அஞ்சலி

இருபதுக்கு மேல் பேரன் பேத்திகள் இருந்தாலும், ஒவ்வொருவரின் மேலும் தனிப்பட்ட முறையில் அளவுகடந்த அன்பும் அக்கறையும் கொண்டவர். அதோடு பேரன் பேத்திகளுக்கு குடும்பங்கள் உருவான பிறகு அவர்கள் ஒவ்வொருவரின் மீதும் அன்பு பாராட்டுவார். என் மீதும் என் மனைவி மற்றும் பிள்ளைகள் மீதும் மிகுந்த பாசம் உடையவர். இப்படி ஒருவரால் எல்லோர் மீதும் இத்தனை வயதிலும் அன்பாக இருக்க முடியுமா என என்னை வியப்பில் ஆழ்த்தியவர்.
அப்படிபட்டவர், எங்களை விட்டு பிரிந்தார் என்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. என் மனைவி Seethaவின் பாட்டியின் மறைவு எங்கள் குடும்பத்துக்கு ஒரு பெரிய இழப்பு. அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

May Her Soul Rest In Peace.

வேலைக்காரன்

கருத்து கருத்து கருத்து…..படம் முழுக்க ஒன்லி கருத்து.
சிவகார்த்திகேயனின் சிறந்த நடிப்பு, மக்களை ஈர்க்கும் நல்ல கதைக் கரு, மனதில் பதியும் நறுக்கென்ற வசனம், நயன்தாரா என்ற மந்திரச் சொல்(!) இருந்தும் படம் சோபிக்கவில்லை.

படத்தை பாதிக்கு மேல் ‘லாஜிக்’ தின்றுவிடுகிறது. ஒரு தொழிலாளி CEO ஆவது, குரு நண்பனாவது, 12 மணிக்கு ஊரே விளக்கு போடுவது, எல்லோரும் சிவகார்த்திகேயனின் வானொலி பேச்சை மட்டும் எப்போதும் கேட்டுகொண்டிருப்பது, முதலாளி தொழிலாளியாய் கடைசி வரை யாருக்கும் தெரியாமல் நடிப்பது, பல நிறுவன தொழிலாளர்கள் ஒன்றாக இணைவது, ஒரு நிறுவனத்தின் பொருளை சாப்பிடும் பலரில் ஒரு குழந்தை மட்டும் இறப்பது…..இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்.

நல்ல வேளை நயன்தாராவுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் காதல் மலர்வதை விலாவாரியாக காண்பிக்காமல் போனார்கள். நயன் காதல் காட்சிகளில் முடிந்தவரை சிவாவை தொடாமல் நடித்திருக்கிறார். ரோபோ சங்கருக்கு ஏதும் கால்ஷீட் பிரச்சனையா என்று தெரியவில்லை, ஆள் திடீரென காணாமல் போய்விடுகிறார். பிரகாஷ்ராஜ் ‘டம்மி வில்லன்’னாக வருகிறார். நம்ம புன்னகை இளவரசி ஸ்னேகா சோகத்தை புழிந்து கொடுக்கிறார்.

சம்பந்தமில்லாமல் ஒரு டூயட் பாடல், போடணுமே என்று போட்டிருக்கிறார்கள். பாடலில் கீழே உள்ள ஆங்கில ‘சப் டைட்டில்’ பார்த்து பல வரிகளை புரிந்துகொள்ள வேண்டிய சூழ்நிலை. ஒரு பாடலும் நம்மை ஈர்க்கவில்லை. எடிட்டிங்கும் சொதப்பல். ஒளிப்பதிவு பரவாயில்லை. இயக்கம் சுணக்கம்.

சிவகார்த்திகேயன், தன் நண்பனின் இறுதி ஊர்வலத்தில் ஆடும் நடனத்திற்கு நிறைய உழைத்திருக்கிறார். தன் வீட்டிற்கு ‘stabilizer’ விற்க வரும் விற்பனையாளரிடம் பேசும் வசனங்கள், யதார்த்தை விளக்கியது. அந்த சித்தாந்தம் நிர்வாக மேலாண்மை படிப்பில் வரும் பாடத்திலிருந்து எடுத்து எல்லாரும் புரியும் வகையில் கையாளப்பட்டிருக்கிறது. மருத்துவர் கு சிவராமன் ஒரு காட்சியில் வந்து கருத்து சொல்கிறார். இப்போது கதை என்னவென்று உங்களுக்கு புரிந்திருக்கும். படம் முதலிருந்து கடைசிவரை ஒரே மாதிரி ‘சீரியஸாக’வே இருப்பது திரைக்கதை ஓட்டத்தின் பெருங்குறை.

சிவகார்த்திகேயன், வளர்ந்து வரும் சிறந்த நடிகர். இப்போதிருக்கும் இளம் கதைநாயகர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர். தன் உழைப்பால், திறமையால் நம் கண்முன்னே முன்னேறியவர். நல்ல கருத்துள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது சிறப்பு, ஆனால் அதை மக்களுக்கு, அவர்களுக்கு பிடித்த வகையில் கொண்டு சேர்ப்பது மிக அவசியம். அதை அறிந்து கொண்டால் வெற்றிபெறலாம். ஆனால் இந்த முறை வேலைக்காரன், ‘அப்ரென்டிஸ்’ஸாகவே (apprentice) இருக்கிறார்.

ஜாங் யூன் அஞ்சலி

திங்கட்கிழமை மாலை என்னோட மகள், என்னிடம் அந்தச் செய்தியை சொன்ன போது, அதை ஒரு விஷயமாக பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து, அன்று என் மனைவி வெளியே நூலகம் செல்ல அழைத்தபோதும் வரவில்லை என்று சொல்லிவிட்டாள். அன்று இரவு பலமுறை கூறிய பிறகும், நான் தூங்கியவுடன் மறுபடியும் அது தொடர்பான செய்தியையும், காணொளியும் நடு இரவிலும் பார்த்துக் கொண்டிருந்தாள். மறுநாள், அவளிடம் பேசிய பிறகு, புரிந்துகொண்டு சற்றே இயல்பானாள். இதெல்லாம், எதற்குன்னு தானே யோசிக்குறீர்கள். அவளுக்கு மிகவும் பிடித்த பிரபல கே பாப் பாடகர் ஜாங் யூன், தன்னோட 27 வயதில் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி அறிந்தே, இவ்வளவு கூத்தும்.

ஒரு அக்மார்க் இளையராஜா இரசிகருக்கு வந்து சோதனையை பார்த்தீங்களா?

சரி, அதோட முடிஞ்சுதா? அதான் இல்லை, மறைந்த அந்த இசைக்கலைஞனுக்கு, சிங்கையில் இன்று ஹாங் லிம் பூங்காவில் மாலை அஞ்சலி கூட்டம் நடக்கவிருக்கும் செய்தி அறிந்து கண்டிப்பாக கூட்டிப் போக வேண்டும் என்றாள். முதலில் மறுத்தாலும் பிறகு அவளுக்காக, பல கோடிக்கணக்கான நெஞ்சங்களை கொள்ளைக்கொண்ட அந்த இசைக் கலைஞனுக்கு அஞ்சலி செலுத்த நானும் சென்றேன். இங்கே வந்து பார்த்த பிறகுதான் தெரிந்தது அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சோகத்துடன் கூடியிருந்தனர். அதில் 95 விழுக்காடுக்கும் மேல் இளம்பெண்களே. அதிலும் சிலர் கதறி கதறி அழுவதை பார்க்கும் போது மொழி, இனம், நாடு இவற்றையெல்லாம் தாண்டி, ஆங்கிலம் தெரியாத அந்த இளம் இசைக்லைஞன் கொரிய மொழியில் மட்டுமே பாடி எப்படியோரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறான் என்பதை பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது.

அந்த கலைஞனுக்கு அவளே எழுதிய அஞ்சலி இதோ கீழே:

Below is my daughter’s condolence message:

Sorry Jong Hyun

Kim Jonghyun was born on 4th of April. Sadly he died at the age of 27. He was not only a pop singer but a great person too.

He was a Korean singer who was accepted in S.M entertainment which was one of the top three entertainment companies . He was in a K-Pop Band called Shinee.

His members were Minho, Taemin, Key and Onew. They were too close and are like brothers. They went through thick and thin.

Sometimes the problems you have, can affect you. Even when you have people who r there to go through everything with you, you will feel alone . Sometimes it feels like only you live in this world of darkness. You will always find yourself crying or pitying yourself. Soon the darkness overwhelms and you can’t help wanting to die. You want to end this darkness and the only way you see is to end your life. If you are gone, no more problems, no more sadness and no more darkness.

My friends, this is what a person with depression feels.

I am not a k pop star. I am no where near those two words. But I can imagine what he might be going through.

As a member of one of the best group in k pop there will be haters that want to see u fall. There is pressure when u have to sing in front of million people.

For those people that don’t know k pop:
A k pop singer works hard to get accepted. After they are accepted, they work hard as a trainee. Then when they are ready to debut, they have to learn the lyrics to their song and the dance for it. Then perform in front of a lot of people. All those people are staring and judging you. All that pressure.

Back to Jonghyun:
He goes through a lot of pressure and got depression. He could not take it anymore so he ended his life. He used carbon monoxide and ended his life.

His songs that we enjoyed actually had some meaning involving his depression. We never realized it.

He lastly texted his older sister telling her goodbye. By the time his sister called the police and arrived there he saw on the ground lifeless.

Jonghyun was sweet person. Funny caring and amazing. Nobody can replace him.

I am sorry for his sister, mates, friends, and family for their loss.

I saw some videos and a lot of his idol friends came to show their respect. This shows how many people’s heart he had grasped. He also grasped the heart of his fans (shawols). Leaving us was the saddest moment for everyone.

Guys even when there is no hope please don’t end your life. There is always Hope. Believe in yourselves.

We will forever remember you JongHyun. Take care up there.
#RIPJongHyun

நினைவின் தடங்கள்

சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் தமிழ்மொழிச் சேவைகள் பிரிவு முதன் முறையாக ‘நினைவின் தடங்கள்’ என்ற நகழ்ச்சியை நடத்துகிறது. இதில் இந்தாண்டு மறைந்த 7 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்து 7 பேச்சாளர்கள் பேச இருக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சி டிசம்பர் 16ஆம் தேதி, சனிக்கிழமை சரியாக மாலை ‪6:00‬ மணிக்கு விக்டோரியா சாலையிலுள்ள தேசிய நூலக வாரியத்தின் 5வது தளத்திலுள்ள பாசிபிலிட்டி அறையில் தொடங்குகிறது. ‪7:30‬ மணிக்கு நிகழ்ச்சி முடிந்துவிடும் என அறிகிறேன்.

படைப்பாளிக்கு மரணம் என்பது என்றுமே இல்லை. அவனின் எழுத்துகள் என்றும் அவன் பெயர் சொல்லும். அந்த வகையில் கீழ்கண்ட எழுத்தாளர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்தாலும், அவர்களுடைய படைப்புகள் என்றும் நமக்கு அவர்களை நினைவூட்டிக்கொண்டே இருக்கும். இந்தப் படைப்பாளர்களில், நான் நேரில் சந்தித்தது திரு எம் ஜி சுரேஷ் அவர்களை மட்டும்தான். தங்கமீன் கலை இலக்கிய வட்டத்தின் ஒரு மாதாந்திர கூட்டத்தில் என் கவிதைக்காக அவரிடம் இருந்து பரிசு பெற்றது மறக்க முடியாத தருணம்.

மறைந்த அந்த எழுத்தாளர்களின் பெயர்கள் இதோ:

1. அசோகமித்ரன் – தோற்றம் : 22 செப்டம்பர் 1931, மறைவு : 23 மார்ச் 2017
2. மேலாண்மை பொன்னுசாமி – தோற்றம் : 1951, மறைவு : 30 அக்டோபர் 2017
3. எம் ஜி சுரேஷ் – தோற்றம் : 1953, மறைவு : 2 அக்டோபர் 2017
4. பெ திருவேங்கடம் – தோற்றம் : 28 செப்டம்பர் 1944, மறைவு : 9 செப்டம்பர் 2017
5. பி பி காந்தம் – தோற்றம் : 2 ஜனவரி 1937, மறைவு : 21 ஜூன் 2017
6. பாக்கியம் ராமசாமி – தோற்றம் : 1 ஜூன் 1932, மறைவு : 7 டிசம்பர் 2017
7. மா நன்னன் – தோற்றம் : 30 ஜூலை 1923, மறைவு : 7 நவம்பர் 2017

நம் சிங்கை நூலக வாரியத்தின் தமிழ்மொழிச் சேவைகள் பிரிவு இந்நிகழ்ச்சியை நடத்துவதால், இலக்கிய ஆர்வலர்கள் கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சி இது. அப்படி அதிக அளவில் கலந்துகொண்டால்தான் மேலும் நல்ல பல நிகழ்ச்சிகள் நடத்த நூலகம் ஊக்கம் கொடுக்கும். அதிலும் இந்தப் பிரிவின் தலைமைப் பொறுப்பேற்றிருக்கிற திரு Azhagiya Pandiyan அவர்களின் முயற்சியால் நடக்கும் நிகழ்ச்சி என்பதால் நிச்சயம் பயனுள்ளதாகவும், தரமாகவும் இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. 7 எழுத்தாளர்களின் படைப்புகள் நிகழ்ச்சியில் காட்சிக்கு வைக்கப்படும். நிகழ்ச்சிக்கு வருபவர்கள் புத்தகங்களை இரவல் பெற்றுச் செல்லலாம்.

அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு தரவும்.

அவனும் இவனும்

கடந்த வாரம், 8,9ம் தேதிகளில் மூன்று காட்சிகள் ‘அவனும் இவனும்’ என்ற நாடகம் அவாண்ட் நாடகக் குழுவினரால், மலாய் மரபுடைமை நிலையத்தில் அரங்கேற்றப்பட்டது. 9ஆம் தேதி , சனிக்கிழமை மாலை 7:30 மணி காட்சிக்குச் நான் சென்றேன்.

முதலில் நான் வியந்தது, நாடகத்திற்கு வந்திருந்த பார்வையாளர்களை பார்த்துதான். சிங்கப்பூரில் இவ்வளவு தமிழ் இளையர்கள், அதாவது தமிழ் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் தமிழ் இளையர்கள் இருக்கிறார்களா என்று ஒரு வியப்பு ஏற்பட்டது. இவர்களை நான் பல்கலைக்கழக தமிழ் நிகழ்ச்சிகள் தவிர வேறு எந்த தமிழ் நிகழ்ச்சியிலும் மொத்தமாக பார்த்ததில்லை. சொல்லப்போனா அங்கிருந்தவர்களில் நான், ஶ்ரீஜி இன்னும் ஓரிவரைத் தவிர எல்லோரும் முப்பது வயதிற்குள்தான் இருப்பார்கள் என நினைக்கிறேன். அதுவும் இலவசம் இல்லை. ஒரு நுழைவுச்சீட்டின் விலை $25 வெள்ளி(மாணவர்களுக்கு தள்ளுபடி இருந்ததா தெரியாது). ஒரு தமிழ் நாடகத்திற்கு வரும் இவர்கள் ஏன் இலவசமாக நடத்தப்படும் மற்ற தமிழ் நிகழ்ச்சிகளுக்கு வர மாட்டேங்கிறார்கள். சிங்கையில் தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தும் அமைப்புகள் இது குறித்து கொஞ்சம் சிந்திக்க வேண்டும். இதிலே அதற்கான விடையும் உள்ளது.

மற்றொரு செய்தி, இந்நாடகத்தில் நடித்தவர்கள், பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுனர்கள் அனைவரும் 20-30 வயதுகுட்பட்டவர்கள்தான் என நினைக்கிறேன்(படத்தை பார்த்தால் தெரியலாம்).

நுழைவுச்சீட்டு வாங்கும்போது கூடவே ஒரு சின்ன சீட்டும், பென்சிலும் கொடுத்தாங்க, எதுக்குனு பிறகு சொல்றேன்.

சரி, இப்ப அரங்கத்திற்குள் செல்வோம்.

இந்த முறை, படங்கள், ஒலி, ஒளிப்பதிவு எடுப்பதற்கு அனுமதி இல்லை என்பதை முதலிலேயே தெரிவித்துவிட்டார்கள். கடந்த முறை சொல்லாததை பதிவு செய்திருந்தேன்.

நாடகத்தின் தொடக்கத்தில் சமீபத்தில் மறைந்த, நாடகத்திற்கு பெரும் பங்காற்றிய திரு அறிவழகன் திருஞானம் குறித்த ஒரு காணொளி அஞ்சலியாக சமர்பிக்கப்பட்டது. அதில் அவர் நடித்த, இயக்கிய நாடகங்களின் சில காட்சிகள் பதியபட்டிருந்தது சிறப்பு. சின்ன வயதில் அவர் மறைந்தது, சிங்கை நாடகத்துறைக்கு ஒரு பெரும் இழப்பு. அவருடைய குடும்பத்தாருக்கும், அவாண்ட் நாடக குழுவிற்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

சரி, இப்ப நாடகத்திற்குள் போவோம். இதன் கதைச் சுருக்கம் படத்தில் உள்ளது, முடிந்தால் படித்துக் கொள்ளுங்கள்(ஏன் என பின் குறிப்பு 1 படிக்கவும்).

கதையை பத்தி பேசும் முன், நடிகர்கள் குறித்து பார்ப்போம்.

இதில் நடித்த அனைத்து நடிகர்களின் உழைப்பும் ஆர்வமும் அவர்களின் நடிப்பில் தெரிந்தது. இதுதான் செல்வாவின் நாடகத்தின் சிறப்பு. அப்படி ஒரு பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது.

இயல்பான நடிப்பின் மூலம் என்னை கவர்ந்தவர்கள் ராம், தயா மற்றும் பிரியா. ராம் நகைச்சுவையில் கலக்கினார். பிக்பாஸ் ‘ஸ்நேகனை’ விட ஒரு படி மேலபோய் தாவி சென்று கட்டிப்பிடித்தார். அதையும் கீழே விழாமல் சரியாக …. இடுப்பில் ஏறிக் கொண்டார். நல்ல நேர்த்தியான நடிப்பு.
அடுத்து, ஜெய் வேடத்தில் வந்த ஜெய்டன் சரவணன் நாடகம் முடிந்த பிறகும் கூட அதே கோபத்தில் இருந்தது அவர் எந்த அளவுக்கு அந்த கதாபாத்திரத்திற்குள் ஐக்கியமாகிவிட்டார் என்பது தெரிந்தது. அவர் ‘பிகே’வை எத்தி உதைக்கும் போது சரி, சும்மா நின்று கொண்டு மற்றவர்கள் வசனம் பேசும்போதும் சரி, அவர் முகத்தில் அந்த கோபம் நாடகம் முழுக்க இருந்தது. அவருக்கு முதல் மேடை நாடகம் என்று யாராலும் சொல்ல முடியாது.
பிரியாதான் அன்று எல்லோருடைய “ஃபேவரைட்” என நினைக்கிறேன். அப்படி ஒரு இயல்பான நடிப்பு. அதில் மிக முக்கியமான கவனிக்க வேண்டிய ஒன்று, மற்றவர்கள் வசனம் பேசி நடிக்கும் போதும், அவர் முகபாவனைகள், மெய்ப்பாடு என நாடகம் முழுதும் நடித்துக் கொண்டிருந்தார். அந்த உயரமான ‘ஹீல்ஸ்’ செருப்பை போட்டுக் கொண்டு அவர் ஓடும்போது நமக்குதான் ‘ஹார்ட் பீட்’ வேகமாக அடித்தது, ஆனால் அவர் விழாமல் ஓடினார்:) இதுக்கே பல ஒத்திகை பார்த்திருக்க வேண்டும். இவருக்கும் முதல் மேடை நாடகமாம். போங்க பாஸூ, ஏமாத்தாதீங்க, நாங்க நம்ப மாட்டோம்.
‘பிகே’வாக நடித்த பொன்குமரன் செல்வம் தொடக்கம் முதல் முடிவு வரை பயங்கர உணர்ச்சி பிழம்பாக கை, கால், முகம் என நரம்பு புடைக்க நடித்தார். உண்மையிலேயே தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் ஒரே மாதிரி உணர்ச்சிவசப்பட்டு நடிப்பதற்கு நிறைய ‘எனர்ஜி’ வேண்டும். மிக அருமையாக அதை செய்தார்.
ஒரே ஒரு காட்சியில் வந்து சென்றாலும் ஷரன் நன்றாக ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை செய்தார். அந்த ‘கேக்’ மாவு பாத்திரத்தை பிடித்திருந்தது, அடுத்தவர்கள் மேல் இடித்தது, மாவை சிந்தியது, அங்க அசைவுகள் என நன்றாகவே செய்தார்.
மனோவாக நடித்த மனோ விக்னேஷ்வரன், ஒரு காவல்துறை அதிகாரியா அந்த சீருடை போடமாலேயே நம் மனதில் அந்த பாத்திரத்தை பதிய வைத்தார். என்ன, நம்ம தமிழ்படத்தில வர ‘காமடி போலீஸ்’ மாதிரி கொஞ்சம் தொப்பையோட இருந்தாலும் மிக ‘சீரியஸான’ நடிப்பை வெளிப்படுத்தினார். ஒரு காட்சியில், “ஆம்பளைங்கனா தொப்பை இருக்கத்தான செய்யும்?” என முதல் வரிசைல உட்கார்ந்திட்டிருந்த என்னை பார்த்து கேட்டார். எனக்கு ஒரு ‘டவுட்டு’ அதை ஏன் அவர் என்னை பார்த்து கேட்டார்? பக்கத்தில் உட்கார்ந்துட்டிருந்த. Srigய பார்த்து கேட்டிருக்கலாமே:(.. சில இடங்களில் கொஞ்சம் ‘stiff’ஆக இருந்தாலும் பல இடங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தினார்.
அடுத்து பணிப்பெண்ணாக நடித்தவர் மலையாளத்தில் பேசி நடித்தாலும் பெரும்பாலும் புரியும்படியாகவே இருந்தது. ஒரு வித பயம் கலந்த நடிப்பு, சில இடங்களில் அழுகை என அந்த கதாபாத்திரத்துக்கு உரிய நடிப்பை வழங்கினார். இன்னும் சற்று மேம்படுத்தலாம். ஆனால் கண்டிப்பாக முதல் நாடக மேடை மாதிரி தெரியவில்லை. கடைசியாக, ஆனால் நாடகத்தின் மிக முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது ‘அனிதா’தான். என்னங்க எல்லோரும் அவ்வளவு கஷ்டப்பட்டு கைய கால ஆட்டி நடிச்சாங்க, அதுவும் அவர் கணவரா நடித்த பிகே அப்படி உணர்ச்சிவசப்பட்டு நடிச்சாரு, ஆனா இந்தம்மா கைய கால கொஞ்சம் கூட அசைக்கல, மூச்சு கூட உடாம நடிச்சாங்க. எப்படினு கேக்கறீங்களா? ஒன்னுமில்லைங்க, அவங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் அந்த மாதிரி. அதாங்க கொலை செய்யப்பட்ட மனைவியா நடிச்சாங்க. கைய கால ஆட்டிகிட்டே, வசனம் பேசி கூட நடிச்சிடலாம். ஆனா உயிரற்ற உடலாக நடிப்பது அதுவும் ஒன்றரை மணி நேரம் நடிப்பது கொஞ்சம் கடினமானதுதான். அதை சிறப்பாக செய்தார் ‘அனிதா’ என்ற லத்திகா.

சரி, கதைக்குள் போவோம். வீட்டினுள் கொலையுண்ட கிடக்கிறாள் ஒரு பெண்மணி. இரவு மது அருந்தியதால் அதே மயக்கத்தில் எழுந்து வந்த கணவன், மனைவி பேச்சுமூச்சு இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். அவள் இறந்துவிட்டதை காவல்துறைக்கு தெரியப்படுத்தினால் தன் மேல் பழி வரும் என பயந்து, தன் நண்பனை வரவழைக்கிறான். காவலதிகாரியான அந்த நண்பன் தன் பெண்தோழியுடன் வருகிறான். அங்கு வந்து பிறகுதான் விஷயம் அறிந்து காவலர்களுக்கு தெரியப்படுத்தச் சொல்கிறான். ஆனால் பிகே முடியாது என சொல்ல, அவர்களுக்குள் விவாதம் நடக்கிறது. இடையில் அனிதாவின் தம்பி, பிட்சா கொண்டு வருபவர்(காலையில பிட்சா ஆர்டர் பண்ணலாம் என்பது இதுவரை எனக்கு தெரியாது), அண்டை வீட்டுக்காரர், வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் என பலர் வந்து போகிறார்கள். இவர்களில் யார் கொலையாளி என கண்டுபிடிப்பதே கதை.

இடைவேளையில் அந்தக் கொலையாளி யார் என்பதை பார்வையாளர்கள் சீட்டில் எழுதிக்கொடுப்பதற்கே அந்த சீட்டும், பென்சிலும். எல்லோரும் எழுதி கொடுத்தோம். நாடகம் முடிந்த பிறகு கதாபாத்திரங்களின் பெயரும், அவர்களை கொலையாளிகள் என எத்தனை பேர் யூகித்தார்கள் எனவும் சொல்லப்பட்டது. நாடகத்தை கூர்ந்து கவனிக்க இது ஒரு நல்ல யுக்தியாக இருந்தது.

கடைசியில், “நான் தான் கொன்றேன்” என ஒருவர் வாக்குமூலம் கொடுத்து முடிக்க, பின்னாடி, நாடகத் தலைப்பை சொன்னவுடன், “நாடகம் முடிந்துவிட்டது போல” என நான் சொல்ல, பக்கத்திலிருந்த ஶ்ரீஜி “இல்லை, இப்படி முடிக்க மாட்டார்கள்” என சொல்ல, அதே போல், அடுத்த கதாபாத்திரம் உள்ளே வந்து “நான்தான் கொன்றேன்’ என சொல்லி, எப்படி, எதற்காக கொன்றார் என்று விளக்குகிறார்.

நான் யூகித்த ‘கொலையாளி’ தவறாய் போனது:(

ஒரு நல்ல கதை அமைத்து அதை நல்ல நடிகர்கள் கொண்டு அரங்கேற்றிய நாடகம். ஆனால், நாடகம் விறுவிறுப்பாக இருந்ததா என்றால் இல்லை. இடைவேளை வரை ஒரே அலைவரிசையில் ஓடிய மாதிரி இருந்தது. கொஞ்சம் கதாபாத்திரங்கள் மீது சந்தேகம் வரும்படி காட்சிகள் அமைத்திருக்கலாம்.

எனக்கு, ‘திரில்லர்’ கதைனா, வீணை எஸ் பாலசந்தரின் ‘நடு இரவில்’ படம்தான் நினைவில் வரும். காலத்தால் அழியாத ஒரு அருமையான ‘கிரைம் திரில்லர்’. அதில், நடித்த எல்லோர் மேலும் சந்தேகம் வரும். கடைசியில் நாம் சந்தேகப்படாத ஒருத்தர் கொலை செய்திருப்பார்.

சரி, நாடகத்திற்கு வருவோம். வில்லனாக இருப்பவர்கள் அரவிந்த்சாமி போல இருந்து அமைதியாக நடிப்பதை ஏற்றுக்கொண்ட இரசிகர்கள் உள்ள இக்காலக்கட்டத்தில், நம்பியார், அசோகன் மாதிரியான பழைய நடிப்பு பாணியை(சில இடங்களில்) தவிர்த்திருக்கலாம் என தோன்றியது.

இளையர்கள் நாடகம் என்பதால் அவர்களுக்குள் பே(ஏ)சிக்கொள்ளும் ‘வழக்குச் சொற்கள்’ பல இருந்தன. அது யதார்த்தமாகவும் இருந்தது.

நிறைய நுணுக்கங்களில் கவனம் செலுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. நாடக அரங்கின் கதவையே, வீட்டின் வாசற்கதவாய் வைத்தது, பிகே அரங்கத்திற்கு பின்னால் சென்றவுடன், வாய்க்கொப்பளிப்பது போன்ற சத்தம் மட்டும் வருவது போன்றவை ஒரு உண்மையான வீட்டிலிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. பிட்சா கொண்டு வருபவர், ‘பிட்சா ஹட்’ டீ சர்ட் போட்டு வந்தது, ‘காலிங் பெல்’ அடித்தது இப்படி பல விஷயங்கள் நம்மை ஒரு நல்ல நாடகம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தியது.

ஆனால், நுழைவுச்சீட்டு $25 வெள்ளி என்பதை குறைத்தால் இன்னும் நிறைய பேர் பார்க்க விரும்புவார்கள்.

செல்வாவின் நாடகம் என்றால் நடிப்பு இருக்கும், உழைப்பு இருக்கும், கதை இருக்கும், மொத்ததில் நல்ல நாடகம் பார்த்த மன நிறைவு இருக்கும்.

பி.கு 1 : இந்த நாடகத்தை பற்றியும், அவாண்ட் நாடக குழு பற்றியும் கையேட்டில் பண்ணிரெண்டு பக்கங்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும், இரண்டு பக்கங்கள் தமிழில் இருந்தது பாராட்டுக்குரியது. ஆனால் அந்த இரண்டு பக்கத்தையும் கருஞ்சிவப்பில் போட்டு அதில் தமிழ் எழுத்துகளை கருப்பில் அச்சிட்டதுக்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று தெரியவில்லை:) ஃபோனில் படம் பிடிச்சு அதை ‘ஜும்’ பண்ணிதான் பார்த்தேன்.

பி. கு. 2: முன் வரிசையில் உட்கார்ந்திருந்ததால் , மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக ‘ஃபோனை’ தொடவில்லை. அதனால் குறிப்பும் எடுக்கவில்லை. எதாவது தவறாக இருந்தால் குறிப்பிடவும்.