தமிழ்ச்சுடர் – சமூக விருது

மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி & நடப்பு விவகாரப் பிரிவு முதன்முறையாக ஏற்பாடு செய்திருக்கும் “தமிழ்ச்சுடர் – சமூக விருது” வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலை Grand Copthorne Waterfrontஇல் நடைபெற்றது.

செம்பாவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவருமான திரு விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சிங்கப்பூர் நுண்கலைக் கழகம்(SIFAS) இசைக்குழுவினரின் இசையோடு 8:05 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. புல்லாங்குழல் இசையும், குழுவினரின் இசையும் சிறப்பான தொடக்த்தை அளித்தது.

திரு ந குணாளன், தலைவர், தமிழ்ச் செய்தி & நடப்பு விவகாரப் பிரிவு, மீடியாகார்ப், வரேற்புரையாற்றினார். இந்நிகழ்வு விருது வழங்குவதோடு முடியாமல் தமிழ்மொழி வாழும் மொழியாக இருப்பதற்கு விருதாளர்களுக்கு திட்டங்கள் செய்ய ஊக்கத்தொகை கொடுப்பதாகவும் குறிப்பிட்டார். ஈராண்டுக்கு ஒரு முறை தமிழ்ச் சுடர் விருது வழங்க இருப்பதாகவும் சொன்னார்.

அவரே சிறப்பு விருந்தினரை உரையாற்ற அழைத்தார். திரு விக்ரம் நாயர் தமிழ்
மொழி வளர்ச்சிக் குழுவின் திட்டங்கள் குறித்து பேசினார்.

அடுத்து திரு சபா முத்து நடராசன் எழுதிய தமிழ்ச் சுடர் சிறப்பு பாடலை திரு முகமது ரஃபி இசை அமைத்து பாடினார். பாடல் வரிகளும் இசையும் நன்று.

பின்னர் அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது.

விருந்து நடைபெறும்போதே விருதுகளும் அறிவிக்கப்பட்டு பின்னர் மேடையில் சிறப்பு விருந்தினரால் வழங்கப்பட்டது. விருதாளர்கள் ஒவ்வொருவரும் தமிழுக்கு ஆற்றிய பணிகள் குறித்த காணொளி காட்டப்பட்டது. விருது விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உஷாராணி மணியம் நடன பள்ளியின் நடனம் மிக அருமை. ஆடை அணிகலன்களும் அருமை. மாறுப்பட்ட படைப்பு.

தேசிய பல்கலைக்கழகத்திலிருந்து சரவணன் சண்முகம், இந்து இளங்கோவன் இருவரும் சேர்ந்து நடித்த நகைச்சுவை நாடகம் அனைவரையும் சிரிக்க வைத்தது. தமிழ்மொழி புழக்கத்தை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற செய்தியோடு நகைச்சுவை கலந்த அங்கத்தை படைத்த அவர்களுக்கு பாராட்டுகள்.

Kahoot.it இணையதளத்தில் அனைவருக்கும் புதிர்ப் போட்டி நடத்தப்பட்டது. நல்ல பல கேள்விகள் கேட்கப்பட்டன.

திரு சபா முத்து நடராசன் அவர்கள் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

ஆதரவாளர்களுக்கு சிறப்பு விருந்தினர் நினைவு பரிசு வழங்கினார்.

திரு முகமது ரஃபியின் “தங்கமே தமிழுக்கு…”, பாடல், ‘தமிழுக்கு அமுதென்று..’ என்ற பாடல்களுடன் நிகழ்ச்சி இரவு 10:47க்கு இனிதே நிறைவுற்றது. (பதிவு நேரம் 10:47😔😉)

திருமதி இலக்கியா சொல்வராஜி, திருமதி மீனா ஆறுமுகம் இருவரும் நிகழ்ச்சியை அருமையாக தொகுத்து வழங்கினர். மேடையில் மட்டுமில்லாமல் விருந்தினர்களிடைய நடமாடி தொகுத்து வழங்கியது மிகவும் அருமை.

கலைப்பிரிவில் இலக்கியமும் உண்டு என்று கூறப்பட்டாலும் கலைக்கு மட்டுமே வழங்கப்பட்டது. தயவு செய்து அடுத்த முறை இலக்கியத்திற்கு ஒரு தனி பிரிவு ஏற்படுத்துமாறு ஏற்பாட்டாளர்களை கேட்டுக்கொள்கிறேன். யாரும் இக்கலைப்பிரிவில் இலக்கியத்திற்காக விண்ணப்பிக்க வேண்டாம். அது கலைக்காக விட்டுவிடலாம். கலைச்சுடர் விருது பெற்ற இருவரும் அவ்விருதுக்கு மிகவும் தகுதியானவர்கள். அவர்கள் மட்டுமல்ல இன்றைய விருதாளர்கள் அனைவருமே விருதுக்கு தகுதியுடையவர்களே. விருதாளர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

இவ்வளவு செலவுசெய்து ஏற்பாடு செய்யப்பட்ட விருது நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட விருது மிக சிறிதாக, எளிமையாக கண்ணாடியில் செய்யப்பட்டிருந்தது. கொஞ்சம் பெரிதாக கண்ணைக் கவரும் வண்ணம் சிறப்பாக இருந்திருக்கலாம்.

அடுத்த முறை பிரிவுகளை மறுபரிசீலனை செய்யலாம். மொத்தத்தில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மிகுந்த ஈடுபாட்டுடன் இந்நிகழ்ச்சிக்காக உழைத்து சிறப்பாக நடத்திய ஏற்பாட்டுக்குழுவினர் அனைவருக்கும் என் பாராட்டுகள், நன்றி🙏

விருது பிரிவுகள்/ எண்ணிக்கை
——————————-
நூற்றுக்கும் மேலான விண்ணப்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10 அமைப்புகள் / நபர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
கீழ் கண்ட பிரிவுகளில் மொத்தம் பத்து விருதுகள் வழங்கப்பட்டன.

1.கல்வி – 3 விருதுகள்- தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பங்களித்த 3 பள்ளிகளுக்கு இளஞ்சுடர் விருது வழங்கப்பட்டது. அந்த பள்ளிகள் தமிழை மாணவர்களிடத்தில் கொண்டுசெல்ல எடுத்துக்கொண்ட முயற்சிகள் குறித்த காணொளி காண்பிக்கப்பட்டது.

1.கான்கார்டு தொடக்கப்பள்ளி
2.பார்ட்லி உயர்நிலைப்பள்ளி
3.உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்

2.கலை – 2 விருதுகள் – 1 தனி நபருக்கு, 1 குழுவிற்கு.

தனி நபர் பிரிவில் திரு சலீம் ஹாடிக்கு (நிகழ்ச்சிக்கு வர இயலவில்லை) கலைச்சுடர் விருது வழங்கப்பட்டது.

குழு பிரிவில் அவான்ட் நாடகக் குழுவிற்கு கலைச்சுடர் விருது வழங்கப்பட்டது.

3.மின்னிலக்கத் தொழில்நுட்பம் – 2 விருதுகள் – 1 தனி நபருக்கு, 1 குழுவிற்கு.

தனி நபர் பிரிவில் நவசுடர் விருது திரு மோகன் சுப்பையாவிற்கு வழங்கப்பட்டது. இவர் பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியின் தமிழாசிரியர்.

குழு பிரிவில் இவ்விருது கிரசண்ட் பெண்கள் பள்ளிக்கு வழங்கப்பட்டது.

4.இளம் சாதனையாளர் – 2 விருது

இளம் சாதனையாளருக்கான வளர் சுடர் விருது செல்வி ஜெயசுதா சமுத்திரன் அவர்களுக்கும் திரு செம்பியன் சோமசுந்தரம் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

5.வாழ்நாள் சாதனையாளர் – 1 விருது

வாழ்நாள் சாதனைக்கான செஞ்சுடர் விருது “சிங்கை செந்தமிழ்ச்செம்மல்” முனைவர் சுப திண்ணப்பன் ஐயா அவர்களுக்கு வழங்கப்பட்டது.

Leave a Comment