தஹி ஹண்டி

புனேயில் ‘தஹி ஹண்டி’!

கிருஷ்ண ஜெயந்திக்கு அடுத்த நாள் ‘தஹி ஹண்டி’ (உரி அடித்தல்) இங்கு மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஆங்காங்கே பந்தல் போட்டு நவீன ஒலி பெருக்கி அமைப்புடன், விளம்பரங்கள் பரபரக்க இளைஞர்கள் வரிந்துகட்டி ஒருவர் மேல் ஒருவராக வட்ட வட்டமாக மனிதசங்கிலியை உயரே கட்டுகின்றனர்.
பல குழுக்களாக இதற்கென்று பல மாதங்கள் தயார் செய்து மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்து பங்கெடுக்கின்றனர்.
இந்த ஆண்டு ஐஸ்வர்யா ராய், தமன்னா, ரவீனா டாண்டன் என இந்தி, மராத்தி திரை நட்சத்திரங்கள் பளபளக்க, மனித மலைகள் உருவெடுக்க, மக்கள்கடல் ஆர்ப்பரிக்க, பின்னணி இசை பெருக்கெடுக்க, வாணவேடிக்கைகள் மினுமினுக்க, தயிர் பானையை உரி அடிக்க வெண்ணையுடன் வெள்ளிக்காசுகளும் கொட்டுகின்றன. பிரம்மாண்ட பரிசுத்தொகை நடத்துபவர்களின் வசதிக்கேற்ப ஒரு லட்சம், ஐந்து லட்சம், பத்து லட்சம், பன்னிரெண்டு லட்சம் என்று நீள்கிறது.
இளைஞர்கள் ஒன்றிணைந்து நகரம் முழுதும் விளையாடும் இந்த விளையாட்டு பாரம்பரியம் இன்னும் கட்டிக்காக்கப்படுவதை பறைசாற்றுகிறது.

பி.கு: இதனால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க அரசாங்கம், பங்குபெறுபவர்களின் வயது வரம்பை 15க்கு குறையாமலும்.. உரியின் உயர வரம்பை 20 அடிக்கு மிகாமலும் இருக்குமாறும் செய்ய விதிமுறை வகுத்திருப்பதாக அறிகிறேன்.

Leave a Comment