அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
செய்தி கேட்டு கிளம்பியவரை
கட்டிப்பிடித்த மகளிடம்
சாமி பார்க்க போவதாகச்
சொன்னார் அப்பா.
கோயில் பூக்கடையின் அந்த
ரோசாப் பூமாலை
துக்கவீட்டு திருவாளருக்கு
சாத்தப்படுவது பாதி
மொய்த்த வண்டுகளுக்கு தெரியாது.
அசையாத சிலைக்கு
அபிஷேகமும் அலங்காரமும்
சுற்றம் சூழ
கனத்த மௌனத்துடன்
நடந்தேறியது.
மாலையிட்டு
கட்டிய பாதம் தொட்டு
கையெடுத்து கும்பிட்டு
அழுகையுடன் பார்த்தார்
புன்னகைத்தது.
தார தப்பட்டை முழங்க
பூப்பல்லக்கில் அசைந்தாடி
மலர்களின் பாதையில்
கடைசி பயணம்
முடிந்தது.
வீட்டிற்கு திரும்பியவரை
கட்டிப்பிடிக்க வந்த மகளிடம்
குளிக்க வேண்டும்
தொடாதே ‘தூரம்’ போ என்றதும்
மகளுக்கு சந்தேகம்
சாமி பார்த்தால் தீட்டாகுமா?
பி.கு: தங்கமீன் கலை இலக்கிய வட்டத்திற்காக முதன் முதலாக நான் எழுதிய இந்த கவிதைக்கு திரு எம்ஜி சுரேஷிடமிருந்து டிசம்பர் 11ம் தேதி புத்தகப் பரிசு பெற்ற போது எடுத்த படம். இந்த கவிதையை எழுத ஆதரவு கொடுத்து ஊக்கப்படுத்திய பாலுவுக்கு நன்றி.