அஞ்சலி

ஐந்தாண்டுகளுக்கு முன்பு சின்ன உடல்நலக் கோளாறு வந்தபோது மிகவும் சோர்வடைந்து விட்டேன். அப்போது வீட்டுற்கு வந்தவர் “நானெல்லாம் எவ்வளவு மருத்துவ சிகிச்சைக்கு பிறகும் தைரியமாக எத்தனை நாடுகளுக்கு பயணம் செய்கிறேன், மன உறுதி இருந்தால் போதும் அதுவே நாம் நலம்பெற பெரிதும் உதவும்” என எனக்கு தைரியம் சொன்னார். அது இன்றும் என் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது.

கடந்தாண்டு செப்டெம்பர் மாதம் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கை வந்தபோது, “ஏதாவது தமிழ் நிகழ்வு நடக்குதா” என்று கேட்டார். பாரதியார் விழா நடப்பதாக நான் சொன்னவுடன், சக்கர நாற்காலியில் இருந்த போதும் அன்று பாரதியார் விழாவில் கலந்துகொண்டார். இலங்கை கம்பன் கழகத்தின் தலைவரான இவர் சிறந்த தமிழ் பேச்சாளர்கள் பலருக்கும் மிகவும் பிடித்தவர். நல்ல பல பேச்சாளர்கள் உருவாவதற்கு காரணமாக இருந்தவர், அவர்களை ஊக்கப்படுத்தி ஆதரவு கொடுத்தவர். தமிழில் நூல்கள் எழுதியுள்ள இவர் தமிழ்மொழி மேல் மிகுந்த பற்றுக்கொண்டவர், சிறந்த பேச்சாளர்.

இலங்கைக்கான மொரிஷியஸ் நாட்டின் சிறப்பு தூதராக பணியாற்றினார். இலங்கையின் சிறந்த தொழிலதிபரான இவருக்கு இலங்கை அரசாங்கம் கடந்தாண்டு ‘தேசபந்து’ விருது கொடுத்து கௌரவித்தது. ஆன்மீகம், மொழி, சமூகப் பணி என கடைசிவரை ஓய்வின்றி பணியாற்றியவர். யாருக்கு உதவி தேவைப்படுகிறது என அறிந்து அவர்களுக்கு கொடுத்துதவிய பெரும்புரவலர்.

சிறியவர், பெரியவர் என அனைவரிடத்திலும் மிக கனிவாக பேசுவார், அன்பானவர், எளிமையானவர், நேர்மறை சிந்தனைக்கு சொந்தக்காரர்.

சிகிச்சைக்காக சிங்கப்பூர் வந்திருந்த இவர், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறைவனடி சேர்ந்தார்.

Seethaவின் மீது அக்கறையும், அன்பும் கொண்டவர். சீதாவின் மாமாவின் இழப்பு எங்களுக்கு மிகுந்த வேதனை தருகிறது. அவருடைய உயிர் சிங்கையில் பிரிந்து, கடைசி பயணம் எங்கள் கண்முன் நடந்தது துயரமானது. தனது அன்னையை இழந்த சில நாட்களிலேயே தானும் மறைந்துவிட்டார். ஒரே வாரத்தில் இருவரும் மறைந்தது எங்களுக்கு மிக பெரிய இழப்பு.
அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

Leave a Comment