இலக்கிய மன்றத்தின் 57வது ஆண்டு விழா

ஏப்ரல் 9ஆம் தேதி மாலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் மாதவி இலக்கிய
மன்றத்தின் 57வது ஆண்டு விழாவும் 37வது தமிழர் திருநாள் விழாவும் இருபெரும் விழாவாக
ஒன்றாக நடைப்பெற்றது. "வாழ்க தமிழ்மொழி" என்ற தமிழ் வாழ்த்து பாடப்பட்டது.
பாரதியாரின் இப்பாடலை டாக்டர் சௌந்தர நாயகி வைரவன் பாடினார்.

அடுத்தாக குழந்தைகளின் நாட்டியம், கும்மியாட்டம், பாடல்கள், பல்லினத்தை பிரதிபலிக்கும்
நடனம் என களைகட்டியது.
மலாய் குழுவினரின் நடனம் மிக நளினம், பாடலும் அருமை.

புரவலர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. யாரும் மேடைக்கு
அழைக்கப்படவில்லை, பொன்னாடைகள் இல்லை. குரல் வழி இரு முறை, தொடக்கத்திலும்,
நிகழ்ச்சியின் மத்தியிலும் 'ஆடியோ' ஒலிக்கச் செய்து நன்றி தெரிவித்தது பாராட்டுக்குரியது.

மணிமாறன் குழுவினரின் நடனம் வழக்கம் போல் நேர்த்தியாக இருந்தது.

மேடையில் இருபது இசைக் கலைஞர்களுக்கு மேல் அமர்ந்து 'குறையொன்றுமில்லை',
'சங்கமம்' இரண்டு பாடல்களையும் இசை கருவிகள் மூலம் இசைத்தனர். மிக சிறப்பாக
இருந்தது. ஒலிவாங்கி(microphone) இருந்திருந்தால் 'effect' இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
(இக்குழு யூனிட்டி உயர்நிலைப் பள்ளியின் இசைக்குழு என்று நினைக்கிறேன்)

குறிப்பிட்ட நேரத்தில் கிட்டதட்ட 25க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த வேண்டிய
அவசரமோ என்னமோ தெரியவில்லை மேடையை விட்டு இசைக்குழுவினர்
விடைபெறுவதற்கு முன்னதாகவே நிகழ்ச்சி தொகுப்பாளர் அடுத்த அறிவிப்பை செய்தார்.
அடுத்த குழுவும் மேடைக்கு வந்துவிட்டார்கள். அது நாம் கலைஞர்களுக்கு கொடுக்கும்
மரியாதை அல்ல, தவிர்த்திருக்கலாம்.

நிதானமாக, மிகவும் தெளிவான உச்சரிப்போடு அழகாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்
திருமதி அபிராமி அன்று கொஞ்சம் பதட்டமாக காணப்பட்டார்.

டாக்டர் சௌந்தர நாயகி வைரவன் தன்னுடைய 'சிங்கப்பூரில் தமிழ்' என்ற ஒலிவட்டிலிருந்து
'தமிழ் எங்கள்…' என்ற பாடலை நன்றாக பாடினார்.

டாக்டர் பாக்யமூர்த்தி தன் மாணவிகளுடன் சேர்ந்து இரு பாடல்களை சிறப்பாக பாடினார்.

பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், "உங்களுக்குத் தெரியுமா" என்று தமிழின் பெருமையை
அழகாக எந்தவித குறிப்புமின்றி ஒவ்வொருவராக எடுத்துச்சொல்ல அதை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்து சொன்னார் ஒரு மாணவி. ஆனால், அதில் சொல்லப்பட்ட சில விஷயங்கள்
'WhatsApp Forward'களை அடிப்படையாக வைத்து சொல்லப்பட்டவைகள் போல தெரிந்தது.
அதற்கு சான்றுகள் உள்ளனவா என்று தெரியவில்லை. குழந்தைகள் நன்றாக பேசினர்
அவர்களுக்கு தயாரித்து கொடுத்தவர்கள் சரியான தகவல்களை கொடுத்தார்களா என்று
தெரியவில்லை. அமைச்சரின் முன்னால் நம் பெருமையை பேசும்போது கவனம் தேவை.

திருமதி சுந்தரி சாத்தப்பன் இரு குழந்தைகளுடன் சேர்ந்து இரண்டு பாடல்கள் பாடினார்.
'அமுதே தமிழே…' பாடல் அற்புதம். இவர் ஒரு சிறந்த பாடகர். இவரின் சில பாடல்களை நான்
கேட்டுள்ளேன். அமைதியானவர், ஆர்பாட்டம் இல்லாதவர். இவர் மேலும் உச்சம் தொட
வாழ்த்துகள்.

திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் திரு அனு மோகன் சிறப்புரையாற்ற
அழைக்கப்பட்டார். அவர் பேச தொடங்கிய சில நிமிடங்களில் வெளியிலிருந்து மேளதாள
சத்தம் உள்ளே கேட்க, அவர் கொஞ்சம் யோசித்தார். ஆனால் நமக்கு தெரியும், வெளியே
சிறப்பு விருந்தினர் வந்திருக்கிறாரென்று. சில வினாடிகளில், நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு அனு
மோகனிடம் இருந்து ஒலிவாங்கியை வாங்கி அனைவரையும் எழுந்துநின்று சிறப்பு
விருந்தினரை வரவேற்குமாறு வேண்டுகோள் விடுத்தார். என்ன நடக்கிறது என்று சற்றும்
பிடிபடாமல் அனு மோகன் மேடையில் ஒலி வாங்கி பக்கம் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரு டெஸ்மண்ட் லீ, மூத்த துணை
அமைச்சர், உள்துறை அமைச்சு, தேசிய வளர்ச்சி அமைச்சு, அவைத் துணைத் தலைவர்,
அவர்களை அரங்கத்தின் நுழைவாயிலேயே சிறப்பு செய்து சீன, மலாய், தமிழ் என்று மூன்று
வித மேளதாளத்துடன் உள்ளே அழைத்துவந்தனர்.

அரங்கத்தின் இடதுபுறத்தில் உள்ள வாசல் வழியாக உள்ளே வந்த நேராக வலதுபுறம் சென்று,
அந்த வழியாக மேடையில் ஏற வைத்து, நடுவில் வந்த அனைவருக்கும் கை அசைத்து
வணக்கம் சொல்லி, இடதுபுறம் வழியாக கீழே இறங்க வைத்து மீண்டும் வலதுபுறம் சென்று
அமரவைக்க, படையப்பாவில் சூப்பர் ஸ்டாரை வியந்து பார்ப்பதை போல அனு மோகன்
மேடையில் ஒலிவாங்கி பக்கம் நின்று கொண்டு இருந்து வியந்து பார்த்துக்கொண்டிருந்தார்.
மீண்டும் பேச்சை தொடரலாமா என்று அனுமதி பெற்று தொடர சிறுது நேரத்திலே 'ஐந்து
நிமிடத்தில் பேச்சை முடிக்கவும்' என ஒரு துண்டு சீட்டு அவரிடம் கொடுக்கப்பட்டது.

அப்படியே, கடந்தாண்டு பார்த்த காட்சி திரும்ப 'Re-play' பண்ணது போல் கண்களில்
பளிச்சிட்டன. கடந்தாண்டு பாதிக்கப்பட்டவர், திரு கரு பழனியப்பன். என்ன, அப்ப
தொடர்ந்து பேசியதால் நாமும் பாதிக்கப்பட்டோம். இங்கே அனு மோகன் உடனே பேச்சை
முடித்து விட்டார், தப்பித்தோம்.

சிறப்பு விருந்தினர், அதுவும் ஒரு அமைச்சரை வரவேற்க செய்த ஏற்பாடு அருமை, அதில்
மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அமைச்சரை மேடையில் வலம் வர வைத்ததை
தவித்திருக்கலாம். மேடையில் ஒரு சிறப்பு பேச்சாளர் பேசும்பொழுது இந்த மாதிரியான
நிகழ்வுகள் நடக்காத வண்ணம் அவருடைய பேச்சை பிறகு வைத்திருக்கலாம் அல்லது
முன்னரே வைத்திருக்கலாம்.

மாதவி இலக்கிய மன்றத் தலைவர், டாக்டர் என்.ஆர். கோவிந்தன் தனது உரையில்
அமைச்சருக்கும் தனக்கும் உள்ள அறிமுகத்தை எடுத்துச் சொன்னார். மேலும், தமிழவேள் கோ
சாராங்கபாணி தொடங்கி வைத்த தமிழர் திருநாள் விழாவை தொடர்ந்து பல ஆண்டுகளாக
தான் நடத்தி வருவதை குறிப்பிட்டு எதிர்காலத்தில் இதை நடத்த மாதவி இலக்கிய மன்ற
இளையர்கள் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
73 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கும் மாதவி இலக்கிய மன்ற தலைவருக்கு எல்லோருக்கும்
வாய்ப்பு கொடுக்க வேண்டும், நிறைய மாணவர்களை மேடையேற்ற வேண்டும் என நல்ல
உள்ளம் கொண்டவர். சிறியதாய் ஏதும் முயற்சி எடுத்தாலும் அவர்களை முதலில் பாராட்டும்
பெரிய மனதுக்கு சொந்தக்காரர்.

இவருடைய நிகழ்ச்சிக்கு எல்லா அமைப்பு தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் வந்து
விடுவார்கள்.

அமைச்சர் தன்னுடைய உரையில், பல்வேறு இனங்கள் வாழும் நாட்டில் பிரச்சனைகளே
பெரிதாக இருக்கும் ஆனால் சிங்கையின் பலமே பல்லின சமுதாயம்தான் என்று குறிப்பிட்டார்.
தனது ஒரு பகுதியின் உரையை தமிழில் எழுதிவைத்து பேசினார். அந்த முயற்சி
பாராட்டுக்குரியது.

திரு பாண்டி துரைக்கு இந்தாண்டுக்கான களம் மாதவி இலக்கிய மன்றம். ஆனால்
கொடுக்கப்பட்ட நேரமோ 45 நிமிடம் தான். அதிலும் பலர் அரங்கத்தை விட்டு
சென்றிருந்ததால் அவர் கொஞ்சம் தயக்கம் காட்டினார். ஆனால் பிறகு சிறிது நேரத்தில்
அப்பப்ப சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் உள்ளே வந்து கொண்டிருந்தனர். திரு
பாண்டி துரைக்கு இடையிடையே அரங்கத்தில் நடந்து கொண்டிருந்திருப்பது பிடிக்காது. ஒரு
இலக்கிய பேச்சுக்கு அந்த இடையூறுகள் இல்லாமல் இருப்பதே சிறந்தது. இதற்கிடையே ஒரு
சில நகைச்சுவைகள், கம்பன், கண்ணதாசன் என்று முடிந்தவரை இருக்கிறவர்களை தன்
வசப்படுத்த முயற்சி செய்தார்.

கீழே உள்ள மூன்று விஷயங்களை சில எடுத்துக்காட்டுகளோடு விளக்கினார்.
1.அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
2.ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.

3.உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.

சிலப்பதிகாரத்தை, மூவேந்தர்கள் குறித்தும் பேசும், முத்தமிழையும் கொண்டிருக்கும் மக்கள்
காவியம் என்றார். மாதவியின் பெருமைகளை கூறும் போது தன் குலத்தொழிலை தானும்
செய்யாமல் மணிமேகலையும் செய்ய விடாமல் புரட்சி செய்தார் என்றும் மணிமேகலையை
கண்ணகியின் மகள் என்று சொல்லும் பெருந்தன்மையோடு இருந்ததாக குறிப்பிட்டார்.
மேலும், மாதவியின் அன்னை தான் கோவலனின் கனையாழி காண்பித்து சொத்தை
அபகரித்தார் பின்னர் அதை மாதவி திரும்ப கொடுத்தார் என பல செய்திகளை சுவாரஸ்யமாக
சொன்னார்.

இறுதியில் சிலப்பதிகாரம் என்னும் சிறப்பான காவியத்தை பேச 45 நிமிடம் போதாது
என்பதை தெரியப்படுத்தினார், திரு பாண்டி துரையின் சங்கடங்களை புரிந்து கொண்டு
மீண்டும் அடுத்த ஆண்டு அவரையே சிறப்பு பேச்சாளராக அழைக்க முடிவெடுத்திருப்பதாக
மேடையில் அறிவிக்கப்பட்டது.

திரு அனுமோகன் அவர்களுக்கும், திரு பாண்டித்துரை அவர்களுக்கும் நினைவு பரிசு
வழங்கப்பட்டது.

பின்னர், மாணவர்களை நினைவு பரிசு பெற்றுக்கொள்ள வரச் சொன்னார்கள். ஆனால்,
மாணவர்கள் பெயர்களை அறிவிக்கவில்லை. அப்போது அரங்கத்தை விட்டு எல்லாரும்
கிளம்பிச்செல்ல ஆரம்பித்து விட்டனர். நான் மட்டும் பின்னால் உட்கார்ந்து கைதட்டி
கொண்டிருந்தேன். அதுவும் வேண்டாமென பார்வையாளர்கள் பக்கம் உள்ள விளக்கை
அணைத்து விட்டார்கள். இதற்கிடையே திடீரென்று பெங்களூரில் கேபிள் நெட்வர்க்
நிறுவனம் நடத்தும் திரு மூர்த்தி என்பவரை அழைத்து அவருக்கு 'வாழ்நாள் சாதனையாளர்'
விருது கொடுத்தது நம்மில் எத்னி பேருக்கு தெரியும்….

என் உரையை முடிப்பதற்கு முன் கடைசியாக ஒன்றை சொல்லி நிறைவு செய்ய விரும்புகிறேன்
முகநூல் மக்களே. முன்னர் சுத்திக்கொண்டே இருக்கும் 4G நெட்வொர்க் இப்போதெல்லாம்
உமறுப்புலவர் அரங்கத்தில் சிறப்பாக வேலை செய்கிறது என்பதை சொல்லிக்கொண்டு…..

#தமிழ்மொழி_விழா_2017
#தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_பின்னூட்டம்
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்

தமிழ் விக்கிபீடியா

என்னுடைய பேராசிரியர் ஒருமுறை சொன்னார், ஒப்படைப்புகளுக்கு (assignments)
‘விக்கிபீடியா'(Wikipedia) தரவுகளை விவரப்பட்டியலில்(References)
சேர்க்கக்கூடாதென்று. பெரும்பாலான பல்கலைக்கழங்களில் அது ஏற்றுக்கொள்ள
படமாட்டாது. இதற்கு காரணம் Wikipediaவில் உள்ள தரவுகள்/உள்ளீடுகள் போதிய
அளவு சரிபார்க்கப்படுவதில்லை. யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும்
அதில் பதிவேற்றம் செய்யலாம். இப்போது எப்படி என்று தெரியவில்லை. இது
ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு மட்டுமே பொருந்தும்.

தமிழ் விக்கிபீடியாவின் தரம் மேம்பட்டது. அதில் எப்படி பதிவேற்றம் செய்கிறார்கள்,
அது எப்படி சரிபார்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகின்றது என்பது 2015ல்
கோலாலம்பூரில் நடைபெற்ற ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில்
இதற்கென நடந்த அமர்வில் இதன் நிர்வாகிகள்/ஒருங்கிணைப்பாளர்கள்
விளக்கினார்கள். நான், திண்ணப்பன் ஐயா, பேராசியர் மு இளங்கோவன் இன்னும்
சிலர் இதில் கலந்துகொண்டோம். அது மட்டுமல்ல, இதில் பதிவேற்றம் செய்பவர்கள்
பொரும்பாலும் தமிழ் நன்கு தெரிந்த, கற்றுத்தேர்ந்த தமிழ் ஆசான்கள், பேராசிரியர்கள்,
எழுத்தாளர்கள். எனக்கு தெரிந்து இதில் பெரும் பங்காற்றியிருப்பவர் பேராசிரியர்
மெய்கண்டான் ஐயா அவர்கள். திருக்குறளின் பரிமேலழகர் உரையினை முழுவதுமாக
பதிவேற்றம் செய்திருக்கிறார். அதில் திருக்குறளை யாப்பு வடிவில் மட்டுமில்லாமல்
சொற்களாக எளிதில் மாணவர்களுக்கும் புரியும்படி எழுதியிருக்கிறார் மெய்கண்டான்
ஐயா(சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது). இவர் பல சங்க இலக்கிய நூல்களை,
பாரதிதாசன் பாடல்கள் உட்பட ஆயிரத்துக்கு மேற்பட்ட பதிவேற்றங்களை
செய்துள்ளார். 'விக்கிமூலம்' பக்கத்தில் அதை நீங்கள் பார்க்கலாம். இவர் பங்கேற்பை
சிறப்பு செய்யும் வகையில் இவருக்கு ‘களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்’
கொடுத்திருக்கின்றனர் விக்கி அன்பு குழுமத்தினர். இவருடைய பதிவேற்றங்களை
பயன்படுத்தும் ஆய்வாளர்கள் பலர் உள்ளனர். இதெல்லாம் எதற்காக சொல்கிறேன்
என்றால் தமிழ் விக்கிபீடியா நம்பத்தகுந்தது, அதில் மாணவர்களுக்கு தேவையான பல
வளங்கள் உள்ளன, அதை தைரியமாக பயன்படுத்தலாம் என்பதை தெளிவுபடுத்த
வேண்டும் என்ற நோக்கத்திலேயே.

சரி, எதுக்கு தமிழ் விக்கிபீடியா குறித்து இவ்வளவு பெரிய விளக்கம் என
கேட்குறீர்களா? சொல்கிறேன்…

சிங்கையின் தமிழ்மொழி விழாவின் ஒரு அங்கமாக 'இளைமைத்தமிழ்.காம்'மும்
(www.ilamaithamizh.com), உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையமும் இணைந்து
நடத்திய விக்கிபீடியா கட்டுரை பதிவேற்ற நிகழ்வு 15-ஏப்ரல்- 2017, சனிக்கிழமை
காலை சிறப்பாக நடந்து முடிந்தது.

ஒன்றல்ல, இரண்டல்ல, இருநூற்றம்மைபது கட்டுரைகள் பதிவேற்றம் செய்யப்பட்டன.
அதுவும் முற்றிலும் சிங்கப்பூர் தொடர்பான கட்டுரைகள். இந்த சாதனையை செய்து
காட்டியவர்கள் நம் மாணவர்கள். அதற்கு துணை புரிந்த ஆசிரியர்களையும்
பெற்றோர்களையும் கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.

இப்படியொரு திட்டத்தை யோசித்து அதை செயல்படுத்திய இளமைத்தமிழ.காம்
நிறுவனர் திரு பாலு மணிமாறனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதற்கு ஒப்புதல்
தெரிவித்து தமிழ்மொழி விழாவில் இணைத்துக்கொண்ட வளர்தமிழ் இயக்கத் தலைவர்
திரு ரா ராஜாராம், திட்டத்தை இணைந்து செயல்படுத்திய உமறுப்புலவர் தமிழ்மொழி
நிலைய இயக்குனர் திரு அன்பரசு மற்றும் நிலைய ஆசிரியர்கள் ஆகியோருக்கும்
வாழ்த்துகள்.

தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம் என்ற முழக்கத்தை அடிப்படையாக
கொண்ட தமிழ்மொழி விழாவில் கூடதலாக தமிழில் எழுதுவோம் என்பதையும்
சேர்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இது ஒரு பெரும் முயற்சி. குறுகிய
காலத்தில் இதை செய்து முடித்திருக்கிறார்கள்.

இப்ப இருக்கிற காலகட்டத்தில, தமிழில் பேச வச்சிடலாம், படிக்க கூட வச்சிடலாம்
ஆனா எழுத வைக்கிறது அவ்வளவு சுலபமல்ல. அதை பாலு கச்சிதமா ஆசிரியர்கள்,
பெற்றோர்கள் துணையோடு மாணவர்களை வைத்து செய்து காட்டியிருக்கிறார்.
பாலுவை கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக கவனித்து வருகிறேன். இன்று
சிங்ககையில் பேர் குறிப்பிடும் அளவில் உள்ள நல்ல பல எழுத்தாளர்களை,
கவிஞர்களை அறிமுகப்படுத்திய பெருமை பாலுவுக்கு உண்டு. அதை யாராலும் மறுக்க
முடியாது. இவரின் பட்டறையில் தீட்டப்பட்ட எழுத்தாணிகள் நிறைய. அதே போல்
இவர் தமிழ்மொழி விழாவில் தனித்தன்மையா வாய்ந்த நிகழ்ச்சிகள் படைப்பவர்.
முதன் முதலில் எஸ்ரா அவர்களை கூட்டி வந்து வளரும் எழுத்தாளர்களுக்கு பட்டறை
நடத்தியது முதல் கவிஞர் நா முத்துக்குமார் பாடல்களை மாணவர்களிடத்தில் கொண்டு
சேர்த்தது வரை அனைத்தும் நீண்டகால நோக்கத்தை அடிப்படையாக வைத்து
நிகழ்ச்சி செய்பவர்.

அந்த வகையில் இளமைத்தமிழ்.காம் என்ற இணையதளத்தை உருவாக்கி அதன் மூலம்
கடந்த நான்காண்டுகளாக தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவுடன் ஆதரவில்
உயர்நிலைப்பள்ளி, தொடக்கக்கல்லூரி மாணவர்களுக்கான கதை, கவிதை, கட்டுரை,
புகைப்படம், காணொளி போட்டி நடத்தி அதில் மாதம் 15 பேருக்கு $30 வெள்ளியென
மொத்தம் $450 வெள்ளி பரிசாக அளித்து வருகிறார்.

அந்த இளமைத்தமிழ்.காம் மூலம் எடுத்த மற்றொரு முன்னெடுப்பு தான் இந்த
விக்கிபீடியா கட்டுரை பதிவேற்றம். 15-ஏப்ரல் அன்று காலை 9:00 மணியிலிருந்து

மதியம் 1 மணி வரை இந்த சாதனை நிகழ்வு அரங்கேறியது. இதை சிங்கப்பூர் சாதனை
புத்தகத்தில் இடம் பெற செய்திருக்கலாம் என்று வளர்தமிழ் இயக்கத்த தலைவர் திரு
ராஜாராம் கூறியதாக திரு அன்பரசு தன் நோக்கவுரையில் கூறினார்.

பின்னர் மணி 1:00க்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் உமறுப்புலவர் அரங்கத்தில் விழா
தொடங்கியது. இதுவரை நான் கலந்துகொண்ட அத்தனை விழாக்களிலும் 'வாழ்க்
தமிழ்மொழி..' என்ற பாரதியார் பாடல்தான் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஒலித்ததை
கேட்டேன். முதன்முறையாக ஷபீர் இந்தாண்டு தமிழ்மொழி விழாவுக்கு பாடிய
'அழகியே..' என்ற பாட்டு தமிழ்த்தாய் வாழ்த்தாக ஒலித்ததை இங்கு கேட்டேன்!!

வரவேற்புரையாற்றிய முனைவர் சந்தன்ராஜ் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும்
வரவேற்றார். குறிப்பாக உதவிபுரிந்த ஆசிரயர்களை கூட்டத்தினருக்கு அடையாளம்
காட்டினார்.
இந்த முயற்சியில் பங்கெடுத்தவர்கள் சார்பாக ஆசிரியர் ஒருவரும், மாணவர் ஒருவரும்
பேசினார்கள்.
தஞ்சோங் கட்டோங் பள்ளியின் ஆசிரியர் திருமதி மீனாட்சி சபாபதி பேசும்போது
பெற்றோர்களின் பங்கு குறித்து பாராட்டி பேசினார்.

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் உயர்தமிழ் படிக்கும் மாணவி பூர்வா இது
மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் நிறைய கற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

நோக்கவுரையாற்றிய, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய இயக்குனர் திரு அன்பரசு,
சித்திரைத் திருவிழா நிகழ்ச்சியில் அமைச்சர் திரு எஸ்.ஈஸ்வரன் பேசியதை குறிப்பிட்டு
தமிழ்மொழி விழா தொடங்கிய நோக்கத்தை தாண்டி தொழில்நுட்ப உதவியுடன்
அடுத்த தலைமுறையை சென்றிருப்பதை சுட்டிக்காட்டினார்.

வாழ்த்துரை வழங்கிய வளர்தமிழ் இயக்கத் தலைவர் திரு ஆர். இராஜாராம்
இத்தகைய நிகழ்வுகள் இளையர்களை மொழியின்பால் ஈர்த்து அவர்களை தொடர்ந்து
செயல்பட வைக்கும் என்றார். மேலும் தான் காலையிலிருந்து நிகழ்வை
பார்த்ததாகவும், ஊடகங்களும் நேரடியாக ஒலிபரப்பு செய்ததாகவும் கூறினார்.
ஆசிரியர்கள் ஒருவர் வானொளியில் இதுகுறித்து பேட்டி கொடுக்கும்போது தாங்கள்
அடுத்த முயற்சியாக 1000 கட்டுரைகள் பதிவேற்றம் செய்ய மாணவர்களுக்கு
உதவுவோம் என்று சொன்னதாக கூறினார். இதில் பெற்றோர்களும் மறைமுகமாக
பங்கெடுத்திருப்பது நல்லதே என்றும் தெரிவித்தார்.

நன்றியுரையாற்றிய இளைமைத்தமிழ்.காம் நிறுவனர் திரு பாலு மணிமாறன் இந்த
முயற்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்,
ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாக இதற்காக கடுமையாக
உழைத்த ஆசிரியர் சந்தன்ராஜ் மற்றும் சுபா செந்தில்குமார் இருவருக்கும் மனமார்ந்த

நன்றியை தெரிவித்தார். போட்டியில் வெற்றியாளர்களை தேர்தெடுத்த
(இரகசிய)நடுவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்காக உதவிபுரிந்த ஆசிரியர்களுக்கும், தொண்டீழியர்களுக்கும் நினைவு
பரிசு வழங்கப்பட்டது.

மொத்தம் 28 பள்ளியில் இருந்து வந்த 250 கட்டுரைகளில் தேர்ந்தெடுத்த 20
கட்டுரைகளுக்கு $50 வெள்ளி பரிசு கொடுக்கப்பட்டது.

சிறந்த மூன்று கட்டுரைகள் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு அளிக்கப்பட்டது.
முதல் பரிசு பெற்றவர் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் உயர்தமிழ் படிக்கும்
ராஃபில்ஸ் பெண்கள் பள்ளி மாணவி செல்வி விஷ்ணு வர்தினி. இரண்டாம் பரிசை
பெற்றவர்கள் செயின்ட் ஹில்டாஸ் உயர்நிலை பள்ளியை சேர்ந்த சிராப்திக் மற்றும்
மாணவர்கள் குழு.
மூன்றாம் பரிசை வென்றவர் தெமாசாக் தொடக்கக் கல்லூரியை சேர்ந்த மாணவி
சமிக்‌ஷா அஷோக் குமார்.

சிறந்த மூன்று பள்ளிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல்
பரிசை தெமாசாக் தொடக்கக் கல்லூரி தட்டிச்செல்ல இரண்டாம் பரிசு டாங்களின்
உயர்நிலைப்பள்ளிக்கும், மூன்றாம் பரிசு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்திற்கும்
அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சி நெறியாளர்கள் செல்வி அஷ்வினி செல்வராஜ்ஜும், திருமதி சுபா
செந்தில்குமாரும் மிக நேர்த்தியாக, எளிமையாக நிகழ்ச்சியை தொகுத்து
வழங்கினார்கள்.

சரி இந்த கட்டுரைகளை எப்படி படிப்பது என கேட்குறீர்களா? பதிவேற்றம்
செய்யப்பட்ட கட்டுரைகள் விக்கிபீடியா ஒருங்கிணைப்பாளர்களால் சரிபார்க்கப்பட்டு
பொதுவெளிக்கு விரைவில் வரும்.

இது ஒரு பெரிய முயற்சி. தொலைநோக்கு பார்வையுடன், தொழில்நுட்பத்தை
பயன்படுத்தி சிங்கப்பூரையும், மாணவர்களையும் முன்னிறுத்தி நீண்டகாலம்
நிலைத்திருக்க ஆவணப்படுத்தப்படுத்தபட்ட ஒரு கூட்டு முயற்சி. இந்த நிகழ்வு
இந்தாண்டு தமிழ்மொழி விழாவின் மகுடம் என்றால் மிகையல்ல.

#தமிழ்மொழி_விழா_2017
#தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_பின்னூட்டம்

#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்

https://ta.m.wikisource.org/wiki/பகுப்பு:திருக்குறள்

சொல்லிச் செல்லும் சொல்லடைகள்

“டே, என்னடா இந்த Ikea Tableல கூட fix பண்ண தெரியல உனக்கு"னு கேட்டா,
“அப்பா, வாட் இஸ் இன் சட்டி வில் ஒன்லி கம் இன் அகப்பை"னு சொல்லிட்டு
போனான் என் பையன்.
அவன் சொன்னதுல பல பொருள் உண்டு. அதுல ஒன்னு 'நான் உன் பையன் தானே',
என்பது:(

சரி, இங்கதான் அப்படினு பார்த்தா பக்கத்துல மனைவியும் மகளும்….

"அம்மா, ஆசிரியர், என்னை ஒரு கட்டுரை எழுதிட்டு வரச்சொன்னாங்க. நீங்க எனக்கு
உதவி செய்றீங்களா"
"சரி, ஆனா 'மொட்டை தாத்தா குட்டை விழுந்தார்'னு மாதிரி இல்லாம விவரமா என்ன
கட்டுரை, என்றைக்கு கொடுக்கனும், கொஞ்சம் தெளிவா சொல்லு"

இப்படி எங்க வீட்ல அடிக்கடி இந்த மாதரி சொலவடைகள் புழக்கத்துல இருக்கும்.
பொதுவா எனக்கு தெரிஞ்சு இந்த மாதரி அதிகமான சொலவடைகள், வழக்குச்
சொற்கள் பயன்படுத்தப்படுவது தமிழகத்திலுள்ள நெல்லை வட்டாரத்தில் தான்னு
நினைக்குறேன். அதனால எங்க வீட்லேயும் நிறைய அந்த மாதிரி உரையாடல
கேக்கலாம். அந்த வட்டாரத்தில் வளர்ந்தவர்கள் பேசவதை புரிந்து கொள்ள ஒரு தனி
அகராதியே போடலாம். மற்ற வட்டாரத்திலும் சொல்லடைகள் அதிகமாக
புழங்கவதுண்டு. ஆனால் வட்டாரதிற்கேற்ப சொலவடைகளின் சொற்கள் சற்றே
மாறுபடும், பொருளும் வேறுபடும்.

பேச்சுமொழியின் அடிக் கூறுகளே இந்த பழமொழி, முதுமொழி, ஒலிக்குறிப்புச்
சொற்கள் என பலவாறு அழைக்கப்படும் சொலவடைகள் தான். அது ஒரு சமூகத்தின்
வாழ்க்கை பட்டறிவின் சான்றுகள். அது ஒரு பண்பாட்டின், நாகரீகத்தின்
கலைக்களஞ்சியம். அவை பார்க்க எளிதாக இருந்தாலும் வெளிப்படுத்தும் கருத்துகள்
ஆழமானவை.

பேச்சுவழக்கில் மட்டுமே இருந்துவந்த இந்த நாட்டுப்புற இலக்கியத்தை பின்னர்
'பழமொழி நானூறு' என்ற பதிவு செய்யப்பட்டது. திருக்குறள், திருமறை, என்று
இலக்கியத்தின் பழமொழி எங்கும் பரவலாக காணப்படுகிறது.

ஆனால், இந்த பேச்சு வழக்கில் உள்ள ஒரு சில பழமொழிகளுக்கு இந்த
மேடைப்பேச்சாளர்கள் ஒரு கதை சொல்வாங்க பாருங்க, அத கேட்ட உடனே இது
தான் சரினு நம்ம கைதட்டிட்டு வருவோம். அதற்கு எந்த வித சான்றும் இருக்காது.
ஆனா அது சரின்னு தோணும். அதே பழமொழக்கு இன்னொரு மேடையில வேற
ஒருத்தரு வேற கதை சொல்வாரு. எடுத்தகாட்டாக, ‘பந்திக்கு முந்து; படைக்கு பிந்து’

என்பதற்கு இன்னொரு பொருள் உள்ளதாக சொல்கிறார்கள். அது என்னென்னா,
பந்தியில் உண்ணும் போது வலது கை முந்திச் செல்கிறது. போர் தொடுக்கும் போது,
வில்லில் இருந்து அம்பு எய்தும் கை பிந்திச் செல்கிறது என்பதாகும். அதாவது ‘பந்திக்கு
முந்தும் கை; படைக்கு பிந்தும் கை’ என்று இருக்க வேண்டிய பழமொழி, உருமாறி
விட்டது என சொல்பவர்களும் உண்டு. இப்படி பல பழமொழிகளை சொல்லலாம்.

சரி, நம்ம விஷயத்துக்கு வருவோம். இந்த மாதிரியான பழமொழிகள் சிலவற்றை
தொகுத்து அதை அழகு புத்தகமாக அச்சடித்து நமக்கு இலவசமாக தருகிறார்கள். யாரு,
எங்கேனு கேக்குறீங்களா? மேல படிங்க…

தேசிய மரபுடைமை வாரியம் மற்றும் கல்வி அமைச்சின் உமறுப்புலவர் தமிழ்மொழி
நிலையம் ஆகிய இரண்டு அமைப்புகளின் கூட்டு முயற்சியில் 'வாழும் மொழி, வாழும்
மரபு' என்ற திட்டத்தின் வழி கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்மொழி
விழாவையொட்டி ஒரு புத்தகம் அறிமுகம் கண்டு, நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அந்ந வகையில், வளர்தமிழ் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்று வரும்
"தமிழ்மொழி விழா 2017"ன் தொடக்க விழாவில் வெளியீடுகண்ட, "சொல்லிச்
செல்லும் சொல்லடைகள்" என்ற புத்தகம் தான் அது.
அது குறித்து ஒரு சின்ன அறிமுகம்.

ஏற்கனவே சொன்னது போல ஒவ்வொரு சொல்லடையும்(சொலவடையும்) ஒரு
பொருளைக் கூறாது பல பொருள்களை உணர்த்தும் தன்மையுடையதால் இந்த
புத்தகத்தில் பொருளுரை சொல்லாமல் ஆசிரியர்க் குழு அவர்கள் பார்வையில்
விளக்கவுரை கொடுத்திருக்கிறார்கள்.

இதில் மூன்று சிறப்பம்சம் உண்டு,
ஒன்று அந்த சொல்லடைகளை இன்னொரு சொற்றொடர் மூலம் கூறியிருப்பது.
எளிதாக புரியும் வகையில் உள்ளது. எடுத்துகாட்டாக, "மொழி தப்பினவன் வழி
தப்பினவன்" என்பதற்கு "மூத்தோர் மொழிகள்!-நம் வாழ்வின் முகவரிகள்!" என்று
இன்னொரு சொல்லடையை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள்.

இரண்டாவது, சொல்லடைகளின் விளக்கத்தை ஆங்கிலத்தில் கொடுத்திருப்பது.
இங்கே பதிவு செய்ய விரும்புவது, தமிழ் சொல்லடைகளின் மொழிபெயர்ப்பை
ஆங்கிலத்தில் கொடுக்கவில்லை மாறாக அதை அழகாக ஆங்கில மொழியில் அதன்
அழகு குறையாமல் சொல்லியிருக்கிறார்கள். எடுத்தகாட்டாக, "அகப்பை குறைந்தால்
கொழுப்பு குறையும்" என்பதை "If the spoon is smaller, the belly will be smaller too!"
என்று சொல்லி ஆங்கிலத்தில் படிப்பவர்களுக்கு புரியும் வகையில் மேலும் சில
விளக்கத்தை கொடுத்திருக்கிறார்கள். Shakespeare, Abraham Lincoln, Hellen Keller
போன்றோர்களின் மேற்கோள்களை சுட்டியிருக்கிறார்கள்.

மூன்றாவது, அழகிய கோட்டோவியம். ஒவ்வொரு சொல்லைடைக்கும் அதை
பார்த்தவுடன் புரியும்வண்ணம் அழகிய ஓவியத்தை தீட்டியுள்ளார்கள். அதை
வரைந்தவருக்கு எனது பாராட்டுகள்.

ஆனால், ஒன்றிரண்டு சொல்லடைகள் வேறு விளக்கத்தை தருகின்றன. குறிப்பாக,
"விரலுக்கு தகுந்த வீக்கம்", என்பதை "விரல் வீங்கியிருக்கின்றது என்று மகிழ்ச்சி
அடை!-விரலே இல்லாதவரை பார்த்து" என்று வேறு ஒரு விளக்கம் சொல்கிறது.
புத்தகத்தில் ஒரு அரைப்பக்கம் எதுவும் இல்லாமல் இருப்பது நன்றாக இருந்தாலும்
அதில் சமகால எடுத்துக்காட்டு ஒன்றை சொல்லியிருந்தால் மாணவர்களுக்கு இன்னும்
சுலபமாக புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்திருக்குமோ என தோன்றுகிறது.
தமிழ்மொழி மாதம் முழுதும் வரும் வகையில் 30 சொல்லடைகள் இருக்கும் என
நினைத்து புத்தகத்தை திறந்தால் 23 தான் இருந்தன. இன்னும் 7 சேர்த்திருக்கலாமோ
என தோன்றியது.

இந்த புத்தகம் தமிழ்மொழி விழாவின் நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் இலவசமாக
கிடைக்கும். 40,000 பிரதி போடப்பட்டிருப்பதாக தகவல் உள்ளது. இதை அறிந்தவுடன்
எனக்கு வெளிநாடுகளில் இருந்து அனுப்பிவைக்குமாறு கோரிக்கை வந்தது.

தமிழ்மொழி மாதம் தொடக்கம் முதல் தினமும் தமிழ் முரசில் இந்த சொல்லடைகள்
முதல் பக்கத்தில் வெளியிட்டு சிறப்பு செய்து வருகிறது. அதை படிக்க வாய்ப்பு
இல்லாதவர்களுக்காக தினமும் என்னுடைய முகநூல் பக்கத்தில் அதை பதிவு செய்து
வருகிறேன். #வாழும்_மொழி_வாழும்_மரபு என்ற hashtagல் தேடினால் கிடைக்கும்.

தமிழ் முரசில் மட்டுமல்ல ஒலி 96.8லும் தினமும் ஐந்து முறை(காலை மணி 6:20, 9:05,
11:55, மாலை 6:55, இரவு 10:55)இந்த சொல்லாடல்களை மையக்கருத்தகாக வைத்து
நல்லதொரு குறுநாடகத்தை ஒலிபரப்பு செய்கிறார்கள். திரு Nara Snv யும் Karthik
Ramasamyயும் இணைந்து நகைச்சுவையுடன் கூடிய நல்ல கருத்தாக்கத்தை
மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் அரங்கேற்றிவருகிறார்கள். அவர்களுக்கு
என் வாழ்த்துகள். ஒரு தடவை அல்லை ஐந்து முறை ஒலியில் வருவதால் தவறாமல்
கேளுங்கள்.

இந்த மாதிரியான ஒரு படைப்புக்கு நிறைய உழைப்பு தேவை. அதுவும் பல
வேலைப்பளுவின் நடுவே அதை செய்வது கடினமானது. அதை வெற்றிகரமாக
நிறைவேற்றிய பெருமை திட்டத்தின் தலைவர் திரு Anbarasu Rajendran மற்றும்
ஆசிரியர்க் குழுவிலுள்ள செல்வி Veera Vijayabharathy மற்றும் முனைவர் ராமன்
விமலன் ஆகியோரையும் அவர்களுக்கு துணை நின்றோரையுமே சேரும்.

'சொல்லிச் செல்லும் சொல்லடைகள்', சொற்கள் துள்ளிக்குதித்தோடும் நீரோடைகள்.

#வாழும்_மொழி_வாழும்
#தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_பின்னூட்டம்
#தமிழ்மொழி_விழா_2017
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்

பட்டிமன்றம்

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகமும் கீட் ஹாங் சமூக இந்திய நற்பணிச் செயற்குழுவும் இணைந்து நடத்திய சிறப்பு பட்டிமன்றம் கடந்த சனிக்கிழமை, 08-ஏப்ரல்-2017, அன்று மாலை கீட் ஹாங் சமூக மன்றத்தில் சிறப்பாக நடந்தது. “வாழ்க தமிழ்மொழி” என்ற பாரதியார் பாடலை தமிழ்தாய் வாழ்த்தாக ஒலிக்க நிகழ்ச்சி தொடங்கியது. அடுத்ததாக, செல்வி கயல்விழி மதிவாணன் சிறப்பாக பரதம் ஆடினார். இதை நன்கு கவனித்து அவரையும் அவரின் பெற்றோர்களின் பாராட்டிய பிறகே பட்டுமன்றத்தை தொடங்கினார் திரு பாக்கியராஜ். பட்டிமன்ற கலைக்கழகத்தின் தலைவர் திரு யூசுப் ராவுத்தர் ரஜித் வரவேற்புரை வழங்கினார். பேச்சாளர்களுக்கும், புரவலர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது. இந்த பட்டிமன்றத்துக்கு நான் முதல்ல போற மாதிரி திட்டம் ஏதும் இல்லை. அதே நேரம் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில நடக்கவிருந்த “சிவகாமியின் சபதம்” நாடகத்துக்கு வருவதாக அவர்களுடைய முகநூல் ‘நிகழ்வு பக்கத்தில்’ சொல்லியிருந்தேன். ஒரு வாரம் முன்னதாகத்தான் அதை மாத்தி பட்டிமன்றத்துக்கு செல்ல முடிவெடுத்தேன். அதற்கு ஒரு காரணம் திருமதி அகிலாவும், திரு மன்னை ஐயாவும். மற்றொரு காரணம், கடந்த சில ஆண்டுகளாக பட்டிமன்ற கலைக்கழகத்தின் பட்டிமன்றங்களை முடிந்த வரை தொடர்ந்து கேட்டு வருகிறேன். 90க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை மேடை ஏற்றிய பெருமை இவர்களுக்குண்டு. கடந்தாண்டு மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடத்தி அதிலிருந்து சிறந்த இரண்டு மாணவர்களை தேர்வு செய்து பட்டிமன்றத்திலும் பேச வைத்தார்கள். நிறைய மாணவர்களும் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். அப்படி மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தை அப்போது என்னுடைய முகநூல் பதிவில் பாராட்டியிருந்தேன். (சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது) அது மட்டுமல்ல இந்தாண்டு தமிழ்மொழி விழாவில் மொத்தம் உள்ள 48 நிகழ்வுகளில் (4 பள்ளி நிகழ்வு இல்லாமல்) இரண்டே இரண்டுதான் சமூக மன்றங்களில் நடக்கின்றன. ஒன்று உலு பாண்டான் சமூக மன்றத்தில் நடக்கவிருக்கும் அதிபதியின் தெனாலிராமன் – விகடகவி நாடகம். இன்னொன்று கீட் ஹாங் சமூக மன்றத்தில் நடந்த முடிந்த இந்த பட்டிமன்றம். பெரும்பாலும் உமறுப்புலவர், தேசிய நூலகம், மரபுடைமை நிலையம் என மத்திய வட்டாரத்தில்(நான்கு நிகழ்ச்சிகள் வட்டார நூலகங்களில் நடைபெறுகிறது) நடைபெற்று வருகிற தமிழ்மொழி விழாவை சிங்கையின் வெளிவட்டார வீடமைப்பு பேட்டைகளுக்கு எடுத்துச் செல்வது சிறப்பாகும். இதையும் கடந்தாண்டு பதிவிலும் குறிப்பிட்டிருந்தேன். கீட் ஹாங் சமூக இந்திய நற்பணிச் செயற்குழுவிற்கும், திரு அருமை சந்திரன் அவர்களுக்கும், பட்டிமன்ற கலைக் கழகத்திற்கும் மீண்டும் எனது பாராட்டுகள். இதை மேலும் தமிழ்மொழி விழாவில் விரிவுபடுத்தினால் சிறப்பாகயிருக்கும். இந்த பட்டிமன்றத்துக்கு நுழைவுச்சீட்டு $5 வெள்ளி. இருந்தும் கிட்டதட்ட 700 பேர் கூடியிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் அக்கம்பக்கத்திலுள்ளவர்கள். நுழைவுச்சீட்டுகள் அனைத்துமே தமிழ்மொழி விழா தொடங்குவதற்கு முன்னரே முடிந்துவிட்டது. அதனால் அதிகமாக விளம்பரப்படுத்தவில்லை. நானும் எந்த முன்னோட்டப் பதிவும் போடவில்லை. பட்டிமன்றத்தலைப்பு என்ன தெரியுமா, “கல்யாண வைபோகம் என்பது காலாகாலத்தில் நடப்பது நல்லதா? இல்லை சம்பாத்தியம் உறுதியான பின் நடப்பது நல்லதா?”. ப்பா தலைப்பே இவ்வளவு பெருசானு கேட்காதீங்க, தலைப்பை சொல்லவே பத்து நிமிஷம் வேணும்னு நினைக்கிறேன்:) அதனால் தான் இந்த தலைப்பை எந்த பேச்சாளரும் முழுசா மேடையில சொல்லல போல:) இந்த தலைப்பு சிங்கை சூழலுக்கு மிக முக்கியமான தலைப்பு. ஏனென்றால், கடந்தாண்டு வெளியான ஒரு செய்தியின்படி 25-29 வயதில் இருக்கும் 70 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் திருமணம் செய்யாமல் நல்ல வேலைக்காக காத்திருக்கின்றனர்(சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது). ஆகவே இதில் பேச நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால், யாரும் அதை தொட்டு பேசவில்லை. பட்டிமன்றம் போவதற்கு முன்னால் நான் நண்பர்களிடம் சொன்னேன், “நான் போறது பொழுதுபோக்கான நகைச்சுவையை காணத்தான்” என்று. அதனால் எனக்கு பெரிய எதிர்பார்ப்பு கிடையாது. ஏனென்றால் நடுவர் உட்பட யாருமே பட்டிமன்ற பேச்சாளர்கள் இல்லை, நம் இரு சிங்கை பேச்சாளர்கள் தவிர. ஆனால் அந்த பொழுதுபோக்கு அம்சத்தை சிறப்பாகவே கொடுத்தனர் அனைவரும். குறிப்பாக திருமதி அறந்தாங்கி நிஷா அருமையாக பேசினார். வந்திருந்தவர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அப்பப்ப பட்டிமன்ற தலைப்புக்குள்ளும் சென்றார். அதற்கடுத்து நல்ல பேசியவர் திரு ஜெயச்சந்திரன். இருவரும் நல்ல ‘டைமிங் ஜோக்ஸ்’ அடித்தார். கடைசியில் மணியடித்த பிறகும் கொஞ்சம் இழுத்தார். திரு மதுரை முத்து எதிர்பார்த்த அளவு பேசவில்லை. கடைசியாக பேசியதாலோ என்னவோ தெரியல. திருமதி அன்னபாரதி சோபிக்கவில்லை. எல்லோருமே ஏற்கனவே பல இடங்களில் கேட்ட நகைச்சுவையையே சொன்னாலும் அவர்கள் சொல்லியவிதம் பார்வையாளர்களை ஈர்த்தது, நல்ல இரசித்தார்கள். திரு பாக்யராஜ், வந்திருந்த அவரது இரசிகர்களை ஏமாற்றவில்லை. அவர்கள் எதிர்பார்த்த நகைச்சுவையை அளவாக ஆபாசமில்லாமல் கொடுத்தார். ஆனால் பேச்சாளர்கள் பேசிய பல விஷயங்கள் அவருக்கு கேக்கவில்லை. மேடையின் மேல வைக்கப்பட்டிருந்த ‘மானிடர்’ சரியாக வேலை செய்யவில்லை போல. பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். சிங்கப்பூர் பேச்சாளர்கள் இருவரையுமே பட்டிமன்ற நடுவர் திரு பாக்யராஜ் அறிமுகப்படுத்தவில்லை. சரி அதாவது பரவாயில்லைனு விட்டுடலாம். அவர்கள் இருவர் பெயரும் கூட என்னவென்று தெரியவில்லை. அதிலும் மன்னை ஐயா பெயர் தெரியாம அதை தவறா வேற சொன்னார். ஒரு பட்டிமன்ற நடுவராக வருபவர், பல கதைகளை நினைவு வைத்திருப்பவர், சக பேச்சாளர்கள் பெயரை குறித்து வைத்திருந்திருக்கலாம். அதுவும் இருவரும் பக்கத்திலேயே உட்காரந்திருக்கிறார்கள். அது அவர் தெரிந்தே செய்திருக்க மாட்டார் இருந்தாலும் அது எனக்கு சரியாக படவில்லை. இப்போது நம் சிங்கை பேச்சாளர்களுக்கு வருவோம். முதலில் பேசிய மன்னை ஐயா, திருமணம் சொர்க்கத்தில் நிச்சியிக்கப்படவில்லை, திருமணம்தான் சொர்க்கத்தையே நிச்சியிக்கின்றன என தொடங்கி பருவத்தே பயிர் செய்ய வேண்டும் எனவும் காலாகாலத்தில் திருமணம் செய்வதே நல்லது என தனக்கே உரித்தான பாணியில் பாடல்கள், நகைச்சுவை என சிறப்பாக பேசினார். ஒரு சில நகைச்சுவை ஏற்கனவே கேட்டது, இருந்தாலும் பரவாயில்லை இரசித்தேன். அடுத்து பேச வந்த திருமதி அகிலா ஹரிஹரன், திருமணங்கள் சொர்கத்திலல்ல, ரொக்கத்தில் தான் நிச்சியக்கப்படுகின்றன என பதிலடியோடு சிறப்பாக தொடங்கி சம்பாத்தியம் உறுதியான பின் திருமணம் நடந்தால் தான் அறுசுவை உணவு போல் வாழ்க்கை சுவைக்கும் என தன் வாதத்தை வைத்தார். இவரிடம் இன்னும் கொஞ்சம் எதிர்பார்த்தேன். நகைச்சுவை எதிர்பார்த்து வந்த கூட்டத்தினருக்காக இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம். இந்த முறையும் சத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. மற்றபடி பட்டிமன்ற தலைப்பையொட்டி தன் கருத்துகளை அழகாக வைத்தார். கடைசியில் காலாகாலத்தில் திருமணம் செய்வதே சரி என்று நடுவர் தீர்ப்பளித்தார். நிகழ்ச்சியை திருச்செல்வி தன் அழகு தமிழில் சிறப்பாக தொகுத்து வழங்கினார். அருமையான ‘stand-up comedy’யை ஊரிலிருந்து வந்த பேச்சாளர்கள் கொடுக்க வந்திருந்த அனைவரும் தொடர்ந்து சிரித்து மகிழ, மொத்தத்தில் நல்லதொரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏற்பாட்டு குழுவினருக்கு வாழ்த்துகள். குறிப்பு : பின்னால் திரை மிக வெளிச்சமாக இருந்ததால் படங்கள் சரியாக வரவில்லை. https://www.facebook.com/ShanmugamTam/posts/1188536617825179 http://www.straitstimes.com/singapore/more-young-people-in-singapore-staying-single?login=true #தமிழ்மொழி_விழா_2017 #தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_பின்னூட்டம் #தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்

பார்வை 2017 – ஓர் பார்வை

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றத்தின் “பார்வை 2017” கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 2ம் தேதி காலை உட்லான்ட்ஸ் வட்டார நூலக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. ஐந்தாவது முறையாக “பார்வை” நிகழ்ச்சியை அரங்கேற்றும் இவர்கள் தமிழ் மொழி விழாவுக்கு புதிய வரவானலும் அருமையான வரவு. தொடக்கம் ——————- நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திரு இராஜாராம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் திரு அருண் வாசுதேவ், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவை தலைவர் திரு முத்தையா அருணாச்சலம், சிங்கப்பூர் நிர்வாக பல்கலைக்கழகத்தின் ‘தமிழா’ அமைப்பின் தலைவர் திரு விக்னேஷ் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். ‘யுத்தம்’ நிகழ்ச்சி தொடக்கம் போலேயே இங்கேயும் மற்ற பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை தலைவர்களை அழைத்து தொடங்கி வைத்தது மாணவர்களுக்குள் உள்ள நல்ல புரிந்துணர்வை காட்டியது. பாரதியாரின் “வாழ்க தமிழ்மொழி” பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக பாடினார்கள் மாணவி கபிலாவும், பிரியன்னாவும். ஆனால் அதில் ‘சுடர்க தமிழ்நாடே’ என்பதற்கு பதிலாக ‘சுடர்க சிங்கை நாடே’ என்று மாற்றியிருந்தனர், சிறப்பு. சிறப்பு விருந்தினருக்கு மாலை, பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தனர். வரவேற்புரை ——————— வரவேற்புரை வழங்கிய மாணவர் தலைவர் அருண் வாசுதேவ், தமிழ்மொழி விழாவில் தங்களை இணைத்து கொண்டது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவத்தார். அனைவரையும் வரவேற்ற அவர், நிகழ்ச்சியின் மையக் கருத்தான பாஞ்சாலியின் சபதம் குறித்தும் பேசினார். சிறப்பு விருந்தினருக்கு மாலை பொன்னாடை அணிவித்தது குறித்து “சிலர் கேள்வி கேக்கலாம்..” என கூறி ஒரு விளக்கத்தையும் அளித்தார். அந்நிகழ்வு அரசியல் நிகழ்வு இல்லை என்றும் தங்களது மனபூர்வமான அன்பையும் மரியாதையையும் தெரிவிக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டது என்றும் கூறினார். பொன்னாடைகள் – ஓர் விளக்கம் —————————————————— இங்கே ஒரு செய்தியை நான் பதிவ செய்ய விரும்புகிறேன். விழாக்களில் நடக்கும் மாலை, பொன்னாடை வைபங்களை குறித்து மாற்றுக் கருத்துக் கொண்டவன், அதை தொடர்ந்து சொல்லியும் வருகிறேன். அவர் விளக்கம் கொடுத்ததற்கு அதுவும் ஒரு காரணம். ஆனால் நான் ஒட்டு மொத்தமாக அதை எதிர்க்கவில்லை. பொன்னாடை அளிப்பதையோ, பெறுவதையோ கொச்சைப் படுத்துவதோ, குற்றம் சொல்வதோ என்னுடைய நோக்கம் அல்ல. ஆனால் அதே வேளையில் ஒரு மாற்றுக் கருத்தை முன் வைக்கிறேன். சிறப்பு விருந்தினர்கள், விருதாளர், வேற்று இனத்தை சேர்ந்தவர்கள் இப்படி குறிப்பட்ட சிலருக்கு அணிவிப்பதில் நான் உடன்படுகிறேன். நம் பண்பாட்டை, பழக்கத்தை கடைபிடிப்பதில் தவறில்லை. ஆனால் இரண்டு விஷயத்துக்காக நான் அதை ஆதரிப்பதில்லை. 1. புரவலர்களுக்கு அணிவிப்பதை. அவர்களிடமே காசு வாங்கி அவர்களுக்கே திருப்பி கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அவர்களை கூட்டத்தினருக்கு அறிமுகப்படுத்த, அவர்கள் படத்தை கணொளியில் காண்பிக்கலாம். அவர்களை மேடைக்கு அழைத்து வேறு ஏதாவது கொடுக்கலாம். 2.குறிப்பிட்ட சிலருக்கு ஒவ்வொரு அமைப்பும், ஒவ்வொரு நிகழ்விலும், ஒவ்வொரு ஆண்டும் பொன்னாடை கொடுத்தால் ஒரு கட்டத்தில் அவரிடம் எத்தனை பொன்னாடைகள் இருக்கும்? அவர்கள் பாவம் இல்லையா? எங்க வீட்ல என்னோட பான்ட், சட்டையை வைக்கவே ஒரே ஒரு அலமாரியில ஒரு ஓரத்தில அதுவும் 33% சதவிகிதம் தான் இட ஒதுக்கீடு பண்ணியிருக்காங்க:) இந்த பொன்னாடைகளை இவர்களில் சிலர் விரும்பவதில்லை என்பது தான் உண்மை. யாரும் ஏன் போடவில்லை என்று கேட்கப்போவதில்லை. வேறு வழியில்லாமல் வாங்கி கொள்கிறார்கள். இது என்னோட தனிப்பட்ட கருத்து. இது தான் சரி என்று நான் சொல்லவில்லை. இது ஒரு சின்ன விஷயம் தான், ஆனால் இதில் நேரத்தை மிச்சப்படுத்தலாம், முடிந்தவரை தவிர்க்கலாம், அவ்வளவு தான். இதுக்காக என்கிட்ட சண்டைக்கு வராதீங்க:) சரி, நிகழ்ச்சிக்குள்ள போவோம். வாழ்த்துரை —————— அடுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வளர்தமிழ் இயக்கத் தலைவர் திரு இராஜாராம் பேசுகையில் தமிழ்மொழி விழாவின் முக்கிய நோக்கம் மாணவர்களை சென்றடைவது என்றும் அந்த வகையில் முதன் முறையாக ‘பார்வை’ நிகழ்ச்சியை தமிழ்மொழி விழாவில் இணைத்துக் கொள்வதில் தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார். மேலும், நன்யாங் மாணவர்கள் அடுத்த ஆண்டு புதிய நிகழ்ச்சியுடன் வந்தாலும் உடனே ஏத்துக்கொள்வோம் அதற்கு காரணம் அவர்கள் நல்ல நிகழ்ச்சியே படைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது, மாணவர்களுக்கு என்ன தேவை என்பது அவர்களுக்கு தெரியும் என்றும் கூறினார். இதன் மூலம் நாளை தமிழை முன்னெடுத்துச் செல்ல, நிகழ்ச்சி படைக்க, அமைப்புகளுக்கு ஏற்ற நல்ல தலைவர்களை உருவாக்க முடியும் என்றும் சொன்னார். பாஞ்சாலி சபதம் ஏற்பது —————————————- அடுத்து மேடையில் ‘பாஞ்சாலி’ தோன்றினார். துகிலுரியும் காட்சி அரங்கேற்றப்பட்டது. உணர்ச்சி பொங்க பாஞ்சாலி சபதம் ஏற்றார். பாஞ்சாலியாக நடித்த ஐஸ்வர்யாலஷ்மி நல்லதொரு நடிப்பை வெளிப்படுத்தினார். காணொளிப் போட்டி ———————————– அடுத்தாக, காணொளிப் போட்டி நடைப்பெற்றது. எழுத்தாளர் கழகத் தலைவர் ஆண்டியப்பன்,சிங்கப்பூர் விகே ஆர்ட்ஸின் விக்னேஷ் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர். மூன்று மாணவர் குழுக்கள், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு நா ஆண்டியப்பன் ஐயா எழுதிய நாடக ஆக்கமான ‘பாரதியின் பாஞ்சாலி சபதம்’ புத்தகத்தை அடிப்படையாக கொண்டு அந்த காணொளியை தயாரித்திருந்தனர். அந்த காணொளிகள் திரையிடப்பட்டது. ஒவ்வொருவரும் தங்களது படைப்பை வித்தியாசாமாக படைத்திருந்தனர். முதல் பரிசை ‘பத்தினி தீ பாஞ்சாலி’ காணொளியை படைத்த தெம்பனீஸ் தொடக்கக் கல்லூரியும், இரண்டாம் பரிசை ‘தர்மத் தலைவன்’ என்ற காணொளியை தயாரித்த தெமாசக் தொடக்கக் கல்லூரியும், மூன்றாம் பரிசை ‘சகுனியின சூழ்ச்சி’ என்ற காணொளி படைத்த நீ ஆன் பலதுறை தொழில்நுட்பக் கல்லூரியும் வென்றது. பார்வையாளர்கள் அங்கம் ——————————————– அடுத்து வந்த அங்கம், ஓர் விறுவிறுப்பான அங்கம். ஆம், பார்வையாளர்கள் பங்குப்பெற்ற விளையாட்டு அங்கம். அதை ‘Kahoot’ என்ற இணைய/செயலி மூலம் விளையாட வேண்டும். இதில் மகாபாரதம் தொடர்பான 12 கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் கொடுக்கப்பட்ட நான்கு பதிலில் சரியான ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். விரைவாக சரியாக விடையளித்தவர்களுக்கு அதுவே புள்ளிகள் கொடுத்துவிடும். இதில் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர். முதலில் இருந்தே முன்னிலையில் இருந்து கடைசியில் முதலிடத்தை பிடித்தவர் நம்ம எழுத்தாளர் கழக இராம வைரவன்:) சிறப்பாக கேள்விகளை தொகுத்து அதை அழகாக விளையாட வைத்து பார்வையாளர்களை பரவசபடுத்தினார்கள். இதில் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய செய்தியும் இருந்தது சிறப்பு. சகுனியின் சூழ்ச்சி, தர்மரின் வீழ்ச்சி ———————————————————— அடுத்து சகுனி அரங்கத்தினுள் நுழைய ஒரே ஆரவாரம். சகுனி சூழ்ச்சி செய்த காரணத்தை விளக்கும் வகையில் காட்சி அமைக்கப்பட்டது. பின்னர் தர்மர் வந்தார். மீண்டும் ஆரவாரம். அவர் சூதாட்டத்தில் தோற்றதை நினைத்து வருந்தும் நிலையை காட்சி படுத்தியிருந்தார்கள். சகுனியாக நடித்த ரூபணேஷ்வரன் வசன உச்சரிப்பிலும், நடை, உடை, பாவனை என அனைத்திலும் வெளுத்து வாங்கினார். அருண் ராமசாமி தர்மராக சிறப்பாக நடித்தார். ஒப்பனைகளும் அருமையாக இருந்தது. அவ்வளவு தானா என்று கேட்குறீர்களா, இல்லை. இனிமே தான் முக்கிய அங்கம் வருகிறது. அது தான் ‘துரித’ பட்டிமன்றம். ஆமாம் ஒரு மணி நேரம் தான் இந்த பட்டிமன்றத்துக்கு. பட்டிமன்றம் ——————— பட்டிமன்ற தலைப்பு, “வாழ்க்கையில் வெற்றி பெற சிறந்த வழி, தர்மமே!, சூழ்ச்சியே!”. ‘தர்மமே’ என்ற அணியில் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழக மாணவர்கள் அருள் ஓஸ்வின், ஹஃபிஸா மற்றும் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மாணவி ஐஸ்வர்யா தேவி பேசினார்கள். ‘சூழ்ச்சியே’ என்ற அணியில் முனைவர் ஜி இராஜகோபாலன், கவிஞர் மு சேவகன், திருமதி கிருத்திகா பேசினார்கள். பட்டிமன்றத்தின் நடுவர் திரு ரெ சோமசுந்தரம் ஐயா. முதலில் பேசவந்த ஹஃபிஸா, ‘தர்மம் தலை காக்கும்’ என்ற எம்ஜிஆர் படத்தை குறிப்பிட்டு அதனால் வாழ்க்கையில் வெற்றி பெற சிறந்த வழி தர்மமே என்று தன் வாத்தத்தை முன் வைத்தார். அடுத்த வந்த மன்னையார், முள்ளை முள்ளால் எடுப்பது போல இளையர்கள் சூட்சமமான சூழ்நிலைகளை புரிந்து கொண்டு நடந்ததால் தான் வெற்றி பெறலாம் என்ற தன் வாதத்தை முன் வைத்தார். அடுத்த தர்மமே என்று பேச வந்த ஐஸ்வர்யா இந்த நிலையற்ற மனித வாழ்க்கையில் நாமும் தர்மம் செய்து நம்மை சுற்றியுள்ளவர்களும் தர்மம் செய்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்றார். சூழ்ச்சியே என்று பேச வந்த கிருத்திகா மகாபாரதத்தில் தர்மம் வெல்லவே சூழ்ச்சி தான் காரணமாக அமைந்தது என்று வாதிட்டார். சூழ்ச்சி செய்து நாட்டை பிடித்த ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்றுத்தந்தது காந்தியின் தர்மமே என்று வாதிட்டார் அருள் ஓஸ்வின். ஆனால் அந்த காந்தியையே கடைசியில் சூழ்ச்சியால் சுட்டுக்கொன்றனர் என்று சொல்லி வாழ்க்கையில் வெற்றிபெற சிறந்த வழி சூழ்ச்சியே என்று முடித்தார் திரு சேவகன். இறுதியில் நடுவர், சூழ்ச்சியில் நிலையான வெற்றி பெற்ற முடியாது என்றும் வாழ்கையில் வெற்றிபெற தர்மமே சிறந்த வழி என்றும் தீர்ப்பளித்தார். இந்த பட்டிமன்றம் குறைந்த நேரமே நடந்ததால் நிறைய கருத்துகள் வைக்கப்படவில்லை. நடுவரும் பேச்சாளர்களும் நேரம் குறைவாக இருந்ததை சுட்டிக்காட்டினர். ஆனால் இதே நேரத்தில் நானும் மன்னையாரும் சேர்ந்து பொங்கோலில் நண்பர் நிஜாம் ஏற்பாடு செய்த பட்டிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் பேசினோம். ஆனால் இந்நிகழ்ச்சியில் நிறைய அங்கங்கள் இருந்ததால் பட்டிமன்றம் தனித்து தெரியவில்லை. ஆனால் அனைவரும் கொடுக்கப்பட்ட நேரத்தில் சிறப்பாக பேசினர். மாணவர்கள் எதிரணியில் இருந்த பெரியவர்களுக்கு இணையாக தங்கு தடையின்றி பொரிந்து தள்ளினர். பாஞ்சாலி சபதம் முடிப்பது ——————————————— நிகழ்ந்சியின் முடிவில் பாஞ்சாலி மீண்டும் அரங்கத்தினுள் வந்த தன் சபதத்தை முடித்து செங்குழுலை முடித்து செல்வதாக காட்சி அமைக்கப்பட்டது. இந்த அங்கத்தில், முதலில் பாஞ்சாலி சபதம் ஏற்பது எதற்காக, பின் சகுனியின் சூழ்ச்சி என்ன, தர்மர் தோற்றது எப்படி, எதை இழந்தார், பின் பாஞ்சாலி சபத்ததை முடித்தது என ஒரு சின்ன தனி நடிப்பு அங்கத்தின் மூலம் பாஞ்சாலி சபதத்தை சுருக்கமாக அழகாக சொல்லியது அனைவரையும் கவர்ந்தது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கருத்தாக்கம். நன்றியுரை ——————- போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளும், நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவியவர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது. அரங்கம் நிறைந்த கூட்டத்தில் பெரும்பாலும் மாணவர்களே இருந்தனர். ‘பார்வை 2017’ன் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் வனிதா மணியரசு நிகழ்ச்சியின் வெற்றிக்கு துணைபுரிந்த அனைவருக்கும் நன்றி கூறினார். முற்றிலும் மாணவர்களே திட்டம் போட்டு திறம்பட நடத்திய நிகழ்ச்சி இது. சிறப்பாக நிகழ்ச்சியை ஏற்று நடத்திய தலைவருக்கும் அவருடைய குழுவிற்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். ‘பார்வை’ பிறந்தநாள் கொண்டாட்டம் ————————————————————– ‘பார்வை’க்கு இது ஐந்தாவது ஆண்டு என்பதால், ஐந்தாவது பிறந்தநாளை ஐந்து பதிப்பாசிரியர்களும்/நிர்வாகிகளும் மேடைக்கு வந்து கொண்டாடினார்கள். ‘கேக்’ வெட்டி அல்ல, கேசரி வெட்டி:). அதுவும் ‘மெழுகுவர்த்தி’ ஊதி அனைத்து அல்ல, மெழுகுவர்த்தியை வைத்து அகல் விளக்கை ஏற்றி கொண்டாடினார்கள். ஏன் தெரியுமா? நம் பண்பாட்டு படி கொண்டாட்டங்களின் போது எதுக்கு அமங்கலமா விளக்க ஊதி அணைக்கனும் என்று விளக்கை ஏற்றி வைத்தனர் என்று தெரிவித்தனர். நிகழ்ச்சியை மாணவர்கள் ஜெரமாய, கலைவாணி இருவரும் சிறப்பாக தொகுத்து வழங்கினர். மிகவும் இயல்பாக, தங்களுக்குள் ஒரு உரையாடலுடன், நகைச்சுவையோடு அருமையாக செய்தனர். அவர்களுக்கு என் வாழ்த்துகள். மொத்ததில் நன்யாங் மாணவர்கள் ‘செங்குழல் சீவிய பத்தினி தீ’ என்னும் கவித்துவமான தலைப்பில் அழகிய கதம்பக் காவியம் படைத்தனர். #தமிழ்மொழி_விழா_2017 #தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_பின்னோட்டம் #தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம் https://www.facebook.com/ShanmugamTam/posts/1505692626109575