தமிழ் மொழி விழா 2017 – கருத்துகள்

இந்தாண்டு தமிழ் மொழி விழாவில் நான் கலந்துகொண்ட நிகழ்ச்சியின்
அடிப்படையில் விழா குறித்தான என்னோட கருத்தைப் பதிவு செய்திருக்கிறேன்.
இதில் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம். நாகரிகமான, ஆக்கப்பூர்வமான,
தனி நபர் தாக்குதல் இல்லாத எந்தக் கருத்தும் வரவேற்கப்படும். மற்றவை
கழிக்கப்படும்.

1. இந்த ஆண்டு தமிழ்மொழி விழா எப்படி இருந்தது?

இந்த ஆண்டு தமிழ்மொழி விழாவில் நடைபெற்ற 52 நிகழ்வில், மொத்தம் 23
நிகழ்வுகளில் நான் கலந்துகொண்டேன். கடந்த ஆண்டு 43 நிகழ்வில் 15 நிகழ்வுகளில்
நான் கலந்துகொண்டேன். கடந்த ஆண்டு நடந்த 4 நிகழ்ச்சிகள் இந்த ஆண்டு இல்லை.
இந்த ஆண்டு அவை தவிர 13 நிகழ்ச்சிகள் புதிதாய்ச் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நிறைய மாறுதல்கள். நிகழ்ச்சி
ஏற்பாட்டாளர்கள் ஏறக்குறைய அதே அமைப்பினர்கள்தான். ஆனால், புதிய
நிகழ்வுகள், புதிய முகங்கள், நிகழ்ச்சியின் தரம், அரங்கு நிறைந்த கூட்டம் இப்படிப் பல
நல்ல அம்சங்கள் இருந்தன.

2. சரி, இந்த நிகழ்ச்சிகள் யாரைச் சென்றடைந்தன?

கண்டிப்பாக நிறைய இளையர்களைச் சென்றடைந்தன. அதிலும் நன்யாங்
தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நடத்திய பார்வை நிகழ்ச்சியில் முற்றிலும்
இளையர்களே அரங்கம் முழுதும் காணப்பட்டனர். கிட்டதட்ட 25க்கும் மேற்பட்ட
நிகழ்ச்சிகள் மாணவர்களுக்காக இல்லை மாணவர்களை மையப்படுத்தி நடந்த
நிகழ்ச்சிகள். இதில் 10க்கும் மேற்பட்டவை மாணவர்கள்/பள்ளிகள் ஏற்று நடத்திய
நிகழ்ச்சிகள். மற்ற நிகழ்ச்சிகளில் 10க்கும் மேற்பட்டவை மாணவர்கள் பெரும் அளவில்
பங்குபெற்ற நிகழ்ச்சிகளாகும். பாலர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பயிலும்
மாணவர்கள் அதிக அளவில் இந்த ஆண்டு கலந்துகொண்டனர்.

3. சுமார் எத்தனை பேர் இந்த நிகழ்ச்சிகளை நேரில் கண்டு களித்திருப்பார்கள்?

Tam Shanmugam’s FB Post TLF 2017
என்னுடைய கணிப்புப்படி, பொன்னியின் செல்வன் மட்டும் சுமார் 4000 பேருக்கு
மேல் பார்த்திருப்பர்கள்.

மற்ற நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு நிகழ்வுக்கும் வந்திருந்த
பார்வையாளர்கள் எண்ணிக்கையைக் கூட்டினால் சுமார் 10000 பேர் பார்த்திருக்கக்
கூடிய வாய்ப்புள்ளது. அதில் 'repeat audience' என்று சொல்லப்படுகின்ற அதே
பார்வையாளர்கள் 4000 எனக் கழித்தால்(14,000லிருந்து), என் கணிப்புப்படி மொத்தம்
10,000 பார்வையாளர்களைச் சென்றடைந்திருக்கிற வாய்ப்பு உண்டு. இதில் பெரிய
அரங்குகளான மீடியாகார்பில் நடந்த தொடக்க நிகழ்ச்சி, சொற்சிலம்பம், சொற்போர்,
பாக்யராஜ் பட்டிமன்றம், பல காட்சிகளாக அரங்கேறிய தெனாலி, கவிச்சாரல், மாகோ
கதை நிகழ்ச்சி மற்றும் உமறுப்புலவர் நிலையத்தில் நடந்த கு சிவராமன், நாசர், மற்றும்
மற்ற அமைப்புகள் நடத்திய நிகழ்ச்சி, பள்ளிகளில் நடந்த நிகழ்ச்சி என அனைத்துமே
அடங்கும்.

4. எப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன?

இயல் இசை நாடகம் என எல்லாம் இருந்தன. இந்த ஆண்டு புதிதாய்த் தமிழ் இசை
நிகழ்வு ஒன்று அரங்கேறியது. பொன்னியின் செல்வன் நாடகம், சிவகாமி சபதம்
நாட்டிய நாடகம் புதிது. இளமைத்தமிழ்.காம் நடத்திய விக்கிபீடியா கட்டுரை போட்டி,
பழமொழி பேசலாம் என்ற காணொளி போட்டி, வாசகர் வட்டத்தின் குறும்படப்
போட்டி , சிட்ஃபியின் கலைமாலை எனும் குறும்பட நிகழ்வு, நன்யாங் தொழில்நுட்பக்
கல்லூரியின் 'பார்வை' எனும் மகாபாரத கதையொட்டிய நிகழ்ச்சி எனப் பல புதிய
நிகழ்ச்சிகள் நடந்தன.

தமிழ் இலக்கியம் பேசிய நிகழ்ச்சிகள் 5க்கும் மேல். இப்படிப் பட்டிமன்றம், பேச்சு
மன்றம், உணவு குறித்த விழிப்புணர்வு, வேலைவாய்ப்புக் குறித்து, இணையம்
கருத்தரங்கம், மெய்நிகர் புத்தாக்கம் குறித்து எனப் பல வகையான நிகழ்ச்சிகள் இந்த
ஆண்டு இடம் பெற்றிருந்தன.

5. நடத்தபட்ட இடம், அரங்கங்கள் எப்படி இருந்தது?

நான், ஏற்கனவே சில பதிவுகளில் முன்பே கூறியதுபோல் இந்த ஆண்டு தமிழ்மொழி
விழாவில் மொத்தம் உள்ள 48 நிகழ்வுகளில் (4 பள்ளி நிகழ்வு இல்லாமல்) இரண்டே
இரண்டுதான் சமூக மன்றங்களில் நடந்தன. ஒன்று உலு பாண்டான் சமூக மன்றத்தில்
நடந்த தெனாலிராமன் நாடகம். இன்னொன்று கீட் ஹாங் சமூக மன்றத்தில் நடந்த
பட்டிமன்றம். பெரும்பாலும் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம், தேசிய நூலகம்,
மரபுடைமை நிலையம் என மத்திய வட்டாரத்தில் (நான்கு நிகழ்ச்சிகள் வட்டார
நூலகங்களில் நடைபெற்றது) நடைபெற்ற தமிழ்மொழி விழாவைச் சிங்கையின்

Tam Shanmugam’s FB Post TLF 2017
வெளிவட்டார வீடமைப்பு பேட்டைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கடந்த
ஆண்டே சொல்லியிருந்தேன்.

அரங்கங்கள் அனைத்தும் சிறப்பான வசதிகளுடன் இருந்தன என்பது
குறிப்பிடத்தக்கது.

6. எதற்கு வீடமைப்பு பேட்டைகளுக்குத் தமிழ்மொழி விழாவை எடுத்துச் செல்ல
வேண்டும்?

அப்படி எடுத்துச் சென்றால் அந்த வட்டாரத்தில் உள்ள மக்கள் கண்டிப்பாக
நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். தமிழ் ஆர்வலர்கள் பெரும்பாலானோர்
எங்கிருந்தாலும் நிகழ்ச்சிக்கு வருவார்கள். ஆனால், வர இயலாமல் இருக்கும்
பெரும்பான்மையினரைச் சென்றடைய நாம் அவர்கள் இடத்துக்குப் போக வேண்டும்.

7. எப்படி வீடமைப்பு பேட்டைக்குப் போவது?
ரொம்ப சுலபம். நமக்கு ஏற்கனவே அதற்கான கட்டமைப்புகள் உள்ளன. ஒவ்வொரு
வட்டாரத்தில் உள்ள சமூக மன்றத்தின் இந்திய நடவடிக்கைக் செயற்குழுவைப்
பயன்படுத்தலாம். ஒவ்வொரு அமைப்பும் ஒரு சமூக மன்றத்தோடு/இந்திய
நடவடிக்கைகள் செயற்குழுவுடன் கூட்டு வைத்து நிகழ்ச்சி நடத்தலாம். இல்லை
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்திய வட்டாரம் எனக் குடியிருப்பு பேட்டைக்கு
மூன்றோ, நான்கோ நிகழ்ச்சிகள் நடத்தலாம்.

8. ஏன் மத்திய வட்டாரத்துக்கு எல்லோராலும் வர முடியாதா?

வாரத்தில் ஒரு நாள்தானே மத்திய வட்டாரத்திற்கு வரலாமே என்று கேட்கலாம்.
பெரும்பாலும் ஒரு நிகழ்ச்சி 3 மணி நேரம் நடக்கிறது. 30 நிமிடம் முன் கூட்டியே வர
வேண்டும். முடிந்து 30 நிமிடம் அங்கு இருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.
போக வர 1+1, 2 மணி நேரம். வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன் ஆயத்தமாக வந்த
பின் உடனே அவர்கள் வேலையைத் தொடர முடியாத… இப்படிக் கிட்டதட்ட ஒரு
சராசரி மனிதனுக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள குறைந்தது 5லிருந்து 7 மணி
நேரம் பிடிக்கும்.
இதுவே அவர்கள் வசிக்குமிடத்தில் நடத்தினால் குறைந்தது 2லிருந்து 3 மணி நேரம்
வரை மிச்சம் பிடிக்கலாம். அது குழந்தைகளுடன் உள்ளவர்களுக்கு,
வயதானவர்களுக்கு மிக அவசியமான நேரம்.

9. அப்ப ஒரு வட்டாரத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு இன்னொரு வட்டாரத்தில்
உள்ளவர்கள் எப்படி வருவது?

Tam Shanmugam’s FB Post TLF 2017

எல்லா நிகழ்ச்சிகளும் வெளி வட்டாரத்தில் வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை.
கண்டிப்பாகச் சில நிகழ்ச்சிகள் உமறுப்புலவர் மற்றும் மரபுடைமை நிலையங்களில்
வைக்கலாம். குறிப்பாக மாணவர்களுக்கான நிகழ்ச்சிகளை அங்கு நடத்தலாம். சில
பொது நிகழ்ச்சிகளையும் அங்கு நடத்தலாம். ஆனால், மற்ற நிகழ்ச்சிகளை வெளி
வட்டாரத்தில் வைக்கலாம். இப்போது மத்திய வட்டாரத்திற்கு வருபவர்கள் எங்கு
வைத்தாலும் போவார்கள். ஆனால், இப்போது தூரம் காரணமாக வராமல்
இருப்பவர்கள் பக்கத்தில் வைத்தால் வர வாய்ப்பிருக்கிறது. இதை நான் கீட் ஹாங்
சமூக மன்றத்தில் நடந்த பட்டிமன்றத்தில் கண்கூடாகப் பார்த்தேன். அது
பிரபலங்களுக்காக வந்த கூட்டம் என்றாலும் அங்கு வந்த அந்த வட்டாரத்தைச் சேர்ந்த
எனக்குத் தெரிந்த சிலர் மற்ற பிரபலங்கள் கூட்டத்திற்கு வரவில்லை.

10. அப்படிச் சமூக மன்றத்தில் நடத்தினால் எல்லோரையும் சென்றடையுமா?

இது ஒரு முயற்சிதான். தீவின் எல்லா திசையிலும் உள்ளவர்கள் ஒரு பொது இடத்திற்கு
வர முடியாது என்றே எல்லா வசதியையும் அவர்கள் வசிக்குமிடம் அருகில் செய்து
கொடுத்திருக்கிறது அரசு. அதோடு சமூக மன்ற ஆதரவோடு நடந்தால் அங்குள்ள
குடியிருப்பில் ஒவ்வொரு 'பிளோக்'கிலும் நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு இருக்கும்.
நுழைவுச்சீட்டுகள் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படும். அவர்கள் கலந்துகொள்ள
ஓர் ஊக்கமும் ஆர்வமும் ஏற்பட ஒரு வாய்ப்பாக இருக்கும்.

11. சமூக மன்றத்தில்தான் ஏற்கனவே பல நிகழ்ச்சிகள் தமிழ் மக்களுக்காக
நடக்கிறதே?

உண்மை. என்னோட பெரிய குறையே அதான். பெரும்பாலும் சமூக மன்றங்களுக்கு
மக்களுடன் தொடர்பு இருக்கும் அளவிற்குத் தமிழ் மீது தொடர்பு இல்லை. அதே
போல் தமிழ் அமைப்புகளுக்குத் தமிழ் மீது தொடர்பு இருக்கும் அளவிற்கு மக்கள் மீது
தொடர்பு இல்லை. இது இரண்டையும் இந்தத் தமிழ்மொழி விழா இணைக்கலாம்
என்பதே என் கருத்து. இதற்கு நிறைய விதிவிலக்குகள் இருக்கலாம். (தயவு செய்து
இந்த கருத்தை திரித்து வில்லங்கம் ஆக்காமல் இதிலுள்ள விஷயத்தை மட்டும்
பார்க்கவும்).

12. சமூகமன்றத்தில் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் நடத்த சரியான வசதிகள் இல்லை.
எப்படி நடத்துவது?

நம்முடைய நோக்கம் தமிழை மக்களிடம் கொண்டு செல்வதே, தற்போதுள்ள 'தமிழ்
நிகழ்ச்சிகளை' அல்ல. நம் சிங்கை மக்கள் விரும்பும் தமிழ் நிகழ்ச்சிகளை அதற்கேற்ப
வடிவமைக்கலாம்.

Tam Shanmugam’s FB Post TLF 2017

முந்தைய காலங்களில் தமிழர் திருநாள் போன்ற நிகழ்வுகளுக்கு மக்கள் தீவின் எல்லா
பகுதியிலிருந்தும் செல்லும் வழக்கம் இருந்தது. ஆனால், நிலைமை அதே மாதிரி
இல்லை. இப்போது நாம்தான் அவர்களிடம் செல்ல வேண்டும் என்பது என் கருத்து.

13. தமிம்மொழி விழா யிஷுன், பெடோக், பொங்கோல், டெலோக் பிளாங்கா, தொ
பொயோ, ஜூரோங் என பரவலாகத் தீவெங்கும் உள்ள தமிழர்களைச்
சென்றடைந்ததா?

இதற்கு என்னிடம் நேரடியான பதில் இந்த ஆண்டு கிடையாது. அடுத்த ஆண்டு
கிடைக்கலாம். ஆனால், தீவெங்கும் இருந்து பல வட்டாரத்திலுள்ள பள்ளிகள்
கலந்துகொண்டன.

ஆனால், இன்னும் செய்ய வேண்டியது பல உள்ளன. இளைய பெற்றோர்களைச்
சென்றடைய வேண்டும். தமிழ் பேச வாய்ப்பில்லாத பலரைக் கைப்பிடித்து அழைத்து
வர வேண்டும். அதற்கு நிறைய ஆள் பலம் வேண்டும். தமிழ் அமைப்புகள் இதில்
ஈடுபட வேண்டும்.

14. ஏப்ரல் மாதத்தில் தேர்வு நேரமாக இருப்பதால் மாணவர்களுக்கு நிகழ்ச்சியில்
கலந்துகொள்ள முடியவில்லை என்பது சரியா?

நிச்சயமாக. அதை மாணவர்கள் சிலர் என்னிடம் கூறியிருக்கின்றனர். ஆனால், அது
பெரும்பாலும் பல்கலைக்கழக மாணவர்களைப் பாதிக்கிறது. உயர்நிலைப்
பள்ளியிலும் மாணவர்களை ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்திற்குப் பிறகு அழைத்து
வருவது சிரமம். காரணம் அவர்களுடைய ஆண்டிடைத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் இறுதி
வாரத்தில் நடைபெறுவதால் தமிழ் மாணவர்களை அழைத்து வருவது சற்றுச்
சிரமம்தான். இது குறித்து நான் கடந்த ஆண்டே சம்பந்தப்பட்டவர்களிடம் பேசினேன்.
அது பரிசீலனையில் உள்ளதாகக் கூறினார்கள். ஆனால், மாற்றுவதில் நிறைய சிரமம்
உள்ளதாக அறிகிறேன், பார்ப்போம்.

15. தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளதா?

கண்டிப்பாக. ஆனால் நிகழ்ச்சிக்கு வரும் பார்வையாளர்கள் மாறுபட்டவர்கள்
என்பதால் அது பெரிதளவில் பாதிக்காது. ஆனால், ஒரேவிதமான
பார்வையாளர்களைக் கொண்ட சில நிகழ்ச்சிகள் ஒரே நேரத்தில் நடைபெற்றன. அது
தவிர்க்கப்பட வேண்டும்.

Tam Shanmugam’s FB Post TLF 2017
அதேவேளையில் வளர்தமிழ் இயக்கம் நடத்தும் தமிழ் மொழி விழா பட்டியலில்
இல்லாத சிலர் நாங்களும் தமிழ் நிகழ்ச்சிகள் நடத்துகிறோம் எனத் 'தமிழ்மொழி விழா'
என்று விளம்பரப்படுத்திச் சில நிகழ்ச்சிகளை நடத்தியது போட்டிக்கு நடத்தியது மாதிரி
இருந்தது. இதைத் தவிர்க்கலாம். வளர்தமிழ் இயக்கம் நிகழ்ச்சி நடத்தும்போது அதற்கு
ஒத்துழைப்புக் கொடுத்து மற்ற நிகழ்ச்சிகளைப் பிறகு வைக்கலாம்.

தமிழ்மொழி விழா முடிந்து ஓரிருவாரம் சில தமிழ் நிகழ்ச்சிகளைத் தவிர்க்கலாம்.

16. தமிழ்மொழி விழா ஆண்டு முழுதும் கொண்டாடப்பட வேண்டும் என்ற கருத்து
உள்ளதே?

கூடாது. ஒரு விழா என்பது ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் நடப்பதே. ஆண்டு
முழுதும் நடத்தினால் அது விழா அல்ல.
ஆனால், ஒன்று செய்யலாம். வளர்தமிழ் இயக்கம் தமிழ்மொழி விழாவில் சில
குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை மட்டுமே வைத்துவிட்டு மற்ற நிகழ்ச்சிகளை அதே
ஆதரவோடு 'வளர்தமிழ் இயக்கத்தின்' பெயரோடு, விளம்பர, பொருளாதார ஆதரவில்
மாதம் ஒரு அமைப்பின் நிகழ்ச்சியை நடத்த ஆவன செய்யலாம்.

ஒரே மாதத்தில் இத்தனை நிகழ்ச்சிகளை நடத்துவதற்குப் பதிலாக மாணவர்களை
மையப்படுத்தும் அல்லது மாணவர்களுக்கான நிகழ்வுகளைத் தனியாகவும்
மாணவர்களை மையப்படுத்தாத பொது நிகழ்வுகளைத் தனியாகவும் நடத்தினால்
மாணவர்கள் பயனடைய வாய்ப்புண்டு. போட்டியில் பங்குபெறும் அல்லது வெற்றி
பெறும் மாணவர்கள் மட்டுமே நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர். இதைத் தவிர்க்க
என்ன செய்யலாம் என்று சற்றே யோசிக்கலாம்.

17. நிகழ்ச்சியின் கால அளவு சரியா? தரம் எப்படி?

ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு நிகழ்ச்சி நடத்தும்
ஒவ்வொருவரும், ஒவ்வொரு அமைப்பும் அதற்காக எடுத்துக்கொள்ளும் பெரும் முயற்சி
பாராட்டுக்குரியது.
வெகுசிலரைத் தவிர பெரும்பாலானோர் அவர்களின் வேலை அல்லது தொழில்
சுமைகளுக்கிடையில் குடும்பங்களையும் கவனித்துத் தங்களுக்குக் கிடைக்கும் சிறிது
ஓய்வு நேரத்தில் நிகழ்ச்சிப் படைக்கப் பாடுபடுகிறார்கள். ஒரு தொண்டூழியராக
அவர்களின் உழைப்பு போற்றுதலுக்குரியது. ஒரு நிகழ்ச்சி நடத்துவது அவ்வளவு
சுலபமல்ல, அதற்கான உழைப்பு மிகக் கடுமையானது.

Tam Shanmugam’s FB Post TLF 2017
சில பேச்சாளர்கள் காரணமாக அல்லது வேறு சில குழப்பங்களால் சில நேரங்களில்
சில நிகழ்ச்சிகள் நாம் எதிர்பார்க்கும் வகையில் இருப்பதில்லை என்பது உண்மையே.
அது தவிர்க்கப்படலாம்.

பொதுவாக ஒரு நிகழ்ச்சி இரண்டு மணி நேரம் இருந்தால் சிறப்பு. அப்படி நடத்தினால்
இன்னும் நிறைய பேரை ஈர்க்க வாய்ப்புண்டு. சில சடங்கு சம்பிரதாயங்களைத்
தவிர்க்கலாம். தேவையில்லா உரைகளை அல்லது அதன் நேரத்தைக்
கட்டுப்படுத்தலாம்.
இரண்டு மணி நேரத்திற்கு மேல் போனால் சலிப்புத் தட்டும் வாய்ப்புண்டு.

18. நிகழ்ச்சிகளில் மாலை, பொன்னாடை குறித்து ஏதாவது கருத்துண்டா?

இது குறித்து கடந்தாண்டே பதிவு செய்திருக்கிறேன். இந்தாண்டும் ஏப்ரல் 4ஆம் தேதி
"பார்வை 2017 – ஓர் பார்வை" என்ற தலைப்பில் என் முகநூல் பதிவில்
எழுதியிருந்தேன். மீண்டும் இதோ உங்களுக்காக:)

விழாக்களில் நடக்கும் மாலை, பொன்னாடை வைபவங்களைக் குறித்து நான் மாற்றுக்
கருத்துக் கொண்டவன். ஆனால், நான் ஒட்டு மொத்தமாக அதை எதிர்க்கவில்லை.
பொன்னாடை அளிப்பதையோ, பெறுவதையோ கொச்சைப்படுத்துவதோ, குற்றம்
சொல்வதோ என்னுடைய நோக்கம் அல்ல. ஆனால், அதேவேளையில் ஒரு மாற்றுக்
கருத்தை முன் வைக்கிறேன். சிறப்பு விருந்தினர்கள், விருதாளர், வேற்று இனத்தைச்
சேர்ந்தவர்கள் இப்படிக் குறிப்பட்ட சிலருக்கு அணிவிப்பதில் நான் உடன்படுகிறேன்.
நம் பண்பாட்டை, பழக்கத்தைக் கடைபிடிப்பதில் தவறில்லை. ஆனால், இரண்டு
விஷயத்துக்காக நான் அதை ஆதரிப்பதில்லை.
1. புரவலர்களுக்கு அணிவிப்பதை. அவர்களிடமே காசு வாங்கி அவர்களுக்கே
திருப்பிக் கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அவர்களைக் கூட்டத்தினருக்கு
அறிமுகப்படுத்த, அவர்கள் படத்தைக் கணொளியில் காண்பிக்கலாம். அவர்களை
மேடைக்கு அழைத்து வேறு ஏதாவது கொடுக்கலாம்.
2.குறிப்பிட்ட சிலருக்கு ஒவ்வொரு அமைப்பும், ஒவ்வொரு நிகழ்விலும், ஒவ்வொரு
ஆண்டும் பொன்னாடை கொடுத்தால் ஒரு கட்டத்தில் அவரிடம் எத்தனை
பொன்னாடைகள் இருக்கும்? அவர்கள் பாவம் இல்லையா?
எங்க வீட்ல என்னோட பாண்ட், சட்டையை வைக்கவே ஒரே ஒரு அலமாரியில ஒரு
ஓரத்தில அதுவும் 33% சதவிகிதம்தான் இட ஒதுக்கீடு பண்ணியிருக்காங்க:)
இந்த பொன்னாடைகளை இவர்களில் சிலர் விரும்புவதில்லை என்பதுதான் உண்மை.
யாரும் ஏன் போடவில்லை என்று கேட்கப் போவதில்லை. வேறு வழியில்லாமல்
வாங்கிக் கொள்கிறார்கள்.
இது என்னோட தனிப்பட்ட கருத்து. இதுதான் சரி என்று நான் சொல்லவில்லை. இது
ஒரு சின்ன விஷயம்தான், ஆனால், இதில் நேரத்தை மிச்சப்படுத்தலாம், முடிந்தவரைத்
தவிர்க்கலாம், அவ்வளவு தான். இதுக்காக என்கிட்ட சண்டைக்கு வராதீங்க:)

Tam Shanmugam’s FB Post TLF 2017

19. இத்தனை விருதுகள் தேவையா?

இது குறித்தும் ஏற்கனவே 06-மே- 17 அன்று முகநூலில் பதிவு செய்தேன். மீண்டும்
உங்களுக்காக.

தமிழ் மொழி மாதம் என்றில்லை, ஆண்டு முழுவதும் சிங்கையில் எதற்காவது ஒரு விழா
அதில் யாருக்காவது ஒரு விருது…. இல்லை இல்லை ஒரே மேடையில் பல பேருக்கு
விருது கொடுக்கப்பட்டு வருகிறது.

இது வரை விருது பெற்றவர்களையோ, கொடுத்தவர்களையோ குறைத்து
மதிப்பிடவில்லை. அவர்கள் அனைவரது மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
ஆனால் அந்த விருதின் மேல் உண்டா என்றால் அது கேள்விக்குறியே. நான் எல்லா
விருதுகளையும் கூறவில்லை. சில விருதுகள் மதிப்புமிக்கவை. நான் விருது
கொடுப்பதை எதிர்க்கவில்லை. அதன் நோக்கம் என்ன என்பதைப் பார்க்கவேண்டும்.
விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விதம் அதிலுள்ள வெளிப்படை தன்மை
இதையெல்லாம் கருத்தில் கொள்ளவேண்டும். எடுத்துகாட்டாக எழுத்தாளர் கழகம்
வழங்கும் கண்ணதாசன் விருது, புத்தக பரிசு மற்றும் கவிமாலை வழங்கும் சிறந்த
கவிதை புத்தகத்துக்கான தங்கப்பதக்க விருது, இளங்கவிகளுக்கான தங்க முத்திரை
விருது இப்படி இந்த விருதுகள் எல்லாம் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறது, யார்
தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை மேடையிலோ அல்லது ஊடகத்திலோ தெளிவாகச்
சொல்லப்படுகின்றது. இது எனக்கு தெரிந்த சில விருதுகள். இதே மாதிரி
வெளிப்படையாகச் சொல்லப்படுகிற அனைத்து விருதுகளும் சிறப்பே. அதேசமயம்
துறை சார்ந்து கொடுக்கப்படும் விருதும் சரியே. ஆனால், சில விருதுகள் ஏன், எதற்கு
என்றே தெரியாது. ஒரே மேடையில் பல பேருக்குக் கொடுக்கப்படும். ஒருவருக்கே
அடுத்தடுத்த நாள்களில் இல்லை அடுத்தடுத்த ஆண்டுகளில் வெவ்வேறு
அமைப்பினரால் கொடுக்கப்படும்.

ஒரு விருதுக்கோ, விருத்தாளருக்கோ நாம் கொடுக்கும் மரியாதை அந்த விருதைப்
பெற்றவரை மேடையில் இல்லாதபோதும் அவர் போற்றப்பட வேண்டும். பதவியில்
இல்லாத போதும் அவர் மதிக்கப்படவேண்டும். முதல் நாள் விருது வாங்கிய ஒருவர்
அடுத்த நாள் ஒரு நிகழ்வில் உட்கார இடம் கிடைக்காமல் கூட்டத்தோடு கூட்டமாக
நின்று கொண்டிருந்தார். அவருக்கு எல்லா நிகழ்விலும் உரிய அங்கீகாரம்
கொடுக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியே.

கடந்த ஆண்டு ஒரு குறிப்பிட்ட விருதை யார் வாங்கினார்கள் என்று பலருக்கும்
தெரியாது. ஒரு விருதுக்குப் பெருமை அது எல்லோராலும் அங்கீகரிக்கப்பட
வேண்டும். அதற்கு எல்லா அமைப்பினரும் சேர்ந்து ஒரு “விருது தேர்வாளர்கள் குழு”
அமைக்கப்பட்டு, ஒவ்வொரு துறையிலும் சாதித்தவர்களை ஈராண்டிற்கு ஒரு முறை

Tam Shanmugam’s FB Post TLF 2017
தேர்ந்தெடுத்து, அவர்கள் விழாவில் ஓர் அங்கமாக இல்லாமல் அதை தனியாக ஒரு
விழா எடுத்துக் கொடுக்கலாம். விழாவுக்கு ஒரு விருது என்றில்லாமல் விருதுக்கு ஒரு
விழா எடுக்கலாம். தற்போது அமைப்புகள் கொடுக்கும் விருதுகளையே அங்குக்
கொடுக்கலாம். விருதுகளை ஒருமுகப்படுத்தலாம். அது விருதுக்கும் விருத்தாளர்க்கும்
மதிப்பானதாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து. இப்படிச் செய்தால்
சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து. இதுதான் சரி என்று நான் சொல்லவில்லை.
வேறு மாற்று கருத்து இருந்தாலும் சொல்லலாம்

20. இந்தாண்டு அனைத்து நிகழ்விலும் ஒரே தமிழ்தாய் வாழ்த்துப் பாடினார்களே?

ஆமாம், கடந்தாண்டு தமிழ்மொழி விழாவில் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு தமிழ்த்தாய்
வாழ்த்து பாடினார்கள். அதை ஏன் அனைவரும் ஓர் உடன்பாட்டுக்கு வந்து சிங்கையில்
ஒரே தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடக்கூடாது என்ற கேள்வியை 2016 ஏப்ரல் 3ஆம்
தேதி "யுத்தம்" என்ற தலைப்பில் என் முகநூல் பதிவில் கேட்டிருந்தேன். 2016 ஏப்ரல்
9ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை தமிழ் முரசிலும் என்னுடைய அந்தக் கேள்வி
வெளிவந்தது. சம்பந்தப்பட்ட தலைவர்களிடமும் பேசினேன். இந்தாண்டு ஓரிரண்டு
நிகழ்வைத் தவிர நான் கலந்துகொண்ட எல்லா நிகழ்விலும் பாரதியின் 'வாழ்க
தமிழ்மொழி…' என்ற பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஒலித்தது. அதோடு தமிழ்மொழி
விழா முடிந்து நேற்று ஒரு நிகழ்ச்சியிலும் இதே பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக
ஒலித்ததில் மிக்க மகிழ்ச்சி.
இது என்னால் நடந்தது என்று நான் சொல்ல வரவில்லை. என்னுடைய ஒரு வருத்தம்
நீங்கியதில் மகிழ்ச்சி.

21. ஊடகம்/சமூக ஊடகம் செயல்பாடு எப்படி?

இந்த ஆண்டு ஊடகத்துறையும் அருமையாகத் தங்கள் ஆதரவை நல்கினர். தமிழ்
முரசில் தினமும் முதல் பக்கத்தில் வரும் 'சொல்லிச் செல்லும் சொல்லடைகள்',
தமிழ்மொழி விழா குறித்த விளம்பரங்கள், அதோடு மாணவ நிருபர்கள் பறந்து பறந்து
சேகரித்த செய்திகள் பெரும்பாலும் உடனுக்குடன் தமிழ்முரசில் வந்தன.

வசந்தம் செய்தியில் நிகழ்ச்சி குறித்தான விரிவான செய்திகள், காட்சிகள், தாளம்
நிகழ்ச்சியில் அதன் தொகுப்பு, நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு எனச் சிறப்பாகச் செய்தனர்.

ஒலி 96.8ல் நாரா மற்றும் கார்த்திக்கின் 'சொல்லிச் செல்லும் சொல்லடைகள்'
குறுநாடகம், தினமும் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு, செய்தி, நேரலை என தங்களின்
பங்கைச் சிறப்பாகச் செய்தனர்.

Tam Shanmugam’s FB Post TLF 2017
அதோடு சமூக ஊடகங்களிலும் ஒலி 96.8, வசந்தம் செய்தி, தமிழ் முரசு அனைவரும்
உடனுக்குடன் செய்திகளைப் பகிர்ந்து வந்தனர். தனி நபர்களும் தங்களால் முடிந்த
அளவு முகநூல், வாட்ஸ்அப் எனச் சமூக ஊடகத்தில் தமிழ்மொழி விழா குறித்துச்
செய்திகளைப் பகிர்ந்து வந்தனர்.

22. தமிழ்மொழி விழா அவசியமா?

கண்டிப்பாக. சிங்கையில் தமிழர்களுக்குத் தமிழ்மொழி இரண்டாம் மொழி.
தேர்விற்காகவும், மதிப்பெண்களுக்காகவும் படிக்க வேண்டிய சூழல்.
பாடத்தைத் தாண்டி மாணவர்களிடையே, மக்களிடையே மொழி உணர்வை
வளர்ப்பதில் இது போன்ற விழா நடப்பது மிக மிக அவசியம். அதைச் சரியாக
செய்துகொண்டிருக்கிறது வளர்தமிழ் இயக்கத்தின் தமிழ்மொழி விழா.

23. தமிழ்மொழி விழா ஏற்பாடு எப்படி இருந்தது?

மிகச் சிறப்பாக இருந்தது. அதன் அட்டவணை வெளியான நாள் முதல் கவனித்து
வருகிறேன். ஒரே பக்கத்தில் ஒரு மாதத்திற்கான 52 நிகழ்ச்சி, அதன் நேரம், இடம்,
ஏற்பாட்டாளர்கள் என அவ்வளவு செய்தியும் கையடக்க தொலைபேசியில். இதில்
சிறப்பு என்னவென்றால் அதில் ஒரு இம்மி அளவும் எனக்குத்தெரிந்த வரையில்
மாற்றமில்லை. நிகழ்ச்சி நடக்கும் நாளன்று நான் தொடர்ந்து முகநூலில் பகிர்ந்து
வந்தேன். அதைப் பார்த்துவிட்டுச் சிலர் சென்றனர். இது வரை யாரும் எதுவும்
சொல்லவில்லை.

அதற்கான உழைப்பு சுமார் பத்து மாதங்கள், ஆனால், பிறந்த முதல் நாளன்றே
தொடக்க நிகழ்ச்சியில் அசத்தினார்கள். இதுவரை நான் பார்த்த நான்கு தொடக்க
நிகழ்ச்சியில் அதுதான் சிறந்தது. அது குறித்து பதிவு போட நினைத்தேன் ஆனால்
அப்போது நேரமில்லை.

அடுத்தாக 'வாழும் மொழி வாழும் மரபு' புத்தகம். அது குறித்து ஒரு பதிவு
எழுதியிருக்கிறேன். நல்ல புத்தகம். ஆனால், நிகழ்வுகளில் கொடுக்கப்படும்போது
அதைப் பலர் ஆங்காங்கே விட்டுச் செல்வதைப் பார்க்கும்போது வருத்தமளிக்கிறது.

அடுத்து, தலைவர் திரு இராஜாராம் மற்றும் செயலாளர் திரு அன்பரசு இருவரையும்
பார்க்காத நிகழ்ச்சி கிடையாது. இருவரும் சுழற்சி முறையில் அனைத்து
நிகழ்ச்சிகளுக்கும் சென்று வந்தனர். கண்டிப்பாகச் சரியாகத் தூக்கம் இருந்திருக்காது,
சரியான நேரத்தில் தேவையான அளவு சாப்பிட்டிருக்க மாட்டார்கள். நான் அதைப்
பார்த்திருக்கிறேன். இருவருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றி. இவர்கள் மட்டுமா,
இவ்விழாவின் நிர்வாக ஒருங்கிணைப்பைக் கவனித்து கொள்கிற தேசிய மரபுடைமை

Tam Shanmugam’s FB Post TLF 2017
நிலையத்தின் அதிகாரி செல்வி தஷ்ஷினி வளர்தமிழ் இயக்கத்தின் திருமதி விஜி
ஜகதீஷ், திரு ஜோதி மாணிக்கம் எனப் பலரும் இரவு பகல் என உழைத்திருக்கின்றனர்.
அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.

தமிழ்மொழி விழாவில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. பங்குகொண்ட அனைத்து
ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

அனைவரும் சிறப்பாகச் செயலாற்றினர். நன்றி, வணக்கம்.

எச்சரிக்கை : மீண்டும் பெரிய பதிவு. அவசியம் கருதி ஒரே பகுதியாக பதிவேற்றப்பட்டுள்ளது.இந்தாண்டு தமிழ் மொழி விழாவில் நான்…

Posted by Tam Shanmugam on Sunday, May 7, 2017

பழமொழி பேசலாம்

‘பழமொழி பேசலாம்’ என்ற நிகழ்ச்சியை “உறுமி” தமிழ் மின்னிதழ் என்ற அமைப்பு நேற்று(29-ஏப்ரல்-2017, சனிக்கிழமை) காலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடத்தியது.

இது என்ன நிகழ்ச்சினு கேக்குறீங்களா?

இப்ப இந்த இளைஞர்களிடையே ‘தம்படம்’ என்ற Selfie மிக பிரபலமாயிருக்கு. அதையே ‘தம்-காணொளி'(selfie-video) பதிவா உயர்நிலைப்பள்ளி மாணவர்களை செய்யச்சொல்லலாம் என்ற அதில் ஒரு போட்டியும் ஏற்பாடு செய்திருக்கிறார் ‘உறுமி’யின் தலைவர் திரு கல்யாண்குமார் . இவர் பலதுறைதொழிற் கல்லூரியில் மென்பொருள் துறையில் பணி புரிந்து வருகிறார்.

தமிழ்மொழியை மாணவர்களிடைய கொண்டு செல்வதின் ஒரு யுக்தியாக அவர்களை ‘பழமொழிகள்’ பேசச்சொல்லி அதை அவர்கள் பாணியில் காணொளியாக பதிவு செய்து இணையத்தில் ‘YouTube’ல் வலம் வரச்செய்திருக்கிறார். இது நிறையபேர்களுக்கு

மேலும் படிக்க…

தமிழர் பாரம்பரிய உணவும் ஆரோக்கியமும்

எச்சரிக்கை: கண்டிப்பாக முதல் பகுதியை படிக்கவும். இரண்டு பகுதியையும்
பொறுமையாக உள்வாங்கி படிக்க 4 நிமிடமும் 40 நொடிகளாகும். மேலோட்டமாக
படிக்க 2 நிமுடமும் 38 நொடிகளாகும். படிக்காமல் வாழ்த்துகள் மட்டும் போட 18
வினாடிகளாகும். படிக்காமல் வெறும் 'லைக்' மட்டும் போட ஒரு வினாடி ஆகும்.
படித்துவிட்டு 'லைக்' போடாமல் போனால் பல மணி நேரம் வருத்தப்பட
வேண்டியிருக்கும் ��

முதல் பகுதி
— — — — — —

"பேலியோ உணவு முறைக்கு மாற போறேன்",னு சொன்னதும்
"என்னது போலியோவா"னு என் மனைவி Seetha கேட்க,
"இல்லம்மா, இது ஒரு உணவு முறை. இத கடைபிடிக்கறவங்க சோறு, இட்லி, தோசை,
சப்பாத்தி, பொங்கல் இப்படி எதுவும் சாப்பிடக்கூடாது"
"அப்புறம், என்ன இலை, தழையவா சாப்பிடனும்"
"இல்ல, தினமும் காலைல 100 பாதாம்பருப்பு அப்புறம், பட்டர் டீ…"
"இங்க பாருங்க, என் உயிர வாங்காம, ஒழங்கா போடுறத சாப்பிட்டு, அமைதியா
போயிடுங்க…"
"இல்லம்மா, இந்த பேலியோவ கடைபிடிச்சு, நம்ம ரவியோட அப்பாவுக்கு நீரிழிவு
நோய் சரியாகிடுச்சாம், அவரோட அண்ணன் ஒருத்தர் 110 கிலோ எடையிலயிருந்து
80 கிலோவுக்கு குறைஞ்சிடுச்சாம்"
"சாப்பிடாமா இருந்தா எடை குறையத்தான் செய்யும். நம்ம சாப்பிடற இட்லியில
எவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கு தெரியுமா. ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிட்டு, நல்ல
உடற்பயிற்சி பண்ணா ஆரோக்கியமா இருக்கலாம்"
இப்படி மூனு ஆண்டுகளுக்கு முன்னாடி என் பேலியோ சமயமாற்றத்தை தடை
செஞ்சுட்டாங்க என் மனைவி.

பேலியோ மக்களே என்னை அடிக்க வராதீங்க, நான் பேலியோவுக்கு எதிரானவன்
அல்ல. கடவுள் இல்லேனு சொல்லல, இருந்தா நல்லாயிருக்கும்தான்னு சொல்றேன்.

சரி, இப்ப எதுக்கு இத சொல்றேனு கேக்குறீங்களா? கடந்த வாரம் தமிழ்மொழி
விழாவில், 15-ஏப்ரல்- 2017, சனிக்கிழமை மாலை உமறுப்புலவர் அரங்கில்
அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம்(சிங்கப்பூர்) நடத்திய
விழாவில் "தமிழ் உணவுக்கும் அமுதென்று பேர்" என்று சிறப்புரையாற்றிய மருத்துவர்
கு சிவராமன் இட்லியின் பெருமையை எடுத்துச்சொன்னார்.

ஜெர்மனி, இத்தாலி, சீனா, பிரேசில், மத்திய தரைகடல் பகுதி, இந்தியா என பல
நாட்டு உணவு வகைகளையும் வைத்து ஆராய்ச்சி மேற்கொண்ட உணவு மற்றும்
வேளாண் அமைப்பு உலகத்தின் மிகச் சிறந்த காலை உணவு என தேர்ந்தெடுத்தது
இட்லி தான் என கூறினார். இதை ஐக்கிய நாட்டின் உணவு மற்றும் வேளாண்
அமைப்பில்(Food and Agriculture Organization of United Nation) வேலை செய்த
அக்‌ஷயா என்ற இந்தியர் ஆக்ஸ்ஃபோர்ட் பப்ளிகேஷன்ஸின் "Ancient Indian Foods"
என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறினார். அது ஏன் என்ற காரணத்தை
கூறும்போது இந்த ஒரு உணவைத்தான் தாய்பாலூட்டிய காலத்திற்கு(weaning period)
பிறகு குழந்தைகளுக்கு கொடுக்க முடியும், நோயுற்றவர்களுக்கு கொடுக்க முடியும்,
அறுவை சிகிச்சைக்கு பிறகு கொடுக்க முடியும், இளமையிலும், முதுமையிலும்
கொடுக்க முடியும். எல்லாம் காலத்திலும், எல்லா பருவத்திலும் கொடுக்க கூடிய ஒரே
உணவு இட்லிதான் என சொன்னார்.

உலகில் பல்வேறு உணவு கட்டமைப்பு உள்ளது. சீனாவில் மகிச் சிறந்த உணவு
கட்டமைப்பு உள்ளது, பிரேசிலில் மிகச் சிறந்த உணவு கட்டமைப்பு உள்ளது, பல்வேறு
ஆப்பிரிக்க நாடுகளில் அவர்களுக்கென்று மிகச் சிறந்த உணவு கட்டமைப்பு உள்ளது.
ஆனால் இங்கெல்லாம் இல்லாத ஆகச்சிறந்த நுண்ணறிவு நம் தமிழ் பாராம்பரிய
உணவில்தான் உள்ளது என்றார். எடுத்துகாட்டாக சமைத்து உணவை தாளிச்சு
எடுப்பது என்பது தமிழ் உணவில் மட்டும்தான், வேறு எந்த நாட்டு உணவு
வகைகளிலும் 'தாளிதம்' என்ற முறை கிடையாது. தாளிப்பது என்பது மணத்திற்காக
அல்ல அதற்கு பின்னால் நிறைய மருத்துவம் குணம் உள்ளது என்றார். நான்காயிரம்
ஐந்தாயிரம் ஆண்டு அறிவு இதில் உள்ளது. அதனால் இந்த தமிழ் உணவை
அமுதென்று சொல்கிறோம் என்றார்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். எனக்கு மிகவும் பிடித்த
உணவு 'இட்லி தாளிச்சது'தான்:) சின்ன வயசில இருந்து இன்னைக்கு வரைக்கும்
எத்தனை முறை சாப்பிட்டாலும் திகட்டாத, அலுக்காத உணவு. நெல்லை
வட்டாரத்தில் அதிகமாக இந்த உணவு சாப்பிடுவார்கள். பொதுவாக இது தமிழ்நாட்டு
மக்களிடையே 'இட்லி உப்புமா' என அறிமுகமாகி பிரபலமானது 'சூரியவம்சம்'
படத்தக்கு பிறகுதான் என்று நினைக்கிறேன்.

தான் தமிழ் உணவு குறித்து பேசவேண்டிய அவசியம் ஏன் என்று விளக்கினார்.

உணவு என்றால் என்ன என்று விளக்குவதற்கு உலகம் முழுதும் யோசித்து
கொண்டிருக்கிறார்கள். "உணவெனப்படுவது நிலத்தோடு நீரே" என்று தமிழில்
அன்றே சொல்லியிருக்கிறார்கள். அதன் பொருள் என்னவென்றால் எந்த அளவிற்கு
நிலத்தையும் நீரையும் பாதுக்காப்பாக வைத்திருக்கிறோமோ அந்த அளவுக்கு உணவு
பாதுகாப்பாக இருக்கும் என்பதே என்று விளக்கினார்.

20 ஆண்டுக்கும் மேலாக தான் பல்வேறு விதமான நோய்க்கு ஆளானவர்களை
தன்னுடைய மருத்தமனையில் சந்தித்து வருவதாகவும். அதில் அண்மையில் நன்கு
படித்து நல்ல வேலையில் உள்ள இளம் தம்பதிகள் தங்கள் 3 வயது குழந்தையுடன்
தன்னை காண வந்ததை கூறினார். காலை எப்போதும் போல் வேலைக்கு சென்ற
அந்த இள வயது தந்தை மாலையில் தலைவலி என்று மருத்துமனைக்கு போக
அவருக்கு மூளையில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை கூறிய அவர் ஒரே
நாளில் மனிதனின் வாழ்க்கையை புற்றுநோய் எப்படி புரட்டி போடுகிறது என்பது
பற்றி குறிப்பிட்டார்.

இது உண்மை, திரைப்படத்தில் மட்டுமே பார்த்து வந்த இந்த புற்று நோய் கடந்த
ஐந்தாண்டுகளில் எனக்கு மிகவும் நெருங்கிய உறவினர்களையும் , நண்பர்களையும்
தாக்கிய போது அதன் கொடுமை என்ன என்பதை நேரடியாக பார்க்க முடிந்தது.
இந்த நோய்கள் கூட்டம் ஏன் இப்படி பெருகிவருகிறது என்று நானும் சிந்தித்ததுண்டு.

இந்தியாவில் புற்றுநோய் அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்
என்றும் அதிகமாக குழந்தைகள் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாவதில் தமிழகம்
முதலிடம் என்றும் கூறினார்.

இந்த மாதிரியான நோய்கள் கூட்டம் நம்மை தாக்குவதற்கான மூன்று முக்கியமான
காரணங்களில் முதலில் நிற்பது உணவு. நமக்கு முன் வைக்கப்படுகின்ற
பரிமாறப்படுகின்ற இந்த உணவு முறைக்கு பின் ஒரு மிகப்பெரிய வணிக வன்முறை
உள்ளது, அது பயிரிடுவதில் தொடங்கி, வளர்த்து, தயாரித்து, பக்குவபடுத்தி,
பதப்படுத்தி, பாதுகாத்து பரிமாறப்படுவது வரை வணிகப் பிண்ணணி உள்ளது என்று
கூறினார். மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலக்கட்டத்தில் நாம் இருப்பதாக
கூறினார்.

நம் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் பெரிய கல்வியாளராக,
ஆளுமைமிக்கவராக, பண்பாளராக வளர்க்க வேண்டுமென்று பாடுபடுவோம். நாம்
பட்ட கஷ்டம் நம் குழந்தைகள் படகூடாதென்று நினைப்போம். அந்த கல்வியை
பெறுவதற்கான வசதிகளும், வாய்ப்புகளும் நிறைய வந்துவிட்டன. நம்
குழந்தைகளுக்கு மாபெரும் எதிர்காலம் இருக்கிறது. ஆனால் ஆரோக்கியம்?
நமக்கு நம் மரபு மீது பரிச்சயம் உண்டு, பழக்கம் உண்டு, நம்பிக்கை உண்டு ஆனால்
நம் மரபு பரிமாறப்படுகிறதா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறி என்றார். நாம்
ஒவ்வொரு நாளும் மெனக்கெட்டால் மட்டுமே, ஒவ்வொரு நாளும் அக்கறை
கொண்டால் மட்டுமே நாம் நம் அடுத்த தலைமுறையை ஆபத்தில்லாமல் வைத்திருக்க
முடியும் என்றார்.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் மிகப்பெரிய கருத்தரங்கு
ஒன்றில் திருமதி மதுபாலா என்பவர் அங்கு கூடியிருந்த மருத்துவர்கள், நோயாளிகள்,

செவிலியர்கள் என பலருக்கும் மத்தியில் பேசிய போது தானும் அங்கிருந்ததாகவும்,
அவர் தொடக்கத்தில் சொன்ன வரிகள் தன்னை மிகவும் பாதித்தாகவும் கூறினார்.
அப்படி அவர் சொன்னது இதுதான், "இந்த ஒரு தலைமுறைதான் தன் அடுத்த
தலைமுறையினரின் மரணத்தை அருகிலிருந்து தங்கள் கண்களால் பார்க்கபோகிற
துரதிர்ஷ்டமான தலைமுறை" இதனை தரவுகளோடு விளக்கியுள்ளார்.

நாம் அடுப்பங்கரையில் நாம் செலவழிக்ககூடிய 5, 10 நிமிடங்கள் நம் குழந்தைகளுக்கு,
அடுத்த தலைமுறைக்கு 5,10 வருடங்களை அளிக்கும் என கூறினார்.

மேலும் பல தமிழ் உணவு வகைகளின் பெருமை குறித்து பேசிய மருத்துவர்,
சின்ன வெங்காயம் போட்ட தயிர் பச்சடி எப்படி புற்றுநோயை தடுப்பதற்கு சிறந்த
உணவாகிறது என்று விளக்கினார். ரத்தசோகை போக்குவதற்கு மிகச் சிறந்த உணவு
கம்பு. கேழ்வரகு குழுந்தைகளுக்கு மிகச்சிறந்த திட உணவு என்றார். சிறு தானியங்கள்,
செஞ்சோறு, உளுந்தம் பருப்புச் சோறு மற்றும் பெருங்காயம், சோம்பு, லவங்கம்,
பட்டை போன்ற மணமூட்டிகளில் பல மருத்துவ குணங்கள் உண்டு என்றார். நாவல்
பழம் எவ்வளவு சிறந்தது என்றும் விளக்கினார். எந்த வகையிலும், எந்த காலத்திலும்
எள்ளளவு மது கூட உடம்பிற்கு நல்லதல்ல, இளையர்கள் மதுவை தவிர்க்கவேண்டும்
என வலியுறுத்தினார்.

1870ல் இங்கிலாந்தில் அதிகமாக நுரையீரல் புற்றுநோய், வாய் புற்றுநோய்
வருவதற்கான காரணங்களை ஆராய அந்நாட்டு மகாராணி பல நாடுகளில் இருந்து
பிரபல மருத்துவர்களும் ஆராயச்சியாளர்களும் கலந்து கொண்ட கூட்டத்தை
கூட்டினார். பத்து காரணங்கள் கண்டறியப்பட்டு விவாதப்பட்டன(கையில்
புகைச்சுருட்டுடன்:)). ஆனால் புகைப்பிடிப்பது அதில் இல்லை. பிறகு 20 ஆண்டுகள்
கழித்து ஜெர்மானிய மாணவர் ஒருவர் புகையிலை தொழிற்சாலைகளுக்கும் இந்த
புற்றுநோய்க்கும் சம்பந்தம் இருக்கு என சொல்கிறார். அது நிராகரிக்கப்படுகிறது. 40
ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே மாணவர் தனது போராசிரியர்களுடன் சேர்ந்து சில
நோயாளிகளிடம் செய்த சோதனையின் அடிப்படையில் ஓர் ஆய்வறிக்கை
சமர்பிக்கிறார். இப்போதும் அது நிராகரிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் டொபாக்கோ
கம்பெனி ஒரு 'டாக்குமென்டரி' படம் எடுத்து புகையிலைக்கும் புற்றுநோய்க்கும்
சம்பந்தம் இல்லை என ஹாலிவுட் திரை நட்சத்திரங்கள் மூலம் சொல்கிறது.
கடைசியில் 70 ஆண்டுகள் பிடித்தது இந்த புற்றுநோய்க்கு புகையிலைதான் காரணம்
என்பதை உறுதி செய்வதற்கு. அதற்குள் பல கோடி மக்கள் அதனால்
பாதிப்புக்குள்ளாயினர்.

அதுபோலவே துரித உணவுகள் மற்றும் இராசாயனத்தை கொட்டி தயாரிக்கப்படும்
உணவுகளால் புற்றுநோய் தாக்கும் என்று இன்று அறுதியிட்டு கூற முடியாது ஆனால்
இன்னும் 20, 25 ஆண்டுகள் கழித்து உறுதி செய்யப்படலாம். ஆனால் அதற்குள் இந்த
நோய்க்குள் நம்மில் பாதிபேர் சிக்கியிருப்போம் என கூறினார்.

சரியாக ஒரு மணி நேரம் பேசிய மருத்துவர் மிக அழகாக தலைப்பையொட்டி எந்த
குறிப்பும் இல்லாமல் சரளமாக நகைச்சுவையோடு சிந்திக்கவும் பல அருமையான
கருத்துகளை தரவுகளோடு வைத்தார். ஏற்கனவே அவருடைய காணொளிகளை
பார்த்திருந்தாலும் மிகவும் பயனளித்த உரை. என்னை போலவே கண்டிப்பாக நிறைய
பார்வையாளர்களிடையே அவரின் உரை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க
வேண்டும்.

ஒரே ஒரு விஷயம் சொல்ல வேண்டுமானால் ஓட்ஸ் பற்றிக்குறிப்பிடும் போதும்,
பழங்கள் குறித்து பேசும்போதும் அவர் குறிப்பிட்ட செய்திகள் சிங்கப்பூர் சூழலுக்கு
பொருந்தாது.

இரண்டாம் பகுதி
— — — — — — — — —

இந்த நிகழ்வின் மற்றொரு சிறப்பு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கக் கல்லூரி
மாணவர்களுக்கு "தமிழர் பாரம்பரிய உணவும் ஆரோக்கியமும்" என்ற தலைப்பில்
ஆய்வுபோட்டியை ஒன்றை நடத்தி அதிலிருந்து இறுதிச்சுற்றுக்கு சிறந்த நான்கு
ஆய்வை நிகழ்ச்சியில் படைக்கச் செய்தனர். மொத்தம் 60 மாணவர்கள் 38 குழுக்களாக
படைத்த ஆய்விலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் படைப்புகளை
மேடையிலே படைத்தனர்.

முதலில் உயர்நிலைப் பள்ளிக்கான பிரிவில் இந்திய அனைத்துலகப்பள்ளியின்
மாணவி வைஷ்ணவி ஹரிஹர வெங்கடேசன் எள் குறித்து தன் ஆய்வை அருமையாக
படைத்தார். ஐம்புலன்களுக்கான சஞ்சீவினி 'எள்' என கூறிய அவர் அதை
புராணத்திலும், சங்க இலக்கியங்களிலும் எப்படி சொல்லியிருக்கிறார்கள் என
சான்றுடன் விளக்கினார்.

அடுத்து மண் மணம் மாறாத தமிழர்களின் உணவும் ஆரோக்கியமும் என்ற தலைப்பில்
தன் ஆய்வை படைத்த நார்த்தலான்ட் உயர்நிலையைப் பள்ளியை சேர்ந்த ரிஹானா
பேகம் மற்றும் ராகா இருவரும் பாரம்பரிய உணவு வகைகள் குறித்து விளக்கினர்.
அறுசுவைகள் கொண்ட உணவின் சிறப்பையும் பகிர்ந்து கொண்டார்கள்.

தொடக்கக்கல்லூரிக்கான பிரிவில் முதலில் செயிண்ட் ஆண்ட்ருஸ் தொடக்கக் கல்லூரி
குழுவைச் சேர்ந்த மீனலோச்சனி முத்துக்குமார் மற்றும் சிம்மரோஷினி மகேந்திரன்
தங்கள் ஆய்வுக் கட்டுரையை படைத்தனர். எந்த உணவு பிடிக்கும் என்று
இளையர்களிடம் நேரடியாக கேட்டறிந்து அதை பதிவு செய்து காணொளியாக
காண்பித்தனர். மஞ்சளின் மகிமையை குறித்தும் விளக்கினர். நகைச்சுவை கலந்து
தங்கள் ஆய்வை சிறப்பாக படைத்தனர்.

கடைசியாக தன் ஆய்வை படைத்த அண்டர்சன் தொடக்கக்கல்லூரியைச் சேர்ந்த
மாணவி பா நிருபமா நிலம் சார்ந்த உணவு குறித்து சொன்னது சிறப்பாக இருந்தது.

அனைத்து மாணவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தை சிறப்பாக
பயன்படுத்தி நன்றாக படைத்தனர். நிறைய உழைத்திருந்தது அவர்கள் படைப்பில்
தெரிந்தது.
இவர்களின் படைப்பை பார்த்துவிட்டு, மருத்துவர் சிவராமன் தான் 25 நாடுகளுக்கு
சென்று வந்தாலும் சிங்கையிலதான் முதன் முதலாக மாணவர்கள் தமிழர் பாரம்பரிய
உணவு குறித்து மிக அழகாக பேசி பார்க்கிறேன் என்றார்.

இந்த போட்டியில் இந்திய அனைத்துலகப்பள்ளியின் மாணவி
வைஷ்ணவி ஹரிஹர வெங்கடேசன் உயர்நிலைப் பள்ளிக்கான பிரிவில் முதல் பரிசு
வென்றார். செயிண்ட் ஆண்ட்ருஸ் தொடக்கக் கல்லூரி குழுவைச் சேர்ந்த
மீனலோச்சனி முத்துக்குமார் மற்றும் சிம்மரோஷினி மகேந்திரன் தொடக்கல்லூரி
பிரிவில் முதல் பரிசை வென்றனர். என்ன பரிசு என்று அறிவிக்கவில்லை.

முன்னதாக 'வாழ்க தமிழ்மொழி..' என்ற தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி
தொடங்கியது.

அடுத்து வரவேற்புரையாற்றிய அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள்
மாணவர்கள் சங்கத்தின் தலைவர் திரு அன்பழகன் இளங்கோவன் தனது உரையில்
தங்கள் அமைப்பு நான்காவது ஆண்டாக தமிழ்மொழி விழாவில் கலந்து
கொள்வதாகும், மாணவர்களை ஊக்குவிக்கும் பணிகள் குறித்தும் மற்ற சமூக பணிகள்
குறித்தும் குறிப்பிட்டார். தலைவர் உரையின் போது அந்த 'பவர்பாய்ன்ட்
ஸ்லைட்களை' தவிர்த்து
கொஞ்சம் வேகமாக, சுருக்கமாக பேசியிருக்கலாமோ என தோன்றியது.

அமைப்பின் பணிகள் குறித்த காணொளி காண்பிக்கப்பட்டது. சிங்கப்பூரில் 1998ல்
தொடங்கிய அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம்
தற்போது 750 உறுப்பினர்களை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

புரவலர்கள் சிறப்பு செய்யப்பட்டனர். கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கும்,
மாணவர்களுக்கும், நடுவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஆனால் பெற
வருகிறன்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மேடையில் வந்து என்ன
செய்யவேண்டும் என தெரியாமல் அங்குமிங்கும் நடந்தார்கள். இதை
ஏற்பாட்டாளர்கள் தவிர்த்திருக்கலாம். மேலும், நடுவர்களுக்கு நினைவு பரிசு
கொடுப்பதிலும் குளறுபடி. போன ஆண்டு அவ்வாறு இல்லை. அடுத்த ஆண்டு சரி
செய்யப்படும் என நம்பலாம்.

தனது நன்றியுரையில் நிகழ்ச்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த
அனைவருக்கும் நன்றி தெரிவித்த செயலாளர் திரு ராமதாஸ் சங்கர் கொஞ்சம்
மாறுபட்டு மேடைக்கு மத்தியில் வந்து குனிந்து, வணங்கி நன்றி தெரிவித்தார்.

கடந்தாண்டு போட்டியில் கவிஞர் ந வீ விசயபாரதி அண்ணனின் "தனி வழி" என்ற
கவிதை நூலை ஆய்வு செய்து, முதல் பரிசை தட்டிச் சென்ற செல்வி தக்‌ஷிதா கவிஞர்
தங்கமணியுடன் இணந்து நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
இந்த மாதிரியான முன்னெடுப்புதான் முக்கியமானது. கடந்தாண்டு பரிசு பெற்றவரை
மறவாமல் இந்தாண்டு நல்லதொரு வாய்ப்பு கொடுத்து இளையர்களை தொடர்ந்து
ஊக்குவிப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

நிகழ்ச்சிக்கு முன் திரிகடுகம் பானம்(சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்தது), ராகி பக்கோடா,
காராமணி சுண்டல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்த பின் அனைவருக்கும் கடலை
மிட்டாய் கொடுக்கப்பட்டது(இது கேள்விப்பட்டது, எனக்கு கிடைக்கவில்லை:)). இது
ஒரு நல்ல முன்னெடுப்பு. கடந்த ஆண்டும் நம் தமிழ் உணவுகள் வழங்கப்பட்டது.
என்ன, இந்த முறை உணவிருந்தது ஆனா தட்டு இல்லாமல் நான் உட்பட சிலர்
சாப்பிடவில்லை.

நாம் தொடர்ந்து இளைஞர்களுக்கு சிறந்த உணவின் முக்கியத்துவத்தை
வலியுறுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இதற்கு தமிழ் அமைப்புகள் தங்களால்
முடிந்ததை செய்யலாம். அரசாங்கமும் இதில் கவனம் செலுத்துகிறது என்பது
மகிழ்ச்சியான செய்தி.

கடந்தமுறை மின்மரபுடைமைத் திட்டத்தின் கீழ் மின்மயமாக்கப்பட்ட நூல்களில்
சிலவற்றை தேர்ந்தெடுத்து ஆய்வு செய்வதற்கு மாணவர்களிடையே போட்டி
வைத்தனர். இந்தாண்டு தமிழர் பாராம்பரிய உணவு குறித்து மாணவர்களிடையே
ஆய்வு போட்டி வைத்ததனர். இது வரவேற்கத்தக்கது. அதையொட்டியே அமைந்த
சிறப்பு பேச்சாளர் மருத்துவர் கு சிவராமன் அவர்களின் பேச்சு மிகச்சிறப்பு. அறுபது
மாணவர்களே ஆனாலும் மாணவர்களுக்காக/இளையர்களுக்காக ஆக்கப்பூர்வமாக
நடக்கும் ஒரு சில நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. இந்த அளவு மாணவர்களை ஒவ்வொரு
ஆண்டும் ஆய்வுக்கு பழக்கப்படுத்தி விட்டால் போதும். வருங்காலத்தில் ஒரு
குறிப்பிட்ட அளவு மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும்
எனது பாராட்டுக்கள்.

கடந்த ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழக நிகழ்ச்சி குறித்து போட்ட பதிவு:)

#தமிழ்மொழி_விழா_2016அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய தமிழ்…

Posted by Tam Shanmugam on Monday, April 25, 2016

#தமிழ்மொழி_விழா_2017
#தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_பின்னோட்டம்
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்

‘பழமொழி பேசலாம்’ என்ற நிகழ்ச்சியை “உறுமி” தமிழ் மின்னிதழ் என்ற அமைப்பு நேற்று(29-ஏப்ரல்-2017, சனிக்கிழமை) காலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடத்தியது.

இது என்ன நிகழ்ச்சினு கேக்குறீங்களா?

இப்ப இந்த இளைஞர்களிடையே ‘தம்படம்’ என்ற Selfie மிக பிரபலமாயிருக்கு. அதையே ‘தம்-காணொளி'(selfie-video) பதிவா உயர்நிலைப்பள்ளி மாணவர்களை செய்யச்சொல்லலாம் என்ற அதில் ஒரு போட்டியும் ஏற்பாடு செய்திருக்கிறார் ‘உறுமி’யின் தலைவர் திரு கல்யாண்குமார் . இவர் பலதுறைதொழிற் கல்லூரியில் மென்பொருள் துறையில் பணி புரிந்து வருகிறார்.

தமிழ்மொழியை மாணவர்களிடைய கொண்டு செல்வதின் ஒரு யுக்தியாக அவர்களை ‘பழமொழிகள்’ பேசச்சொல்லி அதை அவர்கள் பாணியில் காணொளியாக பதிவு செய்து இணையத்தில் ‘YouTube’ல் வலம் வரச்செய்திருக்கிறார். இது நிறையபேர்களுக்கு சென்றடையும் விதமாக அதிக ‘Like’ வாங்குபவர்களுக்கு பரிசை அறிவித்திருக்கிறார். அது தவிர சிறப்பாக பேசிய முதல் ஐந்து மாணவர்களை நடுவர்களை கொண்டு தேர்வு செய்து பரிசும் கொடுத்தார். சாதாரண பரிசல்ல, தங்கத்தை பரிசு கொடுத்தார். தங்கம் எப்படி மதிப்பிழக்காதோ அதே போல் தமிழும் என்றும் மதிப்பிழக்காது என்பதை அறிவுறுத்தும் விதமாக தங்கம் பரிசாக கொடுக்கப்பட்டதாக சொன்னார்.

தமிழ்மொழியை அடுத்த தலைமுறைக்கு அவர்கள் புழக்கத்தில் இருக்கும் ஒரு தளத்திற்கு கொண்டு செல்லும் முயற்சிதான் இது. கடந்த முறை தமிழ்மொழி விழாவில் ‘ ‘பழமொழி நானூறு’ என்ற நிகழ்ச்சி படைத்தார். ஆனால் இந்த முறை இந்த யுக்தியால் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் பங்குகொண்டனர்.

இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாதான் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு பேச்சாளர்கள் இல்லை. எந்த சடங்குகளும் இல்லை. மாணவர்களுக்கு பரிசை அவரவர் பொற்றோர்களே கொடுத்தனர். ஐந்து மாணவர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர். சிறப்பாக, தமிழ்மொழி குறித்தும், இந்த போட்டியில் தாங்கள் பங்குபெற்றது எப்படி பயனளித்தது, இது சக மாணவர்களை எப்படி பரவலாக சென்றைடைந்து என்பதையும் தெரிவித்தனர். இந்த போட்டியில் தங்களுக்கு உதவிய பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்க்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

மொத்தம் ஒரு மணி நேரத்திற்கு குறைவாகவே நடந்த இந்நிகழ்ச்சியில் 50 பேர் மட்டுமே கலந்துகொண்டாலும் இந்த மாணர்களின் காணொளி பல நாடுகளிலும் உள்ள 5000 தமிழர்களை சென்றடைந்திருக்கிறது என்பதே சிறப்பு. காணொளியை பார்க்காதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை சொடுக்கவும்.

இந்த போட்டியில் 1259 ‘Like’ பெற்று முதல் பரிசை தட்டிச்சென்றார் செடார் உயர்நிலைப்பள்ளி மாணவி ஸ்வேதா செந்தில்குமார். ‘அரண்டவன் கண்ணுக்கு, இருண்டதெல்லாம் பேய்’ என்ற பழமொழியை விளக்கி பேசியுள்ளார்.

நடுவர்களால் தேர்தெடுக்கப்பட்ட மாணவர்கள்:
சிறப்பு பேச்சாளர் – எஸ்பி அபிநவ் – யுனிட்டி உயர்நிலைப்பள்ளி
முதல் பரிசு – செந்தில்குமார் ஹரிஸ்வரன் – செயின்ட் கேப்ரியேல் உயர்நிலைப்பள்ளி
இரண்டாம் பரிசு – காவ்யா மணிகண்டன் – பாசிர் ரிஸ் கிரெஸ்ட் உயர்நிலைப்பள்ளி
மூன்றாம் பரிசு – பாலமுருகன் தீபிகா – செடார் உயர்நிலைப்பள்ளி
நான்காம் பரிசு – மிருனாளினி கார்த்திக் – பாசிர் ரிஸ் கிரெஸ்ட் உயர்நிலைப்பள்ளி

பரிசு குறித்த அறிவிப்பு இன்னும் தெளிவாக இருந்திருக்கலாம்.

சிறப்பான முன்னெடுப்பு. நல்ல நிகழ்ச்சி.
அடுத்தாண்டு மேலும் சிறப்பாக நடத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.

பி. கு: ‘உறுமி’ மின்னிதழ் செயலியில் மட்டுமே வேலை பார்க்கும். அதுவும் இப்போது மறு உருவாக்கம் நடைபெற்று வருவதால் இப்போது பார்க்கமுடியாது.

http://www.youtube.com/playlist…

FB.com/Sg.indian

#தமிழ்மொழி_விழா_2017
#தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_பின்னூட்டம்
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்

கலக்கல் நாடக விழா 2017

பொதுவா அலுவலகத்திலேயோ அல்லது பெரிய பன்னாட்டு அமைப்புகளிலேயோ நம்ம ஆளுங்க ஒரு விஷயத்தைச் சொல்லும்போது ரொம்ப அழுத்தமா, சொல்ல வந்த கருத்து போய் சேர்கின்ற மாதிரி சொல்வது குறைவு. இதற்கு சில விதிவிலக்கு இருக்கலாம். ஆனால் நான் பார்த்த வரையில் இப்படி நிறைய பேர் இருக்காங்க. ஒரு மகிழ்ச்சியான செய்தியைக் கூட ஒரு உணர்ச்சியே இல்லாமல் சொல்வதுண்டு. ஆனால் அதே செய்தியை மற்ற நாட்டுக்காரங்க பேசும்போது அவங்க அங்க அசைவுகள், முக பாவனைகள் பாருங்க, பல சிவாஜியும், வடிவேலும் குடியிருப்பாங்க. பேச்சாளர் மன்றங்கள் மாதரி சில இடங்களில் இந்த அங்க அசைவுகள், குரல் ஏற்ற இறக்கம் இதெல்லாம் கத்துக்கலாம். ஆனால் ஒரு நல்ல தொடர்புத்திறனை, படைப்புத்திறனை எப்படி மேம்படுத்திக் கொள்வது. அதற்கான அடுத்தகட்ட பயிற்சி நாடகத்தில் கிடைக்குமா?
கிடைக்கும் என்கிறார், “கலக்கல் நாடக விழா 2017″ன் சிறப்பு விருந்தினர் திரு புகழேந்தி ராமகிருஷ்ணன் Pugalenthii Ramakrishnan , அதிபதி அனைத்துலக நாடக நிறுவனத்தின் கலை இயக்குனர். இவர் நாடகத்தில் நடித்துப் பயிற்சி பெற்றால் படைப்பாற்றல் வளரும், பிற்காலத்தில் தங்கள் வேலையிடத்தில் ஒரு திட்டத்தைப் படைக்கும்போது அவர்கள் தன்னம்பிக்கையுடன் சிறப்பாகப் படைக்க முடியும் எனச் சொன்னார்.

இந்த நாடகத்தில் நடிக்கும் மாணவர்கள் மற்ற மொழியினருக்கும் அறிமுகமாக வேண்டும். அப்போதுதான் தமிழர்களின் திறன் மற்றவர்களுக்கும் போய் சேரும் என்ற கருத்தையும் முன் வைத்தார். அதோடு,

தற்போதை சிங்கை நாடக வரலாறு குறித்த ஆவணங்கள் நூலகத்தில் பெரிதாக ஒன்றும் இல்லை, அதனால் ‘இவண் தியேட்டர்’ கடந்த ஒன்பதாண்டுகளாக அரங்கேற்றிய நாடகங்களின் வசனங்களை ஆவணப்படுத்த வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நாடகங்களுக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். ஐந்து நிமிடமே பேசிய அவர் இரத்தினச்சுருக்கமாக நல்ல பல கருத்துகளை நம்முன் வைத்தார்.

சிங்கையில் சில நாடக குழுக்கள் சிறப்பாக நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன. அவற்றுள் ஒன்றுதான் “இவண் தியேட்டர்”. இக்குழுவைத் தலைமையேற்று நடத்திக் கொண்டிருப்பவர் திரு எஸ்.என்.வி நாரா. “இவண் தியேட்டர்” கடந்த ஒன்பது ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றது. அதிலும் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளுக்கிடையே ‘நாடக போட்டி’ நடத்துகின்றது. இந்த ஆண்டு உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, 26-ஏப்ரல்-2017 அன்று மதியம் மணி 2:00க்கு “இவண் தியேட்டரின்” கலக்கல் நாடக விழா நடைபெற்றது.

34 பள்ளிகள் கலந்துகொண்ட இந்த நாடக போட்டியில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற பள்ளிகளில், உயர்நிலைப் பள்ளிக்கான போட்டியில் 2 பள்ளிகளும், தொடக்கப்பள்ளிக்கான போட்டியில் 3 பள்ளிகளும் தங்கள் நாடகங்களை அரங்கேற்றின. இப்போட்டிக்கான மையக்கருத்து ‘வர்ணஜாலம்’.

முதலில் தங்கள் நாடகத்தைப் படைத்த ஜூரோங் உயர்நிலைப்பள்ளி, ஒரு மாணவரின் பல நிலைகளைக் காட்சிகளாக்கினர். மாணவனின் வீட்டில் எழும் பிரச்சனை, நல்ல நண்பனின் அன்பு, சிலரின் மிரட்டல் அதை அவன் எதிர்கொள்ளும் விதம் என அனைவரும் நன்றாக நடித்திருந்தனர்.

இரண்டாவதாக, குயின்ஸ்டவுன் உயர்நிலைப்பள்ளி குருதிக் கொடையைக்(ரத்த தானம்) கருவாகக் கொண்டு காட்சிகள் படைத்தனர். சமூக சேவை, குருதிக் கொடை செய்யும் மாணவனைப் பெற்றோர்கள் கண்டிப்பதும் பின்னர் அது எப்படித் தங்களுக்கு உதவுகிறது என்பதைக் கதையாக அமைந்திருந்தனர். நிறைய கதாபாத்திரங்கள், நல்ல ஒப்பனை.

அடுத்துத் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான போட்டி தொடங்கியது.

முதலில் சூச்சின் தொடக்கப்பள்ளி தனது நாடகத்தை அரங்கேற்றியது. விசித்திரகுப்தன் பூலோகத்திற்கு வருவதாகவும், சிங்கையிலுள்ள பண்பாட்டை அறிய விரும்புவதாகவும் தொடங்குகிறது நாடகம். ஒரு நண்பரின் உதவியுடன் இரண்டு நாள் தங்கியிருந்து அவரின் குடும்பம், கடைத்தெருவில் கடை வைத்திருக்கும் ஒரு பாட்டி, ஆறாவது படிக்கும் மாணவன், இராணுவத்தில் இருக்கும் இளைஞன் எனப் பலரின் வாழ்க்கைமுறையையும் பார்த்து அவரும் சிங்கையிலே இருக்கப்போவதாக முடிகிறது. நல்ல ஒரு சிந்தனை, யதார்த்த நடிப்பு, அருமையான கூட்டு படைப்பு.

அடுத்து வந்தவர்கள் ஹவ்காங் தொடக்கப்பள்ளி. இவர்கள் நாடகத்தை நான் முகநூலில் நேரடி ஒளிபரப்பு செய்தேன். விக்ரமாதித்தன் என்ற மன்னன் தன் மகளுக்கு நல்ல தமிழ் பேசும் மாப்பிள்ளையை மணமுடிக்க உலகெங்கும் சென்று கடைசியில் சிங்கை வந்து சுயம்வரம் நடத்தி ஒருவரைத் தேர்ந்தெடுப்பதாக முடிகிறது. நல்ல கற்பனை, அழகு ஒப்பனை, அருமையான நடிப்பு.

கடைசியாக, கான்கார்டு தொடக்கப்பள்ளி தங்கள் நாடகத்தை அரங்கேற்றினார்கள். ஒரு விமானத்தில் பயணம் செய்ய பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் ஆசிரியர் விமானத்தில் ஏறிய பின் சந்திக்கும் சவால்களைக் காட்சிப்படுத்தினர். அவர்கள் கோபம், பொறுமையின்மை, இப்படி தங்கள் குணநலன்களை எப்படி வெளிப்படுத்துகிறார்கள், அது எப்படி மற்றவர்களைப் பாதிக்கிறது என்று நடித்துக் காண்பித்தார்கள். சிறந்த காட்சி அமைப்பு, அருமையான நடிப்பு, நல்ல முடிவு.

இந்தப் போட்டிக்கு திருமதி உமையாளம்பிகை, திரு விக்னேஸ்வரன், திரு எஸ் என் வி நாரா ஆகியோர் நடுவராகப் பணியாற்றினார்கள்.

தேர்வுச் சுற்றில் கலந்து கொண்டவர்களையும் சேர்த்து நல்லா நடித்தவர்களுக்கு நட்சத்திர விருதுகள் கொடுக்கப்பட்டன. ஏன் இதில் சிறந்த நடிகை இல்லை, இதில் சிறந்த நடிகர் இல்லை என்று கேட்காதீர்கள். நாடக கதாபாத்திரங்களுக்கு ஏற்ப விருதுகள் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.

இறுதிச்சுற்றில் சிறந்த நாடகத்துக்கான பரிசை வென்ற பள்ளிக்கு வெற்றிக்கோப்பை வழங்கபட்டது. உயர்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி என இரு பிரிவுகளுக்கும் பரிசுகள் வழங்கபட்டன. பரிசு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
உயர்நிலைப்பள்ளிக்கான விருதுகள்
———————————
சிறந்த நாடகம்
முதல் பரிசு – குயின்ஸ்டவுன் உயர்நிலைப்பள்ளி
இரண்டாம் பரிசு – ஜூரோங் உயர்நிலைப்பள்ளி
நட்சத்திர விருதுகள்
——————-
சிறந்த கதை – குயின்ஸ்டவுன் உயர்நிலைப்பள்ளி
சிறந்த துணை நடிகர் – சுந்தரேசன் மாதவன், ஜூரோங் உயர்நிலைப்பள்ளி
சிறந்த துணை நடிகை – சிவராமன் லேகா, குயின்ஸ்டவுன் உயர்நிலைப்பள்ளி
தொடக்கப்பள்ளிக்கான விருதுகள்
———————————
சிறந்த நாடகம்:
—————-
முதல் பரிசு – சூச்சின் தொடக்கப்பள்ளி
இரண்டாம் பரிசு – கான்கார்டு தொடக்கப்பள்ளி
மூன்றாம் பரிசு – ஹவ்காங் தொடக்கப்பள்ளி
நட்சத்திர விருதுகள்
——————-
சிறந்த கதை – சூச்சின் தொடக்கப்பள்ளி
சிறந்த நடிகர் – குணசேகரன் நிக்கில் குமார், சூச்சின் தொடக்கப்பள்ளி
சிறந்த துணை நடிகர் – தயாளன் பன்னீர்செல்வம், சூச்சின் தொடக்கப்பள்ளி
சிறந்த துணை நடிகை – சரவணன் பால நிகிலா, சூச்சின் தொடக்கப்பள்ளி
இந்த போட்டியைச் சரியாக தன் அழகு தமிழில் வழிநடத்திச் சென்றார் திரு கார்த்திக் ராமசாமி
Karthik Ramasamy

அவ்வப்போது ஒலிவாங்கி சற்று தகராறு செய்தது. ஒவ்வொரு நாடகத்திற்கும் தலைப்பு சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அடுத்து நாடகத்தின் கால அளவு ஐந்திலிருந்து இருபது நிமுடம் வரை நீடித்தது. கால அளவு எல்லோருக்கும் சற்றேறக்குறைய சமமாக இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

நடித்த அனைவரும் ஒருமுறை கூட வசனத்தை மறந்து நிற்கவில்லை, யாருக்கும் எந்த வித பதட்டமும் இல்லை, எல்லா மாணவர்களும் அவ்வளவு சிறப்பாக நடித்தார்கள். சில பள்ளிகள் ஒப்பனை, பொருட்களில்(props) கூடுதல் கவனம் எடுத்துக் கொண்டார்கள். நல்ல கற்பனைத் திறன். தொடக்கப்பள்ளி நாடகங்கள் மிகச்சிறப்பு. ஒரு கடையை மூடுவதற்கு கூட அழகாக ஒரு கதவு(ஷட்டர்) மாதிரி ஒன்று செய்து, அது சரியாகவும் வேலையும் செய்தது. மொத்ததில் இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை.

பேச்சு போட்டி, பாட்டு போட்டி, கதை, கவிதை, கட்டுரை எனப் பல போட்டிகள் பார்த்திருக்கிறேன். ஆனால், முதன்முறையாக இப்போதுதான் ‘நாடக போட்டி’ பார்த்தேன். தமிழ்மொழி விழாவில் கடந்த ஒன்பதாண்டுகளாகப் பங்கேற்கும் இவர்களின் நிகழ்ச்சிக்குக் கடந்த இரண்டாண்டுகளாக என்னால் போக முடியவில்லை. இந்தாண்டு மாணவர்கள், ஆசிரியர்கள், நடுவர்கள், ஏற்பாட்டாளர்கள் தவிர நான் மட்டுமே இருந்தேன் என்று நினைக்கிறேன். அடுத்த ஆண்டு மாணவர்கள் பங்குபெறும் இம்மாதிரியான ஒரு நல்ல நிகழ்ச்சியை விருப்பமுள்ளவர்கள் யாரும் தவற விட வேண்டாம்.

மாணவர்களுக்காக விழா நடத்துகிறோம் என்று செல்பவர்களுக்கிடையே உண்மையிலேயே மாணவர்களுக்காக விழா நடத்திய ஒரு சில நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. எந்த வித விளம்பரமும் இல்லாமல் எந்த பாராட்டையும் எதிர்பார்க்காமல், முகநூலில் முப்பது பதிவுகள் போடாமல் அமைதியாகத் தங்கள் பணியை செய்து கொண்டிருக்கும் திரு எஸ் என் வி நாரா
Nara Snv போன்றவர்கள் சிங்கையின் நம்பிக்கை நட்சத்திரங்கள்.

#தமிழ்மொழி_விழா_2017
#தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_பின்னூட்டம்
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்

https://www.facebook.com/ShanmugamTam/videos/1528337953845042/