட்டா பழம், இலந்தம்பழம் (கொட்டையுடன் இடித்து பக்குவப்படுத்தி சின்ன பாக்கெட்டில் கொடுத்தார்கள்), நெல்லிக்கனி, முள் சீத்தாபழம், மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் என முக்கனிகளுடன் மேலும் ஆறை சேர்த்து நவரச பழங்களை விருந்தினர்களுக்கு பரிமாறினார்கள். அதனுடன் குடிப்பதற்கு நார்த்தை சாறும் கொடுத்தார்கள். அனைத்தும் அருமை, இலந்தம்பழம் மிக அருமை.

அதில் முக்கியமான ஒன்று நல்ல பழங்களாக தேர்ந்தெடுத்து அதை அழகாக வெட்டி சாப்பிடுவதற்கு ஏதுவாக பரிமாறப்பட்டது பெண்கள் பிரிவு என்பதை எடுத்துக்காட்டியது:)

தமிழ் இலக்கியத்திற்கும் இந்தப் பழங்களுக்கும் உள்ள தொடர்பை சரியாக எடுத்துச்சொல்லவில்லை என நினைக்கிறேன் அல்லது சொன்னதை நான் கவனிக்கவில்லையா எனத் தெரியவில்லை. ஆனால் பழங்களுக்கான நிகழ்ச்சியில் பழங்காலத்தில் தமிழ்சமுதாயத்தில் இரண்டு மனைவிகள் உண்டு, திருக்குறளில் கூடா ஒழுக்கம், பிறன்மனை….குறித்து கூறப்பட்டுள்ளது, குறுந்தொகையில் கள்ளக்காதல் பற்றி கூறப்பட்டுள்ளது போன்ற நிகழ்ச்சிக்கு தொடர்பில்லா செய்திகளை தவிர்த்திருக்கலாம்.

சிறப்பு விருந்தினராக, செம்பாவாங் நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர் கலந்துகொண்டார். திரு விக்ரம் நாயருக்கும், வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு ராஜாராம் அவர்களுக்கும் பொன்னாடை, மாலை எதுவும் போடாமல் பழக்கூடைகள் கொடுத்து கௌரவித்தது மிகச் சிறப்பு. மற்ற அமைப்புகளும் மாலை, பொன்னாடைகள் தவிர்த்துவிட்டு பழக்கூடைகள் கொடுத்தால், சிறப்பு விருந்தினர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மொத்தத்தில் இந்நிகழ்ச்சி ஒரு மாறுப்பட்ட சிந்தனையில் உதித்த நல்ல முயற்சி.

#தமிழ்மொழி_விழா_2018
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்
#TLF2018

சிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும்

கவிமாலையின் ‘சிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும்’ வரிசையில் இரண்டாவது காணொளி கவிஞர் வி.இக்குவனம் ஐயாவை பெருமையை சொல்கிறது.

மறைந்த கவிஞர் வி. இக்குவனம் ஐயாவின் 27 நூல்களில் நான் தேர்ந்தெடுத்தது ‘காரம் இனித்திடுமே காண்’ என்ற நூல். இதில் 108 வெண்பாக்கள் புணைந்துள்ளார். 108 வெண்பாவின் ஈற்றடியும் ‘கார(ம்) இனித்திடுமே காண்’ என்றே முடியும்.

இதில் எனக்கு பிடித்த வெண்பா:

கைகட்டி நின்று கணக்கற்ற சேவைகள்
மெய்கூட்டிச் செய்ய விழைந்தாலும் – பொய்யெனவே
மாறி யுணர்ந்துவரும் வல்லாளர் சொல்லலங்
கார(ம்) இனித்திடுமே காண்.

ஆவணப்படம் : https://www.youtube.com/watch?v=exlmE-Q8yWs

படைப்புகளைப் படிக்க : http://kavimaalai.com/2018/03/kavignar-v-ikkuvanam/

கவிமாலை YouTube Channel : https://www.youtube.com/channel/UCfVz64TOzmi5-imdVy7jZLA

வாங்க பழகலாம் தமிழ்

பாலர் பள்ளி குழந்தைகளுக்கு சிண்டா(SINDA), லின் (LYNN – Literacy and Numeracy) என்ற வகுப்பு நடத்தி வருகிறது. குழந்தைகளுக்கு ஆங்கிலத்தையும், எண்களையும் ஒரு இனிய கற்றல் அனுபமாக சொல்லிக் கொடுத்து அவர்களை தொடக்கநிலை பள்ளிக்கு தயார்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

இந்த திட்டத்தை வசதி குறைந்த குடும்பங்களுக்கு அறிமுகப்படுத்தம் நோக்கத்துடன் இந்த திட்டத்தை எங்கள் பகுதியில் நடத்த
சட்டம், நிதி ஆகியவற்றுக்கான மூத்த துணையமைச்சரும், தஞ்சோங் பகார் குழுத்தொகுதியின் அடித்தள ஆலோசகருமான குமாரி இந்திராணி ராஜா கூறினார். அதனுடன் குழந்தைகளுக்கு தமிழும் சொல்லி கொடுக்க வேண்டும் என என்னிடம் அதற்கான திட்டத்தை தயார் செய்ய சொன்னார். கடந்த ஆண்டு மத்தியில் இத்திட்டத்திற்காக முயற்சிகளை தொடங்கினோம். சிண்டாவின் ‘லின்’ வகுப்புகள் மார்ச் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் முடியும் என்பதால் கடந்தாண்டு தொடங்க முடியாமல் போனது ஒரு காரணம். இந்தாண்டு கண்டிப்பாக தொடங்கி விடுவேன் என்று சொல்லியிருந்தேன்.

அதன்படியே, இன்றிலிருந்து பாலர் பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக தமிழ் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இதை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். காரணம், இதில் சில குழந்தைகள் பாலர் பள்ளிக்கு செல்லவில்லை. சிலர் வேறு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள். சிலர் வீட்டில் ,ஒருவர் மட்டுமே தமிழ் தெரிந்தவராகவோ இல்லை வீட்டில் சுத்தமாக தமிழ் பேசாதவர்களாகவுள்ள குடும்பங்களிலருந்து வரும் குழந்தைகள். பாலர்பள்ளியில் தமிழ் படிக்காதவர்களும் உண்டு. இவர்களுக்கு இலவசமாக தமிழ் சொல்லித்தரும் வகுப்பு நடத்துவதில் பேரானந்தம். தமிழ் படிக்காத, தெரியாத குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே தமிழ்மொழி மீது ஆர்வத்தை வளர்க்க வேண்டும். அதற்கான ஒரு நீண்டகாலத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதை தீவு முழுவதும் விரிவுப்படுத்தவேண்டும் என்பதே நோக்கம். அதன் மாதிரி வடிவம்தான் இந்த திட்டம்.

சரி, இது எப்படி சாத்தியமானது. நல்லவர்கள் நம்மை சுற்றி இருப்பின் நல்ல செயல்கள் செய்வது சுலபம். முதலில், “இருமொழியின் கற்றல் அவசியம், சிறு வயதிலேயே கற்றுக்கொடுத்தால்தான் மொழியை சுலபமாக கற்றுக்கொள்ள முடியும்” என தமிழ்சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்ய சொன்ன எங்கள் அடித்தள ஆலோசகர் குமாரி இந்திராணி ராஜாவுக்கு நன்றி. அதற்கான முழு சுதந்திரம் கொடுத்து ஆதரித்த எங்கள் இந்திய நற்பணி செயற்குழுவின் தலைவர் திரு கோபால், துணைத்தலைவர் திரு GanGanesan Kulandaiன் சமூகபணியில் வழிகாட்டியாக இருந்து இந்த திட்டத்திற்கு என் கூடவே பயணித்து ஆதரித்த RadRadhakrishnan Menon Sreelatha Menon்கிளுக்கு நன்றி. நான் இந்த திட்டம் தொடர்பாக என்ன உதவி கேட்டாலும் உடனிருந்து செய்த அனைத்து அடித்தள தலைவர்களுக்கும் நன்றி.

சரி, இப்படி ஒரு வகுப்பு நடத்த வேண்டுமே, எங்கே நடத்துவது என்று இடத்தை தேடியபோது குடியிருப்பாளர்களுக்கு மிக அருகில் உள்ள இடத்தை தேடினோம். ஜங்ட தொடக்கப்பள்ளியின் துணைத் தலைமை ஆசிரியரை சந்தித்து பேசினோம். உடனே ஒத்துக்கொண்டார்கள். அதில் சில நிபந்தனைகளும் உண்டு. பள்ளிக்கூட பைகள், தண்ணீர் பாட்டில்கள் கொண்டு வர வேண்டும். காலணிகள் அணிந்து வர வேண்டும் என்பது சில. அவற்றை எப்படி வாங்குவது என யோசித்த போது, எங்கள் ஆலோசகர் அதற்கும் ஏற்பாடு செய்தார்.

யாரை வைத்து பாடம் எடுப்பது என தெரியவில்லை. எனக்கு தெரிந்த நண்பர்கள், ‘பாடம் எடுக்கிறேன்’ என ஒப்புதல் அளித்த நண்பர்கள்கூட நாள், நேரம், இடம் இவற்றில் ஏதாவது ஒன்று அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் போக, மறுத்துவிட்டனர். உடனே ஒரு யோசனை தோன்றியது, நீ ஆன் பல்துறை தொழில்நுட்ப கல்லூரியில் பாலர் பள்ளி குழந்தைகளுக்கு தமிழ் கற்பிப்பதில் பட்டப்படிப்பு கடந்தாண்டு தொடங்கப்பட்டது. அதில் உள்ள மாணவர்களை வைத்து பாடம் எடுத்தால் என்ன? அவர்களுக்கும் இது ஒரு பயிற்சி களமாக இருக்கும் என அதில் முதலாண்டு முடித்திருக்கும் Naseemaவிடம் கேட்டேன். அவருக்கு இயலாத சூழ்நிலையை விளக்கிய அவர் உம்ராவிற்காக ஊருக்கு சென்ற இடத்திலும் அங்கிருந்தபடியே உடனடியாக தன்னுடன் பயிலும் நண்பர்களை அணுகி நான்கு பேரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர்கள் நால்வரும் உடனே தமிழ் சொல்லித்தர (தொண்டூழியராக) சம்மதித்தார்கள்.

சரி, இப்போ இடம் தயார், ஆசிரியர்கள் தயார். அடுத்து பாடத்திட்டம், பயிற்சிதிட்டம் இதை எப்படி தயார் செய்ய என நினைத்த போது, நமக்கு உதவியவர் திருமதி பத்மாவதி இராஜேந்திரன். சரஸ்வதி பாலர்பள்ளியில் 25 ஆண்டுகளாக பணியாற்றிய இவர் மூத்த தலைமையாசிரியராக இருந்தவர். அவரை சந்தித்து திட்டத்தை பற்றி கூறியவுடன் உடனே பாடத்திட்டம், குழந்தை பாடல்கள் என எல்லாம் தயார் செய்து எனக்கு அனுப்பி வைத்தார்.
கூடுதலாக ஒரு உதவி வேண்டும், வகுப்பு நடத்தவிருக்கும் மாணவ/ஆசிரியர்களுக்கு ஒரு பயிற்சி பட்டறை நடத்தவேண்டும் என கூறினேன். அதற்கும் ஒத்துக்கொண்டு, நான்கு ஆசிரிய-மாணவர்களுக்கும் எப்படி பாடம் எடுக்க வேண்டும், குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்ளலாம், அவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என தன் அனுபவத்தை விடுமுறை நாளாக இருந்தும் நேற்று காலை, மிக அழகாக பட்டறையில் விளக்கினார். அதை கேட்ட எனக்கே குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கலாம் என ஆசை வந்தது(இதை வீட்டில் வந்து என் மனைவியிடம் சொல்லி வாங்கிகட்டிக்கொண்டது என் பசங்களுக்கு தெரியவேண்டாம்:). அதோடு மட்டுமில்லாமல், இந்த தமிழ் வகுப்பு திட்டத்துக்கு திருமதி பத்மாவதி வழிக்காட்டியாகயிருந்து நடத்தித்தர சம்மதித்தார்.

அடுத்து புத்தகம். தன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என ஊருக்கு போன ஆசிரியர் GanGanga Baskaranம், குழந்தைகளுக்கு புத்தகம் வேண்டும் என சொன்னவுடன், அங்கிருந்த குறுகிய காலத்திலும், அந்த சூழ்நிலையிலும் எங்களுக்காக குழந்தைகளுக்கு பல புத்தகங்களை வாங்கி வந்தார். அவருக்கு நன்றி.

இந்த தமிழ் நிகழ்ச்சியை குறித்து அறிவிக்க துண்டறிக்கை தேவை என சிலரிடம் சொன்னேன். அவர்களுக்கு முடியாத சூழலில், நண்பர் Sethuraman Srinivasanன்னேன். உடனடியாக அவரே அழகாக வடிவமைத்து கொடுத்தார். சேதுவிற்கு நன்றி.

சரி, இப்போ எல்லாம் தயார். படிக்க பசங்க வேணுமே. வழக்கம் போல் வீடு, சந்தை, கடைகள் என எல்லா இடங்களிலும் சென்று மாணவர்கள் சேர்க்கைக்கு உதவிய அடித்தள தலைவர்கள் Achi Kumar MnVenkatesan Karthikeyini Sivakolunthu VenkatesanrJeremy AruldossnKannappan Mohan அனைவருக்கும் நன்றி. மூன்று மணி நேரம் தொடர்ச்சியா குழந்தைகள் பள்ளியில் இருக்க வேண்டுமே அவர்களுக்கு சாப்பிட, குடிக்க ஏதாவது கொடுக்க வேண்டுமே என்றபோது, அடித்தள தலைவர்கள் அனைவரும் நாமே இந்தாண்டு முழுவதும் அதை கொடுக்கலாம் என செலவை பகிர்ந்துகொண்டனர்.

மாணவர்களோடு, நானும் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என ஒரு வயதான அடித்தளத் தலைவர் சொல்ல, சரி கற்றுக்கொள்ளலாம் ஆனால் அப்படியே குழந்தைகளை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும், சரியாக அவர்கள் பெற்றோர்களிடத்தில் ஒப்படைக்க வேண்டும், அதற்கு உதவ முடியுமா என கேட்டவுடன் அவரும் ஒத்துக்கொண்டார்.

சரி, இதையெல்லாம் தாண்டி முக்கியமா நன்றி சொல்ல வேண்டியது சிண்டாவிற்கும்(SINDA), அதன் தலைமை நிர்வாக அதிகாரி திரு பரதன், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு, அதன் குடும்ப நலத்துறை அதிகாரி திருமதி ஜெயந்தி மற்றும் அவரது குழுவிற்கும்தான்.
இந்த திட்டம் குறித்து திரு அன்பரசுவை சந்தித்து பேசியபோது எனக்கு ஆதரவு கொடுத்து ஊக்குவித்தார். சிண்டாவும் இந்த மாதிரியான திட்டத்தை தயார் செய்து வருகிறது இருந்தாலும் முதலில் நீங்கள் தொடங்குங்கள் அதற்கு ஆதரவு அளிக்கிறோம் என்றார். திரு பரதனிடம் பேசியபோது தமிழ் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு, சிண்டா சம்பளம் வழங்க தயார் என தெரிவித்தார். இப்படி மாணவ-ஆசிரியர்களுக்கு ஊதியம், பட்டறை நடத்த மதிப்பூதியம், திட்டத்துக்கு ஆதரவு என திரு Anbarasu Rajendran தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்தி, உதவிகள் புரிந்து இந்த தமிழ்வகுப்பு நடத்துவதற்கு முக்கியப் பங்காற்றியிருக்கிறார் (தமிழில் சிண்டாவின் துண்டறிக்கை கொடுத்ததற்கும் நன்றி).

தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகள் தொடங்கிய இந்நாளில் தமிழ்மொழி கற்பிக்க அதுவும் தமிழ் தெரியாத சில குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தர நீண்டநாள் திட்டத்தை தொடங்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி. இதை சாத்தியப்படுத்தியவர்களை திரும்பி பார்க்கையில் இதில் எத்தனை பேர் பங்கெடுத்திருக்கிறார்கள் என ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது.

என் மீது நம்பிக்கை வைத்து அன்போடு ஆதரவளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி🙏🙏

   

       

          

 

தமிழ்மொழி விழா கொண்டாட்டம் 2018

தமிழ்மொழி விழா கொண்டாட்டம் இந்த வார இறுதியில் தொடங்கவிருக்கிறது. முதலில் இதை ஒருங்கிணைக்கும் வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவுக்கும் மற்றும் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்,இந்திய மரபுடைமை மையம், ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், கலைக் கூடங்கள், அமைச்சு, தேசிய நூலகம், மீடியாகார்ப், ஒலி 96.8, தமிழ் முரசு மற்றும் சமூக ஊடகங்கள் என ஒரு மாதம் நிகழ்வை நடத்தவிருக்கும் அனைவருக்கும் நம் வாழ்த்துகள், பாராட்டுகள், நன்றிகள்🙏🙏🙏

தமிழ்மொழி விழா தொடக்க நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 1ஆம் தேதி மீடியாகார்ப் வளாகத்திலுள்ள எம் ஈ எஸ் அரங்கில் மாலை நடைபெறுகிறது.

இந்த ஆண்டு மொத்தம் 58 நிகழ்ச்சிகள். கடந்தாண்டை காட்டிலும் 7 நிகழ்ச்சிகள் அதிகம். இந்தாண்டு இசை,நாடக,நாட்டிய நிகழ்ச்சிகள் கூடுதலாக உள்ளன. இவை இளையர்களை, மாணவர்களை மட்டுமில்லாமல் கலை ஆர்வமுள்ள பலரையும் ஈர்க்கும்.

புதிதாக பலதுறை தொழிற் கல்லூரி நடத்தும் 2 நிகழ்ச்சி, 2 முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்தும் நிகழ்ச்சி, இசைப் பள்ளிகள் நடத்தும் நிகழ்ச்சி என பத்துக்கும் மேற்பட்ட புதிய நிகழ்ச்சிகள் இந்தாண்டு அட்டவணையில் இடம்பிடித்துள்ளன. தொடர்பு, தகவல் அமைச்சு & கல்வி அமைச்சு நடத்தும் மொழிபெயர்ப்பு முகாம் ஒன்றும் உள்ளது. இவை பயனுள்ளதாக அமையும் என நினைக்கிறேன். TED Talk என்ற பல்வேறு துறைகளிலிருந்து பல தலைப்புகளில் பேசப்பட்டு அது காணொளி மூலம் உலகமெங்கும் சென்றடைய நடத்தப்படும் நிகழ்வு போன்று தமிழில் இந்தாண்டு இரண்டு நிகழ்ச்சிகள் உள்ளன. தமிழர் பேரவையின் ‘உரைக்களம்’ , என்டியு முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்தும் ‘இளவேனில்’. நிகழ்வை காணொளியாக்கி வெளியிடுவார்கள் என நினைக்கிறேன். இதே போல் ‘டோஸ்மாஸ்ட்ர்ஸ் இண்டர்நேஷனல்’லின் தமிழ் பேச்சாளர் மன்ற போட்டிகள் என தமிழ் மேடை பேச்சை மேம்படுத்தும் நிகழ்வுகளும் உள்ளன. இது தவிர மாணவர்களுக்காக மட்டுமே நடத்தப்படும் நிகழ்ச்சிகள் ஒன்றிரண்டு கூடியுள்ளன. இலக்கிய விழாக்களில் பெரிய மாற்றங்கள் இல்லை. வழக்கமாக தமிழ்மொழி விழா முடிந்த அடுத்த நாளான மே 1ஆம் தேதி நடைபெறும் பட்டுக்கோட்டையார் நிகழ்ச்சி இம்முறை தமிழ்மொழி விழாவுக்கு புதிய வரவு, மே 1ஆம் தேதியும் நடைபெறுமா என்று தெரியவில்லை. இணையத்தில் மட்டுமே நடக்கும் நிகழ்வாக ஏப்ரல் 1ம் தேதி முதல் 30ஆம் வரை தமிழ் கவிதைகள் எழுதும் நிகழ்வும் இளையரால் நடத்தப்படுகிறது.

நிகழ்ச்சி அட்டவனையில் இந்த முறை நான் வழக்கமாக செல்லும் பல நிகழ்வுகளுக்கு செல்ல முடியாத ஒரு சூழ்நிலை.
திருக்குறள் விழாவும், என்டியு மாணவர்களின் ‘பார்வை 2018’ நிகழ்வும் ஒரே நாள், ஒரே நேரம்.
ஏப்ரல் 7ஆம் தேதி காலை 4 நிகழ்வு, அதில் என்யுஎஸ் மாணவர்களின் நிகழ்வும் ஒன்று. அன்று வேறு ஒரு முக்கிய நிகழ்வு இருப்பதால் எதற்கும் செல்ல முடியாது.
அன்றைய தினம் மாலை சொற்களம், முத்தமிழ் விழா இரண்டும் உள்ளன. எதை தேர்வு செய்ய எனத்தெரியவில்லை.
ஏப்ரல் 8ஆம் தேதி மாலை தமிழர் திருநாள், திரு எம் இராமசந்திரனின் பட்டிமன்றம். நண்பருக்காக நம் தேர்வு பட்டிமன்றம்தான்.
ஏப்ரல் 14ஆம் தேதி காலை ஒரே வளாகத்தில் இரண்டு நிகழ்ச்சி, அதனால தப்பிச்சோம். இரண்டையும் மாத்தி மாத்தி பார்க்கலாம் 🙂
ஏப்ரல் 15ஆம் தேதிக்கு பிறகு நிகழ்ச்சியில் அதிக நேர மோதல்கள் இல்லை என்பதால் எனக்கு தேர்ந்தெடுப்பது சுலபமே.

ஒரே மாதத்தில் அதுவும் வார இறுதியில் மட்டும் 58 நிகழ்ச்சிகளுக்கு நேரம் ஒதுக்குவது என்பது மிக கடினமே. என்னுடைய ஒரே வருத்தம் இந்த முறை என்டியு, என்யுஎஸ் நிகழ்வுகளுக்கு செல்ல முடியாமல் போனதே.

வழக்கம் போல் இந்த ஆண்டும் தமிழ்மொழி விழா சூறாவளி சிங்கையின் மத்திய பகுதியில் குறிப்பாக உமறுப்புலவர் நிலையத்தில் மய்யம்(!) கொண்டுள்ளது. தமிழ்மொழி மாதத்தில் 21 முறை அங்கு பலத்த காற்றுடன் கூடிய தமிழ் மழை பெய்யும். அதை சுற்றி 3 மைல்களுக்குள்ள பகுதிகளான இந்திய மரபுடைமை நிலையத்தில் 8 முறையும், தேசிய நூலகத்தில் 6 முறையும், குட்டி இந்தியா வட்டாரத்தில் 4 முறையும் இடியுடன் கூடிய தமிழ் மழை பெய்யும். இரு முறை வடக்கு நோக்கி நகர்ந்து அங்கு கருணை மழை பொழிந்துவிட்டு பின்னர் கிழக்கிலும் ஒரு முறை பொழியும். ஆங்காங்கே தீவின் மற்ற பகுதியில் ஒரு சில முறை பெய்யும் தமிழ் மழை மற்ற ‘மேடான’ பகுதியில் வாழும் தமிழர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என இருந்திடவிடாமல், மழை பெய்யும் மற்ற இடங்களுக்கு சென்று தமிழ் மழையில் நனையுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறீர்கள். மாதக் கடைசியில் முடிந்துவிடும் இச்சூறாவளி நமக்கு அடுத்த ஓராண்டிற்கான தமிழ் தாகத்தை தீர்த்து வைக்குமா என்று பார்க்கலாம்:)

தமிழ்மொழி மாதத்தில் வளர்தமிழ் இயக்கத்தின் இந்த ‘தமிழ்மொழி விழா 2018’ நிகழ்வுகள் தவிர்த்து வேறு தமிழ் நிகழ்வுகளை ‘தமிழ் மொழி விழா’ என்று தலைப்பிட்டு நடத்தி அங்கு செல்ல இருப்பவர்களை குழப்பாமல் இருந்தால் நன்றாக இருக்கும். மற்ற தமிழ் நிகழ்வுகளை குறைத்து நாம் எல்லோரும் ‘தமிழ்மொழி விழா 2018’ நிகழ்வுகளுக்கு சென்று ஆதரவு தெரிவிப்போம்.

வகைப்படுத்தப்பட்ட நிகழ்வு விவரம்
————————————————-
பல்கலைகழக மாணவர்கள்/ பலதுறை தொழிற் கல்லூரி நடத்தும் நிகழ்ச்சி
1. பார்வை 2018(3)
2. களம் (11)
3. என்ன செய்யலாம் (30)
4. ஜிங்கிள் ஜிகிள் (33)

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் பள்ளி நிகழ்ச்சிகள்
1. கிழக்குக் குழுமம் 5 நடத்தும் தமிழ்மொழி விழா 2018
2. இராஃபிள்ஸ் தமிழ் இலக்கியப் போட்டிகள்
3. 30ஆம் புகுமுக வகுப்புகளுக்கான தமிழ்மொழி இலக்கியக் கருத்தரங்கு
4. தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் – கற்றதும் பெற்றதும்

மாணவர்களுக்காக மட்டுமே நடத்தும் நிகழ்ச்சி/போட்டிகள்
1. பரமபதம் (1)
2. மாகோ – தேசிய தமிழ் கதைசொல்லும் போட்டி(6)
3. இயற்கையோடு பயணம்(7)
4. சித்திரம் பேசுதடி (9)
5. பாடல், ஆடல், விளையாடுதல் மூலம் தமிழ்மொழி வளர்ச்சியை மேம்படுத்தும் பட்டறை (10)
6. சொற்களம் 2018(12)
7. சொல், சொல்லாத சொல் (20)
8. வாங்க தமிழில் பேசலாம்(21)
9. வண்ணத்தமிழ் 2018(32)
10. உரைக்களம் (34)

தொழில்நுட்ப, தொழில்/நிதி, மொழி சார்ந்த கற்றல் நிகழ்ச்சிகள்
1. மின்னியல் தமிழ் – புத்தாக்க அணுகுமுறை (22)
2. தமிழ் மொழிபெயர்ப்பு முகாம் 2018 (43)
3. தொழில் தொடங்குவதும் நிதிப் பற்றிய ஆலோசனைகளும்(44)
4. தமிழ் மின்னிலக்க கற்றல் பயிலரங்கு (மரபுடைமை நிகழ்ச்சிகள் 2)

இலக்கிய விழாக்கள்
1. திருக்குறள் விழா (4)
2. முத்தமிழ் விழா (13)
3. உலகம் உன்னுடையது (23)
4. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டுப் போட்டி 2018(26)
5. இன்பத் தமிழும் இளைய தலைமுறையும்(27)
6. இளம் பிறை (28)
7. பாவேந்தர் 128 – சுழலும் சொற்போர்(31)
8. உமறுப் புலவர் அரங்கம் (35)
9. தமிழர் அறிவியல் (36)
10. தமிழவேள் விழா(38)
11. பர்வீன் சுல்தானா வழங்கும் ‘வெற்றி கொடிக் கட்டு’(40)
12. கவிமணம் (41)
13. கவிதைத் திருவிழா (48)

தமிழ் நாடகங்கள்
1. ஆர்ட்டதோன் (நாடக போட்டி) (2)- $5
2. ஔவையார் (5) – $25 /$15(early bird)
3. சிங்கப்பூர் மாப்பிள்ளை (29)- $15
4. ஜிங் ஜக் நாடகம் (39)
5. பீடம்-(42) (இலவசம்)
6. தமிழும் கலையும் – இயல், இசை & நாடகம் 2018(46)

இசை/நாட்டியம்
1. மழலையும் பாரதியும் (8)
2. குறுந்தொகை -இசை நிகழ்ச்சி(18)
3. இசை வழி கல்வி (19)
4. தமிழும் இசையும் (24)
5. கண்ணதாசன் ஒரு சகாப்தம் (37)
6. மன்னும் மகளும் – கண்ணகி வாழ்வில் ஐந்தினை – நாட்டிய நாடகம் (45)
7. கவியும் நாட்டியமும் (49)

பொழுதுபோக்கு/மற்ற நிகழ்ச்சிகள்
1. பழங்களே மருந்து(14)
2. தமிழர் திருநாள் விழா (15)
3. பட்டிமன்றம் (16) – $10
4. தமிழும் சுவையும் (17)
5. இளவேனில் (25)
6. தமிழ் பேச்சாளர் மன்றப் போட்டிகள் (47)
7. பொறுப்பாளர் சுற்றுலா: சின்னங்களும் வரி வடிவங்களும் – கைவினையின் மொழி (மரபுடைமை நிகழ்ச்சிகள் 1)
8. நகைச்சுவை பயிலரங்கு (மரபுடைமை நிகழ்ச்சிகள் 3)
9. குறும்படம் திரையிடல் (மரபுடைமை நிகழ்ச்சிகள் 4)

முகநூலில் கவிதை எழுதும் நிகழ்வு
1. சிங்பொரிமோ – தமிழ்(50)

பங்கு பெறும் வெளியூர் பிரபலங்கள் (எனக்கு தெரிந்த வரை)
1. முனைவர் பர்வீன் சுல்தானா (இரு முறை)
2. திரு இறையன்பு ஐஏஎஸ்
3. இயக்குனர் விசு
4. திரு ஜி விஸ்வநாதன்
5. கவிஞர் சிற்பி
6. திரு பாரதி கிருஷ்ணகுமார்
7. திரு பாண்டித்துரை (இரு முறை)
8. பேராசிரியர் எம் இராமச்சந்திரன்
9. திரு கே சிவகுமார்
10. திரு மோகனசுந்தரம்
11. பாடகர் வீரமணி ராஜூ
12. திரு ஆளுர் ஷா நவாஸ்

பி.கு: தகவல்கள் சில முழுமை பெறாமல் இருக்கலாம்.

#TLF2018

www.tamil.org.sg

வேலைக்காரன்

கருத்து கருத்து கருத்து…..படம் முழுக்க ஒன்லி கருத்து.
சிவகார்த்திகேயனின் சிறந்த நடிப்பு, மக்களை ஈர்க்கும் நல்ல கதைக் கரு, மனதில் பதியும் நறுக்கென்ற வசனம், நயன்தாரா என்ற மந்திரச் சொல்(!) இருந்தும் படம் சோபிக்கவில்லை.

படத்தை பாதிக்கு மேல் ‘லாஜிக்’ தின்றுவிடுகிறது. ஒரு தொழிலாளி CEO ஆவது, குரு நண்பனாவது, 12 மணிக்கு ஊரே விளக்கு போடுவது, எல்லோரும் சிவகார்த்திகேயனின் வானொலி பேச்சை மட்டும் எப்போதும் கேட்டுகொண்டிருப்பது, முதலாளி தொழிலாளியாய் கடைசி வரை யாருக்கும் தெரியாமல் நடிப்பது, பல நிறுவன தொழிலாளர்கள் ஒன்றாக இணைவது, ஒரு நிறுவனத்தின் பொருளை சாப்பிடும் பலரில் ஒரு குழந்தை மட்டும் இறப்பது…..இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்.

நல்ல வேளை நயன்தாராவுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் காதல் மலர்வதை விலாவாரியாக காண்பிக்காமல் போனார்கள். நயன் காதல் காட்சிகளில் முடிந்தவரை சிவாவை தொடாமல் நடித்திருக்கிறார். ரோபோ சங்கருக்கு ஏதும் கால்ஷீட் பிரச்சனையா என்று தெரியவில்லை, ஆள் திடீரென காணாமல் போய்விடுகிறார். பிரகாஷ்ராஜ் ‘டம்மி வில்லன்’னாக வருகிறார். நம்ம புன்னகை இளவரசி ஸ்னேகா சோகத்தை புழிந்து கொடுக்கிறார்.

சம்பந்தமில்லாமல் ஒரு டூயட் பாடல், போடணுமே என்று போட்டிருக்கிறார்கள். பாடலில் கீழே உள்ள ஆங்கில ‘சப் டைட்டில்’ பார்த்து பல வரிகளை புரிந்துகொள்ள வேண்டிய சூழ்நிலை. ஒரு பாடலும் நம்மை ஈர்க்கவில்லை. எடிட்டிங்கும் சொதப்பல். ஒளிப்பதிவு பரவாயில்லை. இயக்கம் சுணக்கம்.

சிவகார்த்திகேயன், தன் நண்பனின் இறுதி ஊர்வலத்தில் ஆடும் நடனத்திற்கு நிறைய உழைத்திருக்கிறார். தன் வீட்டிற்கு ‘stabilizer’ விற்க வரும் விற்பனையாளரிடம் பேசும் வசனங்கள், யதார்த்தை விளக்கியது. அந்த சித்தாந்தம் நிர்வாக மேலாண்மை படிப்பில் வரும் பாடத்திலிருந்து எடுத்து எல்லாரும் புரியும் வகையில் கையாளப்பட்டிருக்கிறது. மருத்துவர் கு சிவராமன் ஒரு காட்சியில் வந்து கருத்து சொல்கிறார். இப்போது கதை என்னவென்று உங்களுக்கு புரிந்திருக்கும். படம் முதலிருந்து கடைசிவரை ஒரே மாதிரி ‘சீரியஸாக’வே இருப்பது திரைக்கதை ஓட்டத்தின் பெருங்குறை.

சிவகார்த்திகேயன், வளர்ந்து வரும் சிறந்த நடிகர். இப்போதிருக்கும் இளம் கதைநாயகர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர். தன் உழைப்பால், திறமையால் நம் கண்முன்னே முன்னேறியவர். நல்ல கருத்துள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது சிறப்பு, ஆனால் அதை மக்களுக்கு, அவர்களுக்கு பிடித்த வகையில் கொண்டு சேர்ப்பது மிக அவசியம். அதை அறிந்து கொண்டால் வெற்றிபெறலாம். ஆனால் இந்த முறை வேலைக்காரன், ‘அப்ரென்டிஸ்’ஸாகவே (apprentice) இருக்கிறார்.