பொதுவா அலுவலகத்திலேயோ அல்லது பெரிய பன்னாட்டு அமைப்புகளிலேயோ நம்ம ஆளுங்க ஒரு விஷயத்தைச் சொல்லும்போது ரொம்ப அழுத்தமா, சொல்ல வந்த கருத்து போய் சேர்கின்ற மாதிரி சொல்வது குறைவு. இதற்கு சில விதிவிலக்கு இருக்கலாம். ஆனால் நான் பார்த்த வரையில் இப்படி நிறைய பேர் இருக்காங்க. ஒரு மகிழ்ச்சியான செய்தியைக் கூட ஒரு உணர்ச்சியே இல்லாமல் சொல்வதுண்டு. ஆனால் அதே செய்தியை மற்ற நாட்டுக்காரங்க பேசும்போது அவங்க அங்க அசைவுகள், முக பாவனைகள் பாருங்க, பல சிவாஜியும், வடிவேலும் குடியிருப்பாங்க. பேச்சாளர் மன்றங்கள் மாதரி சில இடங்களில் இந்த அங்க அசைவுகள், குரல் ஏற்ற இறக்கம் இதெல்லாம் கத்துக்கலாம். ஆனால் ஒரு நல்ல தொடர்புத்திறனை, படைப்புத்திறனை எப்படி மேம்படுத்திக் கொள்வது. அதற்கான அடுத்தகட்ட பயிற்சி நாடகத்தில் கிடைக்குமா?
கிடைக்கும் என்கிறார், “கலக்கல் நாடக விழா 2017″ன் சிறப்பு விருந்தினர் திரு புகழேந்தி ராமகிருஷ்ணன் Pugalenthii Ramakrishnan , அதிபதி அனைத்துலக நாடக நிறுவனத்தின் கலை இயக்குனர். இவர் நாடகத்தில் நடித்துப் பயிற்சி பெற்றால் படைப்பாற்றல் வளரும், பிற்காலத்தில் தங்கள் வேலையிடத்தில் ஒரு திட்டத்தைப் படைக்கும்போது அவர்கள் தன்னம்பிக்கையுடன் சிறப்பாகப் படைக்க முடியும் எனச் சொன்னார்.
இந்த நாடகத்தில் நடிக்கும் மாணவர்கள் மற்ற மொழியினருக்கும் அறிமுகமாக வேண்டும். அப்போதுதான் தமிழர்களின் திறன் மற்றவர்களுக்கும் போய் சேரும் என்ற கருத்தையும் முன் வைத்தார். அதோடு,
தற்போதை சிங்கை நாடக வரலாறு குறித்த ஆவணங்கள் நூலகத்தில் பெரிதாக ஒன்றும் இல்லை, அதனால் ‘இவண் தியேட்டர்’ கடந்த ஒன்பதாண்டுகளாக அரங்கேற்றிய நாடகங்களின் வசனங்களை ஆவணப்படுத்த வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நாடகங்களுக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். ஐந்து நிமிடமே பேசிய அவர் இரத்தினச்சுருக்கமாக நல்ல பல கருத்துகளை நம்முன் வைத்தார்.
சிங்கையில் சில நாடக குழுக்கள் சிறப்பாக நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன. அவற்றுள் ஒன்றுதான் “இவண் தியேட்டர்”. இக்குழுவைத் தலைமையேற்று நடத்திக் கொண்டிருப்பவர் திரு எஸ்.என்.வி நாரா. “இவண் தியேட்டர்” கடந்த ஒன்பது ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றது. அதிலும் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளுக்கிடையே ‘நாடக போட்டி’ நடத்துகின்றது. இந்த ஆண்டு உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, 26-ஏப்ரல்-2017 அன்று மதியம் மணி 2:00க்கு “இவண் தியேட்டரின்” கலக்கல் நாடக விழா நடைபெற்றது.
34 பள்ளிகள் கலந்துகொண்ட இந்த நாடக போட்டியில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற பள்ளிகளில், உயர்நிலைப் பள்ளிக்கான போட்டியில் 2 பள்ளிகளும், தொடக்கப்பள்ளிக்கான போட்டியில் 3 பள்ளிகளும் தங்கள் நாடகங்களை அரங்கேற்றின. இப்போட்டிக்கான மையக்கருத்து ‘வர்ணஜாலம்’.
முதலில் தங்கள் நாடகத்தைப் படைத்த ஜூரோங் உயர்நிலைப்பள்ளி, ஒரு மாணவரின் பல நிலைகளைக் காட்சிகளாக்கினர். மாணவனின் வீட்டில் எழும் பிரச்சனை, நல்ல நண்பனின் அன்பு, சிலரின் மிரட்டல் அதை அவன் எதிர்கொள்ளும் விதம் என அனைவரும் நன்றாக நடித்திருந்தனர்.
இரண்டாவதாக, குயின்ஸ்டவுன் உயர்நிலைப்பள்ளி குருதிக் கொடையைக்(ரத்த தானம்) கருவாகக் கொண்டு காட்சிகள் படைத்தனர். சமூக சேவை, குருதிக் கொடை செய்யும் மாணவனைப் பெற்றோர்கள் கண்டிப்பதும் பின்னர் அது எப்படித் தங்களுக்கு உதவுகிறது என்பதைக் கதையாக அமைந்திருந்தனர். நிறைய கதாபாத்திரங்கள், நல்ல ஒப்பனை.
அடுத்துத் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான போட்டி தொடங்கியது.
முதலில் சூச்சின் தொடக்கப்பள்ளி தனது நாடகத்தை அரங்கேற்றியது. விசித்திரகுப்தன் பூலோகத்திற்கு வருவதாகவும், சிங்கையிலுள்ள பண்பாட்டை அறிய விரும்புவதாகவும் தொடங்குகிறது நாடகம். ஒரு நண்பரின் உதவியுடன் இரண்டு நாள் தங்கியிருந்து அவரின் குடும்பம், கடைத்தெருவில் கடை வைத்திருக்கும் ஒரு பாட்டி, ஆறாவது படிக்கும் மாணவன், இராணுவத்தில் இருக்கும் இளைஞன் எனப் பலரின் வாழ்க்கைமுறையையும் பார்த்து அவரும் சிங்கையிலே இருக்கப்போவதாக முடிகிறது. நல்ல ஒரு சிந்தனை, யதார்த்த நடிப்பு, அருமையான கூட்டு படைப்பு.
அடுத்து வந்தவர்கள் ஹவ்காங் தொடக்கப்பள்ளி. இவர்கள் நாடகத்தை நான் முகநூலில் நேரடி ஒளிபரப்பு செய்தேன். விக்ரமாதித்தன் என்ற மன்னன் தன் மகளுக்கு நல்ல தமிழ் பேசும் மாப்பிள்ளையை மணமுடிக்க உலகெங்கும் சென்று கடைசியில் சிங்கை வந்து சுயம்வரம் நடத்தி ஒருவரைத் தேர்ந்தெடுப்பதாக முடிகிறது. நல்ல கற்பனை, அழகு ஒப்பனை, அருமையான நடிப்பு.
கடைசியாக, கான்கார்டு தொடக்கப்பள்ளி தங்கள் நாடகத்தை அரங்கேற்றினார்கள். ஒரு விமானத்தில் பயணம் செய்ய பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் ஆசிரியர் விமானத்தில் ஏறிய பின் சந்திக்கும் சவால்களைக் காட்சிப்படுத்தினர். அவர்கள் கோபம், பொறுமையின்மை, இப்படி தங்கள் குணநலன்களை எப்படி வெளிப்படுத்துகிறார்கள், அது எப்படி மற்றவர்களைப் பாதிக்கிறது என்று நடித்துக் காண்பித்தார்கள். சிறந்த காட்சி அமைப்பு, அருமையான நடிப்பு, நல்ல முடிவு.
இந்தப் போட்டிக்கு திருமதி உமையாளம்பிகை, திரு விக்னேஸ்வரன், திரு எஸ் என் வி நாரா ஆகியோர் நடுவராகப் பணியாற்றினார்கள்.
தேர்வுச் சுற்றில் கலந்து கொண்டவர்களையும் சேர்த்து நல்லா நடித்தவர்களுக்கு நட்சத்திர விருதுகள் கொடுக்கப்பட்டன. ஏன் இதில் சிறந்த நடிகை இல்லை, இதில் சிறந்த நடிகர் இல்லை என்று கேட்காதீர்கள். நாடக கதாபாத்திரங்களுக்கு ஏற்ப விருதுகள் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.
இறுதிச்சுற்றில் சிறந்த நாடகத்துக்கான பரிசை வென்ற பள்ளிக்கு வெற்றிக்கோப்பை வழங்கபட்டது. உயர்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி என இரு பிரிவுகளுக்கும் பரிசுகள் வழங்கபட்டன. பரிசு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
உயர்நிலைப்பள்ளிக்கான விருதுகள்
———————————
சிறந்த நாடகம்
முதல் பரிசு – குயின்ஸ்டவுன் உயர்நிலைப்பள்ளி
இரண்டாம் பரிசு – ஜூரோங் உயர்நிலைப்பள்ளி
நட்சத்திர விருதுகள்
——————-
சிறந்த கதை – குயின்ஸ்டவுன் உயர்நிலைப்பள்ளி
சிறந்த துணை நடிகர் – சுந்தரேசன் மாதவன், ஜூரோங் உயர்நிலைப்பள்ளி
சிறந்த துணை நடிகை – சிவராமன் லேகா, குயின்ஸ்டவுன் உயர்நிலைப்பள்ளி
தொடக்கப்பள்ளிக்கான விருதுகள்
———————————
சிறந்த நாடகம்:
—————-
முதல் பரிசு – சூச்சின் தொடக்கப்பள்ளி
இரண்டாம் பரிசு – கான்கார்டு தொடக்கப்பள்ளி
மூன்றாம் பரிசு – ஹவ்காங் தொடக்கப்பள்ளி
நட்சத்திர விருதுகள்
——————-
சிறந்த கதை – சூச்சின் தொடக்கப்பள்ளி
சிறந்த நடிகர் – குணசேகரன் நிக்கில் குமார், சூச்சின் தொடக்கப்பள்ளி
சிறந்த துணை நடிகர் – தயாளன் பன்னீர்செல்வம், சூச்சின் தொடக்கப்பள்ளி
சிறந்த துணை நடிகை – சரவணன் பால நிகிலா, சூச்சின் தொடக்கப்பள்ளி
இந்த போட்டியைச் சரியாக தன் அழகு தமிழில் வழிநடத்திச் சென்றார் திரு கார்த்திக் ராமசாமி
Karthik Ramasamy
அவ்வப்போது ஒலிவாங்கி சற்று தகராறு செய்தது. ஒவ்வொரு நாடகத்திற்கும் தலைப்பு சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அடுத்து நாடகத்தின் கால அளவு ஐந்திலிருந்து இருபது நிமுடம் வரை நீடித்தது. கால அளவு எல்லோருக்கும் சற்றேறக்குறைய சமமாக இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
நடித்த அனைவரும் ஒருமுறை கூட வசனத்தை மறந்து நிற்கவில்லை, யாருக்கும் எந்த வித பதட்டமும் இல்லை, எல்லா மாணவர்களும் அவ்வளவு சிறப்பாக நடித்தார்கள். சில பள்ளிகள் ஒப்பனை, பொருட்களில்(props) கூடுதல் கவனம் எடுத்துக் கொண்டார்கள். நல்ல கற்பனைத் திறன். தொடக்கப்பள்ளி நாடகங்கள் மிகச்சிறப்பு. ஒரு கடையை மூடுவதற்கு கூட அழகாக ஒரு கதவு(ஷட்டர்) மாதிரி ஒன்று செய்து, அது சரியாகவும் வேலையும் செய்தது. மொத்ததில் இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை.
பேச்சு போட்டி, பாட்டு போட்டி, கதை, கவிதை, கட்டுரை எனப் பல போட்டிகள் பார்த்திருக்கிறேன். ஆனால், முதன்முறையாக இப்போதுதான் ‘நாடக போட்டி’ பார்த்தேன். தமிழ்மொழி விழாவில் கடந்த ஒன்பதாண்டுகளாகப் பங்கேற்கும் இவர்களின் நிகழ்ச்சிக்குக் கடந்த இரண்டாண்டுகளாக என்னால் போக முடியவில்லை. இந்தாண்டு மாணவர்கள், ஆசிரியர்கள், நடுவர்கள், ஏற்பாட்டாளர்கள் தவிர நான் மட்டுமே இருந்தேன் என்று நினைக்கிறேன். அடுத்த ஆண்டு மாணவர்கள் பங்குபெறும் இம்மாதிரியான ஒரு நல்ல நிகழ்ச்சியை விருப்பமுள்ளவர்கள் யாரும் தவற விட வேண்டாம்.
மாணவர்களுக்காக விழா நடத்துகிறோம் என்று செல்பவர்களுக்கிடையே உண்மையிலேயே மாணவர்களுக்காக விழா நடத்திய ஒரு சில நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. எந்த வித விளம்பரமும் இல்லாமல் எந்த பாராட்டையும் எதிர்பார்க்காமல், முகநூலில் முப்பது பதிவுகள் போடாமல் அமைதியாகத் தங்கள் பணியை செய்து கொண்டிருக்கும் திரு எஸ் என் வி நாரா
Nara Snv போன்றவர்கள் சிங்கையின் நம்பிக்கை நட்சத்திரங்கள்.
#தமிழ்மொழி_விழா_2017
#தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_பின்னூட்டம்
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்
https://www.facebook.com/ShanmugamTam/videos/1528337953845042/
