ஜெமோவின் சிங்கை படைப்பு

ஜெமோவின் சிங்கை படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் குறித்து என் பார்வை —————————————— முதலில் ஜெமோவுக்கு ஒரு பாராட்டு. எதற்கு என்று யோசிக்கிறீர்களா ?மூன்று விஷயம். 1.தனது நேரத்தை சிங்கை எழுத்தாளர்களின் நூலைப் படிப்பதற்கு செலவழித்ததற்காக. 2.என்னைப் போன்றவர்களை சிங்கை எழுத்தாளர்களின் படைப்புகளை ஆழமாக படிக்கத் தூண்டியதற்காக. 3.ஒரு விவாதத்தை ஏற்படுத்தியதற்காக ஜெமோவின் எழுத்துகள் பிடிக்கும் எனக்கு அவரின் கருத்துக்கள், வெளிப்படுத்தும் விதம் இதில் உடன்பாடில்லை. அவரின் விமர்சனம் குறித்தும் அதிலுள்ள சில குறைபாடுகள் என நான் நினைப்பதையும் கீழே கொடுத்துள்ளேன். உங்களின் நாகரீகமான, ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பதிவிடலாம். 1.”சிங்கப்பூர் இலக்கியச்சூழலின் பிரச்சினைகள் மற்றும் எல்லைகளைக் கணக்கில் கொண்டே இப்படைப்புகளை நாம் மதிப்பிட முடியும்” என்று குறிப்பிட்ட ஜெமோ 80,81களில் வெளியான கதைத் தொகுப்பை அந்த எல்லைகளுக்கு அப்பால் நின்று கொண்டு 2016 காலக் கண்ணாடி போட்டு பார்த்திருக்கிறார். எடுத்துக்காட்டாக: “தமிழ்நடை உருவாகி வர முடிவதில்லை” என்று சொல்லும் அவரே “பள்ளியாசிரிய மொழிநடையில் அமைந்துள்ளது” என்ற குற்றச்சாட்டை வைக்கிறார். அந்தச் சூழலில் அந்த எல்லைக்குள் அப்படித்தான் எழுத முடியும், அதை சரியாக செய்திருக்கிறார் என்று தானே சொல்ல வேண்டும். அடுத்து, ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒரு தாக்கம் இருக்கும். இந்த ஆசிரியர் மு.வ அவர்களை வாசித்து அவரின் பாதிப்பால் எழுத்துலகிற்கு வந்தவர். சுஜாதாவின் தாக்கத்தால் எழுதுபவர்கள் எப்படி சுஜாதாவை பின்பற்றி எழுதுவார்களோ அப்படித்தான். அதனால் இதில் குறையொன்றும் இல்லை என்பது என் கருத்து. வசனங்களால் நிறைந்தது பீம்சிங்கின் பழைய படங்கள். வசனங்கள் குறைந்து காணப்படுவது மணிரத்னத்தின் படங்கள். பீம்சிங் படங்களை பார்த்து ஏன் மணிரத்னம் படம் மாதிரியில்லை என்று கூறுவது போல்தான் உள்ளது அவரது குறைகூறல். 2.அடுத்து ஒப்பீடு என்பது சிங்கைச்சூழலில் அதன் தேவையறிந்து இங்கு வாழ்ந்த சக எழுத்தாளர்களிடைய இருக்க வேண்டும். இங்கு புதுமைப்பித்தன் எப்படி வந்தார். இது எப்படி இருக்கிறது என்றால் சென்னையில் ஓடுற மின்சார ரயிலை மும்பையில் ஓடும் மின்சார ரயிலோடு ஒப்பீடு செய்தால் சரி, அதை சிங்கையில் ஓடும் மின்சார ரயிலோடு ஒப்பிட்டால் எப்படி? சீர்திருத்தம் தேவைப்படும் ஒரு சூழலில், அந்தக் குறிப்பிட்டக் காலத்தில், அதைக் கதைகள் மூலம் மக்களுக்கு சொல்வதில் தப்பில்லை. 3.”அரசும்,அமைப்புகளும் ‘பாரபட்சமில்லாமல்’ ஊக்கப்படுத்துகின்றன” என்ற குற்றச்சாட்டை வைக்கிறார். இதில் வெளிப்படையாக அரசையும், தமிழ் அமைப்புகளையும் குற்றம் சாட்டுகிறார் என நினைக்கிறேன். சிங்கையில் தமிழ்மொழிக்கு கிடைத்த அங்கீகாரத்தினால் தமிழ் இலக்கியத்துக்கு கிடைத்த ஒரு வெகுமதிதான் அரசு கொடுக்கும் விருதும் ஊக்கமும். அதை சந்தேகப்படுவது, கேள்விக்கேட்பது என்பது தமிழை, தமிழ் இலக்கியத்தை சிங்கையில் சீர்குலைக்கும் முயற்சியாகத்தான் பார்க்கிறேன். ஆனால் அதே அரசும், அமைப்புகளும் தான் இவர்களை சிங்கைக்கு கூட்டி வந்து தமிழ் வளர்க்கின்றன. இது தான் சொந்தக்காசில் சூன்யம் வைத்துக்கொள்வது என்பதா? அவர் அந்தந்த எழுத்தாளர்களுடன் கலந்துரையாடி அவர்கள் எந்த சூழலில் எந்த நோக்கத்தில் அந்தக் கதைகளை எழுதினார்கள் என்று தெரிந்துக்கொண்டு பொதுவெளியில் ஆக்கப்பூர்வமான விமர்சனத்தை வைத்திருக்கலாம். 4. ஜெமோவின் விமர்சனம் குறித்து என்னை எழுதச்சொல்லி சில நண்பர்கள் கேட்டார்கள். நான் முதலில் எழுதவில்லை.அவர் ஒரு மிகப் பெரிய எழுத்தாளர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அடுத்து, அவர் விமர்சனங்கள் மூலம் தான் எப்போதும் வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என நினைப்பவர் என்று கேள்விப்பட்டேன். கூடுதலான வாசகர்களை தன் வலைப்பக்கத்துக்கு இழுத்து வர அவர் வீசி எறியும் வலை இதுவோ என விட்டுவிட்டேன். அவர் தினமும் ஒருவரை பற்றி எழுத, சரி எழுதி முடிக்கட்டும் என்றிருந்தேன். இந்தப்பதிவு போடுவதற்கு இன்னொரு காரணம். இங்கே இளையர்களை தமிழ் எழுத வைப்பது மிக கடினம். அவர்களை ஊக்கப்படுத்தி தமிழ்மொழி மீதும் இலக்கியம் மீதும் ஆர்வத்தை வர வைக்க இங்கே அரசும் அமைப்புகளும், ஆசிரியர்களும் படாதபாடு படுகின்றனர். அவர்களிடைய இந்த மாதிரி விமர்சனம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சம் தான். அதனால் தான் அரசாங்கமும் அமைப்புகளும் அவர்களை தட்டிக்கொடுத்து அழைத்து செல்கின்றன். அவர்களுக்காகவும் இதை எழுதுகிறேன். எனக்கு ஒரு கேள்வி உண்டு. எழுத்தில் கரை கண்டு பல அங்கீகாரங்கள் பெற்றவர்களை, 70,80 வயதில் உள்ளவர்களை விமர்சிப்பதன் நோக்கம் என்ன? பயன் என்ன? உங்களால் சமகால எழுத்தாளர்களை, உங்களுடன் தோளுரசுபவர்களின் படைப்புகளை இந்த அளவு விமர்சிக்க முடியுமா? சரி இதை இன்னொரு விதமாக பார்ப்போம். நான் முதலில் கூறியது போல் அவர் நேரம் ஒதுக்கி வெளிப்படை விமர்சனமே இல்லாத நம் இலக்கியச் சூழலை ஒரு விவாதத்திற்கு உள்ளாக்கியிருக்கிறார். அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் எந்த ஒரு விமர்சனமும் ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும். அது படைப்பை மேம்படுத்த வேண்டுமே தவிர படைப்பாளியை புண்படுத்தக்கூடாது. நம் நோக்கம் படைப்பாளியை பழிப்பது எனில் அதை தனி மனித தாக்குதலாக தொடுக்க தைரியம் வேண்டும். அதற்கு பதிலாக படைப்பை விமர்சனம் செய்கிறேன் என்ற போர்வையில் அதைச் செய்யக்கூடாது. எந்தவொரு படைப்பும் அந்த படைப்பாளியின் அறிவு, பட்டறிவு, திறமை,கற்பனை மற்றும் உழைப்பின் வெளிப்பாடு. படைப்பை விமர்சிப்பதன் மூலம் படைப்பாளியை உள்ளூடாக விமர்சிப்பது தவிர்க்க முடியாது. ஆனால் அதை வெளிப்படையாக விமர்சிப்பது என்பது நாகரீகமற்றது. நம்முடைய இன்றைய சூழல் ————————— சரி நம்ம இலக்கியச்சூழல் என்பது எப்படி இருக்கின்றது என்று பார்ப்போம். இது வாழ்த்துகளும் நன்றிகளும் மட்டுமே நிறைந்த விந்தை உலகம் என்பதில் ஐயமில்லை. காரணம், பொதுவாக விமர்சகர்கள், தாங்கள் நேரில் காணாதவர்களை தைரியமாக விமர்சிப்பார்கள். தான் நேரில் சந்திக்க வாய்ப்பிருக்கும் நபர்களின் படைப்பை விமர்சிக்க யோசிப்பார்கள். இன்னும் சிலர் வாய்ப்புக்காகவும் வசதிக்காகவும் வாயாற புகழ்வார்கள். சிலர் அது கிடைக்காதோ என்ற கவலையில் ஒதுங்கிக் கொள்வார்கள். சிலர் இங்கிருந்துக் கொண்டு ஒபாமா என்ன செய்தார்?புடின் என்ன கிழித்தார்? என்று அறைகூவல் விடுவார்கள். ஆனால், பக்கத்திலுள்ளவர்களை பற்றி ஆக்கப்பூர்வமாக விமர்சனத்தை வைக்க நடுங்குவார்கள். இவர்கள் விசைப்பலகை வீரர்கள் என்று சொல்லக்கூட தகுதியில்லாதவர்கள். இப்படி பல காரணங்களால் விமர்சனம் என்பது ஒரு வேண்டாத விருந்தாளியாகவே பார்க்கப்படுகின்றது. இன்னொரு வகை, ஜெமோ சொன்னது சரிதான் என்று வாதிடுபவர்கள் ஆனா வெளியே சொல்லவ் கூச்சப்படுவர்கள். அடுத்து, சிங்கை இலக்கியவட்டம் மிகச் சிறிய வட்டம் அதில் ஒவ்வொருவரும் அடிக்கடி சந்திக்க கூடியவர்கள், நண்பர்கள். இங்கே விமர்சனத்தை வைப்பதும், எதிர்கொள்வதும் சற்று சிரமமானது. இங்கேயும் சில குறைபாடுகள் உள்ளது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். இங்கே இலக்கியம் சார்ந்து இயங்குபவர்களை விட வேறு பல சார்புநிலைகளை பற்றிக்கொண்டு இயங்கும் இலக்கிய வட்டம் சில உள்ளது. பண்டமாற்று முறையில் பாராட்டிக்கொள்பவர்களும் உண்டு. நாம் என்ன செய்ய வேண்டும் ————————— 1.அமைப்பு ரீதியாகவோ அல்லது அரசு ரீதியாகவோ ஒவ்வொரு படைப்பையும் அங்கீகரிக்க ஒரு விருப்புவெறுப்பிலாத குழு அமைத்து படைப்பை அங்கீகரிக்கலாம். இதில் எந்தவித வேறுபாடுமின்றி படைப்புகள் ஆராயப்பட வேண்டும். அந்த படைப்புகளை விமர்சனத்துக்கு உட்படுத்த வேண்டும். ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் வைக்கப்பட வேண்டும். அதை வரவேற்க்கும் பக்குவம் படைப்பாளிக்கு வர வேண்டும். 2.அமைப்புகள் படைப்பாளிக்கு விருது வழங்கும் போது எந்த படைப்புக்கு விருது வழங்கப்படுகின்றது அதிலுள்ள பெருமைகள் என்ன என்பதை விளக்கி வெளியிட வேண்டும். தெரிந்தவர்களுக்கும், தனக்கு தேவைப்படுபவர்களுக்கும் விருது வழங்கக்கூடாது. விருதுக்கும், படைப்புக்கும்,படைப்பாளிக்கும் அந்த விருது பெருமை சேர்க்க வேண்டும். தமிழ் அமைப்புகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து ஒரு குழு அமைத்து, பரிசீலித்து விருதாளரை தேர்ந்தெடுத்தால் இன்னும் சிறப்பு.