#ஐரோப்பிய_அட்டகாசங்கள் ஷேக்ஸ்பியர் பிறந்த வீடு ———————— என்னடா இவ்வளவு நாளா ஷேக்ஸ்பியரின் வீட்டிற்குள்ள கூட்டிட்டு போகலையேனு கேக்குறீங்களா? புரியுது. அது ஒன்னுமில்லைங்க ஆடி மாசம் முத முதல்லா ஒரு வீட்டிற்கு போகக்கூடாதுனு சொல்வாங்க அதான்:) இப்ப ஆவணி வந்தாச்சு, உங்க வலது கால எடுத்து வச்சு வாங்க, உள்ளே போவோம். முதல்ல ஒரு பெரிய அழகிய தோட்டம். வாசலுக்கு போனவுடனே அந்த தோட்டத்து ரோஜாக்கள் நல்ல மணம் வீசுகின்றன. அங்க பக்கத்தில ஒரு பெண்மணி “பெயர் என்னவாயிருந்தா என்ன, நாம் எந்த பெயரில் அழைத்தாலும், அந்த ரோஜா இனிமையான மணம் வீசும் தானே” என்று ஒரு வாலிபனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். அதோடு,”பிரிவென்பது இனிய துன்பம்” என்று சொல்ல, சுத்தி என்னை மாதிரி கொஞ்ச பேரு பார்த்துகிட்டு இருக்க பிறகு தான் புரிந்தது அவர்கள் இருவரும் ஷேக்ஸ்பியரின் “ரோமியோ ஜூலியட்” நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்களென்று. அங்கே சின்ன உயர்த்தப்பட்ட தளம், அதில அவங்க நின்னு நடிக்க, சுத்தி எல்லாரும் உட்கார்ந்து பார்க்க ஒரு குட்டி திறந்த வெளி நாடக அரங்கு அங்கே உள்ளது. அந்த ஜூலியட்டுடன் தான் நான் நின்று கொண்டிருந்தேன் முதன் முதலில் போட்ட படத்தில்(அப்பா ஒரு வழியா ஒரு படம் பத்திய உண்மைய சொல்லியாச்சு). அங்கு வேறு சில நடிகர்களும் அந்தக்கால உடையில், ஒப்பனைகளுடன் ஷேக்ஸ்பியரின் வரிகளுக்கு உயிர் கொடுக்கத் தயாராக இருந்தனர். நீங்கள் உங்கள் விருப்ப நாடகத்திலுள்ள காட்சியை சொன்னால் அதை நடித்துக் காண்பிப்பார்கள். சரி அவங்கள ரொம்ப தொந்தரவு செய்ய வேண்டாம்னு(என்ன கேக்கறதுன்னு தெரியல, அத தான் இப்படி நாகரீகமா சொல்லறேன்) அங்குள்ள ரோஜா தோட்டத்தை வலம் வந்தோம். ஒவ்வொரு ரோஜாவும் அவ்வளவு பெருசா இருக்கு. அந்த ஊர்ல ரோஜோவெல்லாம் காட்டுச் செடி மாதிரி தான் அங்கங்க வளர்ந்திருக்கு அதை யாரும் தலையிலையும் வச்சிக்கிறதல்ல சாமிக்கும் போடறதில்லை, ஆனா பார்க்க அழகழகா இருக்கு. அதனால்நான் பல ஆங்கில கவிதைகளில் இடம் பிடித்திருக்கு போல. ‘A rose is a rose is a rose’னு சும்மாவா சொன்னாங்க. அப்படியே சுத்திட்டு வெளியேயிருந்து ரோஜாவையும் வீட்டையும் படம் பிடிச்சிட்டு வீட்டு வாசல நோக்கி வந்தா தாடியோட நம்மூர்காரர் ஒருத்தர் சிலையாக இருந்தார். யாருடா இது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நினைச்சா, நம்ம ரபீந்தரநாத் தாகூர்ங்க. அவ்வளவு பெரிய வீட்டின் தோட்டத்தில் ரபீந்தரநாத் தாகூர் அவர்களின் மார்பளவுச் சிலை மட்டும் உள்ளதே வேறு எந்த ஒரு படைப்பாளியின் சிலையாவது அங்கு இருக்கானு பார்த்தா, இல்லைங்க. நம்ம குமாரு வேறு பக்கத்தில் இல்லை. இருந்திருந்தா கண்டிப்பா இந்த கேள்வியைக் கேட்டிருப்பார். அந்த வேலையை இன்னைக்கு நான் செஞ்சேன். அங்கிருந்தவரிடம் “ஏங்க, உலகத்தில எவ்வளவோ படைப்பாளிகள் இருக்காங்க, ஆனா ஷேக்ஸ்பியரின் வீட்டில், ஒரு இந்தியக் கவிஞரின் சிலை மட்டும் உள்ளது, வேறு யாரோட சிலையும் இல்லையே, என்ன காரணம்”னு கேக்க, அதற்கு அங்கிருந்தவர், “அதற்கு காரணம், தாகூர் அவர்கள் ஷேக்ஸ்பியரின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டவர். லண்டனில் படிக்கும் போது இந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து போனார்”னு கூறினார். அதுமட்டுமில்ல ஷேக்ஸ்பியர் இறந்து 300வது ஆண்டு(1916) அவரை பத்தி தாகூர் ஒரு கவிதை எழுதியுள்ளார். ஷேக்ஸ்பியரின் 400வது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கொல்கத்தா கலைக் கழகம் அதை இந்த வீட்டில் ஒப்படைத்திருக்கிறது. சில ஆண்டுகள் கழித்து இங்கு அந்த கவிதையைப் பார்த்த பிரிட்டனுக்கான இந்திய ஹைகமிஷனர், மேற்கு வங்க அரசாங்கத்திடம் சொல்லி சிலை வைக்கும் எண்ணத்தை எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்து பிறகு அப்போதைய முதல்வர் திரு ஜோதிபாசு அவர்களால் 1996ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. அதோடு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தாகூர் அவர்களின் பிறந்தநாளன்று இங்கே பாட்டுக் கச்சேரியும் விருந்தும் நடக்குமாம். கலையையும், கலைஞர்களையும் ஊக்குவிப்பதிலும், மதிப்பிலும், அங்கீகரிப்பதிலும் மேற்குவங்க மக்களுக்கு இணை அவர்களே. உடனே ஏன் ஒரு திருவள்ளவர் சிலையோ, பாரதியார் சிலையோ அங்கு இல்லையென சிலருக்குத் தோன்றலாம். அது முக்கியமல்ல, அதை விட சிறப்பு நாம் பாரதியாருக்கோ திருவள்ளுவருக்கோ உலகம் போற்றும் நினைவு இல்லம்(தற்பொழுது இருப்பதை விட) அமைத்து, நன்கு பராமரித்து அதில் ஷேக்ஸ்பியரரின் உருவச்சிலையை வைக்கலாம். அது தான் நமக்கு பெருமை. சரி, ஷேக்ஸ்பியரின் வீட்டு அறைக்குள் வரும் வாரத்தில் செல்லலாம். அது வரை நான் ஏற்கனவே போட்ட மத்த இரண்டு படங்களை பத்தி யோசிங்க. எங்களுக்கு வேற வேலையில்லையானு கேக்கறது புரியது. சொல்றது என் கடமைல, அதான்:)