இளங்கவிஞருக்கான தங்கமுத்திரை விருது

#தமிழ்மொழி_விழா_2016

ஒரு நல்ல சந்திப்பு, ஒரு நல்ல நட்பு, ஒரு நல்ல கற்றல், ஒரு நல்ல முயற்சி, ஒரு நல்ல சிந்தனை, ஒரு நல்ல கவிதை இப்படி நம் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டு பண்ணும் அந்த ஒரு நல்ல நிகழ்வு எப்ப வேண்டுமானாலும் நடக்கலாம். நாம் செய்ய வேண்டியது திறந்த மனத்துடன் அதை வரவேற்பதே. அப்படி நடந்த அந்த மாற்றம் இன்று எனக்கு இளங்கவிஞருக்கான தங்கமுத்திரை விருதை பெற்று தந்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த மாதம் ‘மகுடம்’ என்ற தலைப்பில் நடந்த கவிதை போட்டியிலும் முதல் பரிசு வாங்கியது, இரட்டிப்பு மகிழ்ச்சி. இன்று இளங்கவிஞர் விருது பெறுவதற்கு முக்கிய காரணகர்த்தாவான கவிஞர் கருணாகரசுக்கும், மரபு குறித்து சந்தேகங்களை அவ்வப்போது விளக்கம் தந்து உதவி புரிந்த கவிஞர் கி கோவிந்தராசுக்கும், மரபை ஆரம்பித்து வைத்த கவிஞர் பனசை நடராஜனுக்கும், எந்த பிழையையும் உடனே திருத்தி எனக்கு உதவி புரியும் கவிஞர் ராஜு ரமேஷுக்கும், என் கவிதைப் பயணத்தில் முக்கியப் பங்கு வகித்த கவிஞர் இன்பாவுக்கும் மற்றும் மரபுக் கவிதை குழுவின் நண்பர்கள் கவிஞர் மதிகுமார், கவிஞர் ஹாஜா மொய்தீன், கவிஞர் கோ கண்ணன், கவிஞர் லலிதா சுந்தர், கவிமாலை நண்பர்கள் குழுவிற்கும், கவிமாலைக்கும் என் மனமார்ந்த நன்றி என் கவிதையை இரசித்து என்னை ஊக்கப்படுத்திய அத்தனை முகநூல் நண்பர்களுக்கும் என் நன்றி தங்கமுத்திரை விருதை வழங்குபவர் மலேசியாவின் இளையர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ எம் சரவணன்.

#தமிழ்மொழி_விழா_2016 சொற்களம் 2016 —————— மாணவர்களின் கற்றல் பயணம்: ——————————- “புரிந்துணர்வு இருப்பதால் தான் பண்டிகை தினங்களில் அண்டை வீட்டிலுள்ள மற்ற இனத்தாரிடமும் தின்பண்டங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்” என்று ஒட்டிப் பேசிய அணியின் மாணவர் கூறியபோது “அரசாங்கம் போட்ட சட்டத்தினால்தான் மற்ற இனத்தவர்கள் நம் அண்டை வீட்டில் வாழும் சூழுல் ஏற்பட்டது” என்று அழகாக தங்களின் எதிர்வாதத்தை வைத்தார் வெட்டிப் பேசிய அணியிலுள்ள மாணவர். பல இன மக்கள் நல்லிணக்கத்தோடு வாழ சட்டங்களைவிடப் புரிந்துணர்வே அவசியமாகும் என்ற தலைப்பில் ஏப்ரல் 9ம் தேதி , சனிக்கிழமை மீடியாகார்ப் அரங்கத்தில் சொற்களம் 2016 இறுதிச்சுற்றில் நடந்த சுவாரசியமான அங்கமிது. இப்படி முதல் சுற்றிலிருந்து இறுதிச்சுற்று வரை கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடந்த சொற்களம் விவாதப் போட்டியில் சிங்கையின் அடுத்த தலைமுறையினர் தங்களது கருத்துகளை, வாதத் திறமையை ஒவ்வொரு போட்டியிலும் வெகு சிறப்பாக வெளிக்காட்டினர். இந்தப் போட்டிகள் மாணவர்களிடத்தில் வெறும் பேச்சுத் திறனையும், கவனிக்கும் ஆற்றலையும் மட்டும் வளர்க்கவில்லை, தமிழ் மீதான ஒரு பற்றுதலையும் உலக நடப்புகளை படித்து அறிந்துக் கொள்ள ஒரு வாய்ப்பினையும் வழங்குகிறது. மேலும், குழுவாக போட்டியிடுவதால் கூட்டு முயற்சியையும், விட்டுக் கொடுக்கும் பண்பையும் வளர்க்கிறது. போட்டி என்று வந்துவிட்டால் வெற்றியுடன் தோல்வி என்பதும் தவிர்க்க முடியாததாகிறது. தோல்வி அடைந்த குழுக்கள் அத்தோல்வியை எப்படி அணுக வேண்டும், சக போட்டியாளர்களை எப்படி மதிக்க வேண்டும், நீதிபதிகள் மற்றும் பார்வையாளர்களின் கருத்துகளை எப்படி கருத்தில் கொள்ள வேண்டும் என்று பல்வேறு பாடங்களைக் கற்றுத்தரும் ஒரு தளமாக இச் சொற்களம் போட்டி அமைகின்றது. இந்தக் கற்றல் பயணம், மாணவர்களைப் பக்குவப்படுத்தி போட்டித்தன்மை மிகுந்த இக்காலகட்டத்திலும் எதிர்காலத்திலும் அவர்களை எந்த ஒரு சவாலான சூழலையும் சந்திக்க பெரிதும் உதவும் என்பது திண்ணம். அடித்தளத் தலைவர்களின் பங்களிப்பு: ————————————- 12வது முறையாக நடைபெறும் இப்போட்டியின் பின்னணியில் மக்கள் கழக நற்பணிப் பேரவையின் மத்திய வட்டார இந்திய நற்பணிச் செயற்குழுக்களிலிருந்து 50 அடித்தளத் தலைவர்களின் தன்னலமற்ற உழைப்பு அடங்கியிருக்கிறது. சுமார் 50 நடுவர்கள், 15 அவைத் தலைவர்கள், 15க்கும் மேற்பட்ட தலைப்புகள் என்று பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விவாதப்போட்டி சரியாக 6 மாதங்களுக்கு முன் திட்டமிடப்பட்டு, நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு கடந்த 4 மாதங்களாக பணிகள் நடைபெற்று வந்தது. 30 இந்திய நற்பணிச் செயற்குழுவினர் தீவிரமாக பணி செய்து மாணவர்களிடத்தில் தமிழ் புழக்கத்தை வளர்ப்பதற்காக, தமிழ் மொழி விழாவின் ஒரு அங்கமாக சொற்களம் 2016 நிகழ்வைச் சிறப்பாக நடத்திக் காட்டினர். இந்நிகழ்வை இணைந்து நடத்திய மீடியாகார்ப் நிறுவனம், இறுதிச்சுற்றின் நேரடி ஒளிபரப்பினையும் அரையிறுதிச்சுற்றின் பதிவுக் காட்சியையும் வசந்தம் ஒளிவழியில் சிறப்பாக ஒளிபரப்பி தன்னுடைய பங்களிப்பை நல்கியது. போட்டியின் வெற்றியாளர்கள்: —————————- 32 பள்ளிகள் கலந்துக்கொண்ட இவ்விவாதப்போட்டியின் முதல் சுற்றில் 16 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இரண்டாம் சுற்றில் 8 பள்ளிகள் கால்யிறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் பேச்சுத்திறனை மேம்படுத்த பயிற்சிப்பட்டறையும் நடத்தப்பட்டது. காலிறுதிச்சுற்றிலிருந்து தயாரித்துப் பேசும் அங்கத்துடன், தலைப்பை போட்டியின் போதே கொடுத்து 3 நிமிடத்தில் முன் தயாரிப்பின்றி உடனடியாக பேசும் அங்கமும் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. பின்னர் காலிறுதிச் சுற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 4 பள்ளிகள் அரையிறுதி சுற்றில் மோதின. மிக விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் பெண்டமீர் உயர்நிலைப்பள்ளி விக்டோரியா உயர்நிலைப் பள்ளியை எதிர் கொண்டு வெற்றி பெற்றது. ராஃபில்ஸ் கல்வி நிலையம் மெக்ஃபெர்ஸன் உயர்நிலைப் பள்ளியை வென்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது. முடிவில் ராஃபில்ஸ் கல்வி நிலையம் வெற்றிவாகை சூடி கோப்பையைக் கைப்பற்றியது. இருந்தும் போட்டியில் பங்குகொண்டு தங்கள் திறைமைகளை வெளிப்படுத்திய அனைவரும் வெற்றியாளர்களே. இளையர்களுக்கே முக்கியத்துவம்: ——————————– சிங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பரவலாக அனைத்து தரப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்நிகழ்வில் சிறப்புரைகள் இல்லை, மாலைகள் இல்லை, பொன்னாடைகள் இல்லை, எந்தவித சம்பிரதாய சடங்குகளும் இல்லை. மாணவர்களை மட்டுமே முன்னிலைப்படுத்தி அடித்தளத் தலைவர்களால் நடத்தப்பட்ட ஒரு முக்கிய நிகழ்விது. நேரடியாக ஒளிபரப்பாகிய இந்நிகழ்ச்சியை முதன்முறையாக செய்தாலும் எந்தவித சிரமமுமின்றி மிக சிறப்பாக வழிநடத்திய அவைத் தலைவர் இலக்கியா செல்வராஜியும் ஒரு இளையரே. 5 ஆண்டுகளுக்கு முன்னர் சொற்களம் போட்டியாளரான இவர் அரையிறுதி போட்டியிலும் அவைத்தலைவராக சிறப்பாக பணியாற்றினார். இதுபோல மாணவர்களை முன்னிலைப்படுத்தும் விழாக்களும், இளையர்கள் ஏற்று நடத்தும் விழாக்களும் மேலும் அதிகமாக நடத்தப்பட வேண்டும். அதற்கு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பெருமளவில் ஆதரவு தெரிவிக்க வேண்டும். தமிழ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதற்கேற்ப நிகழ்ச்சிகளை வடிவமைக்க வேண்டும். அடுத்த தலைமுறையினருக்குத் தமிழ் நிகழ்ச்சிகளின் மீதும் தமிழ் மொழியின் மீதும் ஒரு பிடிப்பை ஏற்படுத்த வேண்டும்.

தமிழ்மொழி விழா பட்டிமன்றம்

#தமிழ்மொழி_விழா_2016 தமிழ்மொழி விழா பட்டிமன்றம்

புதிய பார்வையாளர்களை ஈர்த்த பட்டிமன்றம்

தேக்காப் பகுதி அல்லாது வேறு இடத்தில் நடந்த ஒரு சில நிகழ்வில் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் நடத்திய பட்டிமன்றமும் ஒன்றாகும். சிங்கையின் குடியிருப்புப் பேட்டை பகுதிகளுக்கும் தமிழ் மொழி விழாவை கொண்டுச் செல்ல வேண்டும் என்ற நம் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் சுவா சூ காங், ஐடிஇ காலேஜ் வெஸ்டில் நடந்த இந்த நிகழ்வு அமைந்தது. இரண்டு வெள்ளி நுழைவுச்சீட்டு இருந்தும் அங்கு சுமார் 500 பேர் கூடினார்கள். இதில், முக்கியமாக குறிப்பிட பட வேண்டிய விஷயம் அங்கு கூடியவர்களில் பொரும்பாலானோர் அக்கம்பக்கம் பகுதிகளில் வசிப்பவர்கள். பொதுவாக சில நிகழ்வுகளில், “இங்கு நிறைய மாணவர்கள் வந்திருக்கிறார்கள்” என்று ஒலிவாங்கியில் சொன்னவுடன் எல்லோரும் எங்கே என்று தேடுவார்கள். அப்படி இல்லாமல் இங்கு உண்மையிலேயே நிறைய மாணவர்கள் வந்திருந்தார்கள். எங்கும் புதிய முகங்களை காணமுடிந்தது. உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் இந்நிகழ்வு நடத்தியிருந்தால் இவர்கள் வந்திருப்பார்களா என தெரியாது. காரணம் இதற்குமுன் உட்லாண்ட்ஸ் நூலகத்தில் நடந்த ஒரு நிகழ்விலும் புதியவர்களை நிறைய காண முடிந்தது. இரண்டு நிகழ்விலும் நான் அவர்களிடம் “எப்படி இந்த நிகழ்வில் மட்டும் கலந்துகொள்கிறீர்கள்” என்று வினவியபோது அவர்கள் கூறிய பதில் “வீடு பக்கத்தில் இருப்பதால் கலந்துக்கொள்ள முடிகிறது” என்பதுதான். அதற்காக முதலில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சிங்கப்பூர் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்துத்துக்கும், அதன் தலைவர் ஐயா திரு யூசப் ராவுத்தர் ரஜீதிற்கு, லம் சூன் இந்தியர் நற்பணிச் செயற்குழுவிற்கும், குறிப்பாக திரு அருமை சந்திரனுக்கும் என் வாழ்த்துகள். மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி ——————————- உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கக்கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடத்தி மாணவர்களிடம் தமிழ் பேச்சுத்திறனை வளர்க்கும் முயற்சியை முன்னெடுத்தது மற்றுமொரு சிறப்பு. சுமார் முப்பதுக்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். கடந்த மாதம் நடைபெற்ற தொடக்கக்கல்லூரி மாணவர்களுக்கான போட்டியில் சிரங்கூன் தொடக்கக் கல்லூரியின் செல்வன் தயாநிதி ராஜகோபாலான் முதலிடத்திலேயும் உயர்நிலைப் பள்ளி பிரிவில் ஃபூச் சூன் பள்ளியின் செல்வன் சுரேஷ் சங்கீத் முதலிடத்திலேயும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற பன்னிரண்டு மாணவர்களுக்கு நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த முயற்சி அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடர்ந்து நிறைய மாணவர்களை சென்றடைய வேண்டும். அதற்கான முன்னெடுப்பை பட்டிமன்றக் கலைக் கழகம் எடுக்கும் என நினைக்கிறேன். மாணவர்களுக்கு பேச்சு பயிற்சிகளை கொடுப்பதற்கு பட்டறைகளும் நடத்தலாம். அப்படி பட்டறைகள், போட்டிகள் நடத்தும்பொழுது ஏற்கனவே நடக்கும் போட்டிகளோடு குறுக்கிடாமல், ஒரே மாணவர்களை, பள்ளிகளை சென்றடையாமல் பரவலாக எல்லோரையும் சென்றடையுமாறு பார்த்துக்கொள்வது முக்கியம். பட்டிமன்றத்தில் மாணவர்கள் —————————- பொதுவாக போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் பரிசு வாங்கியவுடன் அந்த பயணம் முடிந்துவிடும். அப்படி இல்லாமல் இந்த மாதிரியான போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்களை இனம் கண்டு அடுத்தகட்டத்திற்கு தயார்செய்து அவர்களை தொடர்ந்து தமிழ் இலக்கியக் களத்தில் இயங்கச் செய்வது என்பது மிக அவசியம். அந்த வகையில் பட்டிமன்றக் கலைக் கழகம் போட்டியில் இரு பிரிவுகளிலும் முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு தங்களின் பட்டிமன்றத்தில் பேச வாய்ப்புக்கொடுத்து அவர்களுக்கு நல்ல ஒரு களம் அமைத்து கொடுத்தது பாராட்டுக்குரியது. புதியவர்களை பேச வைத்தால் தங்களின் நிகழ்ச்சியின் தரம் குறிப்பாக பட்டிமன்றத்தின் தரம் குறைந்துவிடுமோ என்ற எந்த அச்சமும் இல்லாமல் மாணவர்கள் மேல் நம்பிக்கை வைத்து அவர்களை மேடையேற்றிய ஐயா திரு யூசப் ராவுத்தர் ரஜீதிற்கு என் மனமார்ந்த நன்றி. அந்த நம்பிக்கையை சிறிதும் பொய்த்துவிடாமல் செல்வன் தயாநிதியும், செல்வன் சங்கீத்தும் மிக அருமையாக பேசினார்கள். அவ்வளவு பெரிய கூட்டத்தினரிடையே எந்த ஒரு தயக்கமுமில்லாமல் மிக தெளிவாக, அழகாக இருவரும் தங்கள் தரப்புக் கருத்துக்களை எடுத்துரைத்தனர். பட்டிமன்றம் ———— பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டுமா? நிதி ஒதுக்கவேண்டுமா என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தில், நிதிதான் ஒதுக்க வேண்டும் என்ற தலைப்பில் பேசிய செல்வன் தயாநிதி இளையரை பிரதிநிதித்து மிக யதார்த்தமாக நகைச்சுவையுடன் தன் கருத்தை கொடுத்த நேரத்தில் பேசி முடித்தார். நேரம்தான் ஒதுக்க வேண்டும் என்று வாதிட்ட செல்வன் சங்கீத்தும் அவரின் சொந்த அனுபவத்தில் இருந்து சில எடுத்துக்காட்டுக்களை முன்வைத்து எந்த அவசரமுமில்லாமல் அழகாக பேசி எதிரணியில் இருந்த தன் அம்மா திருமதி ரம்யா சுரேஷை கொஞ்சம் யோசிக்க வைத்தார். அதே அணியில் பேசிய திருமதி அகிலா ஹரிஹரன் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை சரியாக பொருத்தி நேரம்தான் முக்கியம் என்று மிகச்சிறப்பாக பேசினார். ஆனால் அடுத்த தடவை கொஞ்சம் சத்தத்தை குறைக்கலாம். விடுவாரா ரம்யா அகிலாவுக்கு ஈடு கொடுத்து தன் வாதத்தை வைத்தாலும் இன்னும் கொஞ்சும் கருத்துகளை முன் வைத்திருக்கலாம். எதிரணியில் உள்ள தன் மகனை பார்த்து கொஞ்சம் பயந்து விட்டாரோ? அதிக நிதிதான் ஒதுக்க வேண்டும் என்ற அணியின் தலைவர் முனைவர் திருமதி ராஜி சீனிவாசன் எதற்கு நிதி வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து நன்றாக பேசினாலும் அவருடைய வழக்கமான வாதத்திறன் அன்று கொஞ்சம் குறைவாகவே காணப்பட்டது. நேரம்தான் ஒதுக்க வேண்டும் என்ற அணியின் தலைவர் திரு முகமது சரீஃப் முதலில் சற்று தொய்வுடன் ஆரம்பித்தாலும் கடைசியில் பல நல்ல வாதத்தை முன் வைத்து முடித்து வைத்தார். நடுவராக செயலாற்றிய முனைவர் பொன்ராஜுக்கு சிறப்புரையாற்றிய போது இருந்த வேகம் குறைந்துவிட்டது. அவர் சிறப்பு பேச்சாளராக நல்ல பல கருத்துகளை பார்வையாளரிடம் பகிர்ந்துக்கொண்டார். ஆனால் நடுவராக ஜொலிக்கவில்லை. மொத்ததில் நல்ல தலைப்புள்ள இந்த பட்டிமன்றம் மேலும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம்.

சிங்கை நாடக வரலாறு

#தமிழ்மொழி_விழா_2016 #athipathi யின் சங் நீல உத்தமன்

முத்தமிழில் ஒன்றான நாடகத்தமிழ், கண்ணுக்கும் செவிக்கும் இன்பந்தரும் கலைவடிவம் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். சிங்கப்பூரில், 1923 மற்றும் 1924ஆம் ஆண்டுகளில் தமிழகத்திலிருந்து வந்த நாடகக் குழுக்களாலேயே பெரிய அளவில் நாடகங்கள் மேடை ஏற்றப்பட்டன. சிங்கப்பூரில் அதிகமான நாடகங்கள் முன்பு நார்த் பிரிட்ஜ் சாலையில் அமைந்திருந்த “அலெக்சாண்ட்ரா மேடை” என்ற இடத்தில் நடைபெற்றன. நாடகச்செம்மல் சங்கரதாஸ் சுவாமிகளின் பல நாடகங்கள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன.1949ஆம் ஆண்டு ‘இந்திய நுண்கலைக் கழகம்’ ஆரம்பிக்கப்பட்டது. இக்கழகம் தேவன் எழுதிய “கோமதியின் காதலன்” நாடகத்தை அரங்கேற்றியது.1950 மேடை நாடகத்தின் பொற்காலம் என்று குறிப்பிட வேண்டும். 1960க்குப்பின் தொலைக்காட்சி மற்றும் வானொலியின் ஆதிக்கத்தால் சிங்கை நாடகங்கள் சற்று நலிவடைந்தன. சே.வெ.சண்முகம் எழுதிய “கல்யாணமாம் கல்யாணம்”, ச.வரதன் இயக்கிய “முக்கனி விருந்து”, “சின்னஞ்சிறுசுகள்”, “நீரில் பூத்த நெருப்பு”, “கோயில் கோபுரம்” மற்றும் “சிங்கப்பூர் மாப்பிள்ளை” போன்ற நாடகங்கள் பிரபலமடைந்தன. 1966 முதல் 1970 வரை சிங்கை நாடகத் துறைத் தொய்வுக் கண்டிருந்த நேரத்தில் இசை, நடன, நாடகக் கலைகளை வளர்த்து வந்த ஏறத்தாழ 200 கலைஞர்களை ஒருங்கிணைத்து ‘சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம்’ 1970இல் தோற்றுவிக்கப்பட்டது. இச்சங்கம் அரகேற்றிய நாடகங்கள் சிங்கப்பூர் வாழ்கைப்பின்னணியை மையமாகக்கொண்டு படைக்கப்பட்டன. சில நாடகங்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டன. தற்கால நாடகக்குழுக்கள் ——————————– 1988ஆம் ஆண்டு இளைஞர்களால் “ரவீந்திரன் நாடகக்குழு” சிங்கப்பூரில் தொடங்கப்பட்டது. சிங்கப்பூர்த் தமிழ் நாடகக் குழுவிற்கு வளம் சேர்த்ததோடு ஆங்கில நாடகங்களையும் அவ்வப்போது அரங்கேற்றியது. சிங்கை பொன்விழாவையொட்டி கடந்த ஆண்டு ஜூன் 27ம் தேதி தமிழவேள் ஐயா கோ சாரங்கபாணியின் வாழ்க்கை வரலாற்றை “முரசு” என்ற நாடகம் மூலம் மேடையேற்றி பலரின் பாராட்டையும் பெற்றது. இன்று “வேட்டை”, “அண்ணாமலை” போன்றத் தொலைக்காட்சி நாடகங்களுக்கு மக்களிடம் பெரும் ஆதரவு உள்ளது. சிங்கையில் இயங்கி வரும் குறிப்பிடத்தக்க மற்ற நாடகக் குழுக்கள் அவாண்ட் நாடகக் குழு, இவண் தியேட்டர்ஸ், ஏ.கே.டி. கிரியேஷன்ஸ், அதிபதி இண்டர்நேஷனல் தியேட்டர் ஆகியவையாகும். தற்போது இவர்களின் ஆக்கத்தால் பல நல்ல நாடகங்கள் மேடையேற்றப்பட்டு மக்களின் வரவேற்பை பெற்றுள்ளன. சங் நீல உத்தமன் —————– அதிபதி இண்டர்நேஷனல் தியேட்டரின் “சங் நீல உத்தமன்” நாடகம் தமிழ்மொழி விழாவையொட்டி மூன்று காட்சிகள் அரங்கேறின. உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் பெரும்பாலும் மேடைப் பேச்சுக்களே அதிகம் பார்ந்திருந்த நமக்கு நாடகத்தை காண்பது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. இங்கு ஒலிஒளியமைப்பு அருமையாக இருந்தது. இரண்டு மூன்று ஒலிவாங்கிகள் பயன்படுத்தினால் இங்கு சில சமயங்களில் ஏற்படும் கீச்சொலி அன்று எழவில்லை. பெரிய அளவில் மேடையமைப்பு, திரைகள் இல்லாமல் காட்சிகளை வெகுநேர்த்தியாகத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பின்னணியில் காட்டியவிதம் மிக அருமை. காட்சிமாற்றமும் உடனுக்குடன் அழகாக செய்யப்பட்டது. கடலுக்கடியில் இருப்பது போன்ற காட்சி நன்கு வடிவமைகப்பட்டிருந்தது. குறிப்பாக அந்தக் கப்பலில் புயலில் செல்லும் காட்சி மிக தத்ரூபமாக இருந்தது. இந்தக் காட்சியில் ‘கப்பல்’ போன்று மாதிரி செய்து அதையும் சிறப்பாக பயன்படுத்தினார்கள். அதற்கு தனி பாராட்டுகள். இதற்கும் கணிசமான பொருட்செலவு, உழைப்பு தேவைப்பட்டிருக்கும். அடுத்து, கதாபாத்திரங்கள் பற்றி பார்ப்போம். சுமார் 13 பள்ளிக்குழந்தைகளுடன் 27 கதாபாத்திரங்கள் கொண்ட இந்நாடகத்தில் அனைவரும் சிறப்பாக தங்கள் பாத்திரத்தினை ஏற்று நடித்திருந்தனர். மூன்றாவது காட்சி என்பதாலோ என்னவோ யாரும் வசனத்திலோ, காட்சிக்குள் வந்துபோகும் நேரத்திலோ, நடிக்கும் நேரத்திலோ ஒரு சிறு தவறும் செய்யவில்லை. எல்லோரும் இரசித்து கைத்தட்டி கொண்டாடியது ‘லஹரி’ என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தை தான். அந்த பாத்திரத்தில் ஏற்று நடித்த சிவா நடிப்பில் கொஞ்சம் நடிகர் வடிவேலுவை ஞாபகப்படுத்தினாலும் மிக அருமையாக அங்க அசைவுகளுடன், வசன உச்சரிப்புடன் அருமையாக இரசிகர்ளை மகிழ்வித்தார். அவருக்கு நடிப்பில் சிறந்த எதிர்காலம் உள்ளது. சங் நீல உத்தமனாக நடித்தவர் மிக கச்சிதமாக நடித்தார். சக நடிகர்களுடன் தோன்றும் காட்சியில் அடுத்தவர்களின் நடிப்புக்கும் துணை நின்றார். அருமையான நடிப்பு அவருடையது. எனக்கு மிகவும் பிடித்த நடிப்பு, ‘மதப்பு’ கதாபாத்திரத்தில் தோன்றிய யோகினியின் நடிப்பு தான். காதல் கணவனை விட்டு பிரியும் தருணத்தில் அவரின் அழுகையுடன் கூடிய நடிப்பு மிக அற்புதம். கதை சொல்லி காட்சியை நகர்த்திக்கொண்டு செல்லும் ‘புலவர்’ஆக தோன்றிய ஹரிஷிகா என்ற மாணவி தமிழ் உச்சரிப்பிலும், வசனத்தை தங்குதடையின்றி தெளிப்பதிலும், கொஞ்சும் கவிதை வரிகளை ஏற்ற இறக்கத்துடன் சரியாக பாடுவதிலும் முதலிடத்தை பிடிக்கிறார். எனக்கு நாடகத்தில் பிடித்த காட்சி அந்த குழந்தைகள் நடிக்கும் காட்சிதான். அந்த காட்சியமைப்பு இம்மாதிரியான ஃபாண்டஸி நாடகத்தில் கொண்டு வருவது மிகவும் நேர்த்தியாக கதையுடன் ஒட்டிவந்தது. குழந்தைகளின் நடிப்பு அபாரம். அவர்களுடைய ஒருங்கிணைப்பு, வசன உச்சரிப்பு, மேடைப் பயன்பாடு, தங்களை சரியாக வெளிக்காட்டிகொண்டது என்ற அனைத்திலும் அவர்கள் முழு மதிப்பெண்கள் பெறுகின்றனர். மகிபாலன், மாறன், வள்ளி, பாண்டிரன், விசித்திரன், பல்லவன் என்று பாத்திரத்தில் நடித்த அனைவருமே பாராட்டுக்குரியவர்கள். நாடகத்தில் நடித்த ஒன்றிரண்டு கதாபாத்திரத்தைத் தவிர மற்றவர்கள் அனைவருமே இளையர்கள் என்பது இந்நாடகத்தின் கூடுதல் சிறப்பு. நாடகத்தின் கதை நாமனைவரும் அறிந்தது தான் என்றாலும் அதை ராஜா சுரன் காலத்தில் ஆரம்பித்து சிறப்பாகக் கதை சொன்ன விதம் அருமை. வசனங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து திரையில் காண்பித்த விதமும் பாராட்டுக்குரியது. இந்த முயற்சிக்கு பின்னால் உழைத்த அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், துணை நின்ற நாடக குழவினர்க்கும் எனது பாராட்டுகள். இந்நாடகத்தின் இயக்குனர் திரு இரா புகழேந்தியின் உழைப்பும், சிந்தனையும், இயக்கமும் மிகவும் போற்றுதலுக்குரியவை. அவர்களுக்கு என் வாழ்த்துகள். நாடகத்தில் ஒரு சில மேம்பாட்டிற்கான விஷயங்கள் என்றால் முதலில் ஆடைஅலங்காரம் சில கதாபாத்திரங்களுக்கு முற்றிலும் சரியாக பொருந்தவில்லை. தமிழ் உச்சரிப்பு, வசனத்தில் ஆவேசம் சரியாக வெளிப்படவில்லை. குறிப்பாக அரசவை காட்சியில் அவை காட்சிக்கேற்ப இல்லை என்றே சொல்ல வேண்டும். முக்கியமாக ஒன்று சொல்ல வேண்டுமானால் கதாபாத்திரத்துக்கு ஏற்ற உடலமைப்பு கொண்ட நடிகர்களை தேர்வு செய்தால் நாடகத்துக்கு மேலும் வலு சேர்க்கும். இது ஒரு சில முக்கிய கதாபாத்திரங்களுக்கு மட்டுமே மற்ற கதாபாத்திரங்களுக்கு பொருந்தியே அமைந்தன. காட்சியமைப்பும் மேலும் மேம்படுத்தப்பட்டால் உலகதரத்துக்கு இணையானதாக மாற்றமுடியும். நாடகத்தை வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடத்தி மாணவர்களுக்கு பிரத்யேக காட்சிகள் அமைத்தது சிறப்பு. சனி, ஞாயிறுகளிலும் நடத்தியிருந்தால் மேலும் பல பொதுமக்களை சென்றைடைந்திருக்கும். இந்நாடகத்தைக் காண நுழைவுச்சீட்டு $25 வெள்ளி என இருந்தாலும் அதை காசு கொடுத்து வாங்கி ஆதரவு வழங்கியவர்கள் பலர். கிட்டத்தட்ட நான்கு நாடகங்களை உள்ளடக்கிய இந்தத் தமிழ்மொழி விழா மேலும் சிறப்பு பெறுகிறது. வழக்கமாகக் காணப்படும் முகங்களைக் காணமுடியவில்லை. புதிய விருந்தினர்களை, அரங்கு நிறைந்த கூட்டத்தை ஈர்த்த இந்தத் தமிழ்மொழி நிகழ்ச்சி நம் பாராட்டைப் பெறுகிறது. இந்நாடகக்கலை மேலும் வளர்ச்சியடைய நாடகக்கலைஞர்களுக்கும், தாயாரிப்பாளர்களுக்கும் மக்கள் ஆதரவு கொடுக்கவேண்டும். நாடகங்கள் நூலுருப் பெறவேண்டும். நாடகத் திறனாய்வுகள் பெருகவேண்டும். ஆங்கில மொழியில் நாடகக்கலையை வளர்க்கும் பயிற்சிமையங்கள் போல தமிழுக்கும் அமைக்கப்பட வேண்டும். பொது மக்கள் ஆதரவு நல்கிட வேண்டும். தமிழ் மக்களிடம் மொழியுணர்வு பெருகும்போது முத்தமிழும் செழித்து வளரும்.

#தமிழ்மொழி_விழா_2016 தமிழ்மொழி விழா குறித்து நான் மார்ச் மாதம் தொடக்கத்தில் சிராங்கூன் டைம்ஸில் கூறிய கருத்தினை இன்று ஒரு நிகழ்வில் அப்படியே பிரதிபலித்த சிங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் திரு இரா தினகரன் அவர்களுக்கு என் நன்றி என்னை எழுத ஊக்கப்படுத்திய Shanavas அண்ணனுக்கு நன்றி