தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி 19-மே -2018

தஞ்சோங் பகார் சமூக மன்றத்தின் இந்திய நற்பணிக் குழு ஏற்பாடு செய்திருந்த தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி 19-May-2018 அன்று மாலை தஞ்சோங் பகார் சமூகமன்றத்தில் நடைபெற்றது. தஞ்சோங் பகார் குழுத்தொகுதியின் அடித்தள ஆலோசகர் குமாரி இந்திராணி ராஜா, அமைச்சர், பிரதமர் அலுவலகம்,
இரண்டாம் அமைச்சர், நிதி, சட்டம் மற்றும் கல்வி அமைச்சு, நிகழ்ச்சியின் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்தாண்டின் சிறப்பம்சம் வண்ணக்கோலப் போட்டி. குடியிருப்பாளர்கள் ஆர்வத்துடன் அதில் கலந்துகொண்டு பல வடிவங்களில் வண்ணமயமான கோலங்கள் போட்டனர். வந்திருந்து அனைவரும் சிற்பிகள் மன்றத்தின் அருமையான கலை நிகழ்ச்சிகளை இரசித்து மகிழ்ந்தனர் . கல்வி, உணவு, உடல் ஆரோக்கியம் என பல நிகழ்வுகள் ஆண்டு முழுதும் நடத்தப்பட்டாலும் இம்மாதிரியான கலை நிகழ்ச்சிகள் குடியிருப்பாளர்களர்கள் ஒன்றுகூடுவதற்கு, கலந்து பேசுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது. நிகழ்ச்சிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

Tanjong Pagar CC IAEC organized Tamil New Year Celebration at Tanjong Pagar CC on 19-May-2018. Our Grassroots Adviser Ms Indranee Thurai Rajah, Minister, Prime Minister’s Office, Second Minister for Ministry of Finance, Ministry of Law & Ministry of Education, Adviser to Tanjong Pagar GRC GROs, graced the occasion. This year highlight was Rangoli Competition. Residents participated with much enthusiasm and showcased their skills with colorful designs. Audience enjoyed the wonderful performances by Sirpigal Mandram. Though we organize events related to education, food, health throughout the year these kind of entertainment events bring the residents together and provides a platform to know one another. Thanks to all this who supported this event.

பி.கு: இங்கு தமிழோ ஆங்கிலமோ மொழிபெயர்க்கபடவில்லை என்று தாழ்மையுடன் தெரிவித்துக்கொண்டு….

   

சிங்கையில் தமிழும் தமிழரும்(எனது பார்வையில்)

நான்காயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய பெருமையை தக்கவைத்துக் கொண்டிருக்கும் செம்மொழியான தமிழ்மொழியை கொண்டாடுவோம், அதனை ஆவணப்படுத்துவோம் அதே வேளையில் எல்லோரும் ஒன்றிணைந்த ‘ஒரு நாடு, ஒரு மக்கள்’ என்ற பெருமையைக் கட்டிக்காப்போம் என்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் திரு விவியன் பாலகிருஷ்ணன் கூறினார்.
திரு ஏ பி ராமன் ஐயா அவர்கள் திருமதி சவுந்திர நாயகி வைரவன் அவர்களுடன் இணைந்து எழுதிய ‘சிங்கையில் தமிழும் தமிழரும்(எனது பார்வையில்)’ என்ற தமிழ் நூலும், திருமதி சவுந்திர நாயகி வைரவன் அவர்கள் திரு ஏ பி ராமன் ஐயா அவர்களுடன் இணைந்து எழுதிய “The Tamil Community and the Making of Modern Singapore”(சிங்கப்பூரை நவீனமாக்கிய தமிழ்சமூகத்தினர்) என்ற ஆங்கில நூலும் 13-மே-2018 அன்று காலை சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தில் வெளியிடப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இம்மாதிரியான நூல்கள் தம் முன்னோர்கள் செய்த தியாகத்தையும், நம் பாராம்பரியத்தையும் எடுத்துச் சொல்லும் என்றும் தன்னுடைய முன்னோர்கள் நான்கு தலைமுறையினருக்கு முன்னர் இந்தியாவில் இருந்து சிங்கைக்கு குடிபெயர்ந்த வரலாற்றையும் நினைவுகூர்ந்தார்.

சிங்கப்பூருக்கான இந்திய தூதுர், சிங்கப்பூருக்கான இலங்கையின் துணைத்தூதர், இந்து அறநிலையத்துறை தலைவர் என பல முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

காலையில் விமானம் நிலையம் செல்ல நேரிட்டதால் சற்றே தாமதமாக, திரு நா ஆண்டியப்பன் ஐயா பேசும் பொழுதே நிகழ்ச்சிக்கு சென்றேன். அதற்கு முன்னர் பேசிய சுப திண்ணப்பன் ஐயாவின் பேச்சை கேட்கும் வாய்ப்பை இழந்தேன். சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் தலைவரான திரு நா ஆண்டியப்பன் தன்னுடைய உரையில், “நான் எழுத்தாளராவது எப்படி என யோசித்துக் கொண்டிருக்கிறேன், நான் இன்னும் எழுத்தாளர் ஆகவில்லை போலும், ஏனென்றால் இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர் பட்டியலில் என் பெயர் இல்லை” என்று சுட்டிக்காட்டினார். சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் கௌரவத் தலைவர் திரு கே கேசவபாணி, கவிமாலைக் காப்பாளர் திரு மா அன்பழகன், இந்நூலின் பிழை திருத்தத்துக்கு உதவி புரிந்த திரு சந்திரசேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இரு நூல்கள் குறித்தும் தி மீடியா, தயாரிப்பாளர் திரு முகம்மது அலி, இந்து அறநிலையத்துறையின் தலைமை நிர்வாக அதிகாரி திரு த ராஜசேகர், இருவரும் கலந்துரையாடினர்.

திரு ராஜசேகர் புத்தகம் குறித்து கூறும்போது, இருநூற்றாண்டுகால வரலாற்றை சுருக்கமாக ஒரு புத்தகத்தின் பொருளடக்கம் போன்று திரு ஏ பி ராமன் ஐயா கொடுத்திருக்கிறார் என்றும் ஒவ்வொரு அத்தியாத்தையும் மேலும் விரிவுபடுத்தி தனியாக புத்தகம் போடலாம் என்றும் கூறினார்.

இப்புத்தகம் ஒரு தகவல் திரட்டு, திரு ராமன் ஐயா, தன்னுடைய காலகட்டத்தில் நடந்ததை அவதானித்து ஒரு காலக் கணிதன் போன்று பத்திரப்படுத்தி கொடுத்திருப்பதாக கருத்துரைத்தார் திரு முகம்மது அலி.

இப்படி ஒரு நூல் எழுத வேண்டும் என்ற தன்னை அணுகி இந்நூல் எழுதியதற்கு முக்கியமான காரணமாக திருமதி சவுந்திர நாயகி வைரவன் இருந்தார் என்றும் இந்நூல் ஆய்வு நூலல்ல 1950ல் சிங்கை வந்து இன்று வரை பத்திரிக்கையாளனாக இருக்கும் என்னுடைய அனுபவநூல் என்று தனது ஏற்புரையில் திரு ஏ பி ராமன் ஐயா கூறினார்.

பின்னர் நன்றியுரையாற்றிய திருமதி சவுந்திர நாயகி வைரவன் இந்நூல் ஆய்வு நூலல்ல என்றும் ஆனால் பல தகவல்கள் அடங்கியுள்ளதாகவும் கூறினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களையும் நூல் உருவாக உதவி புரிந்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றி கூறினார்.

திரு ஜி டி மணி நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார். மதிய உணவுடன் இனிதே விழா நிறைவுற்றது.

நிறைய பேருக்கு ஆங்கில நூல் குறித்து குழப்பம் உள்ளது. அதற்கு காரணம் அது குறித்த சரியாக நிகழ்வில் விளக்கப்படவில்லை.

எனது பார்வையில் இரு நூலும் ஒரே அட்டைப்படத்தை கொண்டிருந்தாலும் ஆங்கில நூலில் 25 அத்தியாயங்களும், தமிழ் நூலில் 19 அத்தியாயங்களும் உள்ளன. படங்களும், செய்திகளும் சற்றே மாறுபட்டிருக்கின்றன.

சிங்கையில் நடக்கும் எந்த ஒரு தமிழ் நிகழ்வையும் உடனுக்குடன் முகநூலில் எழுதி வருகிறார் திரு ஏ பி ராமன் ஐயா. உடலுக்கு வயதானலும் என்றும் கற்றுக்கொள்ளும் மனநிலையுடன் முகநூலில் பதிவிட கற்றுக்கொண்டு தமிழ்மொழியை பலருக்கும் கடத்தி மகிழ்கிறார். ஒரு விபத்தின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிகழ்ச்சிக்கு செல்லாவிட்டாலும் தன்னைத் தொடரும் பலருக்கும் செய்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நண்பர்கள் மூலம் செய்தி சேகரித்து பதிவு செய்கிறார். அதோடு வீட்டில் ஓய்வில் இருக்கும் காலத்தில் ஓய்வெடுக்க விரும்பாமல் நூல் எழுதியது அவரின் உழைப்புக்கு ஒரு சான்று. நல்ல உடல்நலத்துடன் அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

இந்த நூல்கள் குறித்த என்னோட பார்வையை விரிவாக பிறகு பகிர்கிறேன்.

பிளக்ஸ் பேனர்

சிங்கையில் புதியதாய் ஒரு அமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. அது தமிழக தலைநகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இவர்களுடைய ஒரே நோக்கம் சிங்கையில் எப்படியாவது தமிழை வளர்த்துவிடுவது. சங்கம் வைத்து வளர்த்தார்கள் அன்று, இப்போது ‘பேனர்’ வைத்து வளர்க்கிறார்கள். உங்களுக்கு முகநூலில் ‘பிளக்ஸ் பேனர்’ வைக்க வேண்டுமா? அவர்களை அணுகவும். அணுகாவிட்டாலும், அனுமதி கொடுக்காவிட்டாலும் ‘பேனர்’ வைப்பார்கள். நீங்கள் இரசித்து பகிர்ந்து கொள்ளலாம்.

தி சிட்டிஸ் ஆஃப் மெலாக்கா

ஏழு நாட்கள், ஏழு நூல்கள், ஏழு நண்பர்களை இணைத்தல் என்ற தொடரில் Rengaprasath Gopalakrishnan, Malarvizhi Elangovan ஆகியோர்கள் என்னை கோர்த்துவிட்டார்கள். இதில் விளக்கமோ, விமர்சனமோ வேண்டோம் ஆனால் அட்டைப்படம் மட்டும் முகநூலில் போட்டால் போதுமானது என கடைசியில ஒரு கடலைமிட்டாய் வேற கொடுத்தார்கள். ஆனால் எனக்கு தெரிந்து நிறைய பேர் சொந்தக்கதை, முன்னுரை, பின்னுரை என பல விளக்கங்களோடுதான் பதிவு போட்டார்கள். அந்த வரிசையில் நாமும்…. புத்தகத்திலுள்ள விஷயங்களை ’அடிஷனல் பேப்பருடன்’……….ஆனால் தொடர்ந்து ஏழு நாட்கள் முடியாது. எனக்கு புத்தகப் பதிவு போட நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக போடுவேன்…

இன்றைய புத்தகம் ‘தி சிட்டிஸ் ஆஃப் மெலாக்கா’. இந்தப் புத்தகத்தை 3 மாதங்களுக்கு முன்னர் என் மகளுக்காக வாங்கினேன். அவர்கள் பள்ளியில் செட்டி மலாக்கா பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று கூறியதால், தகவல்கள் பெற நண்பரிடம் சொல்லி வாங்கினேன். ஆனால் புத்தகம் வருவதற்குள் கட்டுரைக்கான தேதி முடிந்துவிட்டது:(
சரி, புத்தகத்துக்குள்ள போவோமா…

இந்தப் புத்தகத்தை மலேசிய அருங்காட்சியகத் துறை கடந்த ஜனவரி மாதம் மலேசியாவில் வெளியிட்டிருக்கிறது. சிங்கப்பூரில் நாளை மாலை இந்திய மரபுடைமை நிலையத்தில் இதன் ஆசிரியர்கள் கேரன் லோ & ஜெகதீசன் வேலுபிள்ளை புத்தகத்தில் கையெழுத்து போடும் நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

“‘சிட்டி மெலாக்கா’ அல்லது ‘செட்டி மலாக்கா’ என்றும் அழைக்கப்படும் இந்த இனக்குழு மலேசியாவின் முதல் பெரனாக்கன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களை ‘கிளிங்’ என தொடக்கத்தில் அழைத்துள்ளார்கள். தென்னிந்தியாவில் இருந்து வணிகத்துக்காக மலாக்கா சுல்தான் ஆளுகைக்குட்பட்ட காலத்துல வந்த இவர்கள் அங்கேயே திருமணம் செய்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். இந்தக் கலப்புத் திருமணத்தால் இவர்கள் மொழி, உணவு, உடை,வழிபாடு, பண்பாடு எல்லாமே இருசாராருடைய பாதிப்பும் கலந்து தனித்து விளங்குகிறது. இவர்கள் மலாக்காவில் நன்கு அறிமுகமானவர்கள் என்றாலும் மலேசியாவின் மற்ற பகுதிகளில் அவ்வளவாக அறியப்படவில்லை” என் இப்புத்தகம் சொல்கிறது.

மலேசியாவின் அப்போதைய சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் இந்த புத்தகம் மலாக்காவின் சுற்றுலா வளர்ச்சிக்கும் ‘சிட்டி மலாக்கா’ பற்றி அறிந்து கொள்ள மிகவும் உதவும் என பாராட்டி அனுப்பிய செய்தி இதில் உள்ளது. அது உண்மை என தோன்றும் அளவிற்கு 240+ பக்கம் உள்ள இந்தப் புத்தகத்தில் பல அரிய படங்களுடன் இச்சமூகத்தின் தற்கால வாழ்வியல், பண்டிகைகள்,விழாக்கள், திருமணங்கள், குழந்தை பிறப்பு, நீத்தார் நினைவு என அவர்களின் சமகால பழக்கவழகங்களை சிறப்பாக பதிவு செய்துள்ளது. ‘கம்போங் ச்சிட்டி’ என 25 வீடுகளை கொண்ட 100 பேர் கொண்ட சிறிய கிராமம் இன்றும் உள்ளது. இங்கு சில கோயில்களும், ‘சிட்டி அருங்காட்சியகமும்’ உள்ளது.

இச்சமூகத்தினரின் மூதாதையர் பெரும்பாலும் தமிழகத்திலிருந்து வந்தவர்கள் என்றாலும் பதினைந்தாம் நூற்றாண்டிலுருந்து மெதுவாக வழக்கொழிந்து ‘மலாய்’ மொழியே வழக்கு மொழியானது. பின்னர் தற்போது மலாய், தமிழ், ஆங்கிலம் கலந்தே குடும்பங்களில் பேசுகிறார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் 84 மொழிகள் பேசிய 190,000 பேர் அந்தப் பகுதியில் இருந்தாலும் இந்தியாவிலிருந்து வந்த தமிழர்களே தங்கள் அடையாளங்களை தக்கவைத்துள்ளார்கள் என புத்தகம் சொல்கிறது.

இவர்கள் ‘இந்து’ மதத்தை பின்பற்றி இங்குள்ள கோயில்களில் பூசை வழிபாடு செய்கின்றனர், விழாக்கள் கொண்டாடுகிறார்கள். வயதுக்கு வந்த பெண்களுக்கு சடங்கு நடத்துவது குறைந்து வரும் காலக்கட்டத்தில் இவர்கள் சடங்கு விழா நடத்துவது மாறுபட்டிருக்கிறது. தாலி கட்டி திருமணம், நலுங்கு, பாலும் பழம் என பல சடங்குகள் தமிழ்த் இந்துத் திருமணங்களை ஒத்திருக்கிறது. இவர்களுடைய உணவு முறை மலாய் உணவு முறையை ஒத்திருக்கிறது.

ஒரு இனத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும்போது அதற்கு தேவையான சான்றுகளும், சரியான தரவுகளும் மிக முக்கியம். அப்படி இல்லாமல் கதை சொல்லும் போக்கில் தனக்கு வேண்டியவர்களை கதாபாத்திரங்களாக்கி அவர்களை வரலாற்று நாயகர்களாக சித்திரிப்பது அபாயகரமானது. அது ஒரு புனைவு என்ற முறையில் ஏற்றுக் கொள்ளப்படலாம். ஆனால் இந்த புத்தகத்தில் அந்த மாதிரியான எந்த இடைச்செருகலும் இல்லாமல் வரலாற்றாசிரியர் திரு சாமுவேல் துரைசிங்கம் உட்பட பல வரலாற்று ஆவணங்களை புரட்டிப்பார்த்து நிகழ்கால வாழ்வியலை அவர்களிடையே வாழ்ந்து பதிவு செய்திருக்கிறார்.

இந்தப் புத்தகம் நூலகத்தில் கிடைக்கலாம் ஆனால் வேறு எங்கு கிடைக்கும் என தெரியவில்லை, நாளை கேட்டுச் சொல்கிறேன்:)

         

 

நீட் சோதனை அவலங்கள்

பள்ளியில் தயார்செய்யப்பட்டு
சமூகத்தின் கையில் புரட்டிப்பார்க்கப்பட
புதிய புத்தகத்தின் வாசனையாய்ப் புறப்படும்
வெள்ளைத்தாள்களின் தொடக்கத்தில்
சிவப்பு மையில் சோதனைக் கோடுகளைக் கீறல்களாய்க் கிறுக்கித்தள்ளி
மூன்றாம் துளையைத் திறந்துவிட்டு
மூச்சுக்குழாயின் வெப்பம் அதிகரிக்க
காதில் வெளிச்சம் பாய்ச்சி
இருளின் சத்தத்தைத் துளைத்தனுப்பி
நேர்மைப் பின்னல்களைப் பிரித்தெடுத்து
சந்தேகத்தைப் பிழிந்து சாறுத் தேய்த்து
மனத்தில் இரணங்களை விதைத்து
நுழைவாயிலிலேயே மனத்தேர்வு நடத்தித்
தயார் செய்வது நுழைவுத் தேர்விற்கல்ல
தவறாகத் தேர்தெடுத்த தலைவர்களை
அடுத்தமுறையாவது நினைவில் கொள்ள.